Breaking
June 26, 2026

Cinema

சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. ‘நந்தன்’ படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாகக் கொடியேற்றவும், உரிய அதிகாரங்களை அடையவும் அதிரடியாக உத்தரவிட்டது தமிழக அரசு. கடந்த வருட குடியரசு தினத்தில் இதுகாலம் வரை நடக்காத அதிசயமாகத் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றினர். “நந்தன் திரைப்படம் உருவாக்கிய சமூக புரட்சி இது” என சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அதனை வரவேற்று இருந்தார்கள். இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம்.

கடந்த 20.6.26 அன்று மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டெல்லி தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைத் தலைவர் மகேந்திரன், தயாரிப்பாளர் சிவா மற்றும் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். “தமிழ்த் திரைப்படங்கள் மகத்தான உணர்வைக் கொடுக்கின்றன. சமூகத்தைச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. நல்ல படங்களைக் கொண்டாடுவதுதான் சமூகம் சிறக்க உதவும்”  என இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS பேசினார். இணைத் தலைவர் மகேந்திரன், “நந்தன் மாதிரியான படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு தனி தைரியம் தேவை. சசிகுமார் அதனை சமூக அக்கறையோடு செய்திருக்கிறார். வாயில் வெற்றிலை எச்சில் ஒழுக அவர் நடித்த காட்சிகளைப் பார்த்தபோது திகைத்துப் போய்விட்டேன். கமலுக்கு சப்பாணி என்றால், சசிகுமாருக்கு நந்தன். அந்தளவுக்கு அடி உதை வாங்கி தலித் பஞ்சாயத்து தலைவராக தன்னை அப்படியே காட்டி இருக்கிறார் சசிகுமார். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரம் மட்டுமல்ல, இன்னும் பல விருதுகள் ‘நந்தன்’ படத்திற்கு வந்து சேரும். சமூகத்தை வலிமைப்படுத்தும் இத்தகைய படைப்புகள்தான் இன்றைய தலைமுறையின் அவசிய தேவை…” என்றார். நிகழ்வில் நடிகர் சசிகுமாரும் இயக்குநர் இரா.சரவணனும் திரண்டிருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். “படத்தில் நான் பட்ட சிரமங்கள் யாவும் டெல்லி மக்களின் பாராட்டில் சரியாகிவிட்டன. ‘நந்தன்’ படம் வெளியான பிறகு எங்களுக்கு விடிவு பிறந்திருப்பதாக ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதார். அந்தக் கண்ணீர் தேசிய விருதுக்கு நிகரானது” என்றார் சசிகுமார். “எப்போதுமே சினிமா தமிழ் மக்களின் ரத்தத்துடன் கலந்தது. அதனால்தான் முதலமைச்சரையே தமிழ் மக்கள் சினிமாவில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். ‘நந்தன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு அடுத்தடுத்த படைப்புகளை இன்னும் பொறுப்போடு செய்ய வைக்கும்” என்றார் இயக்குநர் இரா.சரவணன்.

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு சசிகுமார், இரா.சரவணன் இருவருக்கும் விருது கொடுக்கப்பட்டது. ஜென்ஸி தலைமுறையினரும் இத்தகைய சமூக அக்கறையான படங்களைப் பார்க்க வேண்டும் என்பதால் வரும் வாரத்தில் ‘நந்தன்’ படத்தை பிரத்யேகமாகத் திரையிடவும் டெல்லி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

“டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!

ராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம், உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது.

வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களால் நிரம்பிய ஒரு உறவை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண ரிலீஸ் தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ உருவாக்கி வரும் பிரம்மாண்டமான உலகத்தை இது உணர்த்துகிறது. இதனால், ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தை குறிவைத்து டாக்ஸிக் திரைப்படம் வெளியிடப்படுகிறது. வரமகாலட்சுமி விரதம், ஓணம், ஈத் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய பண்டிகைகளை உள்ளடக்கிய நீண்ட விடுமுறை காலத்தில் படம் வெளியாக இருப்பதால், இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

புதன்கிழமை வெளியீடு என்பதால், நீண்ட விடுமுறை வாரத்தை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த வெளியீடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டும், டாக்ஸிக் திரைப்படம் மிகப்பெரிய கனவு, பிரம்மாண்டம் மற்றும் தனித்துவமான படைப்பாற்றலுடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் ராகிங் ஸ்டார் யஷ் ஆகியோரின் முதல் கூட்டணியாகும். KVN Productions மற்றும் யாஷின் Monster Mind Creations இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் மிகவும் பிரம்மாண்டமான முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள டாக்ஸிக், இந்திய சினிமாவுக்கு புதிய தரத்தை அமைக்கும் நோக்கத்துடன் உருவாகியுள்ளது. மேலும், கன்னடம், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.

இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளியீட்டு கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அனைவரது கவனமும் டாக்ஸிக் திரைப்படத்தின் மீதும் அதன் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு திட்டத்தின் மீதும் திரும்பியுள்ளது. பண்டிகை காலத்தை குறிவைத்த வெளியீடு, நாடு முழுவதும் ரசிகர்களை கவரும் வலிமை, சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் ஒவ்வொரு அறிவிப்பின் மூலமும் விரிவடைந்து வரும் படத்தின் உலகம் ஆகியவை டாக்ஸிக் திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டின் மிக முக்கியமான திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார்.

பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை.

கற்பனைக்கு எட்டாத-  கற்பனை செய்து பார்த்திட இயலாத-  சக்திகளை பெறுவதற்காக ஒரு வலிமை வாய்ந்த தீய சக்தி அதை கைப்பற்ற முயலும் போது, சிவபெருமான் அங்கு தோன்றி அதை பாதுகாக்க நாக சாதுக்களுடன் கைகோர்க்கிறார்.

கோயிலை பாதுகாக்கும் மர்மமான ‘நாக பந்தம்’ பற்றிய குறிப்புடன் இப்படத்தின் முன்னோட்டம் நிறைவடைகிறது. இது தெய்வீக சக்திக்கும், தீமைக்கும் இடையிலான ஒரு காவிய மோதலுக்கான களத்தை அமைக்கிறது.

இந்திய புராணங்கள் வரலாறு மற்றும் கோயில் சார்ந்த மரபுகள் குறித்து இயக்குநர் அபிஷேக் நாமா மேற்கொண்ட விரிவான ஆய்வுகள்… இந்த முன்னோட்டம் முழுவதும் வெளிப்படுகிறது.

சுவாரசியமான விவரங்கள் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் நிறைந்த இது… பல காலகட்டங்களை உள்ளடக்கிய ஒரு கதைக்களத்தை முன்னிறுத்துகிறது.

புராணம்- வரலாறு- மர்மம் மற்றும் சாகசம் -ஆகியவற்றை ஒரே சினிமா அனுபவத்துடன் இணைக்கும் வகையில் இதன் கதை சொல்லும் விதம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள’ நாக பந்தம்’ தனது பிரம்மாண்டமான விஷுவல்கள் மூலம்  பார்வையாளர்களை கவர்கிறது.

படத்தின் பிரம்மாண்டமான கதைக்களம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அசோக் குமார் பிரம்மாண்டமான மற்றும் நுட்பமான விவரங்களுடன் கூடிய அரங்குகளை உருவாக்கியுள்ளார்.

அனந்த பத்மநாப சுவாமி கோயில் மற்றும் அதன் கம்பீரமான மூலவர் சிலை ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள விதம்…. படத்தின் முதன்மையான சிறப்பம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ். சௌந்தர்ராஜன் படத்தின் ஆன்மீக சாராம்சத்தையும், பிரம்மாண்ட அளவையும் அழகாக நேர்த்தியுடன் படம்பிடித்து பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளர்கள் ஜூனைத் கான் மற்றும் அபே ( Abhe) ஆகியோரின் இசை அமைந்துள்ளது. இவர்களின் பின்னணி இசை-  கதையின் பக்தி உணர்வையும், உணர்வுபூர்வமான ஆழத்தையும் ஒரு சேர மேம்படுத்துகிறது.

படத்தின் சண்டைக் காட்சிகளும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய பிரம்மாண்டமான மற்றும் லட்சியமிக்க படைப்பிற்காக சமரசமற்ற தயாரிப்பு தரத்துடன் படைப்பை வழங்கிய என் ஐ கே ஸ்டுடியோவின் ( NIK Studio)   தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகி ரெட்டி ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக இதில் இடம் பிடித்துள்ள வி எஃப் எக்ஸ் VFX பணிகள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன.

இப்படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் தனது குறிப்பிடத்தக்க திரை தோற்றத்தையும் ,வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார்.

சாதாரணமான மனிதனாகவும் … சிவபெருமானாகவும்… என இரண்டு வித தோற்றங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் விராட் கர்ணா தோன்றுகிறார் என முன்னோட்டம் தெரிவிக்கிறது. அவரது உடல் மாற்றம்,  கம்பீரமான தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தின் மீதான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவை படம் முழுவதும் தெளிவாக தெரிகிறது.

மேலும் கதையில் முக்கிய பங்குவகிக்கவிருக்கும் ஒரு வலுவான நட்சத்திரக் கூட்டத்தையும் குறிக்கும் வகையில் பல முக்கிய துணை கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் இந்த ட்ரெய்லர் வழங்குகிறது.

மொத்தத்தில் பழங்கால புராணங்கள் – மறைக்கப்பட்ட புதையல்கள் – தெய்வீக மர்மங்கள் – ஆகியவை அடங்கிய கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு புராண சாகச படமாக ‘நாகபந்தம் ‘ இருக்கும் என ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது.

நூறு சாமி விமர்சனம்

“உறவுகளின் வலியையும், மனித உணர்வுகளின் மதிப்பையும் பேசும் மனதைத் தொடும் குடும்ப நாடகம்.”

குடும்ப உறவுகள், சமூக பார்வைகள் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “நூறு சாமி”. வழக்கமான வணிகத் திரைப்படங்களிலிருந்து விலகி, உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களிடம் ஒரு அமைதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கதை

பல ஆண்டுகளாக குடும்பத்திற்காக வாழ்ந்து, தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய ஒரு பெண், தனது வாழ்க்கையை மீண்டும் தனது விருப்பப்படி வாழ முடிவு செய்கிறார். ஆனால் அவரது அந்த முடிவு குடும்பத்தினரிடமும், சமூகத்திடமும் பல்வேறு கேள்விகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்குகிறது.

தனது வாழ்க்கைக்கான உரிமையை நிலைநாட்ட முயலும் ஒரு பெண்ணின் போராட்டம், குடும்ப உறவுகளின் சிக்கல்கள், சமூகத்தின் பார்வை மற்றும் மனிதர்களின் உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது.

நடிப்பு

படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்களின் இயல்பான நடிப்பு. கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகைப்படுத்தாமல், யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக கதாநாயகியின் நடிப்பு படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. குடும்ப உறவுகளில் ஏற்படும் மனக்கசப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நடிகர்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்கம்

இயக்குநர் சமூகத்தில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தை மிகவும் நிதானமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் கையாண்டுள்ளார். எந்தக் கதாபாத்திரத்தையும் முழுமையாக நல்லவராகவோ கெட்டவராகவோ காட்டாமல், ஒவ்வொருவரின் பார்வையையும் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.

வசனங்கள் பல இடங்களில் மனதைத் தொடுகின்றன. குறிப்பாக குடும்ப உறவுகள் தொடர்பான காட்சிகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கின்றன.

தொழில்நுட்ப அம்சங்கள்

பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை அழகாக உயர்த்துகிறது. ஒளிப்பதிவு இயல்பான காட்சிகளால் கதைக்கு தேவையான நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடல்கள் குறைவாக இருந்தாலும், கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் அமைந்துள்ளன.

குறைகள்

படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் மெதுவாக நகர்வதாக தோன்றலாம். வணிக திரைப்படங்களில் இருக்கும் மாஸ் காட்சிகள், அதிரடி அல்லது நகைச்சுவை அம்சங்களை எதிர்பார்த்து வருபவர்களுக்கு படம் சற்று மெதுவாக உணரப்படலாம்.

சில காட்சிகள் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

இறுதி அலசல்

“நூறு சாமி” வெறும் குடும்பக் கதையாக இல்லாமல், சமூகத்தின் பழைய பார்வைகளையும், தனிமனித சுதந்திரத்தையும் பற்றி பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படமாக அமைந்துள்ளது. அமைதியான திரைக்கதை, இயல்பான நடிப்பு மற்றும் மனதைத் தொடும் தருணங்கள் இந்த படத்தின் பலமாக அமைகின்றன.

மாஸ் திரைப்படங்களை விட உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பார்வையாளர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

எங்கள் தங்கம் – (Maa Inti Bangaaram) – விமர்சனம்

கதை

ஸ்வர்ணா (சமந்தா) ஒரு அமைதியான குடும்ப வாழ்க்கையை விரும்பும் பெண். ஆனால் அவரது கடந்த காலத்தில் மறைந்து கிடக்கும் ரகசியங்கள், பழைய எதிரிகள் மற்றும் வன்முறையான சூழ்நிலைகள் மீண்டும் அவரது வாழ்க்கைக்குள் நுழைகின்றன. தனது குடும்பத்தையும், தன்னுடைய அடையாளத்தையும் காப்பாற்ற அவர் போராட வேண்டிய சூழல் உருவாகிறது.

சமந்தாவின் நடிப்பு

இந்தப் படம் முழுவதும் சமந்தாவின் தோள்களில் பயணிக்கிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வு, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என அனைத்திலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. பல விமர்சகர்கள் இதை சமந்தாவின் சிறந்த நடிப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

இயக்கம் மற்றும் திரைக்கதை

இயக்குனர் நந்தினி ரெட்டி, வழக்கமான கமர்ஷியல் கதையை பெண் மையக் கதாபாத்திரத்துடன் புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்துள்ளார். ஆனால் சில இடங்களில் திரைக்கதை மிகவும் கணிக்கக்கூடியதாக மாறுகிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீளமாக உணரப்படுகின்றன.

இசை மற்றும் தொழில்நுட்பம்

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு பெரிய பலமாக உள்ளது. ஒளிப்பதிவும் கிராமப்புற சூழலையும் காட்சிப்படுத்தும் விதமும் படத்திற்கு அழகை சேர்க்கின்றன.

பலம்

  • சமந்தாவின் வலுவான நடிப்பு
  • சிறப்பான ஆக்ஷன் காட்சிகள்
  • குடும்ப உணர்வுகள்
  • பின்னணி இசை
  • பெண் மைய கமர்ஷியல் திரைப்படம்

பலவீனம்

  • கணிக்கக்கூடிய கதை
  • சில இடங்களில் நீளமான திரைக்கதை
  • வில்லன் கதாபாத்திரம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை

ஒரு புதுமையான கதை அல்ல. ஆனால் ஒரு பெண் கதாநாயகியை மையமாக வைத்து முழுமையான கமர்ஷியல் திரைப்படத்தை உருவாக்கியிருப்பது இதன் மிகப்பெரிய வெற்றி. சமந்தாவின் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். குடும்பம், ஆக்ஷன் மற்றும் உணர்வுகள் கலந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இது செயல்படுகிறது.

இறுதி மதிப்பெண்: 3.5/5 — சமந்தாவின் நடிப்புக்காகவும், ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடங்கியது; ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Format) படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.

நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! இந்தியா முழுவதும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் ஹாலண்ட் நடித்த இப்படத்தை, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான வெளியீடான ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’, மறக்க முடியாத ஒரு பெரிய திரை சாகச அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த அனுபவத்தை முன்னெப்போதையும் விட பிரம்மாண்டமாகவும், சிறப்பானதாகவும் மற்றும் முழுமையான ஈடுபாட்டைத் தரும் வகையிலும் மாற்ற, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா இப்படத்தை பல்வேறு பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Formats) வெளியிடுகிறது. இதன் மூலம் ரசிகர்கள் ஒவ்வொரு ‘ஸ்விங்’ (swing) அசைவு, சண்டைக்காட்சி மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பெரிய அளவில் அனுபவிக்க முடியும்.

P[XL], Big Pix, Screen X, ICE, 4DX மற்றும் MX4D உள்ளிட்ட பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் திரைகளில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது.

வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில், சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்தியாவின் பொது மேலாளரும் தலைவருமான ஷோனி பஞ்சிகரன் பேசுகையில், ஸ்பைடர்-மேனின் பெரிய திரை வருகையை ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக மாற்றவே இந்த பிரீமியம் பெரிய திரை வடிவ வெளியீடு மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். “இந்திய ரசிகர்களின் இதயங்களில் ஸ்பைடர்-மேன் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார்; ஒவ்வொரு புதிய பாகமும் பல தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு கூட்டு கொண்டாட்டமாக அமைகிறது. ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் மூலம், அந்த உற்சாகத்திற்கு ஈடு இணையான மிகச்சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்க விரும்பினோம். அதே வேளையில், ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, படத்தின் அதிரடி, உணர்ச்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் அனுபவிக்கும் வாய்ப்பையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார். “‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், இன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்கள் பிரம்மாண்டமான திரைப்படங்களை (blockbuster cinema) எவ்வாறு அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. மிகப்பெரிய திரைப்படங்கள் மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சார நிகழ்வுகளாக மாறியுள்ளன; இது திரையரங்க அனுபவத்தை முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாக மாற்றியுள்ளது. ‘Spider-Man’ உலகின் மிகவும் விரும்பப்படும் திரைப்படத் தொடர்களில் ஒன்றாகும், மேலும் இதன் ஒவ்வொரு புதிய பாகத்தையும் பல தலைமுறை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் பட வெளியீட்டிற்காக ‘Sony Pictures Entertainment India’-வுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்கள் இந்தப் படத்தை அதற்கென உருவாக்கப்பட்ட சூழலில் – அதாவது பெரிய திரையில், சக ரசிகர்களுடன் இணைந்து – அனுபவிக்க ‘PVR INOX’ திரையரங்குகளுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்; அங்கு ஒவ்வொரு தருணமும் பிரம்மாண்டமாகவும், ஆழ்ந்த அனுபவத்தைத் தருவதாகவும், உண்மையிலேயே மறக்க முடியாததாகவும் அமையும்,” என்று ‘PVR INOX Limited’-ன் வருவாய் மற்றும் செயல்பாட்டுப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு. கௌதம் தத்தா கூறுகிறார்.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கும் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தில், பீட்டர் பார்க்கர்/ஸ்பைடர்-மேனாக டாம் ஹாலண்ட் (Tom Holland) நடிக்கிறார்; இவருடன் ஜெண்டயா (Zendaya), ஜேக்கப் பட்டலோன் (Jacob Batalon), ஜான் பெர்ன்தால் (Jon Bernthal) மற்றும் சேடி சிங்க் (Sadie Sink) ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘Sony Pictures Entertainment India’ நிறுவனம் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தை 2026 ஜூலை 30 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது. இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களிலும், அனைத்து பிரீமியம் பெரிய திரை வடிவங்களிலும் (premium large formats) வெளியிடப்படும்.

‘Spider-Man: Brand New Day’ பற்றிய குறிப்பு: பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு முற்றிலும் புதிய நாள் (Brand New Day). தன்னை நினைவில் கொள்ளாத உலகில் ஸ்பைடர்-மேனாக முழுநேரமும் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவது மற்றும் தன்னை விட்டுவிட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடரும் பழைய நண்பர்களைப் பார்க்கும் சூழல் ஆகியவை பீட்டரிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன; அந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லாமல் போகலாம். ஆனால், அந்த மாற்றமே நகரத்திற்கும் அவன் நேசிப்பவர்களுக்கும் ஏற்படவிருக்கும் அதிர்ச்சியூட்டும் புதிய அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான ஒரே வழியாகவும் அமையலாம் – அந்த அச்சுறுத்தல் யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லனிடமிருந்து வருகிறது. உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவன் அவர்களை மறக்கவில்லை.

Sony Pictures Entertainment பற்றிய குறிப்பு: ‘Sony Pictures Entertainment’ (SPE) என்பது டோக்கியோவை மையமாகக் கொண்ட ‘Sony Group Corporation’-ன் துணை நிறுவனமாகும். SPE-யின் உலகளாவிய செயல்பாடுகளில் திரைப்படத் தயாரிப்பு, கையகப்படுத்தல் மற்றும் விநியோகம்; தொலைக்காட்சித் தயாரிப்பு, கையகப்படுத்தல் மற்றும் விநியோகம்; தொலைக்காட்சி நெட்வொர்க்குகள்; டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் விநியோகம்; ஸ்டுடியோ வசதிகளை நிர்வகித்தல்; மற்றும் புதிய பொழுதுபோக்கு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும். ‘Sony Pictures Television’ உலகம் முழுவதும் டஜன் கணக்கான முழு உரிமையுள்ள அல்லது கூட்டு முயற்சியிலான தயாரிப்பு நிறுவனங்களை இயக்கி வருகிறது. SPE-யின் மோஷன் பிக்சர் குழுமத்தின் (Motion Picture Group) தயாரிப்பு நிறுவனங்களில் Columbia Pictures, Screen Gems, TriStar Pictures, 3000 Pictures, Sony Pictures Animation, Stage 6 Films, AFFIRM Films, Sony Pictures International Productions மற்றும் Sony Pictures Classics ஆகியவை அடங்கும். கூடுதல் தகவல்களுக்கு, http://www.sonypictures.com/corp/divisions.html என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும் ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். ரசிகர்கள் எங்கள் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.

என்னை தனது கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்த இயக்குநர் அபிஷேக் நாமாவுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

எங்கள் தயாரிப்பாளர்களான நிஷிதா மற்றும் கிஷோர் புதியவர்கள் என்றாலும், மிகுந்த தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இந்தப் படத்தை ஆதரித்துள்ளனர். என்னுடன் நடித்த நபாவிற்கும் எனது நன்றிகள்,” என்றார்.

இயக்குநர் அபிஷேக் நாமா பேசுகையில், இந்த முயற்சி திரைப்பட விளம்பரத்தைத் தாண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

“தொலைதூர இடங்களிலிருந்து மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது ஒரு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மட்டுமல்ல. நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு முயற்சி. அதை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இதை பார்க்கிறோம்.

இந்த முயற்சி அனைவரின் மனதையும் தொடும் என்று நம்புகிறேன். உங்கள் ஆசீர்வாதங்களும் ஆதரவும் எங்களுக்கு தேவை.

இத்தகைய பிரம்மாண்டமான கனவை நனவாக்க உதவிய எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றியுள்ளவன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது.

படப்பிடிப்பின் போது விராட்டை அவரது எல்லைகளைத் தாண்டி உழைக்க வைத்தேன். கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கிடையிலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். இந்தப் படத்தை பார்த்த பிறகு அவரது திறமையை ரசிகர்கள் உண்மையாக உணர்வார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

நபாவிற்கும் எனது நன்றிகள். ஜுனைத் மற்றும் அபி அமைத்துள்ள இசையை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை மிகப்பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துகிறோம்,” என்றார்.

இந்த நிகழ்வில் அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட சிலையும் படக்குழுவினரால் திறந்து வைக்கப்பட்டது. அது பக்தர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆன்மிக உணர்வை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ்

கொண்டாட்ட போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘அன்பே டயானா’ படக்குழு – ஜூலை 17ல் உலகம் முழுவதும் வெளியீடு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட சூழல் நிரம்பியிருப்பது, படத்தின் ஜாலியான மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த அழகான போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற மனதை வருடும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு இதயப்பூர்வமான படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், குறிப்பாக, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross-Cultural Love Story ஆகவும், வடசென்னை மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கை, காதல், மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுகளுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களை கவரும் ஜாலியான காதல்-குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது

“மக்கள் தலைவா” திரை விமர்சனம்

ஒரு காலத்தில் காமராஜர் வெளியில் செல்லும் பொழுது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பார்த்து ஏன் படிக்கச் செல்லவில்லை என்று கேட்டதாகவும் மாடு மேய்த்தால் தான் எங்களுக்கு சோறு என்று அந்த மாணவர்கள் கூற அதை கேட்டு அந்த நிமிடத்தில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்ததாக ஒரு வரலாறு பேசுவது உண்டு
அந்த வரலாறில் வந்த ஒரு மாணவனாக ராதாரவி காமராஜர் மூலம் படித்து மிகப் பெரிய ஆளாக ஒரு செல்போன் கம்பெனியின் ஓனராக இருக்கிறார்
ஒரு தென்கிராமத்தில் ரவி மரியா தான் பப்ளிசிட்டியாக சின்ன சின்ன போராட்டங்களை செய்து கொண்டு காமெடி என்று கூறிக் கொண்டும் அந்த ஊரில் சுற்றி வரும் ஒரு சில்வண்டு அரசியல்வாதியாக இருக்கிறார் அவருக்கு துணையாக கஞ்சா கருப்புமற்றும் அக்கினி எஸ் வருண் நண்பராகவும் வருகிறார்கள்
45 வயதாகியும் ரவி மரியா திருமணமாகாமல் பெண்கறி கொண்டும் இருக்கிறார் இந்த சூழ்நிலையில் ராதாரவி ஒரு கட்சியை ஆரம்பித்து அதற்கு ரவி மரியாவை தலைவராக போடுகிறார் அந்த நேரத்தில் வரும் தமிழக தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்கிறார்
ஆனால் தேர்தலில் எவ்வாறு ஜெயிப்பது என்று யோசித்து புது விதமாக ஒரு முடிவு எடுக்கிறார்கள் அதாவது முதலமைச்சர் யார் என்றால் இவர்களுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து முதலமைச்சராக தேர்வு செய்யப் போகிறோம் அதுதான் மக்கள் முதலமைச்சர் திட்டம் என்று செய்து மக்களை கவர்ந்து தேர்தலில் வெல்லவும் செய்கிறார்கள் ராதாரவி ஆரம்பித்த கட்சி ஆனால் இதில் ரவி மாரியா மட்டும் போட்டியிடுவதில்லை அவர் எங்கேயோ சென்று செட்டில் ஆகிவிடுகிறார்
இந்த சூழ்நிலையில் மக்கள் முதல்வர் என்று ஒரு அரை லூசை தேர்ந்தெடுக்கிறார் ராதாரவி அதற்கு ஒரு காரணமும் கூறுகிறார் அதாவது காமராஜரை மக்கள் ஒரு காலத்தில் தேர்தலில் தோற்கடிக்கிறார்கள் அவரால் வளர்ந்த மாணவரான ராதாரவியால் அதை தாங்க முடியாமல் இப்பொழுது தமிழக மக்களை பழிவாங்க ஒரு பைத்தியத்தை முதலமைச்சர் ஆகிவிட்டு சென்றுவிடுகிறார் இதுதான் இந்த மக்கள் தலைவன் படத்தில் கதை
இந்த படத்தில் நாயகனாக அதுவும் முதிர் நாயகனாக ரவி மரியா இதுவரை வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்கள் நடித்து வந்தவர் இது நாயகன் என்ற பெயரில் வலம் வருகிறார் மேலும் இந்த படத்தில் ராதாரவி அக்ஷரா விஜய் கஞ்சா கருப்பு பழ கருப்பையா நாஞ்சில் சம்பத் கவிதாலயா சரவணன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள் இந்த எழுதி ராம் தேவ் இயக்கியிருக்கிறார்

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.

“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது,

இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.

டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.

நடிகை கௌதமி பேசியதாவது,

“ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.

சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.

இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.

பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.

நடிகை சமந்தா பேசியதாவது,

“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

இன்று இங்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.

ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், குடும்பம், உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.

படத்தின் நிர்வாக மேற்பார்வையை சீதா R மேனன், படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சமந்தாவின் புதிய தோற்றமும், படத்தின் வித்தியாசமான கான்செப்ட்டும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் தங்கம்” திரைப்படம் இந்த கோடையின் முக்கிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது