சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!
தமிழில் நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர். பல்வேறு அடுக்குகள் நிறைந்த எழுத்து நடை மற்றும் முழுமையாக உயிர்ப்புடன் தோன்றும் கதைக்களம் தான் அவர்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகின்றன.
புஷ்கர் – காயத்ரியை வேறுபடுத்துவது, அவர்கள் உருவாக்கும் கதை உலகங்கள் மிகவும் இயல்பாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றினாலும், அதே நேரத்தில் வணிகரீதியான திரில்லர் அம்சங்களின் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருப்பதுதான். சிறிய நகரங்களின் இயல்பான பின்னணி, சிக்கலான மனித மனங்கள், மெதுவாக பரவும் மர்மங்கள் ஆகியவற்றின் மூலம், உள்ளூர் கதைகளும் உலகளாவிய தரத்தில் பேசக்கூடியவை என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த படைப்பாற்றல் பார்வை சுழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 1 மற்றும் 2, வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, தற்போது எக்ஸாம் போன்ற படைப்புகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.
தமிழ் OTT உலகில் முக்கியமான திருப்பமாக அமைந்தது சுழல்: தி வோர்டெக்ஸ். இரு சீசன்களும் அதன் ஆழமான கதையாடல், நம் மண் சார்ந்து வேரூன்றிய கதை பின்னணி, உணர்ச்சிபூர்வமான மர்மம் ஆகியவற்றுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இரண்டாம் சீசன், சமூக ரீதியாக சிக்கலான காளிபட்டணம் என்ற உலகத்தை மையமாகக் கொண்டு, ஒரு மரணம் முழு ஊரின் அமைதியையே சிதைக்கும் வகையில் நகரும் பரபரப்பான திரில்லராக உருவெடுத்தது. குடும்பம், தியாகம், பழிவாங்குதல், ஒழுக்கம் போன்ற கருக்கள் கலந்து, அந்த தொடர் ரகசியங்களும் மன அழுத்தங்களும் நிறைந்த உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் சென்றது.
வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடரில் க்ரியேட்டிவ் புரடியூசர்களாக இருந்த புஷ்கர் – காயத்ரி, உணர்ச்சிகளும் மனித பார்வைகளும் மையமாக இருக்கும் அடுக்குகள் நிறைந்த கதையாடலை உருவாக்கி தந்துள்ளனர். “வதந்தி” என்ற தலைப்புக்கேற்றவாறு, அந்த தொடர் வெலோனி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி பரவும் வதந்திகள், சந்தேகங்கள் மற்றும் மாறுபட்ட உண்மைகள் குறித்து பேசுகிறது. உண்மையையும் பொய்யையும் பிரிக்க போராடும் காவல்துறை அதிகாரி விவேக், அந்த கதையின் மையமாக இருந்தார். ஒரு சிறிய நகரத்தின் இயல்பான பின்னணியில் நகரும் இந்த தொடர் மூலம், உணர்ச்சிகள் நிரம்பிய நீளமான கதையாடல்களை உருவாக்கும் தங்களின் திறனை இந்த படைப்பாளிகள் மீண்டும் நிரூபித்தனர்.
அதேபோல், எக்ஸாம் தொடரிலும் புஷ்கர் – காயத்ரி தங்களின் படைப்பாற்றல் பார்வையை தொடர்கிறார்கள். நுழைவுத் தேர்வுகளைச் சுற்றியுள்ள கடுமையான போட்டி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஊழலை மையமாகக் கொண்ட இந்த தொடர், பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயலும் ஜான்சி மற்றும் அவரது வழிகாட்டியான ஜெயச்சந்திரன் ஆகியோரின் பயணத்தை பின்தொடர்கிறது. அதே நேரத்தில் DSP மரமல்லியும் இந்த பதற்றமான சம்பவங்களின் முக்கிய அங்கமாக மாறுகிறார். பரபரப்பு, உணர்ச்சி ஆழம் மற்றும் சமூக முக்கியத்துவம் ஆகியவற்றை இணைக்கும் கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்கள், இந்த தொடரின் மூலமும் தங்களின் நீளமான கதையாடல் பார்வையை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வதந்தி சீசன் 2-ஐ எதிர்நோக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. சுழல், வதந்தி மற்றும் தற்போது எக்ஸாம் ஆகியவை அனைத்தும் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், புஷ்கர் – காயத்ரி தொடர்ந்து நம் மண்ணில் வேரூன்றிய, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பரந்த ரசிகர்கள் விரும்பும் வகையிலான தமிழ் கதைகளுக்கு புதிய பரிமாணம் கொடுத்து வருகிறார்கள்.
துஷாரா விஜயனின் ஜான்சி முதல், பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, மற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் அஞ்சலி பாட்டி வரை : OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்களின் பல முகங்கள் !!
இந்தியாவெங்கும் OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்கள் ! ப்ரைம் வீடியோவில் இப்பொது கண்டுகளியுங்கள்!!
புஷ்கர் – காயத்ரியின் எக்ஸாம் தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், அந்த தளத்தில் கடந்த சில ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பல அடுக்குகள் நிறைந்த குற்றத் தொடர்கள், பெண் போலீஸ் கதாபாத்திரங்களை எப்படி புதிய கோணத்தில் சித்தரித்து வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டிய நேரமாக இது தோன்றுகிறது. இந்த கதைகளில் வரும் பெண் போலீஸ் அதிகாரிகள் வெறும் சீருடையில் இருக்கும் அதிகாரிகளாக அல்ல; அவர்கள் உணர்ச்சிகளால் சிக்குண்ட மனிதர்கள், தங்களின் தனிப்பட்ட சுமைகளுடன் வாழ்பவர்கள், முறைகேடான அமைப்புகளுக்கு எதிராக போராடுபவர்கள், தவறுகளையும் மன அழுத்தங்களையும் சுமந்து செல்லும் நபர்கள். இந்த அணுகுமுறை பாரம்பரிய ‘ஹீரோயிக்’ போலீஸ் சித்திரிப்புகளை விட மிகவும் நிஜமாக உணரப்படுகிறது. அந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் ஐந்து முக்கியமான படைப்புகளை பார்க்கலாம்.
சுழல் : தி வோர்டெக்ஸ் – ஷ்ரேயா ரெட்டி நடித்த இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸ், சமீபத்திய OTT உலகில் மிகவும் நினைவில் நிற்கும் பெண் போலீஸ் கதாபாத்திரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சம்பலூரில் நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவை பின்னணியாகக் கொண்ட இந்த தொடரில், ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் ரெஜினா, அதே நேரத்தில் தனது மகனையும் இழக்கிறார். இதனால் அவரது தொழில்முறை வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றாக கலக்கின்றன. அதுவே இந்த கதாபாத்திரத்தின் பலம். ரெஜினா ஒரு கண்டிப்பான அதிகாரியாக அல்லாமல், மன உளைச்சல், கோபம், தாய்மையின் பயம் ஆகியவற்றோடு வாழும் மனிதராக எழுதப்பட்டிருக்கிறார்.
சாணிக் காயிதம் – இந்த குற்ற அதிரடி படத்தில் கீர்த்தி சுரேஷின் பொன்னி, பாரம்பரிய பெண் போலீஸ் சித்திரிப்பிலிருந்து மிகவும் விலகிய கதாபாத்திரம். குடும்பத்தை காப்பாற்ற முயலும் ஒரு காவலராக ஆரம்பிக்கும் அவள், வாழ்க்கையை சிதைக்கும் அளவிலான கொடூரமான அனுபவத்தை சந்திக்கிறார். அதன் பிறகு நடப்பது வழக்கமான நீதிக்கான போராட்டமல்ல; பழிவாங்கலுக்கான கொதிக்கும் பயணம். இந்த பட்டியலில் மிகவும் வன்முறையான கதாபாத்திரமாக இருந்தாலும், போலீஸ் சீருடையின் பின்னாலுள்ள உடைந்த மனிதரை மிகவும் நேர்மையாக காட்டியவராகவும் பொன்னி திகழ்கிறார்.
தஹாட் – சோனாக்ஷி சின்ஹாவின் SI அஞ்சலி பாட்டி, இந்தி OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு புதிய தொனியை கொண்டு வந்தார். அவர் மென்மையான நாயகி அல்ல. நேராக பேசுபவர், தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர், குற்றவாளிகளோடு மட்டுமல்ல தனது துறையினரிடமிருந்தும் எதிர்ப்புகளை சந்திப்பவர். தொடர்ச்சியான மர்ம மரணங்களை மையமாகக் கொண்ட இந்த தொடரில், அஞ்சலி பாட்டி ஒரு ஆபத்தான விசாரணையின் மையத்தில் நிற்கிறார். ஆனால் அந்த வழக்கு மட்டுமல்ல அவரது கதை; தொடர்ந்து தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் உலகில் தன்னுடைய இடத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருப்பதே இந்த கதாபாத்திரத்தை தனித்துவமாக்குகிறது.
டல்டல் – பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, வழக்கமான போலீஸ் அதிகாரி அல்ல. கூர்மையான உள்ளுணர்வும் திறமையும் கொண்டிருந்தாலும், தன்னைச் சுற்றியிருக்கும் இருண்ட உலகின் மன அழுத்தங்களை சுமந்து வாழும் நபர். இந்த உளவியல் குற்றத் திரில்லரில், ரிட்டா ஒரு தொடர் கொலைகாரனை தேடுவதோடு, தனது கடந்தகாலத்தின் சுமைகளையும் எதிர்கொள்கிறார். இளம் வயதிலேயே மும்பை குற்றப்பிரிவை வழிநடத்தும் அவர், கடுமையான அதிகாரியாகவும் உடைந்த மனிதராகவும் இரு நிலைகளில் தொடர்ந்து இயங்குகிறார். அந்த இரட்டைத் தன்மையையே இந்த தொடர் மிகவும் நுட்பமாக பயன்படுத்துகிறது.
எக்ஸாம் – இயக்குநர் A. சற்குணத்தின் முதல் வெப் தொடரான எக்ஸாம், இந்த விவாதத்திற்கு புதிய பரபரப்பை சேர்த்துள்ளது. குறிப்பாக துஷாரா விஜயனின் ஜான்சி மற்றும் அதிதி பாலனின் DSP மரமல்லி ஆகிய இரு கதாபாத்திரங்கள் அதன் மையமாக உள்ளன. தைக்கரா என்ற மலைநகரத்தை பின்னணியாகக் கொண்ட இந்த தொடர், போட்டித் தேர்வுகளைச் சுற்றியுள்ள பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர போராடும் DSP மரமல்லியாக நடிக்கும் ஜான்சியை பின்தொடர்கிறது. ஆனால் அந்த சதி அவள் நினைத்ததைவிட மிகப்பெரியது என்பதை பின்னர் உணர்கிறாள். தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள எக்ஸாம், ஜான்சி மற்றும் மரமல்லி இடையேயான மனப்போரின் மூலம் OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களின் புதிய பரிணாமத்தை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.
இந்த எல்லா கதைகளையும் இணைப்பது, பெண்கள் போலீஸ் அதிகாரிகள் சீருடையில் இருப்பது மட்டும் அல்ல. அவர்கள் எழுதப்படும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். இந்த கதாபாத்திரங்கள் பிழையற்ற நேர்மையாளர்கள் அல்ல. அவர்கள் தவறுகள் செய்கிறார்கள். உணர்ச்சி சுமைகளை சுமக்கிறார்கள். முறைகேடான அமைப்புகளுக்குள் வாழ்கிறார்கள். அந்த அமைப்புகளே அவர்களை வடிவமைக்கின்றன. அதனால் தான், பழைய ஒரே மாதிரியான சித்திரிப்புகளை விட இவர்கள் மிகவும் நிஜமானவர்களாக தோன்றுகிறார்கள். OTT உலகில் இந்த மாற்றம் இன்னும் எங்கு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.
மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.
சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.
“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்-ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
இன்றைய நிகழ்வில்…
இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…
முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.
கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன் இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது..,
கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது.
இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.
ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia-க்கு என் நன்றிகள்.
இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard-ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.
ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram-ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session-ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.
இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.
அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.
நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube-ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பெயர் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உணர்ச்சிபூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்த இந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.
இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்..,
ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…, பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு முன்பு ZEE5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்தடுத்து இன்னும் பல நல்ல படைப்புகள் வரப்போகிறது. அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
அதே நேரத்தில், இந்த தொடரின் வெற்றிக்கு பங்களித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி.
Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது..,
இந்த அளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும், எங்கள் முழு குழுவையும் மிகப் பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர். இது எனக்கு தயாரிப்பாளராக முதல் முயற்சி. ஆனால் அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்க முடியாது.
இந்த படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூற வேண்டும். அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்த தருணம் எனக்கு கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்கு துணையாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இன்று நான் இங்கு நிற்க காரணம். இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த தருணத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீரிஸில் வேலை செய்த போது, எங்களுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தோம். இன்று அதன் முடிவு ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது, எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன். எங்கள் டீம், இயக்குநர், சேனலிலிருந்து கௌஷிக் சார், முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும், குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசை பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அதேபோல் எங்கள் டீம், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவும் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி.
ஒளிப்பதிவாளர் KK பேசியதாவது..,
இந்த வெற்றி விழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார், இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிகூற வேண்டும். அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இயக்குநரும் முழு குழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் தினேஷ் குமார் பேசியதாவது.., இந்த சீரிஸில் நாங்கள் பணியை தொடங்கிய போது, இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச் சொன்னார். அப்போது படித்தவுடன் இது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி. பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாக செல்லாமல், எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்த சீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார், சரவணன் சார், எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது.., இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது.., எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி.
எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது.., ‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும், ZEE5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலுமே நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது. இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
திரு அழகன் தமிழ்மணி பேசியதாவது.., என் அருமை சகோதரர், சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன். என் வாழ்க்கை உங்களோடு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
இன்று இந்த மேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன். அதன் பிறகுதான் தயாரிப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி வளர்த்தேன். இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது, அது ஒரு வெப் சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன். அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும், ஒளிப்பதிவாளரின் பணியும், எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீரிஸை திரைப்பட தரத்தில் உருவாக்கிய முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது. அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடிகர் பிரேம் பேசியதாவது.., இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார், நவீன் சார், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சீரிஸில் பணியாற்றும் போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள். அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி, அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த குழு இனியும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது.., ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.
சென்னை, 9 பிப்ரவரி 2026: நகரங்களில் ஆஃப்லைன் மார்க்கெட்டிங் தற்போது புதிய கட்டத்தை அடைந்து வருகிறது. மக்கள் தினமும் காணும் காட்சிகள் அவர்களின் நினைவில் இடம் பிடிக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு, Impressn Visual-Only Station என்ற புதிய மார்க்கெட்டிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Visual-Only Station என்றால் என்ன? Visual-Only Station என்பது ஒலியில்லாமல், தொடர்ந்து காணப்படும் சிறிய LED திரை. மக்கள் அங்கு இருக்கும்போது இயற்கையாகக் கவனிக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைகள் தகவல், பொழுதுபோக்கு மற்றும் குறைந்த அளவு விளம்பரங்களை இயக்குகின்றன.
Impressn-ன் பங்கு Impressn Visual-Only Station ஐ இந்தியாவில் ஒருங்கிணைந்த நெட்வொர்க் வடிவத்தில் செயல்படுத்தும் முதல் நிறுவனம். ஒவ்வொரு திரையும் தனித்தனியாக இல்லாமல், ஒருங்கிணைந்த முறையில் இயக்கப்படும்.
Visual-Only Station களில் உள்ளடக்கம்: 70% தகவல் மற்றும் பொழுதுபோக்கு 30% விளம்பரங்கள் இதனால் பார்வையாளர்கள் விளம்பரங்களால் சிரமப்படுவதில்லை, பிராண்டுகளுக்கு நினைவாற்றல் அதிகமாகும்.
திரைகள் எங்கே அமைக்கப்படுகின்றன? மக்கள் காத்திருக்கும் அல்லது நேரம் செலவிடும் இடங்களில்: டீ கடைகள் மற்றும் கஃபேக்கள் ரீட்டெயில் கடைகள் வணிக மையங்கள் மக்கள் அடிக்கடி வருகை தரும் பொது இடங்கள்
Impressn-ன் தனிச்சிறப்பு Visual-Only Station கள் ஒழுங்காக உள்ளடக்கம் காட்டி, மக்கள் தினசரி இயற்கையாக பார்க்கும் முறையில் செயல்படுகின்றன. இது விளம்பரங்களை நினைவில் நிறுத்த உதவுகிறது.
பிராண்டுகளுக்கு பயன் நீண்ட நேரம் பார்வை ஈர்க்கும் உள்ளூர் மக்களை இலக்கு செய்யும் குறைந்த செலவில் விளம்பரம் செய்யும் நல்ல நினைவாற்றல் ஏற்படும்
பல்வேறு துறைகளில் பயன்பாடு நுகர்வோர் பிராண்டுகள் ரியல் எஸ்டேட் திட்டங்கள் மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள் ரீட்டெயில் கடைகள் நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் அறிமுகங்கள்
எதிர்கால நோக்கு Visual-Only Station கள் அமைதியாக, தினசரி சூழலில் இடம் பிடித்து, மக்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கின்றன. Impressn இந்தியாவில் இதன் நெட்வொர்க் விரிவாக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
Impressn இந்தியாவின் முதல் Visual-Only Station நெட்வொர்க்
மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பவர் ஜோடி ராம் சரண் மற்றும் உபாசனா கொணிதெலாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தி, தெலுங்கு திரையுலகின் மிகவும் நேசிக்கப்படும் குடும்பங்களில் ஒன்றான சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மெகா பேரரசின் தலைமைப் பொறுப்பாளராக, தனது அளவற்ற மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சமூக வலைதளங்களில் நேரடியாக இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பிறந்துள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உபாசனாவும் நலமுடன் மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது அன்பும் நன்றியும் நிறைந்த செய்தி, கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியது.
“அளவற்ற மகிழ்ச்சியுடனும், நன்றியால் நிரம்பிய மனதுடனும், @AlwaysRamCharan மற்றும் @upasanakonidela தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள்” என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.
ராம் சரண் மற்றும் உபாசனா தங்களது முதல் குழந்தையாக மகள் கிளிம்காரா கொணிதெலாவை ஜூன் 20, 2023 அன்று வரவேற்றனர். தற்போது இரட்டைக் குழந்தைகளின் வருகையால், கோனிடேலா மற்றும் காமினேனி குடும்பங்களில் மகிழ்ச்சியை இரட்டிப்பாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு மேலும் பல இனிய தருணங்களை இந்த குடும்பம் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத்; ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன்; வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது; தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன்; இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன்; ஒலிப்பதிவு கலைஞர் தபஸ் நாயக்; திரைப்பட திறனாய்வாளர் மருத்துவர் தாயப்பன்; எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ் பிரபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. செழியன் வரவேற்று பேசுகையில், ”வருகை தந்து சிறப்பித்திருக்கும் விருந்தினர்கள், நண்பர்கள், இலக்கிய ஆளுமைகள், என்னுடைய ஃபிலிம் ஸ்கூலில் படித்த மாணவர்கள் என அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உலக சினிமா என்ற புத்தகத்தை எழுதுவதற்கு முன் ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கைப் பற்றி படித்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலில் படிக்கிறார். படித்து முடித்தவுடன் அவர் ஒரு கண்ணாடி கூண்டிற்கு முன் நிற்கிறார். அப்போது அவர் அதிலிருந்து ஒரு கேமராவை கொடுங்கள், நான் படம் எடுத்துவிட்டு தருகிறேன் என்கிறார். அது இன்ஸ்டியூட்டில் உள்ள கேமரா. அதனை கொடுக்க முடியாது என்கிறார்கள். அவர் அன்றிரவு அந்த கண்ணாடி கூண்டை உடைத்து ஒரு கேமராவை எடுத்து, படத்தை எடுத்த பின் மீண்டும் கேமராவை ஒப்படைக்கிறார். அதன் பிறகு அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை தேடத் தொடங்கினேன். அதன் பிறகு அவர் ரோக் ஃபிலிம் ஸ்கூலில் படித்தார் என்ற தகவலை உறுதியாக பிடித்துக் கொண்டேன். ரோக் என்றால் நாடோடி, கலகக்காரன், ஊர் சுற்றி இப்படி எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.
அதன் பிறகு அவர் படித்த ஸ்கூலில் சேர்வதற்கான விதிமுறைகளை ஆராய்ந்தேன். அந்த ஸ்கூலில் சேர வேண்டும் என்றால் 12 புத்தகங்கள் வாசித்திருக்கவேண்டும். எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லாமல் நடைப்பயணமாகவே செல்ல வேண்டும். சென்ஸிபிலிட்டி இருக்க வேண்டும். ஒரு நான்கு வயது குழந்தைக்கு அரை மணி நேரம் கவனம் சிதறாமல் கதை ஒன்றை சொல்ல வேண்டும். இதெல்லாம் செய்ய முடியும் என்றால் எங்களுடைய பிலிம் ஸ்கூலில் சேர முடியும் என்கிறார். அவரிடம் பிலிம் ஸ்கூலின் முகவரியை கேட்கிறார்கள். அந்த முகவரி நான்தான் என்கிறார். ஒரு நாடோடியாக இருக்கிறார். நியூசிலாந்தில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும். ஜெர்மனியில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும்.
அதன் பிறகு ஈரானிய இயக்குநர் மக்மல்பாஃப்பை சென்னையில் சந்தித்தேன். அவருடன் மூன்று நாட்கள் உடனிருந்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலை நடத்திக் கொண்டிருந்தார். உங்களுடைய ஃபிலிம் ஸ்கூலுக்கான சிலபஸ், அட்மிஷன் ப்ரொசீஜர் என்ன என கேட்டேன். ஏதேனும் ஒரு கவிதை புத்தகத்தை ஒரு வாரம் வரை படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஓவியரை மட்டும் தெரிவு செய்து அவருடைய ஓவியப் படைப்புகளை தொடர்ந்து ஒரு மாதம் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு மாதம் வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும் .அதன் பிறகு தினமும் 50 கிலோ மீட்டர் வரை தூரம் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும் . ஒரு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். நான் உடனடியாக உங்களுடைய பிலிம் ஸ்கூலில் நான் சேர இயலுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், “அரசுக்கு எதிராக திரைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி என்னை நாடு கடத்தி விட்டார்கள். நான் ரஷ்யாவில் இருக்கிறேன். ரஷ்யாவில் இருந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். நான்தான் அந்த ஃபிலிம்ஸ் ஸ்கூல்,சி என்றார். அதன் பிறகு அவர், “நான் ஒரு 15 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களை எல்லாம் ஓரிடத்தில் ஒன்றிணையுங்கள். சேர்ந்து சினிமாவை பற்றி பத்து நாள் பேசுவோம். பதினோராவது நாள் திரைப்படத்தின் பணிகளை தொடங்கி, 15 நாளில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விடுவோம்,” என்றார்.
இதுதான் என்னுடைய பிலிம் ஸ்கூலின் கான்செப்ட். இதனை பிரம்மாண்டமாகவோ, விழாவாகவோ, நிறுவனமாகவோ உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. தீவிர சினிமாவை பற்றி பேசும் நண்பர்கள், இலக்கியத்தைப் பற்றி தீவிரமாக பேசும் நண்பர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இயங்கும் அமைப்புதான் இது.
சென்னையில் எங்கேனும் 500 குடியிருப்புகள் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டால்… அதன் அருகே அரசு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும். அதில் புல்வெளி இருக்க வேண்டும். மரங்கள் இருக்க வேண்டும். இது விதி. அதேபோல் சினிமா ஒரு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி. செயற்கையான பிரம்மாண்டமான கட்டடங்கள் இருக்கும் போது இயற்கையான புல்வெளியும், மரங்களும் எப்படி இருக்க வேண்டுமோ, அதே போல் தான் இந்த பிலிம் ஸ்கூலின் சினிமா.
இப்பொழுது எல்லா நேரங்களிலும் ஏசியில் தான் இருக்கிறோம், இயங்குகிறோம். சிறிது நேரம் புல்வெளியிலும் காலாற நடக்க வேண்டும். மூன்று கோடி முதல் 300 கோடி வரை படம் எடுங்கள். அவை அனைத்தும் வெற்றி பெறட்டும். 20 லட்ச ரூபாய் முதலீட்டிலும் சில திரைப்படங்கள் உருவாகட்டும். இத்தகைய முயற்சிக்கு இங்குள்ள பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வருடத்திற்கு 10 அல்லது 12 நாட்கள் ஒதுக்கீடு செய்து ஆதரித்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கமர்ஷியல் சினிமாவும் வெற்றி பெறும், சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெறும். இருவரும் இணைந்து வளர்வார்கள். இந்த துறையும் வளர வேண்டும். சினிமாவிற்கு ஆர்கானிக்கான ஒரு விசயமும் தேவை.
‘விதைத்துக்கொண்டே இருங்கள்’ என நம்மாழ்வார் அடிக்கடி குறிப்பிடுவார். அதனால் நாங்கள் விதைத்து கொண்டே இருக்கிறோம். அவர் விவசாயத்தில் செய்ய திட்டமிட்டது இயற்கை விவசாயம். நாங்கள் செய்யத்திட்டமிடுவதும் இயற்கையான சினிமா விவசாயம்,” என்றார்.
உலக சினிமா ஆய்வாளர் மருத்துவர் தாயப்பன் பேசுகையில், ”1950 களில் பிரான்ஸில் நியூ வேவ் அதாவது புதிய அலை என்ற இயக்கம் உருவாகிறது. எழுத்து, இசை, ஓவியம், அரசியல், திரைப்படம் என அனைத்திலும் ஏற்கனவே இருக்கக்கூடிய, சலித்து போன மரபுகளை உடைத்து விட்டு புதிய சிந்தனை பரவ வேண்டும் என்பதற்காக அந்த இயக்கம் தோன்றுகிறது. இதன் தாக்கம் திரைப்படத்திலும் ஏற்படுகிறது. மரபு சார்ந்த திரைப்படங்களை விமர்சித்து விமர்சித்து சலித்து போன விமர்சகர்கள் புதிய அலை குறித்து விவாதிக்கிறார்கள். பழக்கப்பட்ட திரைக்கதை, வழக்கமான கேமரா கோணங்கள், பழக்கப்பட்ட ஒளி/ ஒலி அமைப்பு என இருக்கும் மரபுகளை உடைத்து, எங்கும் நிற்காத கேமரா கோணங்கள், இயல்பான கதைகள், இளைஞர்களைப் பற்றிய கதைகள், இயற்கையான ஒளி/ ஒலி அமைப்பு இவற்றையெல்லாம் தங்களுக்குள் வரித்துக் கொண்டு படைப்பை உருவாக்குகிறார்கள்.
இந்த புதிய அலைக்கு அரசியலோடும் பிணைப்பு உள்ளது. முசோலினியின் வீழ்ச்சிக்கு பிறகு தான் ரியலிசம் தோன்றியது.
புதிய அலை என்பது ஒரு இயக்கமோ ஒரு சிந்தனையோ அல்லது ஒரு குழுவோ அல்ல. இது சமத்துவமானது. இந்த சமத்துவம் என்ற சொல் பிரெஞ்சு புரட்சிக்கு விதைத்த அரசியல் ரீதியிலான தாரக மந்திரமாகவே உருவானது.
டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பை எழுதும் போது ஈக்குவாலிட்டி என்பதை உள்ளார்ந்த, அறநெறி சார்ந்த விஷயமாகத் தான் உருவாக்கியிருக்கிறார்.
பார்வையாளர்களை படைப்பை வேடிக்கை பார்க்கும் வேடிக்கையாளர்களை போல் பார்க்காமல், அவர்கள் தங்களுக்குள் தங்களை பார்க்கும் வகையில் உருவாக்குவது தான் புதிய அலை.
மரபை மீறி புதிய அலையை உருவாக்குவது என்பது தமிழ் சூழலில் எப்போதோ நிகழ்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக சிந்திக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்த பெரியார் இங்குதான் இருந்தார். அவருடைய நீட்சியாகத்தான் புதிய அலை திரைப்படங்கள் இருந்திருக்க வேண்டும். அதன் தாக்கம் பெரிதாக இல்லாமல் கொட்டிய குப்பையை மீண்டும் மீண்டும் கிளறுவது தான் தொடர்கிறது இதற்கு முன்னர் ஒரு சில முயற்சிகள் நடந்திருக்கின்றன, ஆனால் அவை முழுமையான வெற்றியைப் பெறவில்லை.
வெண்மணி படுகொலை பற்றி புதிய அலை சார்பில் எந்த ஒரு படைப்பும் இங்கு இல்லை. தமிழகத்தில் எவ்வளவோ சம்பவங்கள் இருக்கின்றன. 2009ம் ஆண்டில் மறைந்த பிரபாகரனை பற்றிய உள்ளார்ந்த படைப்பு என்று எதுவும் இங்கு இதுவரை இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கூட நாம் ஒரு செட் பிராப்பர்ட்டியாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
செழியனுக்கு பாராட்டுவது பிடிக்காது இருந்தாலும் செழியன் செழியன் தான். செழியனை செழியன் ஆகத்தான் பார்ப்போம்,” என்றார்.
எழுத்தாளர் தமிழ் பிரபா பேசுகையில், ”செழியன் உடைய மாணவராகத் தான் நான் இங்கு பேசுகிறேன். உலக சினிமாவைப் பற்றிய வித்தியாசமான பார்வையை அவர்தான் எனக்கு காண்பித்தார். சினிமா படைப்பாளிகளுக்கு இலக்கிய பின்புலம் வலிமையாக இருந்தால் அவர்களிடம் இருந்து செழுமையான படைப்பு வெளிப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். அவர் இலக்கியம், ஓவியம், இசை என அனைத்தும் அறிந்தவர். இதன் கலவையாகத் தான் அவர் ஒவ்வொரு காட்சியையும் வடிவமைக்கிறார் என நான் நினைக்கிறேன். அவரிடமிருந்து மாணவர்கள் தயாராகி வெளியாகும் போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றம்- இயக்கமாக தொடரும் என்பதாக பார்க்கிறேன்.
கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா என நாம் பிரித்துப் பார்த்தாலும் கேரளாவில் கலை இலக்கியம் சார்ந்த சினிமாவை தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறார்கள் என எனக்குத் தோன்றுகிறது. ஆனால் தமிழில் இது மெல்ல மெல்ல அழிந்து வருவதாக கருதுகிறேன். ஒரு தூய்மையான கலை வடிவத்திற்குள் ஒரு படைப்பு தமிழில் உருவாகவில்லையோ, என நினைக்கிறேன். இந்த இடைவெளியை செழியனின் தி ஃபிலிம் ஸ்கூல் மாணவர்கள் நிரப்புவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநர் ஞான ராஜசேகரன் பேசுகையில், ”இன்று தமிழ் சினிமாவில் ஒரு படம் ஒரே நேரத்தில் 2000 திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு தவறான முன்மாதிரி என நான் நினைக்கிறேன். இதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இங்கு இல்லை. இதற்காக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் புரட்சி ஏற்பட வேண்டும். சினிமா என்பது வணிகத்தனம் மட்டுமல்ல அதில் படைப்புத் திறனும் உள்ளது.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன்னுடைய படைப்பை மக்களிடத்தில் காட்சிப்படுத்தி, அவர்களிடமிருந்து வெற்றியோ தோல்வியோ பரிசாக கிடைப்பதில் ஒரு சவுகரியம் இருந்தது. இந்த நிலை தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக இருந்தது. அந்த நிலை இன்று திடீரென்று மாறிவிட்டது. தற்போது சிலர் மட்டுமே வெற்றி பெற்று பெரும்பாலானவர்கள் தோல்வியைத் தழுவும் ஒரு தொழிலாக மாற்றி விட்டார்கள். இதற்கு செழியன் தன்னால் ஆன மிக சிறிய சீர்திருத்த பணியை தொடங்கி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்,” என்றார்.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசுகையில், ”எழுத்து மூலமாக உலக சினிமாவை செழியன் அறிமுகப்படுத்தினார். அவர் தொடராக எழுதியதை வாசிக்கும் போதே எனக்குள் ஒரு உத்வேகம் எழும். நாமும் செய்து பார்க்கலாம் என்ற விதையை விதைக்க செய்தவர் செழியன். அவருடைய சினிமா பற்றிய ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் பிலிம் ஸ்கூலை தொடங்கி இருக்கிறார்.
தொலைக்காட்சிகளில் நடைபெற்ற நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி மூலம் தற்பொழுது மெயின் ஸ்ட்ரீமில் ஏராளமான இயக்குநர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் போல் செழியனின் ஸ்கூலில் இருந்து வரும் 34 படைப்பாளிகளில் பலரும் மெயின் ஸ்ட்ரீமில் தங்களுடைய முத்திரையை பதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
செழியன் துணை முதல்வரை சந்திக்கும் போதும் அழைப்பிதழ் மட்டும் வழங்காமல், கோரிக்கையையும் இணைத்து கொடுத்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
மொழிபெயர்ப்பு எழுத்தாளர் வே. ஸ்ரீராம் பேசுகையில், ”தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று எல்லோரும் வீட்டில் உட்கார்ந்த படி உலக சினிமாவை பார்க்க முடியும். 1970களில் இதுபோன்ற வசதி கிடையாது. சினிமா சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் அதிலும் சிலருக்கு மட்டும் தான் இது போன்ற உலக சினிமாவை பார்க்கும் வாய்ப்புக் கிட்டும். சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தூதரகத்தில் பணியாற்றியதால் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரெஞ்சு திரைப்படத்தை திரையிட்டோம். அப்போது திரையிடப்படும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு முன் சுருக்கத்தை திரையிடலுக்கு முன்னர் வழங்குவோம். படம் நிறைவடைந்த பிறகு படத்தைப் பற்றிய விவாதம் நடைபெறும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் அது நடைபெறவில்லை. அதிலும் குறிப்பாக தமிழில் இதைப் பற்றி பேசுவதற்கு ஆள் இல்லை. அதன் பிறகு சென்னை பிலிம் சொசைட்டி மூலமாக ‘மரபியல் மீறிய சினிமா’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அதில் இயக்குநர் ஹரிஹரன் இந்த புதிய அலை பற்றிய அருமையான முன்னுரையை எழுதி இருந்தார்.
புதிய அலை தொடர்பான படைப்புகள் ஐரோப்பாவில் மட்டும்தான் வெளியாகுமா, தமிழிலும் வெளியாக வேண்டும் என்று எண்ணத்தில் செழியன் எடுத்த முயற்சி தான் இது. அவருடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”50 லட்சம் ரூபாயில் ‘டூ லெட்’ எனும் திரைப்படத்தை உருவாக்கி, அதனை அனைத்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட்டு, விருதுகளை வாங்கி, இன்று வரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக திகழும் படத்தை உருவாக்கியவர் செழியன். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரைப் பற்றி பல தருணங்களில் பெருமிதமாக குறிப்பிட்டிருக்கிறேன்.
அவர் எடுக்கும் இந்த முயற்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழா பல தயாரிப்பாளர்களின் முன்னிலையில் நடைபெற வேண்டிய விழா.
இது தொடர்பாக நானும் சென்னையில் மத்திய அரசு ஆதரவுடன் மிகப்பெரிய விழா ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். அதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வை நான் காண்கிறேன்.
இங்கு அறிமுகமாகும் 34 இயக்குநர்கள், 30 லட்சத்தில் படமெடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் 10 பேர் வெற்றி பெற்றாலும் செழியனின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்றார்.
இயக்குநர் ஹரிஹரன் பேசுகையில், ”ஈரானிய இயக்குநர் மக்மல்பாஃப்பை சந்தித்த பிறகு என்னுடைய மாணவர்களுக்கும் அவர் போதித்த சினிமா பற்றிய விஷயங்களை அறிமுகம் செய்தேன்.
இங்கு அறிமுகமாகும் 34 இயக்குநர்களும் எப்போதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைவரும் பிரிந்து சென்றால் நீங்கள் கற்றது பயனற்றதாகிவிடும். எப்போதும் உங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் புரட்சி உருவாகும். புதிய அலை உருவாகும்,” என்றார்.
ரவிவர்மன் பேசுகையில், ”எனக்கு செழியன் உலக திரைப்படங்களை பற்றி எழுதிய எழுத்தாளராகத்தான் அறிமுகமானார். செழியனின் விரிவுரை வாசித்த பிறகு பல திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். செழியனை எப்போதும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது. பல பேருடைய லட்சியங்களை சில லட்சத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார். அது மிகப்பெரிய முயற்சி. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன். 34 திரைப்படங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல அரிய நிகழ்வு.
சீனாவில் தற்போது இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் கொண்ட மினி சீரிஸ் அறிமுகம் ஆகி இருக்கிறது. தற்போது நாம் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நீடிக்கக்கூடிய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற படங்கள் உருவாகாது. தற்போது வெளியாகும் படங்களில் பாடல்கள் இடம் பெறுவதில்லை. அவை தனி ஆல்பமாக வெளியாகும் .அதன் பிறகு அதற்கென்று தனி ஒரு இசை வங்கி உருவாகும்.
இறவா வரம் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய செழியன் வாழிய வாழிய,” என்றார்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் பேசுகையில், ”சுயாதீன படைப்பாளிகளுக்கு நேர்மை மிகவும் அவசியம். அதுவும் படைப்பை இன்றைய கால கட்டத்திற்காக உருவாக்காமல் எதிர்காலத்திற்காக உருவாக்குங்கள், 34 இயக்குநர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.
திரு. ட்ராட்ஸ்கி மருது பேசுகையில், ”செழியனை எனக்கு முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். மிக தெளிவாக பணியாற்றக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர் அவர். அவருடைய அந்தத் தெளிவு திரைத்துறையில் ஒரு புதிய அலை தொடர்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது. இது ஒரு ஆரம்பம் என்று தான் நான் நினைக்கிறேன். கடந்த 40, 50 ஆண்டுகளில் இது போன்றதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதில்லை. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் ஓவியத்தை போல கவிதையைப் போல ஒரு திரைப்படத்தையும் எளிதாக உருவாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
சக கலைஞர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான காலகட்டமாக இது இருக்கிறது. இதனை செழியன் முன்னெடுத்திருப்பதை நான் மிக முக்கியமானதாக பார்க்கிறேன். 34 திரைப்படங்களையும் சாத்தியப்படுத்தி இருக்கின்ற தி ஃபிலிம் ஸ்கூலில் படித்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு துணைபுரிந்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
எடிட்டர் பி.லெனின் பேசுகையில், ”அடிதடி இருப்பது மாற்று சினிமா. நாம் உருவாக்குவது ஒரிஜினல் சினிமா. ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேசி விடலாம். அதற்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ் தெரிந்தால் மட்டும் கூட போதும்.
இங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட தி ஃபிலிம் ஸ்கூல் மாணவப் படைப்பாளிகளின் சுய விவர பட்டியலில் படைப்பிற்கான பட்ஜெட் 50 லட்சம் தான் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் படப்பிடிப்பு நாட்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்போது நாங்கள் அதனை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதனை பார்க்கும் போது நாட்கள் தெரியவில்லை. முழு நீள திரைப்படத்தையும் சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து வழங்கி இருக்கிறார்கள்.
நான் திரைத்துறையில் பணியாற்றத் தொடங்கி இது 61 வது ஆண்டு. இன்றும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் தான் முக்கியமானது. ஸ்கிரீன் பிளேயும் முக்கியம். எனவே இளம் இயக்குநர்கள் அனைவரும் பிரசண்ட்டில் பிளசன்ட்டாக பிரசண்டபிளாக இருங்கள். வாழ்த்துக்கள்,” என்றார்.
இந்நிகழ்வில் 34 சுயாதீன திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களின் விவரங்கள்- அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களின் கதைச் சுருக்கம், பட்ஜெட், படப்பிடிப்பு தொடர்பான திட்டமிடல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விழா மலரை ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீ ராம் வெளியிட, திரு. டிராட்ஸ்கி மருது பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தி ஃபிலிம் ஸ்கூல் சார்பில் குறும்படம் மற்றும் ஆவண படங்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீகர் பிரசாத், இயக்குநர் ஞான ராஜசேகரன், ஹரிஹரன், தனஞ்செயன் ஆகியோர் விருதை வழங்கி கௌரவித்தனர்.
இதைத்தொடர்ந்து 34 படைப்புகளும் திரையிடப்பட்டன. அவை அனைத்தையும் திரையுலக பிரபலங்கள் பார்வையிட்டு இளம் படைப்பாளிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
34 படைப்பாளிகளின் பெயர்களும் அவர்களின் படைப்புகள் பற்றிய விவரங்களும் வருமாறு:
தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியபோது, அந்த மேடை முழுவதும் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததாக பேசப்பட்டது. அந்த ஒரே நிகழ்விலேயே, திருவாசக இசை முயற்சியின் ஆழமும் ஆன்மிக வலிமையும் வெளிப்பட்டது.
ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், சிவனின் மகிமையை போற்றும் சொற்களாலும், திருவாசகத்தின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வாலும் நிரம்பியுள்ளது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவன், கருணை வடிவமாகவும், ருத்ர ரூபமாகவும், யோகி வடிவமாகவும் தோன்றும் பல்வேறு நிலைகளை இசை வழியாகக் காட்சிப்படுத்துகிறது. அந்த வரிகளில் ஒலிக்கும் சிவபக்தி, ஜி.வி. பிரகாஷின் குரலால் இன்னும் ஆழமாக மனதிற்குள் இறங்குகிறது. அவரது குரலில் இருக்கும் வலிமை, பக்தி, பணிவு – அனைத்தும் சேர்ந்து, திருவாசகத்தின் தத்துவத்தை இசையின் உன்னத அனுபவமாக மாற்றுகிறது.
திரைப்பட இசை உலகில் தனித்த அடையாளம் பதித்த ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியமும் நவீனமும் இணையும் இசை பற்றிய தேடல் கொண்டவர். அந்த தேடலின் ஒரு முக்கியமான கட்டமாகவே இந்த திருவாசக இசை முயற்சி பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், இசை வடிவமைப்பில் நவீன ஒலியமைப்பையும், பாரம்பரிய பக்தி சுவையையும் நுட்பமாக இணைத்துள்ளார்.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அதன் முதல் படியாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு சரியான பாதையில் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனின் பல வடிவங்களையும், மனித மனத்தின் தவிப்பையும், இறைவனிடம் நம்மை சரணடைய வைக்கும் இசை அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசையில் ஒரு முக்கியமான அடையாளமாக நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜி.வி. பிரகாஷ் குரலில், சிவனின் மகிமையை ஒலிக்கும் இந்த திருவாசகத்தின் முதல் பாடல், கேட்பவரை ஒரு தெய்வீக பயணத்துக்கே அழைத்துச் செல்கிறது.
பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம், தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.
நவீன இசையில் பாரம்பரியத்தின் அம்சத்தை இணைப்பதில் தேர்ச்சி பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். திரைப்பட இசை, தனிப்பாடல்கள், சர்வதேச மேடைகள் என பல தளங்களில் தனது தனித்த குரலை பதித்துள்ள அவர், திருவாசக முயற்சியின் மூலம் தமிழ் ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம் அளிக்க முனைந்துள்ளார்.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.
இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் வரும் ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.