May 10, 2025

deccanwebtv

‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம்

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில்
ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.

‘குற்றம் தவிர் ‘ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது.

“நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்திப் படம் எடுத்து இருக்கிறோம்.

ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது .அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது .இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன்.எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

முன்னோட்டம் மற்றும்
பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது,

“முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன்.

இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.
பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை .
இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும் . அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா .அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன் .
அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார் .அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் சுவாமிஜி இங்கே வந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம். என்னை அழைத்து அங்கே பெரிய மரியாதை எல்லாம் செய்தார்கள்.

இங்கே செண்ட்ராயன் வந்திருக்கிறார் அவர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர் தான். அவர் பிக் பாஸ் ரகசியங்களை இங்கே சொல்ல வேண்டும்.
பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றவர் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ‘என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி முடித்துப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

இயக்குநர் கஜேந்திரா பேசும்போது,

“இது எங்களுக்கு முதல் படம்.நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம் அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் .தயாரிப்பாளர் இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் அவர் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்” என்றார்.

கதாநாயகனாக நடிக்கும் ரிஷி ரித்விக் பேசும்போது,

” நான் வில்லனாக நடித்து வந்தேன் .இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது .உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் சார் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல.அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம்.
படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது . இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

கதாநாயகி நடிகை ஆராதியா பேசும்போது,

” ஒவ்வொரு படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்யும் ஊடகங்களுக்கு நன்றி .இந்தப் படத்தையும் கொண்டு செல்லுங்கள் . ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது .அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ரா சாருக்கு நன்றி .நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர்,அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.
முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி “என்றார்.

பருத்திவீரன் சரவணன் பேசும் போது,

“நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன்.
இந்த படப்பிடிப்பு பெங்களூர், கர்நாடகா பகுதி என்று நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து படப்பிடிப்புக்காக அங்கே செல்கிறோம் எப்படி இருக்குமோ என்று தயங்கியபடியே சென்றேன். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் அவர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைத்து உபசரித்தது வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.படப்பிடிப்பின் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்,இப்படிக் கடைசி வரை நடந்து கொண்டார்கள்.

அவர்களின் அந்த நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். பாடல்கள் சிறப்பாக உள்ளன.தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்” என்றார்

நடிகர் செண்ட்ராயன் பேசும்போது,

“இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் நல்ல சம்பளம் கொடுத்தார் .பாக்கி வைக்காமல் அவ்வப்போது செட்டில் செய்து கொண்டே இருந்தார்கள்.நான் பெங்களூர் படப்பிடிப்பு என்றதும் கர்நாடகாவில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாதே என்று சில கன்னட வார்த்தைகளை எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு போனேன். ஆனால் அங்கே போய்ப் பார்த்தால் எல்லாருமே தமிழ் பேசினார்கள். பெங்களூரில் உள்ளவர்கள் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு எல்லாமும் பேசுகிறார்கள். அது ஒரு பேன் இந்தியா நகரமாகத் தோன்றியது .அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்”
என்றார்.

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சினிமா எத்தனையோ வளர்ச்சியைப் பெற்று இன்று வளர்ந்து இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும் கதை இருந்தால் தான் படம் ஓடும் .இதில் கதையை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள்.இயக்குநர் தான் எதிர்பார்த்தது வரும் வரை விட மாட்டார் .அந்த அளவிற்கு மெனக்கெடுவார்.இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

நடிகர் சாய் தீனா பேசும்போது,

” பொதுவாக படப்பிடிப்புகளில் பேச வேண்டிய வசனங்களை பேப்பரில் காண்பிப்பார்கள், தருவார்கள்.இந்த இயக்குநர் படப்பிடிப்பில் டயலாக் பேப்பரையே காட்டியதில்லை. அதை அவர் கையில் நான் பார்த்ததே கிடையாது .ஆனால் இப்படி இருந்தே ஒரு முழுப்படத்தையும் முடித்து விட்டார்”என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது,

“இயக்குநருக்கு தமிழ் எழுதவே தெரியாது அதனால்தான் டயலாக் பேப்பர் எழுதவில்லை.இருந்தாலும் இந்தப் படத்தைச் சிறப்பாக முடித்தார். திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தான் அடித்தளம் . முதலில் தயாரிப்பாளரைப் பார்த்தபோது இந்த படத்தை எப்படி எடுப்பாரோ? என்று நினைத்தேன் .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பாரோ என்று கேள்வி இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செய்தார் .அனைத்தையும் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார். திட்டமிட்டுச் செயல்படுவதில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தினார்.

ஒரு திரைப்பட விழாவுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் . அந்த அளவிற்கு அவர் உறவுகளைச் சேர்த்து வைத்துள்ளார் .இந்த உறவுகளே அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் .இந்தப் படத்தில் நான் ஒரு அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு உடன் இணைந்து நடித்திருக்கிறேன்.

அந்தக் குழந்தை சைந்தவி கூட நடித்தது மறக்க முடியாது. முதல் படம் போலவே தெரியவில்லை, சிறப்பாக நடித்தாள். நான் நடித்த அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது.அனைவருக்கும் நன்றி “என்றார்.

ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ் பேசும்போது,

” இதுவரை தைரியம், ஐ, மெர்சல், சிங்கம் 3 ,சுல்தான் போன்ற படங்களில் நான் நடித்திருக்கிறேன் .,நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறேன் .எனது முகநூல் பார்த்து ஐ பட வாய்ப்பு கொடுத்த ஷங்கர் அவர்களை மறக்க முடியாது.
இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் வருகிறேன்.
சினிமா ஆர்வம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சினிமா அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள்” என்றார்.

பிக் பாஸ் புகழ் டேனியல் பேசும்போது,

” என் நண்பர்கள் நடித்திருப்பதால் நட்புக்காக நான் இங்கே வந்தேன். இந்தத் தயாரிப்பாளரைப் பார்க்கும்போது அவர் அழைத்தால் காலண்டரில் தேதி இல்லை என்றால் கூட கால்ஷீட் கொடுத்து நடிப்பேன்.சம்பளம் பெரிதல்ல.எவ்வளவு பெரிய உச்ச நடிகர்களுக்கும் சிறிய சாதாரண நடிகர்களுக்கும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் மனம் ஒன்றுதான் ” என்றார்.

ஜெயபிரகாஷ் குருஜி பேசும் போது,

“எனக்குத் திரை உலகில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் கலந்து கொள்ளும் விழாக்கள் பிற விழாக்கள் பத்து என்றால் சினிமா விழாக்கள் நூறு என்று இருக்கும்.
அந்த அளவிற்குத் திரையுலகில் உள்ளவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் .கங்கை அமரன் அப்படி ஒரு நண்பர். தினம் என்னுடன் பேசுபவர். இந்தப் படத்தை வேறு மொழியிலும் வெளியிடுங்கள். வெற்றி பெறும் ” என்றார்.

அதிமுகவைச் சேர்ந்த அரசியல்வாதி ஈ. புகழேந்தி பேசும்போது,

” குற்றம் தவிர் என்ற படத்தின் தலைப்பே அழகாக இருக்கிறது இந்த தலைப்புக்காக இந்தப் படம் ஓட வேண்டும். வெற்றியைத் தேடித்தரும்.

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். ‘ரத்தக்கண்ணீர் ‘படம் அந்த காலத்தில் எம் ஆர் ராதா அவர்கள் நடிப்பில் வெற்றி பெற்ற படம் .அது வெளியாகி 60 -70 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் ரத்தக்கண்ணீரு என்று எடுத்தார்கள்.அதை எடுத்தவர் எனது நண்பர்.
நான் அங்கு போய் பார்த்தபோது திரையங்குகளில் எல்லாம் போலீஸ் தடியடி நடக்கும் அளவிற்குக் கூட்டம் அலைமோதியது. படம் பெரிய வெற்றி.

இதைக் கேள்விப்பட்டு திருவாரூர் தங்கராசு பெங்களூர் வந்திருந்தார். என்னைக் கேட்காமல் என் அனுமதி இல்லாமல் எப்படி கன்னடத்தில் எடுக்கலாம் என்று சத்தம் போட்டார்.அந்தப் படம் எடுத்தவர் நண்பர் மிகவும் நல்லவர். தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் திருவாரூர் தங்கராசு காலைத் தொட்டு கும்பிட்டார்.எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன் .ஆனால் இந்தப் படத்தை கர்நாடகா முழுதும் கொண்டு சேர்த்த எனது மகிழ்ச்சி பெரியது என்றார்.இருவருமே எனக்குத் தெரிந்தவர்கள் . நான் இருவரையும் சமாதானம் செய்து வைத்தேன்.

சினிமா தான் தலைவர்களை கொடுத்தது. சினிமாவில் ஜெயிப்பது நீச்சல் தெரியாதவன் நீச்சல் போட்டிக்கு வருவது போல. எம்ஜிஆர் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. எப்போதும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
எம்ஜிஆர் படங்களில் குற்றவாளியைப் போலீஸ் கைது செய்வது போல் தான் இருக்கும் .தண்டிப்பது போல கொலை செய்வது போல இருக்காது .ஆனால் இப்போது படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசும்போது ,

பெங்களூரில் இருந்து படம் எடுக்க வந்து நம் இயக்குநர் குடும்பத்தில் ஒருவராகி உள்ள புதிய இயக்குநரை வரவேற்கிறேன். ஸ்கிரிப்ட் இல்லாமல் படம் எடுத்தார்கள் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு மனதில் கதையைப் பதிய வைத்துள்ள இயக்குநரின் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன்.

வில்லனிலிருந்து கதாநாயகனாக இந்த கதாநாயகன் உயர்ந்து இருக்கிறார் .அவர் வெற்றி பெறுவார். இங்கே சினிமா துறையில் ஆன்மிகத் துறையினரும் இணைந்து இருப்பதை இந்த மேடையில் பார்க்கிறேன். அவர்களை இணைத்துள்ளது இந்த படம். எனக்குத் தெரிந்த ஆன்மிகம் சினிமா தான் “என்றார்.

இயக்குநர் பவித்ரன் பேசும் போது,

” சென்னையில் இருந்து பெங்களூர் அழைத்து என்னை ஒரு படம் எடுக்க வைத்தார்கள். அந்தப் படம் தமிழில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’. அது செப்டம்பர் 30-ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது .இந்தத் தயாரிப்பாளர் நல்ல சமூக சேவகராக இருக்கிறார் .ஒரு நல்ல படம் எடுத்தால் ஊடகங்கள் அதைக் கொண்டாடுவார்கள் . நீங்கள் ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்தால் அதைப் பத்து மடங்கு கொண்டு சேர்ப்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசும் போது ,

“இந்தப் படத்தில் ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்கள் எழுதி இருக்கிறேன்.பாடலாசிரியர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பது கடினம். இதில் அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.இந்தப் படத்தின் இயக்குநர் தனக்கு எது வேண்டுமோ அதைச் சரியாகக் கேட்டுப் பெற்றுக் கொள்பவர் ,அவ்வளவு தெளிவானவர்.
பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன மகிழ்ச்சி” என்றார்.

தொழிலதிபர் பிரகாஷ் பழனி பேசும் போது,

” இந்தப் படத்தை பெரிய இடத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள்’ என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது.

” குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். குற்றம் தவிர் என்பது இந்த படத்தின் பெயர். உறவுகளில் குற்றம் பார்க்கக் கூடாது. தவிர்க்க வேண்டும் தயாரிப்பாளர் அனைவருக்கும் சம்பளத்தை பாக்கி இல்லாமல் கொடுத்தார் என்றார்கள் அதனால் தான் இயக்குநர் சிறந்த படமாக எடுத்திருக்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெங்களூரில் இருந்து வந்து படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் வெற்றி பெறட்டும். பல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்” என்று வாழ்த்தினார்.

நடிகர் ஜார்ஜ் விஜய் பேசும் போது,

“இந்தப் படத்தின் போஸ்டர் ட்ரெண்டிங்கில் வந்தது. அதை வெளியிட வேண்டும் என்று முன்னணி நடிகர்களை அணுகிய போது யாருமே கண்டு கொள்ளவில்லை.ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால் தான் சினிமா முன்னுக்கு வரும். நான் கவலையோடு இருந்த போது எனக்கு ஒரு வாசகம் வந்தது. ‘என் கிருபை உனக்குப் போதும்’ என்றது அப்படி பல பெரியவர்களின் கிருபை இங்கே இந்தப் படக் குழுவிற்கு வந்துள்ளது”என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது,

“நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன்.அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள்.பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது.ஆடிய களைப்பு பசியாக இருந்தது.சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார்.சில நிமிடங்கள் பொறுத்து இருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார்.அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.
இந்தப் படத்திற்காக சிவகாசி மாதிரி பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அந்த சிவகாசி வாய்ப்பை கொடுத்த பேரரசு சார் இங்கே வந்திருக்கிறார். என்னை விஜய் படம் கொடுத்துப் பெரிய ஆளாக்கி விட்ட வர் அவர்.
இந்தப் படத்தில் அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா?கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத் தான் வைப்பார்.
அதனால்தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம்.

கர்நாடகாவில் பல மொழி பேசுகிறார்கள் என்றார் செண்ட்ராயன். அப்படியானால் அவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறார் என்று கூறலாமா?

சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள்.
ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள்.

இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன.

அப்போதெல்லாம் இசையமைப்பாளர்களை மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் என்று அழைத்துக் கொண்டு போய் மெட்டுப்போட வைப்பார்கள்.அவருக்கும் வெளிநாடு செல்லலாம் என்று ஆசை இருந்தது. கேட்டுக் கொண்டே இருந்தார்.
தருமபுரி படத்தில் பணியாற்றி வந்த போது விஜயகாந்த் கட்சி தேர்தல் என்று பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அங்கே வரவழைத்து கேரவனிலேயே மெட்டுப்பட வைத்தேன். மூன்று பாடல்கள் அங்கேயே போட்டுக்கொடுத்தார் . பழனி படம் வந்தபோது பழனிக்கும் திருவண்ணாமலை சமயத்தில் திருவண்ணாமலைக்கும் வரவழைத்து மெட்டுகளை வாங்கினேன் .உள்ளூர் பெயரை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். கடைசி வரை அவரது வெளிநாடு கனவு பலிக்கவே இல்லை.

குற்றங்களைத் தவிர்க்க வேண்டும் .திரையரங்குகளில் படங்களைப் பார்க்க முடியாமல் இறுகப்பற்று, எம காதகி போன்ற படங்களை ஓபிடியில் பார்க்கும்போது எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதுபோன்ற குற்றங்களை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாடல் காட்சிகளைப் பார்த்தோம்.கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள்.பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை.கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால் அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பைக் கோட்டை விட்டுவிட்டார்.
இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , எந்தவொரு தமிழ் திரைப்பட திருவிழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளது!!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.

இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.

இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.

Sun TV YouTube சேனலில் பல வீடியோக்கள் பல வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது! உதாரணமாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலும் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் முன்னோடியான ‘அரபிக் குத்து’ பாடல் 700 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது, ‘காவாலா’ பாடல் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது!

உலகளாவிய அளவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கொண்டுள்ள Sun TV YouTube சேனல், தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஃபாலோயர்ஸை இணைத்துக் கொண்டு, ஏற்கனவே இணைந்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தி வருகின்றது.

Sun TV YouTube சேனலின் இணைப்பு – https://www.youtube.com/@suntv

‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு……..

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை.
படத்தொகுப்பு .கே.பி. அஹமத் .
சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் பேசும்போது,

“முதலில் வாய்ப்பு கொடுத்த எம். ஆர். பாரதி அவர்களுக்கு நன்றி.நான் இயக்குநர் எம் .ஆர் . பாரதியைச் சந்தித்து படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சென்னையில் எடுக்கலாமென்றார். நான்தான் ஊட்டியில் எடுக்கலாம் என்று கூறினேன். வைடுஷாட், லாண்ட்ஸ்கேப் எடுத்துக் கொண்டு வா, இருவர் நடப்பது மாதிரி போனிலேயே எடுத்துக் கொண்டு வா என்றார். அடுத்த நாளே எடுத்து அனுப்பினேன். அதை அவர் பார்த்துவிட்டு அவர் ஊட்டியில் தான் நாம் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்றார்.ஊட்டியின் காலநிலையும் வண்ணங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன.ஒரு சிறிய குழுவாகச் சென்று சிறப்பாகச் எடுத்து முடித்திருக்கிறோம்” என்றார்.

படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது,

” இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடித்தவர்களுக்கு நன்றி. இயக்குநர் மிகவும் அன்பானவர்,அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். எப்போதும் நேர் நிலையாக சிந்திப்பவர். அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.

படத்தில் நடித்துள்ள பிரபு சாஸ்தா பேசும் போது,

” இந்தப் படத்தில் நான் அரவிந்த் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் மனதில் ஒரு உலகம் இருந்தது. அந்த உலகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அவர் மிகவும் அன்பானவர் .அதிகம் பேச மாட்டார் , நேர்நிலை எண்ணம் கொண்டவர்.
ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் ஒளிப்பதிவில் காதல் மொழி இருக்கிறது.அவர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நம்மை நிற்க வைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.
மணிவண்ணன் சார் போல வசனங்களை ஹேமந்த் சிறப்பாக எழுதியிருக்கிறார்.படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் .ஆனால் மிகவும் கடினமான இடங்களில் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்” என்றார்.

எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலா பேசும் போது,

” தமிழ்நாட்டில் கனவுகளைக் காட்சியாக்கிக் கொடுத்த பி. சி . ஸ்ரீராம் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்.நான் அண்ணன் எம். ஆர் .பாரதியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவர் எப்போதோ இயக்குநராக இருக்க வேண்டியது. சற்று தாமதம் ஆகிவிட்டது.எனக்கு ஒரு நல்ல சகோதரராக நண்பராக இருக்கிறார். நாங்கள் 30 ஆண்டு கால நட்புடன் இருக்கிறோம்.
நான் சென்னை வந்த போது சென்னையில் ஒரு நம்பிக்கை நீரூற்றாக அவர் தான் இருந்தார். அவரே தனக்கான இடத்தை சிரமப்பட்டு தேடி அமைத்துக் கொண்டுள்ளார்.இருந்தாலும் பலருக்கும் நம்பிக்கை தருபவராக இருந்தார். பல விளம்பரப் படங்கள் எடுத்துள்ளார். எப்போதும் போராடிக் கொண்டிருப்பவர் தான் . அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையைத் தருபவர் .
ஒரு நல்ல வரியைக் கூறினால் ஒரு அழகான காட்சியைக் கூறினால் கூட குழந்தையைப் போல ரசிப்பார்.

உலக அளவில் திரைப்படங்கள் பார்ப்பவர். உலக சினிமாக்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துபவர். அவர் எப்போதும் ஒரு ரசிகராகவே தன்னை உணர்வர் .அந்த ரசிக மனம் தான் அவரை உயிர்ப்போடு வைத்துள்ளது.அவர் ஒரு ட்ரீம் பாய் .அவரது கனவு தான் இந்தப் படம்.இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது, ‘ஏ.ஐ’ என்கிறார்கள் .அழகியலை எந்த ‘ஏஐ’ யாலும் உருவாக்க முடியாது .அந்த அழகியல் உள்ளவரை உலகம் அழியாது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைவரின் பிளே லிஸ்டிலும் இருக்கும். இது கனவைப் பற்றிப் பேசுகிற படம். இதைத் தனது கனவுப் படம் என்று அவர் உருவாக்கி இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது,

” எனது நண்பர்களில் பாரதிக்கு சிறப்பான இடம் உண்டு.ஒரு நாள் ஒரு கதை இருக்கிறது பேசலாம் என்று எங்களை அழைத்தார்.
நாங்கள் லிங்குசாமி,பாலாஜி சக்திவேல், பிருந்தா சாரதி ஆகியோர் அவர் அழைத்த இடத்திற்குச் சென்றோம். சேலையூரில் ஒரு ரிசார்ட்டில் எங்களை அழைத்து கதை பற்றிப் பேசாமல் மனம் குளிர சாப்பாடு போட்டார். கதை பற்றிப் பேசுவது இவ்வளவு சுகமானதா என்று நினைத்தோம்.

அவர் தனது உழைப்பால் தனது பதிப்பகத் துறையில் பல சாதனைகள் படைத்திருக்கிறார் .நான் கிராமத்திலிருந்து சென்னை வந்த போது எனக்கு, சாதாரண வணிகப் படங்களை மட்டுமே பார்த்து வந்த எனக்கு, ஆன்டன் செகாவையும் அகிரா குரோசாவையும் அறிமுகப்படுத்தியவர் அவர்.இவர்களெல்லாம் சினிமாவில் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுத்தியவர்.அவர் நல்ல ரசிகர். நல்ல கவிதை சொன்னால் 500 ரூபாய் பரிசு கொடுப்பார் .எங்களது வாசிப்பை விரிவு படுத்தியவர்.அவரது ஒரு வரிக் கதை இந்த அற்புதமான படமாக வந்திருக்கிறது .படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் நாயகி ஹரிஷா பேசும்போது ,

” இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள்.அவர்கள் அமர்ந்திருக்கும் இப்படிப்பட்ட மேடையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.இயக்குநர் பாரதி சார் நடிப்பவர்களைத் தேர்வு செய்த போது என்னை அழைத்தார்.பார்த்துவிட்டு நீ தான் என் ட்ரீம் கேர்ள் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .நாங்கள் அழகாக இருப்பதே இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது.
படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.

இயக்குநரும் கதை வசன கர்த்தாவுமான பிருந்தா சாரதி பேசும் போது ,

“பத்திரிகையில் இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இயக்குநர் எம் ஆர் பாரதி. 1992 இல் இருந்து அவர் எனக்குப் பழக்கம்.

‘மீரா’ படத்திற்குப் பிறகு ‘அழியாத கோலங்கள் 2 ‘ எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் .

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் டிவி உலகத்தில் ஒரு வெற்றியாளராக இருந்தார். தொலைக்காட்சிகளுக்கு வெற்றியாளர்களின் கதைகளை எடுத்து நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்தார். பல விளம்பரப் படங்களும் எடுத்துள்ளார் அப்போது நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன் .அதற்காகப் பல ஊர்களுக்கு அவருடன் சென்று இருக்கிறேன்.
அதன் மூலம் சொற்ப வருமானம்தான் வந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார். இவரது மனைவி ஒரு பொறியியல் பேராசிரியர். பொறியியல் கல்லூரிக்காக அவர் எழுதிய புத்தகத்தை கல்லூரிகளின் பாடத்தில் துணைப்பாடத்தில் சேர்த்து விட வேண்டும் என்று முதலில் இவர் தேடி அலைந்தார். ஆனால் அது பெரிய வெற்றி பெற்று இன்று பெரிய வெற்றிகரமான பதிப்பாளராக இருக்கிறார்.

அவரை முதலில் சந்தித்தபோது பிடித்த படத்தைக் கேட்ட போது நான் ‘மூன்றாம் பிறை’ என்றேன் அதிலிருந்து அவர் இணக்கம் ஆகிவிட்டார்.

எனக்குப் பிடித்த படங்கள் ‘மௌன ராகம்’,’முதல் மரியாதை’, ‘உதிரிப்பூக்கள்’ என்றிருந்தது. அவர்தான் எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்தினார்.’சாருலதா’ என்ற படத்தைப் பற்றி அவர்தான் முதலில் பேசினார்.அகிரா குரோசோவா போன்ற மேதைகளை அறிமுகப்படுத்தினார்.
சிறந்த ரசனை உள்ளவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அழியாத கோலங்கள் 2’ என்று அற்புதமான படத்தை இயக்கினார் .திரைப்பட உருவாக்கத்தில் இப்படியும் செய்யலாமா என்று யோசிக்க வைத்தார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கனவு இருக்கும் . அந்தக் கனவு தான் இந்தப் படம்.

இங்கே வந்திருக்கும் பி.சி ஸ்ரீராம் அவர்களை நான் பிலிமாலயா பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வேண்டும் என்று அவரிடம் எப்படி பேசுவது என்ன கேள்வி கேட்பது என்று எனக்குக் தெரியவில்லை .பி சி ஸ்ரீராம் உருவான கதை எப்படி என்று கேட்டேன்.அப்போது அவரது சித்தி பிரபல மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத் என்றார். அவரைச் சந்திக்க வரும் பல எழுத்தாளர்களை இவர் பார்த்து இலக்கியம் பற்றி ஆர்வம் வந்திருக்கிறது.ஒரு நாள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றாராம் .அது ஜே. கிருஷ்ணமூர்த்தி பேசிய கூட்டம் . அப்போது அவர் ‘உன் கண்களால் உலகைப் பார் ‘என்று கூறியதை மனதில் எடுத்துக்கொண்டு அப்படி உலகம் பார்க்கும் கண்களால் பார்க்காமல் உன் கண்களால் உலகத்தை பார் என்று அவர் பார்க்க ஆரம்பித்தார். அந்தக் காட்சிகள் எல்லாம் நமக்கு வேறு விதமாக அழகாகத் தெரிந்தன .
இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் கதிர் பேசும்போது,

“நான் கல்லூரியில் படித்த போதே எம்.ஆர். பாரதி எனக்கு பழக்கம் .அப்போது பல படங்களுக்கு நான் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். எல்லாமே சின்ன சின்ன படங்கள். ‘வேலியில்லா மாமரம்’ என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.அப்போதிலிருந்து எனக்கு அவர் பழக்கம்.
அவர் நல்ல புத்தக வாசிப்பு கொண்டவர்.
எனது புத்தக அறிவுக்குக் காரணம் அவர் தான். அவர் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அவர் வீட்டுக்குச் சென்றால் ரஷ்ய நாவல்கள் நிறைய படிப்போம். அவற்றை மீண்டும் மீண்டும் அங்கே போய் படிப்போம்.
எழுத்து என்பது சினிமாவுக்கு மிகவும் அத்தியாவசியம். சினிமாவுக்கே எழுத்துதான் அஸ்திவாரம் அது இல்லாததால் தமிழ் சினிமா இன்று சீர்கெட்டுப் போயிருக்கிறது.யாரும் படிப்பதில்லை .ஆனால் புத்தகம் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு பாரதி இங்கே இயக்குநராக இருக்கிறார்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
படம் கவிதை போல வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகிறேன்”
என்றார்.

.திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான கலைமாமணி ட்ராட்ஸ்கி மருது பேசும்போது ,

“சென்னை வந்த காலத்தில் இருந்து பாரதியை எனக்குத் தெரியும் .
அப்போது பழக்கமான பல நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
பாரதி என் நல்ல நண்பர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,

“‘மீரா’ படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பிசி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும்.

இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் .

இவர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது ‘மௌன ராகம் ‘படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன்.
‘திருடா திருடா ‘படத்தின் ‘தீ தீதித்திக்கும் தீ ‘ பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் .
கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது
அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள்.

வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை.அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார் .இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர் மூலம் வந்தவர்கள் .

அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது ‘குருதிப்புனல்’ ,’அக்னி’ நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் .

‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’, ‘சீனி கம் ‘ வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

கவனிப்பாரற்று கிடந்த எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரிக்கு டிராட்ஸ்கி மருது அவர்கள் பொறுப்பேற்ற போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கும் செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி திரைப்படக் கல்லூரிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன்.

பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்”
என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது,

“இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா?
அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு.

நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார்.
நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் எம் .ஆர் .பாரதி பேசும் போது,

“நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமைய வில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.’நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம் .

‘மீரா’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில் ‘அழியாத கோலங்கள் 2 ‘படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கிய போது அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது.நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12 நாட்களில் எடுத்தோம்.யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள்.

இந்த ‘ட்ரீம் கேர்ள்’ படத்திற்கு நான்கு காட்சிகள் எடுப்பது போல் திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம் .16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம் .

சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது.

சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும்.

நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை .சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும்.

சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும்.

முதலில் நான் ‘மீரா’ படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.

ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன்.

எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் ‘அழியாத கோலங்கள் 2 ‘எடுக்க முடிந்தது.இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்.

நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.

தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் நானி பேசுகையில், ” நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன்.

பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என சொல்லி இருக்கிறேன். 2012 – 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு – தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹிட் படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ இது ஒரு படம் அல்ல. அற்புதமான அனுபவத்தை தரும் படைப்பு. முதல் இரண்டு படத்திற்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஹிட் 1 ‘, ‘ஹிட் 2 ‘படத்தில் இடம் பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் வரக்கூடும். ஆனால் படத்தின் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது.

ஏனைய இரண்டு பாகங்களை விட ‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதற்காக மட்டுமல்ல.. இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில விசயங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள். கொண்டாடுவார்கள். ரசிப்பார்கள்.‌ அதிலும் தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும்.

‘ஹிட் – தி தேர்ட் கேஸ் ‘படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியிருக்கிறார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். இவர்கள் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிலும் மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை உங்களை நிச்சயமாக கவரும்.

இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம். இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விசயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்த படம் மாஸான கமர்சியல் என்டர்டெய்னர். ஆனால் அதே சமயத்தில் வழக்கமான கமர்ஷியல் படமாக இது இருக்காது. இந்தப் படம் வெளியான பிறகு நீங்களே உங்களுடைய நண்பர்களிடத்தில் படத்தைப் பற்றி சொல்லி, மீண்டும் திரையரங்கில் வந்து பார்ப்பீர்கள்.

இந்தத் திரைப்படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றிய தருணங்கள் அனைத்தும் மறக்க முடியாதவை.

இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிடும் சினிமாக்காரன் நிறுவனத்தின் வினோத் குமாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று ‘ஹிட்’ – ‘ரெட்ரோ’ என இரண்டு படங்களும் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். ” என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், ” ‘கே ஜி எஃப் ஒன்’ , ‘கே ஜி எப் 2’, ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது தமிழக ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
ஹிட்- 3 நான் நடித்திருக்கும் முதலாவது தெலுங்கு படம்.‌ இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து தெலுங்கில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இயக்குநர் சைலேஷ் கொலானு அற்புதமாக படத்தை இயக்கியிருக்கிறார். அனைவருக்கும் பிடித்த ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘கே ஜி எஃப் 2 ‘ படம் 2022 இல் வெளியானது. அதன் பிறகு என்னை நினைவு வைத்துக் கொண்டு இயக்குநர் சைலேஷ் கொலானு- நானி ஆகிய இருவரும் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நானியின் ரசிகையாக இருந்தேன். அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா.! என காத்திருந்தேன். என் கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் இந்த ஜானரிலான படத்தில் இணைந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே இது சந்தோஷத்தை அளிக்கிறது.‌

இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மே முதல் தேதியன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விநியோகஸ்தர் ‘ சினிமாகாரன் ‘ வினோத் குமார் பேசுகையில், ” ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்திற்கு பிறகு ‘ஹிட்- தி தேர்ட் கேஸ்’ படத்தை வெளியிடுகிறேன். இதற்காக வால்போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ எனும் திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். எங்கள் படமும், ‘ஹிட் 1 ‘ திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. தற்போது ‘ஹிட் 3’ படத்திற்கு நான் விநியோகஸ்தராகி இருக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்தப் படத்தில் நானி சார் நடித்திருக்கிறார். அவர் நடிப்பதற்காக தேர்வு செய்யும் அனைத்து படங்களும் நன்றாகவே இருக்கும். தொடர்ந்து அவர் ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். ஹிட் 3 எனும் படம் ஏற்கனவே ஹிட்டான இரண்டு பாகங்களில் தொடர்ச்சியாக வெளியாகும் மூன்றாவது பாகம். இதில் நானி இருப்பதால் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்.

ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே ‘கே ஜி எஃப் ‘, ‘கோப்ரா’ போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமைசாலிகள்.‌ அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என நம்புகிறேன்.” என்றார்.

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” எனக்கு இந்த மேடை மிக முக்கியமான மேடை. ‘ஈசன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து..’ எனும் பாடலை நாங்கள் எந்த படத்திற்காக எழுதினோமோ.. அந்தப் படத்தில் இருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு போன் செய்து, ‘ஈசன் படத்தில் ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடல் இடம்பெறுகிறது. சசிகுமார் சாருக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது’ என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் ஸ்டுடியோவில் சசிகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு , ‘அவர் பாடல் சிறப்பாக இருக்கிறது’ என வாழ்த்தினார். அந்த வாழ்க்கை என்னால் மறக்க இயலாது. அந்தப் பாடல் எனக்கான அடையாளமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து யுவன் சார் ஸ்டுடியோவில் ஒருவர் என்னை சந்தித்து நான் பட தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அவர்தான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். அவர் தயாரித்த ‘குட்நைட் ‘ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பையும் வழங்கினார். அவர் தயாரிப்பில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நானும் பணியாற்றியதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு நாயகன் சசிகுமார் என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் பாடல்களை எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதேபோல் இயக்குநர் அபிஷனும் கதையை சொன்னது போல் எடுத்திருக்கிறார். சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் சிறப்பாக உருவாகும் போது தான் அதனை நாம் கொண்டாட முடியும். இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷன் சின்ன பையன் தான். இருந்தாலும் மிகப்பெரிய இயக்குநராக வருவார். சசிகுமார் இப்படத்தில் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மற்றொரு தயாரிப்பாளர் மகேஷ் ராஜும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மொட்டை மாடியில் ஒரு பாடலை பாடுவார். அந்தப் பாடல் யூடியூப்பில் பிரபலமானது. அந்த பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இவருடன் இணைந்து எப்போது நாம் பணியாற்றுவோம் என ஆவலுடன் காத்திருந்தேன். இயக்குநர் பொன் குமார் மூலம் ‘1947’ எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். ‘குட்நைட்’ படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றும் அனுபவமே சிறப்பானது. அவருடைய பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
‘குட்நைட் ‘, ‘ லவ்வர் ‘ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும். படம் வெளியாவதற்கு முன் படத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. படம் வெளியான பிறகும் இந்த பேச்சு நீடிக்கும். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பணியாற்றி அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். இந்த படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன்.
சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்- நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னை சந்தித்து கதையை சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழு கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.‌ அந்தக் கதையை கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருந்தது.‌ அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ… அதை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை நாங்கள் குடும்பமாக இணைந்து உருவாக்கினோம். மே மாதம் முதல் தேதி அன்று இப்படத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். ஆதரவு தாருங்கள்.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் அற்புதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது பல காட்சிகளுடன் நம்மால் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதற்கு இவரின் இசை உதவி செய்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘குட்நைட் ‘,’லவ்வர்’ என்ற இரண்டு படத்திற்கும் வெற்றியை வழங்கி இருக்கிறீர்கள். அதனைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தையும் வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய இரண்டு படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவால் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யை உருவாக்க முடிந்தது. இதற்காக முதலில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அபிஷன் கதையை சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ‘மொமென்ட்ஸ்’ வரும். அதைக் கேட்டவுடன் இந்த படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்த படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ.. அதேபோல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிக சிறப்பான இயக்குநராக வருவார்.‌ இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும்.‌ திரை உலகில் அவருக்கு பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி.

மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன் . அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன் – ஷான் ரோல்டன் – பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையை தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்த கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும் … என்ன மாயஜாலம் செய்யும் … என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன். இதுவரை நான் கேட்ட கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும்.‌ ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழு பக்க பலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம். மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அன்பை கொடுக்கும். ரசிகர்களை கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசுகையில், ” பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தை இயக்குவது தான் லட்சியம் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புள்ளிக்குப் பிறகு நான் யாரிடமும் பணியாற்றாமல் கதை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதையை எந்தவித தயக்கமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் கேட்டனர். கதையை கேட்ட பிறகு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் மகேஷ் – யுவராஜ் ஆகியோருக்கு என் முதல் நன்றி.
படத்தின் முதல் பாதி கதையை கேட்டதும் தயாரிப்பாளர் யுவராஜ் இப்படத்தை உருவாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் அற்புதமானது.‌

இப்படத்திற்கு சசிகுமார் தான் ஹீரோ என நிச்சயத்துக் கொண்டு அவரை சந்தித்து கதை சொல்லப் போனேன். கதையை அவரிடம் சொல்லும் போது அவர் எந்த ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. அதன் பிறகு நான் சற்று சோர்வடைந்தேன். அன்று மாலை தயாரிப்பாளர் யுவராஜ் போன் செய்து சசிகுமார் சாருக்கு கதை பிடித்து விட்டது என சொன்னார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இப்படத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கு சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் முதன்மையானவர் ஷான் ரோல்டன். அவரின் இசை இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்த
படத்தின் மூலம் எனக்கு பாராட்டு கிடைத்தால்.. அதில் 50 சதவீதம் ஷான் ரோல்டனைத்தான் சாரும். அந்த அளவிற்கு இந்த படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார்.

மோகன் ராஜனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிலிர்ப்பானது. ‘முகை மழை’ என்ற வார்த்தைக்கு அவர்தான் பொருள் சொல்லி புரிய வைத்தார். ஷான் ரோல்டன் – மோகன் ராஜன் ஆகிய இருவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.

சிம்ரன் மேடம் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.‌ மிதுன் ஜெய் சங்கர் – கமலேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடந்தது.‌ அதனால் முதலில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் என்னிடம் எப்போது நம்பர் ஒன் ஆக வரப்போகிறீர்கள் ? என கேட்கிறார்கள். நான் அதற்காக வரவில்லை.‌ நல்ல படைப்புகளுக்கு இசையை வழங்கி அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் மூலமாக கிடைக்கும் நல்ல விசயங்கள் தான்.. என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திடீரென்று உயரத்திற்கு சென்று விட்டால்… அந்த உயரத்தில் நின்று கொண்டு, அந்த உயரத்தை தக்க வைப்பது என்பது கடினமான செயல்.‌ பலர் பல ஐடியாக்களை சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இசை இந்த சமூகத்திற்கு எப்படி பலன் அளிக்க வேண்டும். எந்த மாதிரியான இசையை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையை கொண்டவன் நான். அந்த வகையில் நான் இதுவரை என்னுடைய சினிமா இசை பயணத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நல்ல படங்களில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய நண்பரும் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர்மான விஜய் இப்படத்தின் கதையை கேளுங்கள் என்று சொன்னார். பொதுவாக நான் கதையை கேட்பதை தவிர்த்து விடுவேன். திரைக்கதையை வழங்கி விடுங்கள். நான் வாசித்து தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். திரைக்கதையை வாசிக்கும் போது அந்த திரைக்கதையில் இசைக்கான வேலை என்ன? என்பது தெரிந்துவிடும். ஏனெனில் சில கதாபாத்திரங்களில் மன ஓட்டத்தை இசையால் சொல்லிவிட முடியும்.

இருந்தாலும் இப்படத்தின் இயக்குநர் அபி கதையை நான் ஒரு முறை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். கதையை இரண்டு மணி நேரம் சொன்னார். கதையை சொல்லும்போது திரையில் காட்சிகளாக இப்படித்தான் தோன்றும் என்ற விசுவலை உண்டாக்கினார். அவர் கதை சொன்ன விதத்தை பார்த்து வியந்து போனேன். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் நல்ல கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். ஒரு டிராமா இருக்க வேண்டும். குடும்ப மதிப்பீடுகள் இருக்க வேண்டும்.. என பல விசயங்கள் உண்டு. இதனை அனுபவமிக்க இயக்குநர்களுக்கு இயல்பானது. ஆனால் அபி போன்ற ஒரு புதுமுக இயக்குநருக்கு… இத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.‌

ஒரு கட்டமைப்புக்குள் இயங்குவது என்பது வேறு. ஒரு இயக்குநராக என்னுடைய குரல் இது என வெளிப்படுத்துவது வேறு. ஆனால் இயக்குநர் அபி தன் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். இந்தப் படம் என்னை சிந்திக்க வைத்தது. இதற்காக உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

சசிகுமாரை இயக்குநராகவும், நடிகராகவும் பல கோணங்களில் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணைந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாடலாசிரியர் மோகன் ராஜன் என்னுடைய இனிய நண்பராக அறிமுகமானதற்கும் அவருடைய ஈசன் படத்தில் இடம்பெற்ற பாடல் தான். அதற்காகவும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.‌ சசிகுமாரின் நடிப்பு இந்தப் படத்தில் ஸ்பெஷலாக இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். மகிழ்ந்தேன்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் – அவருடைய தமிழ் இந்த கால இளைஞர்களுக்கு அவசியமானது. புதுமை என்பது.. ஏற்கனவே இருந்ததன் தொடர்ச்சி தான். தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறோம். பாடலில் தமிழுக்கு இடமில்லை என்றால் எப்படி? இது போன்ற விசயத்தில் என்னைப்போல் உறுதியாக இருந்து பாடலில் தமிழை இடம்பெறச் செய்வதில் அவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் தங்கிலீஷிலும் பாடல் எழுதுவதுண்டு. இருந்தாலும் தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும். தமிழ் மொழியை காதில் கேட்க வேண்டும். ஏனெனில் தமிழ் ஒரு செம்மொழி. அவரும் நானும் சந்தித்து பேசத் தொடங்கினால்.. நேரம் செல்வதே தெரியாது. மகிழ்ச்சி நீடிக்கும்.

கலை என்பது மகிழ்ச்சியிலிருந்து தான் பிறக்கிறது. கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடமிருந்து பிறக்கும் கலையும் மகிழ்ச்சியாக இருக்கும். கலை என்பது உட்கிரகித்தல் தான். ஒத்த சிந்தனை உள்ளவர்கள் இணையும்போது தான் நல்ல படைப்பு கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை நீங்கள் தியேட்டரில் நன்றாக அனுபவித்து ரசிப்பீர்கள்.

இங்கு குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை பழைய விசயமாக பேசுகிறார்கள். இது தவறு. குடும்பங்கள் தான் நல்ல விசயங்களை நினைவு படுத்தும். என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்த தொழிலில் இருக்க முடியாது.‌ சில பேர் ‘குடும்பம் தானே தடையாக இருக்கிறது’ என்பார்கள். ஆனால் குடும்பம் தான் நமக்கு பக்க பலமாக இருக்கிறது. நீங்கள் தவறு செய்தால் முதலில் கேள்வி கேட்பது குடும்பம் தான். அதே தருணத்தில் நீங்கள் வீழ்ச்சி அடையும் போது உங்களை கை தூக்கி விடுவதும் குடும்பம் தான். அதனால் குடும்ப படங்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.

குடும்பங்களில் சினிமாவின் தாக்கம் அதிகம். அதனால் குடும்பத்தை பற்றிய சினிமாக்களின் எண்ணிக்கை குறையக்கூடாது. அந்த வகையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நாம் கொரிய நாட்டு திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறோம். எந்த மாதிரியான கொரியன் படங்களை பார்த்து ரசிக்கிறோம் என்பதை பாருங்கள். மொழி என்ற எல்லையை கடந்து மனித குடும்பத்திடம் பேசும் படங்களை தான் பார்த்து ரசிக்கிறோம். அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் படமா? என்று கேட்டால்.. ஆமாம் தமிழ் படம் தான். அதையும் கடந்து நம் மனித குடும்பத்திற்கு தேவையான அழகான கொண்டாடப்பட வேண்டிய கொண்டாட்டமான அன்புச் செய்தியை சொல்லப் போகும் சிறந்த படமாக இருக்கும் ” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், ” படக்குழுவினர் மேடையில் இவ்வளவு விசயங்களை பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இது போன்ற மேடையில் தான் தங்களது நன்றியை தெரிவிக்க இயலும். படம் வெளியான பிறகும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை மட்டும் அறிமுக இயக்குநருக்கு அறிவுரையாக சொல்கிறேன். நன்றி தெரிவிப்பது நல்ல விசயம்.

இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவிற்காகத்தான் சற்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினரான நாங்கள் பேசுவதை விட.. படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’ ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்த படத்தில் படத்திற்குள் வந்தேன். இது எனக்கு தான் பெரிய விசயம்.

கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்சன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.

எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ. அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்த கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும் போது காமெடியாக இருக்கும்.

பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும். உங்களை – ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும் , விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து- மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது? என்று கேட்டபோது அவர் ‘தெனாலி’ திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது ‘தெனாலி’, ‘மொழி’ போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார்.

இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் அன்பை போதிக்கிறது. மே மாதம் முதல் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Jaypore enters Tamil Nadu, launches 1st store in Chennai

Unveiling a timeless blend of handcrafted apparel, heirloom jewellery, and exquisite artisanal home décor, Jaypore brings its elegant legacy to the heart of Chennai in Raja Annamalai Puram

Chennai, April 23, 2025: Jaypore, the premium artisanal lifestyle brand from Aditya Birla Fashion and Retail Ltd., has made a landmark entry into Tamil Nadu with the launch of its first exclusive brand outlet in Chennai. Strengthening its national footprint, this strategic expansion brings Jaypore’s signature handcrafted collections to the city’s discerning shoppers, offering a refined curation that bridges heritage with contemporary living.

Spanning more than 2,200 sq. ft., the store seamlessly blends contemporary elegance with timeless craftsmanship. Bathed in warm lighting and rooted in earthy tones, the space is designed to offer an immersive shopping experience. It showcases an exquisite array of India’s finest crafts, including tribal silver, Kundan, block printing, hand embroidery, Dabu, Chikankari, and Jamdani. The store is thoughtfully designed, inviting customers into a sensorial journey that celebrates India’s artisanal soul through texture, form, and design. Handcrafted installations, woven displays, and artisanal finishes complement the curated product stories, transforming the space into more than just a retail destination—it is a gallery of India’s living traditions.

“Chennai, with its profound appreciation for art and craftsmanship, is a natural choice for our expansion,” said Manu Gupta, Vice President and Brand Head, Jaypore. “The launch of our first store in Tamil Nadu is a defining moment in Jaypore’s journey, reaffirming our commitment to making India’s handcrafted traditions more accessible to contemporary consumers. We look forward to welcoming Chennai’s shoppers into our world of artisanal excellence.” 

Designed as an immersive retail experience, the store incorporates signature Jaypore nuances such as hand-painted walls showcasing a traditional Mughal Buta crafted by a local folk artisan, personalized frames celebrating diverse crafts such as Indigo, Ikat, Benarasi, Block Print, and Hand Embroidery, and handcrafted elements that narrate the rich stories of India’s artisanal heritage. Dedicated zones highlight new collections and craft clusters, allowing visitors to engage with the artistry behind every piece. A highlight of the store is its jewel-box-inspired jewellery section, which brings together India’s finest—tribal silver, heritage Kundan, ornate Jadau, and everything in between—offering a curated selection of handcrafted silver, gold-plated, and Kundan designs that embody intricate craftsmanship and timeless elegance.

With the launch of its Chennai store, Jaypore continues to expand its omnichannel presence, seamlessly integrating physical retail with its digital platforms. This expansion underscores the brand’s commitment to fostering artisan communities and delivering contemporary interpretations of India’s time-honored crafts to a growing audience of conscious consumers. 

Strategically located in the heart of Chennai’s vibrant retail hub, the new store is a poetic blend of design, craft, and culture. It invites shoppers into an experiential haven—where every product tells a story and every detail is a tribute to India’s timeless artisanal legacy.

Store Address: JP, 77 & 79(44 &45, Chamiers Rd, Austin Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028 

TOM CRUISE’S MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING TO RELEASE EARLY IN INDIA ON 17TH MAY 2025 (SATURDAY)!

Clear your calendars and fasten your seatbelts because Ethan Hunt is punching in early! Fans of the iconic franchise now won’t have to wait as long to witness Ethan Hunt’s final mission unfold on the big screen as Paramount Pictures India announces that the highly anticipated Mission: Impossible – The Final Reckoning will now hit theatres on May 17th, 2025, Saturday – 6 days ahead of schedule (23rd May).

The move comes in response to overwhelming fan excitement and demand worldwide. With the franchise’s trademark adrenaline and heart, The Final Reckoning promises an experience like no other — one last mission, packed with epic scale, emotional stakes, and edge-of-your-seat thrills that only Mission: Impossible can deliver. This is truly the send-off fans have been waiting for.

Paramount Pictures and Skydance Present A Tom Cruise Production “MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING” directed by Christopher McQuarrie. This action juggernaut features a powerhouse ensemble including Hayley Atwell, Ving Rhames, Simon Pegg, Esai Morales, Pom Klementieff, Henry Czerny, Angela Bassett, Holt McCallany, Janet McTeer, Nick Offerman, Hannah Waddingham, Tramell Tillman, Shea Whigham, Greg Tarzan Davis, Charles Parnell, Mark Gatiss, Rolf Saxon, and Lucy Tulugarjuk.

Mark your calendars for Saturday, May 17, 2025, as MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING releases in English, Hindi, Tamil & Telugu and get ready to step into a world where lives, choices and missions diverge for one last time!

UNTIL DAWN

Until Dawn is an interactive, interactive horror game published by Sony Computer Entertainment. The game follows a butterfly effect system in which the players either survive or die depending on the choices they make! The players have to make their moves from a third person’s angle which will help them to solve the mystery! This is a screen adaptation of the game… David F. Sandberg, the maker of films as Lights Out, Annabelle Creation etc has directed this horror flick.

Based on the Video Game, Until Dawn of 2015, this is a standalone story set in the same Universe, exploring the mythology of the game series! Clover (Ella Rubin) and her friends set out to the remote valley where her sister, Melanie (Maia Mitchell) disappeared! They realize that they have been trapped in a time loop. They relive the nightmare again and again but with a different killer, each time! They need to survive till Dawn to escape!

CREDITS – Directed by- David F.Sandberg

Cast-Michael Cimino, Odessa A’Zion, Jio-young Yoo & Belmont Cameli

Based on the televi                             Cinematography- Maxime Alexandre

Edited by-Michel Aller     Music –Benjamin Wallfisch

Samsung Launches Galaxy M56 5G, Segment’s Slimmest Smartphone in India

Galaxy M56 5G features Gorilla Glass Victus+ protection and several cutting-edge Innovations

GURUGRAM, India – April 17, 2025: Samsung, India’s largest consumer electronics brand, today announced the launch of the Galaxy M56 5G, the slimmest smartphone in its segment. The latest addition to the popular Galaxy M series offers users a superior smartphone experience with Gorilla Glass Victus+ protection on both the front and back, a 50MP Triple camera with OIS and 12 MP Front HDR camera and advanced AI editing tools.

“As part of our unwavering commitment to delivering meaningful innovations, we are proud to announce the Galaxy M56 5G — a powerful blend of style, durability, and performance like never before. It’s the slimmest phone in its segment, yet built to last, featuring Gorilla Glass Victus+ protection on both the front and back, making it the toughest M series phone ever. Whether you’re capturing memories with the Front HDR camera or exploring creative possibilities with advanced AI editing tools, the Galaxy M56 5G, with its power-packed features, is designed to redefine the smartphone experience,” said Akshay S Rao, Director, MX Business, Samsung India.

Premium Design and Display

With a premium glass back and metal camera deco, Galaxy M56 5G brings a refreshing and premium design upgrade to the Galaxy M Series. Being the slimmest in the segment, Galaxy M56 5G is only 7.2mm slim and will feature Corning® Gorilla® Glass Victus® protection on both front and back—making it as tough as it is sleek. Featuring a 6.7” Full HD+ Super AMOLED+ display, Galaxy M56 5G offers consumers stunning visuals and an elevated viewing experience. The large display comes with 1200 nits of High Brightness Mode (HBM) and Vision Booster technology ensuring users effortlessly enjoy their favourite content even under bright sunlight. The 120Hz refresh rate makes scrolling through social media feed a breeze for tech-savvy Gen-Z and millennial customers. Galaxy M56 5G will come in two mesmerizing colours – Light Green and Black.  

Advanced Photography

Galaxy M56 5G comes with a 50MP OIS triple camera to shoot high-resolution and shake-free videos and photos, eliminating blurred images caused by hand tremors or accidental shakes. It features flagship-grade 12MP HDR front camera for rich and vibrant selfies. Galaxy M56 5G will enable users to record 4K 30 FPS videos in 10-bit HDR, capturing a wide range of colours for true-to-life output. The cameras are designed for vivid photos and videos—even in low light, thanks to its Big Pixel Technology, Low Noise Mode and AI ISP taking its Nightography to a different level. The camera system also features Portrait 2.0 with 2X zoom on the rear camera which enables crisp and natural bokeh effect. It will also feature advanced AI-powered editing tools like object eraser, edit suggestions that make every shot social-ready.

Monster Processor

Galaxy M56 5G is powered by 4nm based Exynos 1480 processor with LPDDR5X making it fast and power-efficient, allowing users to multi-task smoothly. The processor delivers a monster mobile gaming experience with its flagship level vapor cooling chamber along with high-quality audio and visuals. With the ultimate speed and connectivity of 5G, users will be able to stay fully connected wherever they go, experiencing faster downloads, smoother streaming, and uninterrupted browsing.

Monster Battery with Fast Charging

Galaxy M56 5G packs in 5000mAh battery that enables long sessions of browsing, gaming and binge watching. Galaxy M56 5G allows users to stay, connected, entertained and productive without interruption. Galaxy M56 5G supports 45W super-fast charging giving more power in less time.

Galaxy Experiences

Setting new industry benchmarks, Galaxy M56 5G will offer segment’s best 6 generations of Android upgrades and 6 years of security updates, ensuring a future-ready experience. Galaxy M56 5G will come with One UI 7 out of the box. One UI 7 comes with a simple, impactful and emotive design, bringing streamlined and cohesive experience to Galaxy users. A simplified home screen, redesigned One UI widgets and lock screen allow users to intuitively and seamlessly customize their devices.

For added convenience, Now Bar provides real-time updates that matter most right on the lock screen. So, during a morning run, users can easily check their progress and see what song is playing in your Galaxy Buds — all with a simple swipe, without unlocking their phone. Additionally, with deeper Google Gemini integration, controlling the device is as easy as speaking to a friend.

Galaxy M56 5G will also feature one of Samsung’s most innovative security features: Samsung Knox Vault. The hardware-based security system offers comprehensive protection against both hardware and software attacks.

ProductVariantIntroductory PriceOffers
  Galaxy M56 5G8GB+128GBINR 24999Including INR 3000 Instant Bank Discount
8GB+256GBINR 27999Including INR 3000 Instant Bank Discount

About Samsung Electronics Co., Ltd.
Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the worlds of TVs, smartphones, wearable devices, tablets, home appliances, network systems, and memory, system LSI, foundry and LED solutions, and delivering a seamless connected experience through its SmartThings ecosystem and open collaboration with partners. For latest news on Samsung India, please visit Samsung India Newsroom at http://news.samsung.com/in. For Hindi, log
on to Samsung Newsroom Bharat at https://news.samsung.com/bharat. You can also follow us on Twitter @SamsungNewsIN.   

டால்மியா பாரத் அறக்கட்டளை 77 DIKSHA யிற்சியாளர்களுக்கான பாராட்டு விழாவை டால்மியாபுரத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

திருச்சி, ஏப்ரல் 17, 2025: டால்மியா சிமென்ட் (பாரத்) லிமிடெட்டின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவான டால்மியா பாரத் அறக்கட்டளை (DBF), அதன் முதன்மை திறன் மேம்பாட்டுத் திட்டமான DIKSHa இன் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாட டால்மியாபுரத்தில் ஒரு பாராட்டு விழாவை நடத்தியது. மொத்தம் 77 பயிற்சியாளர்களுக்கு அந்தந்த படிப்புகளை வெற்றிகரமாக முடித்ததற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர்களில், வீட்டு சுகாதார உதவியாளர் (HHA) பாடநெறியில் 27 இளைஞர்கள் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், மாதத்திற்கு ரூபாய்15,000 முதல் ரூபாய்24,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கூடுதலாக, 50 பெண்கள் தையல் இயந்திர ஆபரேட்டர்களாகப் பயிற்சி பெற்றனர், வேலைவாய்ப்பைத் தொடர அல்லது சொந்த தொழில்முனைவோர் முயற்சிகளைத் தொடங்க அவர்களுக்குத் தேவையான தையல் திறன்களை வழங்கினர். இந்த விழா பயிற்சியாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஒரு பெருமையான தருணமாக அமைந்தது, அடிமட்ட மட்டத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான DBF இன் தொடர்ச்சியான முயற்சிகளை வலுப்படுத்தியது.

டால்மியாபுரத்தில் உள்ள DCBL இன் நிர்வாக இயக்குநர் திரு. கே. விநாயகமூர்த்தி, டால்மியா பாரத் அறக்கட்டளை குழுவின் மூத்த உறுப்பினர்களுடன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தனது உரையில், திரு. விநாயகமூர்த்தி, “டால்மியா பாரத்தில், திறன் மேம்பாடு என்பது வலுவான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கான அடித்தளம் என்று நாங்கள் நம்புகிறோம். DIKSHa மூலம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இருவரையும் நடைமுறை, தொழில்துறை தொடர்பான திறன்களுடன் சித்தப்படுத்துவதன் மூலம் உள்ளடக்கிய வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் சமீபத்திய பயிற்சி பெற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என்பது குறிப்பாக ஊக்கமளிக்கிறது, இது பாலின உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் சமூகங்களை மேம்படுத்துவதில் எங்கள் கவனத்தை பிரதிபலிக்கிறது.”

DIKSha என்பது டால்மியா பாரத் நிறுவனத்தின் ஒரு முதன்மை சமூக முயற்சியாகும், இது இந்தியாவிற்கு எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்க உதவும் வகையில், இளைஞர்களை தொழில்துறை சார்ந்த திறன்களுடன் சித்தப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது தற்போது பல்வேறு இடங்களில் 23 பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. இன்றுவரை, 22625 நபர்கள் DIKSha மூலம் பயிற்சியை முடித்துள்ளனர், அவர்களில் பலர் INR 8,000 முதல் INR 24,000 வரை மாத வருமானம் ஈட்டுகின்றனர். குறிப்பாக, பயிற்சி பெறுபவர்களில் 63% பெண்கள், பாலின உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளிப்புக்கான திட்டத்தின் வலுவான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் சமூகங்கள் மேலும் தன்னம்பிக்கை அடைய உதவுவதில் இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.