
மூன்று கொள்ளையர்கள் ஒரு வங்கியில் துணிகர கொள்ளை நடத்துகின்றனர். அந்த நேரத்தில் வங்கிக்குள் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி, அவரை பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர்.
சிறிது தூரம் சென்ற பிறகு, ஒரு இடத்தில் அவரை இறக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த மூவரில் ஒருவரை அடையாளம் காண உதவும் முக்கிய ஆதாரம் ஒன்று பிரித்விராஜ் சுகுமாரனின் கையில் கிடைக்கிறது. இதற்கிடையில், அந்த மூன்று கொள்ளையர்களும் விபத்து ஒன்றில் உயிரிழக்கின்றனர்.
பிரித்விராஜ் கையில் கிடைத்த ஆதாரத்தின் மூலம் உண்மையான கொள்ளையர்கள் யார் என்பது காவல்துறைக்கு தெரியவருகிறது. ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் இறந்துவிட்டதால் கைது செய்ய முடியாத சூழல் உருவாகிறது. குறைந்தபட்சம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையாவது மீட்டெடுக்கலாம் என காவல்துறை முயற்சித்தாலும், அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இதற்கிடையில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட அந்த வங்கியில் பிரித்விராஜ் சுகுமாரன் என்ன காரணத்திற்காக இருந்தார் என்ற கேள்வி காவல்துறைக்கு எழுகிறது. அந்த வங்கியில் அவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்தவித வங்கிக் கணக்கும் இல்லை. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த வங்கிக்கு வந்தார்? நீண்ட நேரம் அங்கு இருந்தும், எந்த வங்கி ஊழியரிடமும் எந்த உதவியையும் கேட்காமல் இருந்தது ஏன்?
இந்தச் சந்தேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதிகரிக்க, ஒருவேளை கொள்ளையர்களுக்கும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியும் காவல்துறையினரின் மனதில் எழுகிறது. அதே நேரத்தில், இந்த சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளால் பிரித்விராஜ் சுகுமாரனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
சிலந்தி வலை போல சிக்கல்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைய, அவற்றிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் எப்படி தப்பிக்கிறார்? அவரது குடும்பம் இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறது? வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இறுதியில் எங்கே செல்கிறது? அதை கண்டுபிடிக்க காவல்துறை மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் என்ன? அந்தப் பணம் இறுதியில் யாரிடம் சிக்குகிறது? என்ற கேள்விகளுக்கான பதில்களை, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பும் பதற்றமும் குறையாமல் சொல்லும் த்ரில்லர் திரைப்படம்தான் ‘ஐ நோபடி’ (I NOBODY).
வங்கிக் கொள்ளைக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒருவரை கதையின் மையமாக வைத்து, ஒவ்வொரு காட்சியிலும் புதிய பரபரப்பை உருவாக்கி, நொடி தோறும் திக்… திக்… என திகில் உணர்வை ஏற்படுத்தி, இறுதிவரை பார்வையாளர்களின் கவனத்தை சிதறவிடாமல் ஈர்த்திருப்பது படக்குழுவினரின் சிறப்பான திரைக்கதை அமைப்பையும் திறமையையும் வெளிப்படுத்துகிறது.
