Breaking
July 18, 2026

Cinema

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் உருவாகிறது.

ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய ‘பாகுபலி’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். இந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் விறுவிறுப்பான மற்றும் சிறப்பான கதை கொண்ட இப்படத்தை தயாரிக்க, எஸ். எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்துள்ளனர்.

நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, இப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான விழாவில், பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையிலான இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

ஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டுவதுடன் டீசர் தொடங்குகிறது. அவர்களுக்கு இடையேயான மகிழ்ச்சியான தருணங்களும், அன்பான பிணைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சங்களாகும். பின்னர் அந்த சிறுமியை மேஜிக்கால் மறையச் செய்வதன் மூலம் மற்றொரு பெரிய வித்தையை காட்டுவதாக அவர் உறுதி அளிக்கிறார். அப்போதுதான் அவருக்கு உண்மையான சிக்கல் தொடங்குகிறது.

அதன் பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே படத்தின் மையக்கருவாக அமைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் மனதிற்கு நெருக்கமான தருணங்களுடன் கூடிய இந்த டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஃபஹத் பாசிலின் திரை இருப்பும், அவரது கலகலப்பான திரை தோற்றமும் டீசருக்கு மிகுந்த ஆற்றலை சேர்க்கின்றன. அந்த அழகான சிறுமியும் தனது வசீகரமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். காள பைரவாவின் பின்னணி இசை தனித்துவமாக இருக்கிறது. மேலும் ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ ஒரு சிறந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் !

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.

படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். அதேபோல், சக்திவாய்ந்த சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா, தனது முக்கியமான பகுதிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்திருந்தார்.

பூமி ஷெட்டி, மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் ஃபர்ஸ்ட் லுக்கும்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, PVCU-வில் அவரது கதாபாத்திரம் குறித்து அதிக ஆர்வத்தை உருவாக்கியது.

இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஆன்மீகப் பிரம்மாண்டத்தையும், நவீன திரைப்பட தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட அளவையும் இணைக்கும் வகையில், இந்திய சினிமாவின் மிகவும் லட்சியமான புராண திரைப்படங்களில் ஒன்றாக ‘மஹாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனிக்கிறார்.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்புப் பணிகளை விரைவாக முடித்து, போஸ்ட் புரடக்சன்  பணிகளுக்கு (Post Production) செல்ல படக்குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ‘மஹாகாளி’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் உருவாகி வரும் மிகவும் பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்து வருகிறது.

படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் விளம்பரப் பணிகள் தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து : பிரசாந்த் வர்மா
இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லுரு
தயாரிப்பாளர்: ரிவாஸ் ரமேஷ் துக்கல் வழங்குபவர்: RK துக்கல்
பேனர்: RKD Studios
இசை: ஸ்மரன் சாய்
ஒளிப்பதிவு : சுரேஷ் ரகது
கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா ஸ்கிரிப்டிங் பார்ட்னர்: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
விளம்பர வடிவமைப்புகள்: அனந்த் கஞ்சர்லா
மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படம்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்.

சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முக்கிய அறிவிப்பாக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனுடன், இணை தயாரிப்பாளராக பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இந்த கூட்டணி இன்று சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

பல சகாப்தங்களாக திரைப்படத் தயாரிப்பில் அனுபவம் கொண்ட பி. எல். தேனப்பன் இந்தப் படத்தில் இணைவது, தயாரிப்புக்கு மேலும் வலுசேர்க்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையிலும் திரைப்பட வர்த்தக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். பி.ஆர்.ஓ. ஆதிரா தில்ஜித், தமிழ் மார்க்கெட்டிங் – சரண், தமிழில் PRO – சதிஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பரிதாபங்கள் கோபி பேசியதாவது..,

“இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய படைப்பு மீது எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் கதை சொல்லி போகும் முன்பே நான் நடிப்பதாய் ஒத்துக்கொண்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ‘அருவி’ படத்திலேயே அவருடைய ஒளிப்பதிவை மிகவும் ரசித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும். ‘அன்பே டயானா’ படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகை ரோஜா பேசியதாவது:-
“இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை உணர்ந்தேன். குடும்ப பாசம், உறவுகள், காதல், உணர்வுகள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு நல்ல படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. எனக்கு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து செட்டிலான பெண் வேடம், என் நிஜ வாழ்க்கைப் பாத்திரம் போலவே இருந்தது.

குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் அனைவரின் மனதையும் தொடும். அது மிகவும் வித்தியாசமாகவும், நிறைவான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும்.

இயக்குநர் பாரி இளவழகன் மிகவும் திறமையானவர். அவருடைய உழைப்பும், படத்தின் மீது இருந்த அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கும், கதாநாயகி ரம்யாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். குறிப்பாக கேமரா வேலை மிகவும் அருமையாக இருந்தது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன.

‘அன்பே டயானா’ முழுக்க முழுக்க குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்தப் படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”

Eraa Entertainment சார்பில் தயாரிப்பாளர் சத்யா கரிகாலன் பேசியதாவது:-

“இந்த அழகான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ‘அன்பே டயானா’ ஒரு சாதாரண காதல் படம் மட்டும் அல்ல; குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை என அனைவரையும் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கையுடன் பணியாற்றிய இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் திரையில் நிச்சயம் தெரியும்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இந்தப் படத்துடன் இணைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்து இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளனர்.

‘அன்பே டயானா’ அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும். நன்றி.”

எடிட்டர் பார்த்தா பேசியதாவது:-

“ இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய நன்றி.

நான் பாரி இளவழகனுடன் ‘ஜமா’ படத்திலேயே பணியாற்றியிருக்கிறேன். நாங்கள் நீண்ட நாள் நண்பர்கள். இந்த மேடை, இந்த தருணம் எல்லாமே பல வருட கனவு என்று சொல்லலாம்.

‘ஜமா’ முடித்த பிறகு, ‘அன்பே டயானா’ படத்தின் ஒன்லைனை பாரி என்னிடம் முதன்முதலாக சொன்னபோதே மிகவும் உற்சாகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், நாங்கள் இருவருமே பெரம்பூரைச் சேர்ந்தவர்கள். பெரம்பூரை மையமாக வைத்து ஒரு அழகான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார்.

அதன்பிறகு, இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்று சொன்னபோது இன்னும் அதிக நம்பிக்கை வந்தது. யுவராஜ் பிரதருக்கும், நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றி. இந்தக் கதை சரியான கைகளுக்குத்தான் சென்றிருக்கிறது என்று அப்போதே தோன்றியது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர் தேர்வு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகவும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ரம்யா, பரிதாபங்கள் கோபி, சேத்தன் சார் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பரத் சங்கர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். அவருடைய இசை படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத அளவுக்கு அழகாக படமாக்கியிருக்கிறார். அது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”

இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசியதாவது:-
இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பாரி முதன்முதலில் கதையைச் சொல்ல ஆரம்பித்தபோதே பெரம்பூரைப் பற்றி அவர் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நான் சென்னை பையன். பெரம்பூருக்கு நிறைய முறை சென்றிருக்கிறேன். ICF-ல் பஸ் ஏறியிருக்கிறேன், 29C பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், அவர் பெரம்பூரை விவரித்த விதம், அது தனி உலகம் போல இருந்தது. அந்த இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவருடைய கதை எனக்குள் உருவாக்கியது.

அந்தக் கதையை என் நண்பர்களிடமும் மிகவும் உற்சாகமாகச் சொல்லியிருக்கிறேன். அப்போதுதான், இந்தக் கதையின் மீது எனக்கே தெரியாமல் ஒரு பெரிய ஈர்ப்பு உருவாகியிருப்பதை உணர்ந்தேன். அதனால், பட வேலைகள் தொடங்குவதற்கு முன்பே மூன்று, நான்கு முறை பெரம்பூருக்குச் சென்று, பாரி குறிப்பிட்ட இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தேன். நமக்குத் தெரிந்த சென்னை நகரத்திலேயே, இதுவரை கவனிக்காமல் விட்ட ஒரு புதிய உலகத்தை கண்ட உணர்வு அது.

இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களும், பாரி தனது வாழ்க்கையில் சந்தித்த உண்மை மனிதர்களிடமிருந்து ஈர்க்கப்பட்டவை. அதனால்தான் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இசை, பின்னணி இசை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையான திருப்தியுடன் வேலை செய்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்ல, படம் பார்த்த ஒரு ரசிகனாகவும் இந்தப் படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய யுவராஜ், நரேன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினர், ஷார்ஜன், விவேக் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அதேபோல் பாரி, எடிட்டர் பார்த்தா, ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆகியோருக்கும் சிறப்பு நன்றி. அவர்களுடைய பணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ரம்யா, சேத்தன் சார், ரோஜா மேம், கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.

இந்தப் படத்தில் பணியாற்றி முடித்தபோது எனக்கு ஒரு நிறைவான, மனநிறைவான உணர்வு ஏற்பட்டது. அதே உணர்வை படம் பார்க்கும் ரசிகர்களும் அனுபவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

இப்போது நீங்கள் கேட்டிருக்கும் பாடல்கள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இன்னும் இந்தப் படத்தில் நிறைய சோல்ஃபுல் பாடல்களும், இசை தருணங்களும் உங்களை காத்திருக்கின்றன. அவை வெளியாகும்போது ‘அன்பே டயானா’ இசையின் முழு வலிமையையும் நீங்கள் உணர்வீர்கள். நன்றி.”

சிறப்பு விருந்தினர் இயக்குநர் தினகரன் சிவலிங்கம் பேசியதாவது:-

“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. பாரி இளவழகனின் பயணத்தை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர். சினிமா மீது இருக்கும் காதலும், விடாமுயற்சியும் தான் இன்று அவரை இந்த மேடைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பயணம் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.

‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதில் இருக்கும் உணர்வுகளும், கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பாக இருந்தன. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. ‘அருவி’ படத்தில் அவரது பணியை ரசித்தது போலவே, இந்தப் படத்திலும் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் புரமோஷன், பப்ளிசிட்டி டிசைன், டிரெய்லர் என ஒவ்வொரு விஷயத்திலும் படக்குழுவின் அக்கறை தெரிகிறது. அதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.

‘அன்பே டயானா’ ரசிகர்களின் மனதை கவரும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”

நடிகர் சேத்தன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். பாரி முதலில் இந்தக் கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, ‘நான் என்ன கதாபாத்திரம் பண்ணப் போகிறேன்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நீங்கள்தான் அப்பா கதாபாத்திரம்’ என்றார். அதைக் கேட்டதும், ‘என்னடா, தொடர்ந்து அப்பா கதாபாத்திரம்தானா வருகிறது?’ என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. நான் கிண்டலாக, ‘நண்பன் சமுத்திரகனி இன்னும் இளைஞனாக நடித்துக் கொண்டிருக்கிறார்; நான் மட்டும் அப்பாவாகிவிட்டேனே!’ என்று சொன்னேன். அதற்கு பாரி, ‘நீங்க யங் ஃபாதர்’ என்றார்.

ஆனால், முழுக் கதையையும் கேட்ட பிறகு, ‘இது அப்பா கதாபாத்திரம் மட்டும் இல்லை; தேவைப்பட்டால் தாத்தா கதாபாத்திரம்கூட மகிழ்ச்சியாக செய்வேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அவர் கதையை அழகாக எழுதியிருந்தார்.
என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முழுமையான பயணமும், அழகான நிறைவும் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.

அதேபோல், அந்த எழுத்து திரையிலும் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போதே இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது. இது ஒரு பிரில்லியண்டான திரைப்படம். கண்டிப்பாக பாரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

பாரி மட்டுமல்ல, ரம்யா, கோபி, பரத் ஆகியோருக்கும் இந்தப் படம் மிக முக்கியமான படமாக அமையும். பரத் ஏற்கனவே நல்ல உயரத்தில் இருக்கிறார்; இன்னும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் ஷெல்லி பிரதரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சத்யா மேடம், சரவணன் சார், யுவராஜ் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள சசி சார், சமுத்திரக்கனி சார் மற்றும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.”

சிறப்பு விருந்தினர் நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசியதாவது..,

“சேத்தன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். திரையில் அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதற்கு ஒரு தனித்துவமான உயிரைக் கொடுப்பார். நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. விடாது கருப்பு மூலம் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அவர் இன்னும் பெரிய உயரம் தொடுவார்.

இயக்குநர் பாரியை பார்க்கும்போது, சினிமா மீது இருக்கும் அவரது காதலும், அர்ப்பணிப்பும் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட இளம் இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளையும், புதிய பார்வைகளையும் கொண்டு வருகிறார்கள். அவர் இந்தப் பயணத்தில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரிலும், படக்குழுவின் பேச்சிலும் ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான நேர்மறையான உணர்வு தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்தப் படம் ரசிகர்களின் மனதை வென்று மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும். நன்றி.”

இயக்குநர், தயாரிப்பாளர் சரவணன் பேசியதாவது..

“அனைவருக்கும் வணக்கம். நான் எப்படி தயாரிப்பாளர் என பலரும் கேட்டார்கள் அது யுவராஜ் கணேசனால் நடந்தது. நான் பணம் எல்லாம் போடவில்லை, பாரி மீதான அன்பில் இந்த குழு மீதான அன்பில் இணைந்திருக்கிறேன்.

‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு அழகான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து நல்ல கதைகளையும், தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘அன்பே டயானா’வும் நிச்சயமாக ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

இயக்குநர் பாரி இளவழகன் இந்தக் கதையை மிகுந்த அன்புடனும் நேர்மையுடனும் உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் உழைப்பும் டிரெய்லரிலேயே தெரிகிறது. இந்த விழாவிற்கு எனக்காக வந்ததற்கு சமுத்திரகனி மற்றும் சசிகுமார் சாருக்கு நன்றி.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது:-

“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் மேடையில் அதிகமாக பேச மாட்டேன். ஆனால் இந்த மேடையில் எப்படியாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நினைத்துத்தான் வந்திருக்கிறேன்.

ஒரு சிறிய கதையைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு இளைஞன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். வேலை இல்லை, வீடு இல்லை, எதுவுமே இல்லை. தினமும் ரயில் நிலையத்தில் அமர்ந்து, தங்கள் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

ஒருநாள் ஒரு வயதான பாட்டி அவனிடம் வந்து, ‘இந்த டீயை குடி’ என்று கொடுக்கிறார். ‘என்னிடம் பணம் இல்லை’ என்று அவன் சொன்னபோது, ‘நான் உன்னிடம் பணம் கேட்கவில்லை. நீ தனியாக இல்லை என்பதை உணர்த்தத்தான் இந்த டீயை வாங்கிக் கொடுத்தேன்’ என்று அந்தப் பாட்டி சொல்கிறார்.

அவன் அந்த டீயை குடிக்கிறான். அதன் சூடு உடம்பை மட்டும் அல்ல, மனதையும் தொட்டது. மறுநாள் அந்தப் பாட்டியைத் தேடுகிறான். அதற்குப் பிறகும் தேடுகிறான். ஆனால் அவர் வரவில்லை. ஆனாலும், அந்த டீயின் சூடு மட்டும் அவனுடன் இருந்துகொண்டே இருந்தது. ‘நீ தனியாக இல்லை… உனக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்ற நம்பிக்கையை அது அவனுக்குக் கொடுத்தது.

என்னுடைய வாழ்க்கையிலும் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த மேடையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக சரவணன் சாருக்கு மிகவும் நன்றி. பல நேரங்களில் நான் தடுமாறியபோது, எனக்கு துணையாக இருந்தவர் அவர். அவர் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்.
என்னுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

சரவணன் சார் எங்கள் வாழ்க்கையில் வந்த பிறகு, சுற்றியிருந்த சூழலே பாஸிடிவாக மாறியது என்று நான் நம்புகிறேன். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு நல்ல ஆற்றல் இருக்கும்.

‘அன்பே டயானா’ எங்களுக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தப் படம் ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நன்றி.”

நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிறப்பு விருந்தினர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

முதலில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய திறமையை நம்பி, ‘அன்பே டயானா’ படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், திறமையான இயக்குநர், அற்புதமான நடிகர். ‘ஜமா’ படத்தை பார்த்தபோதே உங்கள் திறமையை மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், யுவராஜ், நரேன், ஷார்ஜன், மணி, நாகராஜ் சார், விவேக் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்தப் படத்திலும் என்னை ஒரு பகுதியாக இணைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment, ஆதிகா ப்ரோ, சரவணன் சார், ரமணன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மனநிறைவான அனுபவமாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி சார் மிகவும் திறமையானவர். அதே நேரத்தில் மிகவும் எளிமையானவர், தொழில்முறை அணுகுமுறை கொண்டவர். பெரம்பூரை அவர் திரையில் பதிவு செய்திருக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது. படத்தின் முதல் காட்சிகள் வெளியானபோதே அந்த விஷுவல்ஸை அனைவரும் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பரத் சங்கர் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும். அவருடைய பணி உண்மையிலேயே மாயாஜாலம் போல இருக்கிறது.

ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

சேத்தன் சார், பரிதாபங்கள் கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.

இந்தப் படத்தின் புரமோஷனுக்காக கடினமாக உழைத்து வரும் PRO குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றி. குறிப்பாக வெங்கட் ரமணன் சார் மற்றும் அவருடைய குழுவினர் புதுமையான யோசனைகளுடன் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

‘அன்பே டயானா’ எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த திரைப்படம். டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் சொல்லும்.

‘அன்பே டயானா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம்.
இந்த மேடையில் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
முதலில் யுவராஜ், நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.
என்னுடைய உதவி இயக்குநர் காலத்திலிருந்து என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்களும், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தில் உருவாகியுள்ளது.

குறிப்பாக என் Associate Directors கார்த்திக் வீரபாகு, தினேஷ், ராஜன் மற்றும் முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பின்னால் அவர்களுடைய உழைப்பு மிகப்பெரியது.

சினிமா என்பது ஒரு கூட்டுப் பயணம். ஒரே ஒரு மனிதரால் ஒரு படம் உருவாகாது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.

சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடன் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

போஸ்டரில் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட அவர் ஒரு மிக இனிமையான மனிதர்.

என்னுடைய அன்பு சகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவும், ஒத்துழைப்பும் அளவிட முடியாதது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார். அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.

சுதர்சன் காந்தி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உழைத்ததால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தை அடைந்துள்ளது.

இந்த மேடையில் அனைவரும் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பேசிவிட்டார்கள். அதற்கு நான் தகுதியானவனாக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றி.”
‘அன்பே டயானா’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது பெரம்பூர் மக்கள் காலாகாலத்திற்கும் கொண்டாடும் படமாக இருக்கும்.

இயக்குநர் சசிகுமார் பேசியதாவது..,
“நான் நன்றி சொல்ல வரவில்லை… வாழ்த்து சொல்லத்தான் வந்திருக்கிறேன்.
‘அன்பே டயானா’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் அற்புதமாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லுங்கள். அதுதான் உண்மையான நன்றியாக இருக்கும். அந்த வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

என்னுடைய நண்பர் சரவணன், இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார். இந்தப் படத்தில் அவர் பணம் முதலீடு செய்யவில்லை என்றாலும், தனது உழைப்பை முழுமையாக முதலீடு செய்திருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும். அதற்குரிய பங்கை தயாரிப்பாளர்கள் அவருக்கு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி. ‘ஜமா’ திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தில் அவரது நடிப்பும், படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட யதார்த்தமான படத்தை உருவாக்குவது எளிதான விஷயமல்ல. அந்தப் படத்தின் மூலம் ஒரு உண்மையான படைப்பாளி என்பதை நிரூபித்த அவர், தற்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ‘அன்பே டயானா’வை உருவாக்கியிருக்கிறார். இதிலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.
என்னுடைய நண்பர் யுவராஜ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி கதை கேட்டு முடிவு செய்தவர் அவர் தான், இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் நடித்துள்ள நாயகி ரம்யா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்.

இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.”
முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ‘அன்பே டயானா’, தற்போது டிரெய்லர் வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக ‘அர்ஜுனன் பேர் பத்து’.

இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக்.

தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பு: எல் .சுந்தரபாண்டி

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக் குழுவினருடன் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,

” எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.
எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.
நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இந்தப் படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு நன்றி.இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து மைனா உங்களுக்கு ரொம்ப நன்றி. கதாநாயகி அனாமிகாவுக்கு நன்றி.

நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.

இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் .நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார்.
நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி.
மேலும் இங்கே வந்துள்ள
மதன் சார், ரமேஷ் சார், சௌந்தர்யா எல்லாருக்கும் ரொம்ப நன்றி. கேமராமேன் பிரதீப்,உதவி இயக்குநர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் எனக்கு நீண்ட காலமாக நல்ல பழக்கம்.

ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் எல்லாமே சென்னைதான்.வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது .சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான்.
சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.

2009 வந்து யோகிதான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டர் இடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன் .இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.

இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு மாதிரி கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது. உடனே அவனுக்குப் போன் செய்தேன்.என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.இது மாதிரி ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் என்றான் உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன்.அதற்குப் பிறகுதான் சந்தித்தோம்.அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் நல்ல கதையோடு வாருங்கள்.சரியாகச் செய்யுங்கள்.மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”. என்றார்.

பேசி முடித்ததும் அவருடன் செய்தியாளர்கள் கலந்துரையாடிய போது அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கேட்ட போது, “கமல் சாருடன் மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. விரைவில் நடிப்பேன் என்று நம்புகிறேன் “என்றார். மேலும் யோகி பாபு பகிர்ந்து கொண்டவை:

“300 படங்கள் வரை வந்துள்ளதற்குத் தெய்வ பக்தி காரணம்.நான் வழங்கும் முருகன்தான் அதற்குக் காரணம். எனக்கு முருகன் மேல் பெரிய நம்பிக்கை உள்ளது.

நான் எந்த பிரேமில் தலை காட்டினாலும் என்னை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பார்க்கிறார்கள்.நகைச்சுவை வேடங்கள் தான் எனக்குச் சோறு போடுகிறது. அதை முதலில் நான் திருப்தி செய்ய வேண்டும்.அதனால் அதை நிறுத்த மாட்டேன்.சில படங்களில் லீடு என்று முன்னணிப் பாத்திரங்களில் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.மற்றபடி நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் என் காலத்தை ஓட்டுகிறேன்.என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் இன்னும் படங்களின் மூலம் கொடுக்க வேண்டும், நிச்சயம் செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மேலும் விழாவில்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான் ,படத்தின் இயக்குநர் ரா.ராஜ்மோகன், இசையமைப்பாளர் இமான்,ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, கதாநாயகி அனாமிகா,மைனா நந்தினி, அருள்தாஸ், காளி வெங்கட், லெனின் பாரதி,சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் நிறைவில் ட்ரெய்லர் பாடல்கள் வெளியிடப்பட்டன.
300 ஆவது படத்தை முன்னிட்டு நாயகன் யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்தார். அத்துடன் விழாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

யோகி பாபுவின் 300 வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணியில் #RAPO23

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறார். திரில்லர், ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் என எந்த ஜானரிலும் தனக்கென ஒரு தனித்துவமான இசை மொழியை உருவாக்கியுள்ள அவர், #RAPO23-க்கும் அதே தரத்தில் ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், பின்னணி இசைக்காக அதிகம் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக சாம் சி எஸ் திகழ்கிறார். கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது திறமை, பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக த்ரில்லர் படங்களில் அவர் உருவாக்கும் சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது.

அதேநேரத்தில், சமீபத்தில் வெளியான “இம்மார்டல்” திரைப்படத்தின் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல், அவரது மெலடி திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒருபுறம் காதல் பாடல்களில் மனதை வருடும் மெலடியையும், மறுபுறம் திரில்லர் படங்களில் பரபரப்பை கூட்டும் பின்னணி இசையையும் சமமாக கையாளும் இசையமைப்பாளராக சாம் சி எஸ் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கும் ராம் பொதினேனி மற்றும் இசையின் மூலம் கதைக்கு உயிர் கொடுக்கும் சாம் சி எஸ் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, #RAPO23 திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதைக்கு இணையாக இசையும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி, தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பேசப்படும் முக்கியமான காம்பினேஷனாக மாறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

நடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர்

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஓ! சுகுமாரி’ – திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் – காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். ‘ஓ! சுகுமாரி ‘ படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில், ‘தாமினி’ என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ( Electric Shock) ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, அவளது குடும்பத்தினர்- அவளை நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தனக்கு என்ன காத்திருக்கிறது என்பது அந்த நாயகனுக்கு தெரியாது. இதுபோன்ற அசாதாரணமான சிக்கலை சமாளிக்க போராடும் அந்த புதுமண தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கலகலப்பான மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளே படத்தின் அடுத்த கட்ட நகர்வாக அமைகிறது. அவர்கள் இருவரும் இணைந்து இந்த சிக்கலை எப்படி எதிர்கொண்டு காதலையும், மகிழ்ச்சியையும் கண்டறிந்து கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த கதையின் மையமாகும்.

இயக்குநர் பரத் தர்ஷன் உணர்ச்சிகளுக்கு குறைவில்லாமல் அதே சமயம் மிகுந்த நகைச்சுவையுடன் இந்த கதையை வழங்கியுள்ளார். திரு வீர் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். கவலையற்ற கிராமத்து இளைஞராக தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக ஜொலிக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான அழகையும், ஆழத்தையும் அவர் திரையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் முரளிதர் கௌட் , விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி மற்றும் ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் C.H. குஷேந்தர் – கிராமத்து பின்னணியிலான அழகியல்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜு – தனது துடிப்பான இசையின் மூலம் இந்த கலகலப்பான கதை களத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக திருமலா எம். திருப்பதி பணியாற்ற, படத் தொகுப்பை ஸ்ரீ வர பிரசாத் கையாளுகிறார்.

இந்த ‘ஓ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிகளின் புத்துணர்ச்சியூட்டும் கலவையை வழங்குகிறது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படைப்பு என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. ‘ஓ! சுகுமாரி’ ஜூலை 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள் : திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு. ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் .

தொழில்நுட்ப குழு :

தயாரிப்பாளர் : மகேஸ்வரா ரெட்டி மூலி
இயக்குநர் : பரத் தர்ஷன்
ஒளிப்பதிவு : சி ஹெச் குஷேந்தர்
இசை : பரத் மஞ்சிராஜு
கலை இயக்குநர்: திருமலா எம் திருப்பதி
படத்தொகுப்பு : ஸ்ரீ வர பிரசாத்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

‘லவ்-ஓ-லவ்’ – பழைய காதல் ஃபார்முலாவில் சிக்கிக் கொண்ட ரொமான்டிக் டிராமா

காதலை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களில் புதுமையான திரைக்கதையோ, மனதைத் தொடும் கதாபாத்திரங்களோ இருந்தால் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். ஆனால் ‘லவ்-ஓ-லவ்’, வழக்கமான காதல் கதையை புதிய கோணத்தில் சொல்ல முயன்றாலும், அதில் முழுமையாக வெற்றி பெறவில்லை.

படத்தின் தொடக்கம் ஓரளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், கதை நகர நகர அது ஏற்கனவே பல படங்களில் பார்த்த சம்பவங்களின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது. காதல், பிரிவு, மீண்டும் சந்திப்பு போன்ற அம்சங்கள் எந்தப் புதுமையும் இல்லாமல் நகர்வதால் திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை.

நாயகன் மற்றும் நாயகி தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்க முயற்சித்துள்ளனர். இருவருக்கும் இடையிலான சில காட்சிகள் இயல்பாக இருந்தாலும், உணர்ச்சிகரமான தருணங்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. துணை நடிகர்களின் பங்களிப்பும் சாதாரணமாகவே அமைந்துள்ளது.

இயக்குநர் காதலின் பல பரிமாணங்களை பேச முயன்றிருந்தாலும், திரைக்கதையில் போதுமான ஆழம் இல்லாததால் அந்த முயற்சி முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பல காட்சிகள் தேவையற்ற நீளத்துடன் நகர்வதால் படத்தின் வேகம் குறைகிறது. கிளைமாக்ஸும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல், எளிதில் யூகிக்கக்கூடிய வகையிலேயே முடிகிறது.

ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை அளிக்கிறது. பாடல்களில் சில ரசிக்கும்படியாக இருந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் உணர்வை உயர்த்தத் தவறுகிறது. எடிட்டிங் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம்.

படத்தின் மிகப்பெரிய குறை அதன் கணிக்கக்கூடிய திரைக்கதை. கதாபாத்திரங்களின் வளர்ச்சியும் போதுமான அளவில் இல்லாததால், அவர்களின் முடிவுகள் பார்வையாளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. நகைச்சுவையும் சில இடங்களில் மட்டுமே வேலை செய்கிறது.

மொத்தத்தில், ‘லவ்-ஓ-லவ்’ ஒரு சாதாரண காதல் திரைப்படமாக மட்டுமே நிற்கிறது. புதுமையான காதல் அனுபவத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கலாம். சில நல்ல தருணங்கள் இருந்தாலும், அவை படத்தை முழுமையாக காப்பாற்றுவதற்கு போதுமானதாக இல்லை.

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது!

பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார்.

இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் – பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்று வெகு சுவாரசியமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், “Love Will Spark Again” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. இது காதலையும் நம்பிக்கையையும் மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு அழகான காதல் கதையை சுட்டிக்காட்டுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் ஒரு சுவரின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடும் தருணம் இடம் பெற்றுள்ளது. இளநீல நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் மற்றும் கண்ணாடி அணிந்த துல்கர் சல்மான் வெட்கப் புன்னகையுடன் கீழே பார்க்கிறார். இளநீல நிற சல்வார் அணிந்த பூஜா ஹெக்டே, அவரைப் பார்த்து மனம் திறந்து சிரிக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார்.

இருவரின் உடைத் தேர்வைப் பார்க்கும்போது, அவர்கள் வகுப்புத் தோழர்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான பின்னணி, அமைதியான சூழல், இயல்பான உடல்மொழி மற்றும் மனதை வருடும் புன்னகை ஆகியவை, இருவருக்கும் இடையிலான நெருக்கம், நட்பு மற்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பந்த்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியையும், பாஸிடிவ் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை, மனதை வருடும் உணர்வுகள் மற்றும் கண்கவர் காட்சிகளால் நிறைந்த முழுமையான காதல் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவிநாஷ் கொல்லா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்:

துல்கர் சல்மான்
பூஜா ஹெக்டே

தொழில்நுட்பக் குழு:

கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி
தயாரிப்பு – சுதாகர் செருகூரி
தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்
இணை தயாரிப்பாளர் – கோபிசந்த் இன்னமூரி
தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி
தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு – யுவராஜ்

‘இதயம் முரளி’ – விமர்சனம்

‘இதயம் முரளி’ – உணர்வுகளைத் தொட முயன்று தடுமாறும் குடும்ப நாடகம்

குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் வாழ்க்கையின் உணர்வுபூர்வமான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இதயம் முரளி’, மனதைத் தொடும் ஒரு படமாக இருக்க வேண்டிய இடத்தில், பல இடங்களில் அதன் தாக்கத்தை இழக்கிறது.

கதையின் கரு நன்றாக இருந்தாலும், அதை திரையில் சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. தொடக்கத்தில் உருவாகும் எதிர்பார்ப்பு, அடுத்தடுத்த காட்சிகளில் மெதுவான நகர்வால் குறைந்து விடுகிறது. பல காட்சிகள் தேவையற்ற நீளத்துடன் நகர்வதால் படத்தின் ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் தங்களால் முடிந்த அளவில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், வலுவான கதாபாத்திர வடிவமைப்பு இல்லாததால் அவர்கள் நடிப்பு முழுமையாக வெளிப்படவில்லை. உணர்ச்சிகரமான காட்சிகளில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய தருணங்கள் கூட எதிர்பார்த்த அளவுக்கு மனதில் பதியவில்லை.

இயக்குநரின் நோக்கம் குடும்ப உறவுகளின் மதிப்பை எடுத்துரைப்பதாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை வலுவாக அமையவில்லை. சில முக்கியமான மோதல்கள் மிக எளிதாக முடிவுக்கு வருவதால், கிளைமாக்ஸும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஒளிப்பதிவு சில இடங்களில் கதையின் மனநிலையை அழகாக பதிவு செய்கிறது. இசை மற்றும் பின்னணி இசை ஓரளவு பலமாக இருந்தாலும், நினைவில் நிற்கும் பாடல்கள் குறைவாகவே உள்ளன. எடிட்டிங்கில் இன்னும் இறுக்கம் இருந்திருந்தால் படத்தின் நீளம் மற்றும் வேகம் மேம்பட்டிருக்கலாம்.

படத்தின் மிகப்பெரிய குறை அதன் கணிக்கக்கூடிய திரைக்கதை. அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால், எந்தக் காட்சியும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சில துணைக் கதாபாத்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்படாமல் போயுள்ளன.

மொத்தத்தில், ‘இதயம் முரளி’ நல்ல கருத்தை கொண்டிருந்தாலும், பலவீனமான திரைக்கதை, மெதுவான நகர்வு மற்றும் தாக்கம் குறைந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளால் சராசரி குடும்ப நாடகமாக மட்டுமே முடிகிறது. உணர்வுபூர்வமான திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு கூட இது முழுமையான திருப்தியை வழங்குவதில் தவறுகிறது.