“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும்  கொரியன் ஃபேமிலி சாங்  “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

“ரா ரா ரங்கையா” ரிலீஸ்… ரசிகர்களை ஆட வைக்கும் “கான் சிட்டி” குத்துப்பாடல்!

கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ்… “கான் சிட்டி” முதல் சிங்கிள் கலக்கல் ஹிட்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது.

பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் குத்தாட்டம், பாடலுக்கு மேலும் உயிரூட்டுகிறது. திரையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் தெரியும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள்  எதிர்பார்க்காத பல ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து, வெளியான வேகத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி,  குழந்தை நட்சத்திரம்  அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். (மேலும் விரிவான கதாப்பாத்திர பட்டியல் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.)

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் சுவாரஸ்யங்களை தந்து வரும் நிலையில்,  முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள “கான் சிட்டி”, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Link :  https://youtu.be/e-uMIm-Yxhk?si=JUqDyHJgLi691ftE

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,

இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.

இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.

இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நடிகை கௌரி பேசியதாவது..,

பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.

இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.

நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.

நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன்.

முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.

இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.

உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ…
நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.

பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம்.
ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.

பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும்.
மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.

இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது.
க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.

இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.

விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.

எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும்,ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் —நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,
அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,

இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.

சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5-6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.

பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,

பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.

அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.

பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,

இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.

இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.

இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.

இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise-ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல்.
ஒரு swimming pool sequence-ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.

இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.

கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.

ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.

இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.

இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.

எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.

எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.

சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும்  வெளியாகிறது !!

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் ( Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு விவரங்கள்:

லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: சமன் சாக்கோ
தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்
தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்
உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்
பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX   : தௌஃபீக் (எக்வொயிட்)   (Eggwhite)
போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

கோபி நயினார் இயக்கத்ததில், “கலையரசி” ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.

ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற கலையரசி ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் “கலையரசி” ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான வட மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப குழு:
இயக்குநர் – கோபி நயினார்
இசை – தேனிசைத் தென்றல் தேவா
ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்
படத்தொகுப்பு – ஆண்டனி
கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்
பாடல்கள் – யுகபாரதி
சண்டை பயிற்சி – கனல் கண்ணன்
நடனம் – பிருந்தா
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM
தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.
தயாரிப்பு மேற்பார்வை – KNR. சாமி
நிர்வாக தயாரிப்பு – L.Srikanth

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

கதைக்கு முக்கியத்துவம் தரும்… தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பவர் பேட்டா’ எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட… யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கௌரவம் – அரசியல்- ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான… பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து ‘பவர் பேட்டா’ ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க … ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.

கவர்ச்சிகரமான தலைப்பு – ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் ‘பவர் பேட்டா’ திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்… அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.

இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

நடிகர்கள் : சந்தீப் கிஷன்

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : கிருஷ்ண சைதன்யா

தயாரிப்பாளர்கள் : விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : 70 MM என்டர்டெய்ன்மண்ட்ஸ்

இசை : மனி ஷர்மா

ஒளிப்பதிவு : மதி

படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு : ராமகிருஷ்ணா & மோனிகா

ஒளி வடிவமைப்பு : சச்சின் சுதாகரன் &ஹரிஹரன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம்.

தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்

இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி
தயாரிப்பு – T.G.தியாகராஜன்
இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
எழுத்து இயக்கம் – D.D.பாலச்சந்திரன்
ஒளிப்பதிவு – A. M எட்வின் சகாய்
எடிட்டிங்க் – நாகூரான் இராமச்சந்திரன்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
கலை இயக்கம் – அதூரி ஜெய்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – “TN 2026” மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

திட்டக்குடியில் “TN 2026” வெற்றி கொண்டாட்டம் – ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த படக்குழு !!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பெயர்களாக உயர்ந்து வருகின்றனர். தரமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், மற்றும் சிறப்பான வணிக அம்சங்கள் கலந்த படங்களைத் தேர்வு செய்வதில் இவர்களின் தேர்ச்சி, அவர்களை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.

அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம், சமூக கருத்துகளையும், அரசியல் பகடியையும், சிரிப்பூட்டும் நிகழ்வுகளாக இணைத்து மக்களிடம் எளிதாக சேர்கிறது.

படம் வெளியாகிய பிறகு, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில் நடைபெற்ற கொண்டாட்டம் வெகு சிறப்பாக அமைந்தது. படக்குழுவினர் இயக்குநர் உமாபதி ராமையா, நட்டி, சிருத்தா ராவ், தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் நேரில் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது பொதுமக்கள் காட்டிய அன்பு கண்கொள்ளா காட்சியாக இருந்தது — மேளதாளம், பேண்டு வாத்தியம், சரவெடி, ஊர்வலம் என படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தினர். தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மீதான அந்த பாசம், அவரின் மக்கள் தொடர்பையும் நிலையான ஆதரவையும் வெளிப்படுத்தியது.

“TN 2026” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பே அதன் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அரசியல் பகடி, நகைச்சுவை, மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் இப்படம், மக்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

“தலைவர் தம்பி தலைமையில்” எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, “TN 2026” மூலம் கண்ணன் ரவி – தீபக் ரவி கூட்டணி மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், அடுத்ததாக நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” திரைப்படத்தையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர்களாக மாறி வருகின்றனர்.

ரூம் பாய் சினிமா விமர்சனம்

ரூம் பாய் – சாமானியனின் புத்திசாலித்தனமான பழிவாங்கல்

ஏசிஎம் சினிமாஸ் தயாரிப்பில், ஜெகன் ராயன் இயக்கத்தில் உருவான ரூம் பாய், ஒரு சாதாரண இளைஞன் எப்படி சட்டவிரோத செயல்களையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்கொள்கிறான் என்பதை மையமாகக் கொண்ட த்ரில்லர் படம்.

கதை – வெளிப்படாத இருள்

சிறார் கூர்நோக்கு பள்ளியின் வார்டனான இன்பதுரை திடீரென மாயமாகிறார். அவரது மகள் இனியா காவல்துறையில் புகார் அளிக்கிறார். இதே சமயம், அந்த பள்ளியில் இருந்து வெளியேறும் நிகில், வேலை தேடி ஏலகிரிக்கு வந்து ஹோட்டலில் ‘ரூம் பாய்’ ஆக சேர்கிறான்.

வெளிப்படையாக அமைதியாக இருக்கும் அந்த ஹோட்டல், உண்மையில் மிகவும் ஆபத்தான ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது. இளம் ஜோடிகளை இலக்காகக் கொண்டு, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது முதல் கொலை வரை நடைபெறும் சட்டவிரோத செயல்கள் அங்கு நடக்கின்றன.

இந்த சூழலில் நிகில் ஒரு அப்பாவி இளைஞன் போல தோன்றினாலும், அவன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட நோக்கம் இருக்கிறது. காதல், மர்மம், போலீஸ் விசாரணை – அனைத்தும் ஒன்றாக இணையும் போது, அவன் உண்மையான முகமும் நோக்கமும் வெளிப்படுகிறது. இறுதியில், அவன் சட்டத்தின் வழியா அல்லது தனது பாணியிலா நீதியை வழங்குகிறான் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

நாயகனாக அறிமுகமான நிகில், இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அப்பாவியாகவும், பின்னர் திட்டமிட்ட செயல்களில் ஈடுபடும் போது காட்டும் மாற்றமும் நன்றாகப் பதிவாகியுள்ளது.
நாயகி ஹர்ஷா, உணர்ச்சிகரமான காட்சிகளில் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறார்.

வில்லனாக வரும் பிர்லா போஸ் மற்றும் அருண்ராஜா, கதைக்கு தேவையான அழுத்தத்தை தருகின்றனர். குறிப்பாக ஹோட்டல் மேலாளராக வரும் பிர்லா போஸின் நடிப்பு வில்லத்தனத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது.

இமான் அண்ணாச்சி மற்றும் காத்துக்கருப்பு கலை ஆகியோர் சில இடங்களில் நகைச்சுவையை சேர்த்து கதையின் தீவிரத்தை சற்றே தணிக்கிறார்கள்.

தொழில்நுட்பம்

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. ஏலகிரி மலைப்பகுதியின் அழகையும், ஹோட்டலின் இருண்ட சூழலையும் சி. பாரதி ராஜன் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
வேலன் சகாதேவனின் இசை, குறிப்பாக பின்னணி இசை, த்ரில்லர் உணர்வை வலுப்படுத்துகிறது.

எடிட்டிங் கச்சிதமாக அமைந்துள்ளது; படம் எங்கும் சோர்வடையாமல் நகர்கிறது. ஆக்ஷன் காட்சிகளும் இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இயக்கம்

இயக்குனர் ஜெகன் ராயன், சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அடிப்படை கூறுகளை சரியாக கையாள்கிறார். கதையின் திருப்பங்களை இறுதிவரை காக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரு அறிமுக இயக்குனருக்கான நம்பிக்கையான முயற்சி இது.

முடிவு

ரூம் பாய் ஒரு சாதாரண கதையுடன் தொடங்கி, பின்னர் பழிவாங்கல் மற்றும் நீதிக்கான போராட்டமாக மாறுகிறது. “ரூம் பாய்” என்பது ஒரு வேலை பெயர் மட்டுமல்ல, அதிகாரத்திற்கு எதிராக எழும் ஒரு சாமானியனின் உருவகமாக படம் காட்டுகிறது.

மொத்தத்தில்: நல்ல தொழில்நுட்பத் தரம், விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் ஒரு சுவாரஸ்யமான கிளைமாக்ஸுடன், ரூம் பாய் ஒரு பார்ப்பதற்கான த்ரில்லர் அனுபவம்.

’காக்கி சர்க்கஸ்’ இணையத் தொடர் விமர்சனம்

துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக பணியாற்றும் Munishkanth, குற்றவாளிகளை திருத்துவதே சிறைச்சாலையின் முக்கிய நோக்கம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார். இதனால், சிறைச்சாலைக்குள் ஒரு சிறிய நூலகத்தை அமைத்து, கைதிகளுக்கு தானே எழுதிய புத்தகங்களை வாசிக்க வழங்குகிறார். மேலும், குற்றச் சம்பவங்களுக்கான தீர்வுகளையும் அவர் படிக்கும் நூல்களில் இருந்து தேடும் தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளார். இவருடன் காவலராக பணியாற்றுபவர் Subash Selvam.

இந்த சூழலில், சிறைச்சாலைக்குள் உள்ள கோவில் உண்டியலில் இருந்த பணம் திருடப்படுகிறது. இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க, அந்த தொகையை மீண்டும் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் Subash Selvam சிக்கிக்கொள்கிறார். இதற்காக வங்கியில் கடன் பெற்று, அந்த பணத்தை உண்டியலில் சேர்க்க முடிவு செய்கிறார். ஆனால், அவர் கடன் பெற்று வீட்டில் வைத்திருந்த பணமும் திருடப்பட்டதால், பிரச்சனை மேலும் சிக்கலாகிறது.

கடன் பெற்ற பணத்தையும் இழந்த நிலையில், திருடன் யார் என்பதை Subash Selvam கண்டுபிடித்தாலும், அவரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த முடியாத நிலை உருவாகிறது. இதனால், ஆதாரங்களுடன் திருடனை பிடித்து பணத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் கதையின் மையமாக அமைகின்றன. இந்த பயணம் எதிர்பாராத திருப்பங்களும் நகைச்சுவை அம்சங்களும் கலந்து விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.

Munishkanth, Subash Selvam மற்றும் Rajesh Madhavan ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன், சிறைச்சாலை கோவில் உண்டியலும் ஒரு முக்கியமான “கதாபாத்திரமாக” வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான அணுகுமுறையால், ஒவ்வொரு அத்தியாயமும் சிரிப்பு மற்றும் சுவாரஸ்யம் கலந்து நகர்கிறது; இதனை இயக்குனர் Ameen Barif சிறப்பாக கையாளுகிறார்.

நடிப்பில், Munishkanth தனது வழக்கமான நகைச்சுவை பாணியை விட்டு விலகி, கதாபாத்திரத்திற்கு தேவையான அளவிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. Subash Selvam காவலராக மிக நன்றாக பொருந்தியுள்ளார்; நகைச்சுவையுடன் சேர்த்து, ஆக்‌ஷன் காட்சிகளிலும் தனது திறமையை காட்டுகிறார். திருடன் கதாபாத்திரத்தில் Rajesh Madhavan, எளிமையான தோற்றத்துடன் இருந்தாலும், பணத்திற்காக அல்லாமல் புகழுக்காக திருடும் தன்மை மூலம் கதைக்கு புதுமையை சேர்க்கிறார்.

மேலும், Vinsu Sham மற்றும் Gauthami உள்ளிட்ட நடிகைகள் தங்களது கதாபாத்திரங்களை குறையின்றி செய்துள்ளனர். சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் போன்ற பலர் தங்களது வேடங்களுக்கு ஏற்றவாறு நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி வழங்கிய visuals, இசையமைப்பாளர் சேவியர் மற்றும் விபின் பாஸ்கரின் இசை, எடிட்டர் அர்ஜுன் பாபுவின் தொகுப்பு ஆகியவை தொடரின் தரத்தை உயர்த்துகின்றன. இயக்குனர் Ameen Barif, எளிய கருவை பல கிளை கதைகளுடன் இணைத்து, கோவில் உண்டியலுக்கே ஒரு பின்னணி உருவாக்கி, ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்துகிறார்.

சிறைச்சாலைக்குள் நடக்கும் திருட்டு என்ற கேள்வியை மையமாக வைத்து, திருடன் யார் என்பது தெரிந்திருந்தாலும், அவர் எப்படி தப்பிக்கிறார், எப்போது சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து பரபரப்பை உருவாக்குகிறது. இதனால், அடுத்தடுத்த அத்தியாயங்களை ஆர்வத்துடன் பார்க்கும் வகையில் கதை நகர்கிறது.

அதே சமயம், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக Munishkanth கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாழ்க்கையை முழுவதும் புத்தகங்களில் மட்டுமே காண முடியாது; சில நேரங்களில் நிஜத்தை நடைமுறையாக அணுக வேண்டும் என்ற கருத்தையும் நகைச்சுவையுடன் படம் தெரிவிக்கிறது.

மொத்தத்தில், Kaaki Circus சிரிப்பும் சஸ்பென்ஸும் கலந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும், சிந்திக்க வைக்கும் entertaining series ஆகும்.

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் – திரைப்பட விமர்சனம்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், Selvaraghavan நடித்துள்ள Manithan Theivamagalam திரைப்படத்தில், Kushi Ravi, Mime Gopi, Kausalya மற்றும் Y. G. Mahendran முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வியம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதீஷ் தயாரித்த இந்த படம், வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது; இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

“மனிதன் தெய்வமாகலாம்” திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் சூழ்நிலைகளின் காரணமாக எவ்வாறு ‘தெய்வம்’ போல் உயர்த்தப்படுகிறான் என்பதைக் கூறும் கதையாக அமைந்துள்ளது. இதில், Selvaraghavan மற்றும் Kushi Ravi காதலித்து திருமணம் செய்து, ஆரம்பத்தில் கூலி தொழிலாளர்களாக இருந்த அவர்கள் கடுமையாக உழைத்து பின்னர் ஒரு தாபா ஹோட்டலின் உரிமையாளர்களாக முன்னேறுகின்றனர். அந்த ஊரில் வசிக்கும் ஒரு முதியவர், சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகிறார்; இதையடுத்து அவர் அரசியல்வாதியான Y. G. Mahendran அவர்களை சந்திக்கிறார்.

அதன்பின், Y. G. Mahendran தனது மைத்துனரான Mime Gopiயிடம் சாலை அமைக்கும்படி கூறுகிறார். ஆனால், பொறுப்பில்லாத மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை நடத்தும் Mime Gopi, பெண்களைத் தொடர்ந்து திரியும் கொடூரமான வில்லனாக காட்டப்படுகிறார். ஒருநாள் அவர் Selvaraghavan நடத்தும் ஹோட்டலுக்கு வந்து குடிக்க முயற்சிக்கிறார்; அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், தனது அடியாட்களை பயன்படுத்தி அந்த தாபாவை சேதப்படுத்துகிறார்.

இதற்குப் பிறகு, அந்த அநியாயத்திற்கு Selvaraghavan எப்படி பதிலடி கொடுக்கிறார், மேலும் அவரது கோபம் எவ்வாறு ‘தெய்வத்தின் தண்டனை’ போல மாறுகிறது என்பதுதான் மீதிக் கதை. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு Selvaraghavan சிறப்பாக நடித்துள்ளார்; ஒரு சாதாரண மனிதனிலிருந்து மாற்றம் அடையும் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்துகிறார். Kushi Ravi அழகாகவும் கதைக்கு ஏற்றவாறும் நடித்துள்ளார். Mime Gopi எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பாக திகழ்கிறார். மற்ற நடிகர்களும் தங்களுக்கான வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் கரு நல்லதாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பது ஒரு குறையாகும். முக்கிய திருப்பங்கள் முன்கூட்டியே கணிக்கப்படுவதால், படத்தின் ஈர்ப்பு குறைகிறது; கிளைமாக்ஸும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில், திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.