நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi)

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள்.

மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

நயன்தாராவும், கவினும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தயாரிப்பாளர்கள்
உமேஷ் குமார் பன்சால்
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
எஸ்.எஸ். லலித் குமார்

இணை தயாரிப்பாளர்கள்
அக்ஷய் கெஜ்ரிவால் & கே.எஸ். மயில்வாகனன்

தொழில் நுட்ப கலைஞர்கள் :

இசை – ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் ஷுக்லா
எடிட்டர் – பிலோமின்ராஜ்
கலை இயக்குனர் – சேகர்.பி
நடனம் – பிருந்தா
சண்டை பயிற்சி – தினேஷ் காசி
ஆடை வடிவமைப்பாளர் – காவ்யா ஸ்ரீராம்
விளம்பர வடிவமைப்பாளர் – வியாகி
புகைப்படங்கள் – ஆகாஷ் பாலாஜி
கூடுதல் திரைக்கதை & உரையாடல்கள் – சி.யூ. முத்துசெல்வன்
இணை இயக்குனர் – டி.எஸ். வினோபாலா
உதவி இயக்குனர்கள் – பத்மன்.எம், தங்கவேல்.எஸ்
தயாரிப்பு நிர்வாகி – ஜி. முருகபூபதி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – எஸ். கிருஷ்ணராஜ்
தயாரிப்பு நிர்வாகம் – டிவ்ஸ் வேணுகோபால்
லைன் தயாரிப்பாளர் – குபேந்திரன் வி.கே
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வினோத் சி.ஜே
மக்கள் தொடர்பு – யுவராஜ்

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க, கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா”

இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா” – சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து திருமண ஆடைத் தொகுப்பு மற்றும் அதன் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது

மாடர்ன் இந்திய ஆண்களுக்கான திருமண மற்றும் விழாக்கால ஆடை பிராண்ட் டஸ்வா (Tasva), ABFRL மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய நிறுவனம், தற்போது சென்னை நகரின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தன் பிரமாண்டமான பிரதான ஷோரூம் அமைந்துள்ளது. 2500 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த மொத்த விற்பனை மையம், நவீன ஆண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செம்மையான ஆடைகள் மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என டஸ்வா வலியுறுத்துகிறது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கோலிவுட் நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய வருகையால் இந்த திருவிழா மற்றும் திருமணத் தொகுப்பை வெளியீட்டார்.
சென்னை கடை வெறும் ஷாப்பிங் இடமல்ல — அது ஒரு அனுபவம். இந்தியாவின் மரபையும், நவீன அழகியலையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கடை, இந்திய பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளால் நிரம்பியுள்ளது, இதன் மூலம் டஸ்வாவை வரையறுக்கும் காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது.

இந்த கடையில் டஸ்வாவின் திருவிழா ஆடைத் தொகுப்பு — கண்கவர் குர்தா செட் மற்றும் குர்தா-புண்டி செட்கள், துடிப்பான ஸ்கிரீன் பிரிண்ட்கள் மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் பாரம்பரிய ஆடைக்கு புதுமையான தோற்றத்தை கொண்டு வந்துள்ளது. திருமணத் தொகுப்பில் அழகான ஷெர்வானிகள், அச்கான்கள், மற்றும் புதுமையான அங்க்ரகா ஷெர்வானிகள் ஆகியவை சிறப்பாக தையலிடப்பட்ட நுண்ணிய எம்பிராய்டரி பணிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டஸ்வா பிராண்ட் தலைவர் அஷிஷ் முகுல் கூறியதாவது:

“சென்னையில் எங்கள் புதிய திருவிழா மற்றும் திருமண ஆடைத் தொகுப்பு டஸ்வாவின் அடிப்படை மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — அது ஸ்டைல், மரபு, மற்றும் கைவினைப் பணியின் சேர்க்கையாகும். ஒவ்வொரு கலெக்ஷனும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற ஷோரூம் ஸ்டைலிஸ்ட்கள் தனிப்பட்ட ஃபேஷன் ஆலோசனைகளோடு, நவீனத்தன்மை மற்றும் மரபும் இணைவதால் ஒரு தனித்துவமான அனுபவம் டஸ்வா வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.”

தென்னிந்தியாவில் டஸ்வாவின் விரிவாக்கத்திற்கான முக்கியமான படியாக இந்த சென்னை கடை அமைகிறது. பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மற்றும் சமீபத்தில் புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே தன் அடித்தளத்தை வலுப்படுத்திய டஸ்வா, தென்னக சந்தையில் தன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

“சென்னை நகரம் அதன் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் மையமாக இருப்பதால், எங்கள் அடுத்த கடைக்கான இயல்பான தேர்வாக இருந்தது. நகரத்தின் தேர்ந்த வாடிக்கையாளர்கள் டஸ்வாவின் கைவினைத் திறனையும், தரத்தையும், ஸ்டைலையும் நிச்சயமாக மதிப்பார்கள்,” என முகுல் கூறியிருக்கிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு கூறியதாவது :

“திருவிழா காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னையில் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். இங்கே கொண்டாடப்படும் விழாக்கள் கலாச்சார ரீதியாக பெரும் அர்த்தம் கொண்டவை. டஸ்வாவின் கலெக்ஷன் இதற்குத் தகுந்ததாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். சென்னையில் வளர்ந்த எனக்கு, குடும்ப விழாக்களும், பண்டிகைகளும் எப்போதும் மனதில் சிறப்பு இடம் பெற்றவை. அந்த தருணங்களில் நம்மை நாமே சிறப்பாக உணர்வது முக்கியம். திருமணமாகட்டும், விழாவாகட்டும் — டஸ்வாவின் ஆடைகள் ஆண்களுக்கு வசதியுடன் ஸ்டைலாகக் கொண்டாடும் வாய்ப்பை வழங்குகின்றன. என் சொந்த ஊரில் இதை பகிர்வது எனக்கு இன்னும் தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது.”

கடை முகவரி: 1வது மாடி, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், கடை எண் S157 & 158, பட்டுலோஸ் ரோடு, சென்னை – 600014
நேரம்: காலை 11.00 மணி – இரவு 9.00 மணி
ஆன்லைனில்: www.tasva.com

டஸ்வா பற்றி:
ABFRL மற்றும் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய l டஸ்வாவின் பிரத்யேக கடைகள் இந்தியாவின் பல நகரங்களில் உள்ளன மற்றும் ஆன்லைனில் www.tasva.com-இல் கிடைக்கின்றன.

கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும் – கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை

கும்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இன்றும் அது அன்புடன் நினைவுகூரப்படுகிறது. அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 மூலம், அதே உணர்ச்சிபூர்வமான தீவிரத்தையும், வலிமையான கதையையும், மறக்க முடியாத தருணங்களையும் இப்படம் கொடுக்கும் என்று வாக்குறுதி தருகிறார்.

மீண்டும் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 , ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாகக் காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதி யின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன என இயக்குநர் பிரபு சாலமன் பெருமையாகக் கூறுகிறார்.

இந்த படம், மனிதன்–இயற்கை–யானை இடையேயான பிணைப்பை அழகாகச் சித்தரிக்கும்.

பைசன் ஆடியோ வெற்றியைத் தொடர்ந்து நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, படத்தின் உணர்ச்சிகளை இன்னும் ஆழமாக்கும். யானைகள் இடம்பெறும் காட்சிகள், மூச்சு வாங்கும் அளவிற்கு அடர்த்தியான காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.

மைனா, கும்கி 1, மான் கராத்தே, தர்மதுரை, பைரவா , தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பணியாற்றிவரும் எம் சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, முதல் பாகம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் வருகிறது.

படத்தில் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – பிரபு சாலமன்
தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
எடிட்டிங் – புவன்
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
ப்ரமோஷன் – சினிமாபையன்
PRO – யுவராஜ்

“அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். இந்தப் படத்தின் டீசர், பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக – அகண்டா 2: தாண்டவம் உலகமெங்கும் வரும் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான போஸ்டரில் பாலகிருஷ்ணா – நீண்ட முடி, கரடுமுரடான தாடி, புனித மாலைகள் மற்றும் நகைகள் அணிந்து, பாரம்பரிய காவி மற்றும் பழுப்பு நிற ஆடையில், அலங்கரிக்கப்பட்ட திரிசூலத்தை தாங்கியவாறு, பனிமூட்டம் சூழ்ந்த பின்னணியில் வீரமான பாவனையுடன் காட்சியளிக்கிறார். ஆன்மிகமும் அதிரடியும் கலந்த அவரது தோற்றம் ரசிகர்களை மயக்குகிறது.

எஸ். தமனின் (S Thaman) அதிரடி பின்னணி இசை, படத்தின் அதிரடி மாஸ் காட்சிகளை பல மடங்கு உயர்த்தி, ரசிகர்கள் எதிர்பார்க்கும பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கப்போகிறது. ஆன்மீக ஆற்றலுடன் கூடிய பாலகிருஷ்ணாவின் தோற்றம், அவரது தீவிர ரசிகர்கள், மற்றும் திரை ஆர்வலர்களை ஏற்கனவே மெய்மறக்கச் செய்துள்ளது.

புதிய வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டதால், படக்குழுவுக்கு வலுவான ப்ரமோஷன் பணிகளை முன்னெடுக்க போதுமான நேரம் கிடைத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அப்டேட்களும் சஸ்பென்ஸ்களும் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.

ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு (Tammiraju) மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.

வலுவான படக்குழு மற்றும் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்

நடிப்பு :

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் : போயபதி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருசூரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்

நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினில், ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத்தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.

இப்படத்தினில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

“மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி K கணேஷ் கூறியதாவது..,
மூக்குத்தி அம்மன் ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து, ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தர வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு சிறு துளி தான் இந்த ஃபர்ஸ்ட் லுக்.

தெய்வீகமும் மாயமும் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. வரும் கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த டீசர், ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார்.

34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியிருக்கும் மிரட்டலான இந்த டீசர் திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இன்வெஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள்
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர்

இயக்கம் – பிரவீன் K
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)

தொழில்நுட்ப குழு விபரம்

ஒளிப்பதிவு – ஹரீஷ் கண்ணன்
இசை – ஜிப்ரான்
எடிட்டிங் – ஷான் லோகேஷ்
ஸ்டண்ட் – ஸ்டண்ட் சில்வா, PC ஸ்டண்ட்ஸ் பிரபு
கூடுதல் திரைக்கதை – மனு ஆனந்த்
புரொடக்‌ஷன் டிசைன் – S. ஜெயச்சந்திரன்
உடை அலங்காரம் – வினோத் சுந்தர், வர்ஷினி சங்கர்
சவுண்ட் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன் (SYNC CINEMA)
ஆடியோ கிராபி – தபஸ் நாயக்
DI – பிரிட்ஜ் போஸ்ட்‌வர்க்ஸ்
VFX – ஹோகஸ் போகஸ்
டப்பிங் – சீட் ஸ்டுடியோஸ்
பப்ளிசிட்டி – பிரதூல் NT
PRO – சதீஷ் (AIM), வம்சி சேகர்
மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ் – சித்தார்த் ஸ்ரீநிவாஸ்
போஸ்ட் புரடக்சன்ஸ் சூப்பரவைஸர் – குணசேகர் ( போஸ்ட் ஆபிஸ் )
எக்சிக்யூட்டிவ் புரொடூசர் – சீதாராம்
கிரியேட்டிவ் புரொடூசர் – ஷ்ரவந்தி சைநாத்
தயாரிப்பாளர்கள்– சுப்ரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால்.

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்’ வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார்- பேரரசு -ராஜகுமாரன்- விஜய் ஸ்ரீ – தயாரிப்பாளர் அன்புச்செல்வன் – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், ”தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் ‘வீர தமிழச்சி’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளோம். இந்த ‘வீர தமிழச்சி’யை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து, வெற்றி தமிழச்சியாக மாற்றி தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் நல்லதொரு இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கட்டிட தொழிலாளியான இயக்குநரின் கனவை நனவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.

இயக்குநர் கட்டிட தொழிலாளி என்பதால் எந்த கல்லை எங்கு வைக்க வேண்டும், எந்தக் கலவையை எங்கு பூச வேண்டும், ஜன்னலை எங்கு வைக்க வேண்டும், வாசக்காலை எங்கு வைக்க வேண்டும், பெட்ரூம் எப்படி இருக்க வேண்டும், கிச்சன் எப்படி இருக்க வேண்டும், எந்த அகலம்- எந்த நீளம் இருக்க வேண்டும், என்பதை பார்த்து பார்த்து தெரிந்து கொண்டு படைப்பை உருவாக்கி இருக்கிறார் என முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு இயக்குநரையும் கட்டிட கலைஞருடன் தான் ஒப்பிடுவார்கள். இவர்கள்தான் கதையை எங்கு, எப்படி ஆரம்பிப்பது, எப்படி எடுத்து செல்வது, அந்த கதையில் கதாநாயகனின் பிம்பம் என்ன, கதாநாயகியின் வேலை என்ன, நாம் சொல்லக்கூடிய சாராம்சம் என்ன, இந்த கதையின் முடிச்சு என்ன என ஏராளமான இன்ஜினியரிங் வேலைகளை பார்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் பொறுப்பு. நானும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த கட்டிட கலைஞராக இருந்தவன் தான். அதனால் இந்தப் படம் நன்றாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தழுவி இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பாடல்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற ‘தீம் சாங்’கும் நன்றாக இருக்கிறது.

ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்டான இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் – இளயா போன்றவர்கள் நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படத்தை 40 அல்லது 50 திரையரங்குகளில் தினசரி மூன்று கட்சியாகவோ நான்கு காட்சியாகவோ திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகளாக ஒரு படம் வெளியானால் தான் ‘மௌத் டாக்’ மூலம் படத்திற்கான விளம்பரம் சில நாட்களில் கிடைக்கும்.‌ அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் மக்களை சென்றடையும்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தக் குழுவினருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புசெல்வன் பேசுகையில், ”வீர தமிழச்சி என்றால் தமிழக பெண்கள்தான் என உலகத்திற்கே தெரியும். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியாக இருந்தது. தயாரிப்பாளர் கடினமாக உழைத்து இப்படத்தினை வெளியிட முயற்சி செய்து வருகிறார். இந்த தயாரிப்பாளரின் கடின உழைப்பிற்காகவும், நல்ல மனதிற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

படம் வெளியாகும் நாளான வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிடாதீர்கள் என ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.‌ சிறுபட தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்,” என்றார்.

இயக்குநர் ஷரவண சுப்பையா பேசுகையில், ”வீரம் என படம் வந்திருக்கிறது. ‘தமிழ்’ என படம் வந்திருக்கிறது. ‘தமிழன்’ என படம் வந்திருக்கிறது. ‘தமிழச்சி’ என்றொரு படம் வந்திருக்கிறது. இது ‘வீர தமிழச்சி’ பெயரை கேட்டாலே நல்ல அதிர்வு இருக்கிறது.

தமிழ் மொழி என்பது உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு யுனிக்கான வார்த்தை. அதற்கான இலக்கணம் இருக்கிறதே.. ‘த’ உயிரெழுத்து ‘மி ‘ என்பது மெய்யெழுத்து என தமிழுக்குள் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. இப்படி தமிழிலிருந்து வரும் மரபணு இருக்கிறதே, அதன் ரத்தத்தில் வீரம் இயல்பாகவே இருக்கும், உணர்வும் இருக்கும். இதனை நாம் இதிகாசங்களில் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். இந்தப் படத்தில் அதனை நாம் காணவிருக்கிறோம். ஒரு பெண் தன்னுடைய பழி தீர்க்கும் உணர்வை வன்முறையால் தீர்த்துக் கொள்கிறாள் என்பது போன்ற ஒரு கன்டென்ட்டில் இந்த படம் இருக்கும் என நம்புகிறேன். அத்துடன் இந்த திரைப்படத்தின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சில சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பேசி இருக்கிறார்கள். எனவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதுமைப்பெண்’ திரைப்படம், இந்த சமூகத்தில் பெண்களுக்கான புரட்சியை உண்டாக்கிய படம் என குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் அந்த படம் பேசப்பட்டது. இந்த காலத்தில் ‘வீர தமிழச்சி’ படம் உருவாகி இருக்கிறது. கமர்ஷியலாக இல்லாமல் இது போன்ற கன்டென்ட் உள்ள படத்தினை தயாரித்ததற்காக தயாரிப்பாளரை பாராட்டுகிறேன்.

‘சட்டம் ஒரு திறந்த புத்தகம். அதனால் அந்த சட்டத்தை பற்றி தெரியாதது குற்றம். அத்தகைய சட்டத்தை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதும் குற்றம்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரம் சட்ட மேதை அம்பேத்கரிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் படம் தெரிவிக்கும் கருத்து மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசை, பாடல்கள் நன்றாக உள்ளன. இந்தப் படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் அதாவது கதாநாயகிக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதமும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது,” என்றார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசுகையில், ”பெண்களுக்கு அடிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அடித்தால் நம்மால் தாங்க முடியாது என்பதுதான் உண்மை. அவர்கள் நம்மை அடிக்காமல் இருக்கிறார்களே என்பது வரை தான் நமக்கு அது பெருமை. அவர்கள் மிக பயங்கரமான மன உறுதியும், உடல் வலிமையும் மிக்கவர்கள். நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு வலிமை குறைவு தான்.

தங்களை மலை போல் காண்பிப்பதில் ஆண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. தங்களை மலர் போல் காண்பிப்பதில் பெண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. ஆனால் நாம் காண்பது மவரல்ல, அவர்களிடம் இருப்பது தான் மலை. நான் இதனை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நிறைய பெண்களிடம் அடி வாங்கி இருக்கிறேன் என்னுடைய அம்மாவை போன்ற கம்பீரமான – மலை போன்ற உறுதியான பெண்மணியை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அவர்களை நான் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்திருக்கிறேன்.

அதேபோல் தேவயானியை, பார்ப்பதற்கு நீங்கள் எல்லாம் புஷ்பம் போல் இருக்கும் அந்த பெண் அவ்வளவு உறுதியான, வலிமையான, ஒரே அடியில் ஒரு டன் அல்ல இரண்டு மூன்று டன் வெயிட் உடன் அடிக்கக்கூடிய ஒரு பயங்கரமான பெண்மணி. இதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள். ஆண்களுக்காக, குழந்தைகளுக்காக மென்மையாக நம்மிடம் நடந்து கொள்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது நடிகை சுஷ்மிதா சுரேஷிற்கு பயிற்சி அளிக்கவில்லை என்றாலும்… அவர் ஆக்ஷன் காட்சிகளில் பயங்கரமாக தான் நடித்திருப்பார். அவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த ஆக்ஷன் ஜானரில் நடிக்கக்கூடிய நடிகைகளே இல்லை‌, நீங்கள் அந்த இடத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சிறுசிறு குறும்படங்களை இயக்கி தன்னை செதுக்கி கொண்ட பின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் பாரதி. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்,” என்றார்.

நடிகை சுஷ்மிதா சுரேஷ் பேசுகையில், ”வீர தமிழச்சியாக என்னை தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என்னுடைய பாதுகாப்பையும், என்னுடைய சௌகரியத்தையும் மனதில் வைத்து பணியாற்றினார். குறிப்பாக நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் நடிக்கும் போது நான் பயந்தேனோ, இல்லையோ அவர் பயந்து கொண்டே இருந்தார். என் மீது அக்கறை செலுத்தி பாதுகாத்த ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் நடிக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது உடலில் வலி உண்டானது, இருந்தாலும் பொறுத்துக் கொண்டு படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக பழகினார்கள். அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெண்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- அதனை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்பதை கற்றுத் தரும் படமாக இது இருக்கும்.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான எனக்கு ஏன் நடிப்பு என பலர் கேள்வி கேட்டனர். ஆனால் என்னுடைய விருப்பம் நடிப்பாக இருந்ததால் ஆடிஷனுக்கு பொறுமையுடன் என்னுடைய பெற்றோர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கினார்கள். நிறைய பெண்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், ”’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை கலைமாமணி விவேகா எழுத, மற்றொரு பாடலை அறிமுக பாடலாசிரியர் செந்தில் ராஜா எழுதியிருக்கிறார். இந்த பாடலை எழுதிய பின் தான் மெட்டமைத்தோம். மூன்றாவதாக வீர தமிழச்சி என்ற பெயரில் ஒரு டைட்டில் சாங் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி போராடுகிறார் என்பதுதான் இதன் கதை.‌ இந்தப் படத்தில் நாயகி சுஷ்மிதா சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கால விஜயசாந்தியை திரையில் பார்ப்பது போல் இருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது, வாழ்த்துகள்.

இந்த படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதனை முழுமையாக தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். திரையுலகில் இவ்வளவு அன்பான பண்பான தயாரிப்பாளரை பார்க்க முடியாது. இவரிடம் நாம் சம்பளம் கொடுக்கிறோம் என்ற அதிகாரம் எப்போதும் இருக்காது, இவர்கள் தொடர்ந்து படத்தை தயாரிக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் சுரேஷ் பாரதி பேசுகையில், ”அடிமட்ட கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நான் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன் என்றால், இதற்கு முதல் காரணம் என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் தான். இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இந்த ஐந்து வருடங்களிலும் என்னையும், என் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்வது என் மனைவி தான்.

2016 ஆம் ஆண்டில் என்னுடைய ‘கொஞ்சம் கொஞ்சமாக..’ எனும் முதல் குறும்படத்திற்கு, சிதம்பரம் காட்மாடி பகுதியை சேர்ந்த என் குருநாதர் பழனிச்சாமி தான் ஒரு லட்ச ரூபாயை வழங்கினார். இந்த குறும்படம் சிறந்த விழிப்புணர்வுக்கான குறும்படம் என தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரிடம் விருதினை பெற்றேன். என்னுடைய இரண்டாவது குறும்படமான ‘தாய்’. இணையத்தில் வெளியாகி இதுவரை 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. இதுவரை நான் 18 குறும்படங்களை இயக்கியிருக்கிறேன், 36 விருதுகளை வென்றிருக்கிறேன். நான் இயக்கினால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் படைப்பை தான் இயக்குவேன் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதற்குப் பிறகு ஒரு கதையை சினிமாவுக்காக தயார் செய்துவிட்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகி கதையை சொன்னேன். மகிழினி கலைக்கூடத்தில் கதையை சொன்னேன்.‌ அவர்களால் படத்தை தயாரிக்கும் அளவிற்கு பொருளாதாரமில்லை, அதனால் இந்த திரைப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கத் தொடங்கினோம். ஒரு வார காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை அறிந்து தயாரிப்பாளர் நித்தியானந்தம் எங்களுடன் இணைந்தார்.‌ அதன் பிறகு முழு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று அவர் சொன்னார். என்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து என்னுடைய இயக்குநர் கனவை நனவாக்கியவர் தயாரிப்பாளர் நித்தியானந்தம். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்தை தொடங்கும் போது 60 லட்சம் ரூபாய் தான் பட்ஜெட் என்றேன். ஆனால் தற்போது மூன்றரை கோடி ரூபாயில் படம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த திரைப்படம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம். பெண்கள் எங்கு எப்போது பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும், இதற்கு என்ன தீர்வு என அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

இந்தப் படத்தின் மூலம் நான் என்ன சொல்ல விரும்பினோனோ அது ஆறு மாதத்திற்கு முன்னதாக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் சட்ட திருத்தமாக கொண்டு வந்திருக்கிறார். நான் இது தொடர்பாக படம் எடுத்தது மூன்று ஆண்டுகளுக்கு முன். நான் மக்களுக்கு எதனை தீர்வாக சொல்ல நினைத்தேனோ அதை சட்ட திருத்தமாக கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை. இந்த படம் ஆறு மாதம் மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தால் எங்கள் கதை தான் ஹீரோ. இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரமும் இருக்கிறது.

நான் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகன். கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தியை கேட்டு மூன்று நாட்கள் உறக்கமில்லாமல் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தேன். கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்து தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். விஜயகாந்தை வைத்து நான் என்ன திரைப்படத்தை இயக்க வேண்டும்cஎன நினைத்தேனோ, அவர் இல்லாததால் ஒரு புது ஹீரோயினை வைத்து இயக்கியிருக்கிறேன். அந்த வகையில் ஒரு பெண் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

ஆர்.வி. உதயகுமார், பேரரசு போன்றவர்களை பார்த்து ஆக்ஷன் திரைப்படங்களை இயக்க வேண்டும் என ஆசை.

தமிழ் மொழியில் இல்லாமல் வேறு மொழியில் 50க்கும் மேற்பட்ட ஆக்ஷன் திரைப்படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோயின் ஆக்ஷன் செய்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏராளமான ரெஃபரன்ஸ்களை பார்த்த பிறகு தான் படத்தின் நாயகியான சுஷ்மிதா சுரேஷுக்கு ஆக்ஷன் காட்சிகளை நானும் ஸ்டாண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவும் விவாதித்து வைத்தோம்.

ஒரு தமிழ் பெண்ணை தலைகீழாக கட்டி வைத்து தொங்கவிட்டு அவருடைய நெஞ்சில் கால் வைத்து எட்டி உதைக்கும் காட்சியை வைத்திருக்க மாட்டார்கள், இத்தகைய காட்சி தமிழ் சினிமாவில் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் எந்த தமிழ் படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை. இந்தக் காட்சியில் நடிப்பதற்கு நடிகை சுஷ்மிதா முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

நான் இதுவரை எந்த படப்பிடிப்பையும் வேடிக்கை கூட பார்த்ததில்லை. ஆனால் ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு என்னுள் ஐக்கியமாகி இருக்கும் விஜயகாந்த் தான் காரணம். இன்று கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். அதனால் அவருடைய ஆசி இந்த படத்திற்கு பரிபூரணமாக இருக்கும்.

மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் திறமை இருக்கிறது. அதனை வெளிக்கொணர வேண்டும். எவரையும் பார்த்து அஞ்ச கூடாது. எவரையும் பார்த்து பிரமிக்க கூடாது. உனக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். இதற்கு முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் இயக்குநராகி இருக்கிறேன். ‌

எங்கள் ஊரில் சாதாரண கட்டிட தொழிலாளியான எனக்கு இன்று கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 25 கட் அவுட்கள் வைத்திருக்கிறார்கள்,” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், ”குடும்பத்தில் நடைபெறும் உண்மைகளை யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் வீரத்தமிழர். அந்த வகையில் எங்கள் இயக்குநர் ராஜகுமாரன் தான் சிறந்த வீரத்தமிழர். அவருடைய பேச்சில் உண்மை படார் படார் என வெளிப்பட்டது. நாம் இதுவரை தேவயானி மேடத்தை சாப்ட் ஆக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டில் அவர் ஆக்ஷன் ஹீரோயின் என்பது இப்போதுதான் தெரியும்.

கட்டிட தொழிலாளியாக இருந்து இயக்குநராக உயர்ந்தவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.

முயற்சிக்கும், விடாமுயற்சிக்கும் என்ன வித்தியாசம், என்றால், முயற்சியை நாம் செய்து கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் முயற்சி நம்மை விடாது. அதுதான் விடா முயற்சி.

வீட்டை நன்றாக கட்ட வேண்டும் என்றால் நல்லதொரு கொத்தனார் வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு நார் வேண்டும் ஒன்று நாத்தனார். மற்றொன்று கொழுந்தனார். இயக்குநர் நல்லதொரு கொத்தனார். படத்தில் பாட்டு எங்கு வைக்க வேண்டும்? பைட்டு எங்கு வைக்க வேண்டும்? என தெரிந்து வைத்திருக்கிறார்.

வீர தமிழச்சி யார் என்றால்.. புருஷன் கஷ்டப்படும் போது பக்க பலமாக இருந்து, அவருடைய திறமையை வெளிப்படுத்துபவர் தான் வீர தமிழச்சி. அப்படிப் பார்த்தால் இயக்குநருடைய மனைவி தான் வீர தமிழச்சி.

சில தலைப்புகளை கேள்விப்படும் போது தான் எப்படி இந்த தலைப்பை இதுவரை தவற விட்டார்கள் என்று தோன்றும். அந்த வகையில் இந்த வீர தமிழச்சி டைட்டில் நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் தான் வேலு நாச்சியார் போன்ற ஏராளமான வீர தமிழச்சிகள் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்தான் வீர தமிழச்சி.

வீர தமிழச்சி என்பது அடிப்பதோ உதைப்பதோ.அல்ல. செருப்பால் அடிப்பதோ கைகளால் அடிப்பதோ அல்ல. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மிருகம் தன்னை சிதைத்ததை இந்த சமூகத்தில் துணிச்சலுடன் புகாராக அளித்த பெண் தான் வீர தமிழச்சி. கராத்தே கற்பது, துப்பாக்கி சுடுவது, சிலம்பம் சுற்றுவது, இதெல்லாம் வீரமல்ல. வீரம் என்பது உடலில் அல்ல, மனதில் இருக்க வேண்டும். இந்த படத்தில் இதைத்தான் நான் பார்த்தேன். ஒரு பெண் அநியாயத்திற்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும், அதை சொல்வது தான் இந்த வீர தமிழச்சி,” என்றார்.

“காந்தாரா-சாப்டர் 1” திரைவிமர்சனம்

ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளிவந்து சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த காந்தாரா திரைப்படத்தின் முந்தைய பாகமாக காந்தாரா சேப்டர் ஒன் என்ற பெயரில் எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் செட்டி.
கர்நாடகவில் உள்ள கடம்ப வம்சம் என்னும் பழங்குடியினரின் வரலாறு சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
காத்தாரா மலைப்பகுதியில் தங்கள் வாழும் பகுதியை ஈஸ்வரனின் பூந்தோட்டம் என்று நம்புகிறார்கள் அந்த மக்கள். அந்த பகுதியில் காலம் காலமாக விளையும் மிளகு, பட்டை போன்ற இயற்கை பொருட்களை வைத்து வாழ்ந்து வருகிறார். அந்த நேரத்தில் அவர்கள் மீது படையெடுக்கும் மற்ற பழங்குடியினரை அவர்கள் வணங்கும் கருணீக கற்களின் துணையோடு வெல்கிறார்கள். அந்த கல் சிவனின் வடிவம் தான் என்று நம்பும் அவர்கள் அதை கடவுளாக வணங்குகிறார்கள். இந்த நிலையில் அந்த நாட்டின் மன்னன் அந்த கல்லை கவர்ந்து தனது கோயில் வைத்து கடவுளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறான்.
அந்த நேரத்தில் அந்த மன்னனின் அதிகார எல்லைக்குள் சென்று தங்களிடம் விளையும் பொருட்கள் விற்பனை செய்ய நாயகன் முயற்சி செய்து அதிலும் வெற்றி அடைகிறான். இந்த சூழ்நிலையில் அந்த மன்னனின் ,மகள் ஒரு சதி திட்டத்தில் ஈடுபட்டு அந்த கற்களை தனது கோவிலுக்குள் கொண்டு வந்து தங்களது அடிமையாக அந்த மக்களையும் வைக்க நினைக்கிறார். அதற்கு அவர் அந்த மலையில் வாழும் சூனியக்காரர்களை உதவிக்கு அழைக்கிறார் இவர்களெல்லாம் வென்று சிவனின் அருளோடு நாயகன் எவ்வாறு தம் மக்களை காப்பாற்றுகிறான் அந்த கடவுளை அந்த சூனியக்காரர்கள் எவ்வாறு விடுவிக்கிறான் என்பதை இந்த படத்தின் திரைக்கதை….


நாயகனாக ரிஷப் ஷெட்டி, மன்னனாக ஜெயராம், நாயகியாக ருக்மணி மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் பகுதியில் நாயகன் மன்னரின் எல்லைக்குள் சென்று வியாபாரம் செய்வது போல் சில காட்சிகளும் அதன் பிறகு காட்டில் விளையும் காட்சிகளாக படம் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக தான் நகர்கிறது படம் இடைவெளிக்கு முன் நடக்கும் சண்டைக்காட்சி நம்மை நிமிர வைத்து இரண்டாம் பாதியில் அதே விருப்போடு நம்மை கொண்டு செல்கிறது இந்த படத்திற்கு மிகவும் ஒரு இயக்குனராக உழைத்திருக்கிறார் படத்தின் வரும் விஷுவல் காட்சிகள் ஒளிப்பதிவு இசை செட் ஒர்க் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து இளைத்து செய்திருக்கிறார் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களையும் கதாபாத்திரங்களாக இல்லாமல் வாழ வைத்திருக்கிறார் இதுவே இயக்குனரின் மிகப்பெரிய வெற்றி
காந்தாரா சேப்டர் ஒன் இதற்கு முன் வந்த காந்தாராவின் வெற்றியை முந்துமாஎன்பது பொறுத்திருந்து பார்ப்போம்