ஆன்மிகம், குடும்ப உணர்வு மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாகியுள்ள ‘அருள்வான்’, வித்தியாசமான கதைக்களத்துடன் தொடங்கினாலும், இறுதிவரை அதே விறுவிறுப்பை தக்க வைத்துக் கொள்வதில் தடுமாறுகிறது.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் கதையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. மர்மமான சம்பவங்களும், கதாபாத்திரங்களைச் சுற்றி உருவாகும் பதற்றமும் பார்வையாளர்களை கதைக்குள் இழுக்கின்றன. ஆனால் இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை சற்று மெதுவாக நகர்வதால், ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்து விடுகிறது.
நாயகன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும், ஆக்ஷன் தருணங்களிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். துணை நடிகர்களும் கதைக்கு தேவையான அளவு ஆதரவு அளித்துள்ளனர். இருப்பினும், சில கதாபாத்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.
இயக்குநர் ஆன்மிக நம்பிக்கையையும் மனித உணர்வுகளையும் இணைத்து சொல்ல முயன்ற விதம் பாராட்டுக்குரியது. ஆனால் திரைக்கதையில் கூடுதல் இறுக்கமும், சில காட்சிகளில் தெளிவும் இருந்திருந்தால் படம் இன்னும் வலுவாக அமைந்திருக்கும். கிளைமாக்ஸ் ஓரளவு திருப்தியை அளித்தாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் தவறுகிறது.
ஒளிப்பதிவு படத்தின் சூழலுக்கு ஏற்ற காட்சிகளை வழங்குகிறது. பின்னணி இசை பல இடங்களில் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பாடல்கள் கதையின் ஓட்டத்துக்கு பெரிய தடையாக இல்லாமல் பயணிக்கின்றன. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படத்தின் வேகம் மேம்பட்டிருக்கும்.
படத்தின் பலம் அதன் வித்தியாசமான கதைக் கருவும், சில சுவாரஸ்யமான திருப்பங்களும்தான். அதே நேரத்தில், நீளமான காட்சிகள் மற்றும் கணிக்கக்கூடிய சில சம்பவங்கள் படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன.
மொத்தத்தில், ‘அருள்வான்’ வித்தியாசமான கதைக்களத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஒருமுறை பார்க்கக்கூடிய திரைப்படமாக அமைகிறது. திரைக்கதையில் இன்னும் வலிமை இருந்திருந்தால், இது சிறந்த அனுபவமாக மாறியிருக்கும்.
காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையின் உணர்வுபூர்வமான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, நல்ல கருத்தை கையில் எடுத்திருந்தாலும், அதை வலுவான திரைக்கதையாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறவில்லை.
படத்தின் தொடக்கத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகமும், அவர்களின் உறவுகளும் ஓரளவு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் கதை முன்னேறிய பிறகு திரைக்கதை மெதுவாக நகர்வதால் அந்த ஈர்ப்பு குறைந்து விடுகிறது. பல காட்சிகள் தேவையற்ற நீளத்துடன் அமைந்திருப்பதால், படத்தின் ஓட்டம் இடையிடையே தடைபடுகிறது.
நாயகன், நாயகி இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர்களுக்கிடையேயான உணர்ச்சி ரீதியான இணைப்பு முழுமையாக பார்வையாளர்களை சென்றடைவதில்லை. சில உணர்ச்சிகரமான காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை நீண்ட நேரம் மனதில் நிற்கும் வகையில் இல்லை. துணை நடிகர்களின் பங்களிப்பும் வழக்கமான அளவிலேயே உள்ளது.
இயக்குநர் காதலின் வலி, பிரிவு மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருந்தாலும், திரைக்கதையில் புதுமை இல்லாததால் பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த படங்களை நினைவுபடுத்துகின்றன. கிளைமாக்ஸும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், எதிர்பார்க்கக்கூடிய வகையிலேயே முடிவடைகிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு அழகிய காட்சிகளை வழங்குகிறது. சில பாடல்கள் கேட்கும் வகையில் இருந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் உணர்வை உயர்த்தத் தவறுகிறது. எடிட்டிங்கில் இன்னும் இறுக்கம் இருந்திருந்தால் படத்தின் வேகம் மேம்பட்டிருக்கும்.
படத்தின் மிகப்பெரிய குறை அதன் பலவீனமான திரைக்கதை மற்றும் மெதுவான நகர்வு. கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் இன்னும் வலுவாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘அன்பே டயானா’ நல்ல நோக்கத்துடன் உருவான காதல் திரைப்படமாக இருந்தாலும், சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதை, கணிக்கக்கூடிய காட்சிகள் மற்றும் தாக்கம் இல்லாத கிளைமாக்ஸால் சராசரி அனுபவமாகவே முடிகிறது. காதல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ஓரளவு ரசிக்கும்படி இருந்தாலும், வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது.
இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
சின்னி ஜெயந்த் பேசியதாவது..,
“முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கே சேரும்.
அதர்வாவுடன் இது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அவரது தந்தை முரளியுடன் இணைந்து நடித்தபோது இருந்த அதே உணர்வை, அதர்வாவுடன் நடித்தபோதும் நான் உணர்ந்தேன். அதனால்தான் இந்தப் படத்தில் என்னை இணைத்ததற்காகஇயக்குநருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகுந்த அக்கறையுடனும்அழகிய ரசனையுடனும் உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். குறிப்பாக கதாநாயகி சிறப்பாக நடித்துள்ளார். மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் தனது பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார்.இசையமைப்பாளராகமட்டுமல்ல, நடிகராகவும் திறமையை நிரூபித்த தமனுக்கும் என் பாராட்டுகள். அதேபோல் ‘டேலண்ட் அண்ட்’ நிகழ்ச்சியில் நான் பாராட்டிய சுதாகர் இன்று சிறந்த நடிகராக உயர்ந்திருப்பதுமிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தில் மூத்த கலைஞர்கள், புதிய கலைஞர்கள், யூடியூப்இன்ஃப்ளூயன்சர்கள் என அனைவரையும் ஒரே படத்தில்இணைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனின் முயற்சி பாராட்டுக்குரியது. படம் பார்த்தபோது ஒரு தரமான இந்திப் படத்தைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இதே கூட்டணி தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமான படங்கள் தமிழ்சினிமாவுக்கு கலைரீதியாகமட்டுமல்ல, வணிக ரீதியிலும் பெரிய பலனைத் தரும். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படம் எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட பயணமாக இருந்தது. ஒரு படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் தனித்தனியாகவே பெரிய சவால். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு முதலில் என் வாழ்த்துகள். இந்தப் படம் பலருக்கும் நாஸ்டால்ஜியா உணர்வைக்கொடுத்ததற்கு காரணம், இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்து ரசித்த சிறிய சிறிய விஷயங்களைக் கூட மிக நுணுக்கமாகதிரையில் பதிவு செய்ததுதான். ஒரு கேசட், ஒரு கோக் கேன்போன்ற பொருட்களைக் கூட எந்த இடத்தில் வைக்க வேண்டும், எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய மைக்ரோ டீட்டெய்லிங் இந்தப் படத்தின் பெரிய பலம். அந்த காட்சிகளை அழகாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார், சாய் சார் ஆகியோரின்பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல், தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் தனது பிஸியான வேலையிலும்இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்.
இசையமைப்பாளர் தமன் சார் பெரும்பாலும் மாஸ் படங்களுக்குஇசையமைப்பவர். ஆனால் ‘ஈரம்’, ‘ஆளவந்தான்’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களைப் போலவே ‘இதயம் முரளி’ போன்ற படங்களுக்கும் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
அதர்வா சார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த 15ஆண்டுகளாக அவருடைய தோற்றம், உடற்தகுதி, நடிப்பு என அனைத்தையும் ஒரே ஒழுக்கத்துடன் பராமரித்து வருகிறார். அது எங்கள் குழுவினருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறது.நட்டி சார் உடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய அவரது பயணம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவங்கள் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தன.
ரக்ஷன், ஏஞ்சல், டிராவிட், சுதாகர் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு தளத்தை ஒரு கல்லூரி வளாகம் போல கலகலப்பாகமாற்றிவிட்டார்கள். படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பின்‘ப்ளூப்பர்ஸ்’ வீடியோவையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக சுதாகர் திரையரங்குகளில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான இடத்தை அவர் நிச்சயம் நிரப்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்தப் படத்தை மக்களிடம் இயல்பாகவும் நேர்மையாகவும்கொண்டு சென்ற பத்திரிகை, மீடியா, நியூ மீடியா நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எங்கள் தொழில்நுட்பக் குழு, விநியோகஸ்தர்கள், Think Music, Netflix, போஸ்ட் புரொடக்ஷன் குழு, உதவி இயக்குநர்கள், மேலாண்மை குழு என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப்படமாகமாற்றிய ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”
திங் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்துடன்இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு‘முரளி ரீயூனியன்’ என்ற டேக்லைன் வைத்திருப்பதும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை முதன்முதலாக சந்தித்தபோது, இந்தப் படத்தின் பாடல்களின் ஸ்கிராட்ச் டிராக்குகளை மட்டும் கேட்க வைத்தார். அப்போது இசையமைப்பாளர் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஆனால் அந்த ட்யூன்கள் மிகவும் புத்துணர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. பின்னர் இசையமைப்பாளர் தமன் என்று தெரிந்தவுடன் எனக்கு ஒரு இனிய நாஸ்டால்ஜிக் உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் தமனின் முதல் படத்தை திங் மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.
இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது பல படங்களில் அறிவிக்கப்படும் அனைத்து பாடல்களும் இறுதியில் படத்தில் இடம்பெறுவதில்லை. ஆனால் இயக்குநர் ஆகாஷ் ஆரம்பத்திலேயே கொடுத்த வாக்குறுதியின்படிஏழு பாடல்களையும் முழுமையாக படத்தில்பயன்படுத்தியிருக்கிறார். அதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பது இந்த ஆல்பத்தின் பெரிய பலம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான இசை ஆல்பத்தை‘இதயம் முரளி’ மூலம் பார்க்கிறோம். இந்த ஆண்டு அதிகம் ஸ்ட்ரீம்செய்யப்படும் தமிழ் திரைப்பட இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இசையமைப்பாளர் தமன் இந்த ஆல்பத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். படம் தொடங்குவதற்கு முன்பே ஸ்கிராட்ச் டிராக்குகளில் இருந்து பல மாதங்கள் உழைத்து இந்த இசையை உருவாக்கியிருக்கிறார். அதேபோல் பாடலாசிரியர் விவேக் மற்றும் ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரும்சிறப்பான வரிகளை எழுதியுள்ளனர். இந்த ஆல்பம் ஒரு முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.
திங் மியூசிக் நிறுவனம் பல அறிமுக இயக்குநர்களின் முதல் படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த வரிசையில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் அறிமுகப் படமும்இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதர்வாவுடனும் இது ஒரு இனிய நினைவு. அவரது முதல் திரைப்படமான ‘பாணா காத்தாடி’யின் இசையையும் திங்மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதனால் இந்தப் படம் எங்களுக்கு உண்மையிலேயே ஒரு ‘ரீயூனியன்’ உணர்வைக்கொடுக்கிறது.
நட்டி சார் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதேபோல் அதர்வாவின் நண்பர்களாக நடித்த ரக்ஷன், டிராவிட், ஏஞ்சல் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
எழுத்தாளர் ரமணகிரிவாசன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். முதலில் மயிலந்திரனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அவர்தான் என்னை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆகாஷுக்கும் என் நன்றி. அதைவிட முக்கியமாக, இந்தப்படத்தில் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக மிக நெருக்கமாக பணியாற்றிய பிரவீனுக்கு நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். இந்த ஒன்றரை ஆண்டு பயணத்தில், வசனங்கள் குறித்து பிரவீன்என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். பொதுவாக பெரிய படங்களில் பக்கக்கணக்கில் வசனங்கள்எழுதுவோம். ஆனால் இந்தப் படத்தில் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் எழுதினாலும், அதிலிருந்து ஐந்து வார்த்தைகள் மட்டும் திரையில் வந்தால்கூட அது கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக இருந்தார்.
நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோதே தொடர்ந்து விவாதிக்கப்பட்ட ஒரு கேள்வி, ‘நாயகன் ஏன் தனது காதலை சொல்லவில்லை?’ என்பதுதான். ஒன்றரை ஆண்டுகளாக அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தோம். படம் வெளியாகும் தருவாயில், குறைந்தபட்சம் டிரெய்லரிலாவதுஅதற்கான காரணம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இறுதியில் ஆகாஷ்ஏற்றுக்கொண்ட வசனம், ‘காதலை சொல்ல முடியவில்லை… அதை ஏன் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்ல முடியவில்லை’ என்பதுதான். அந்த ஒரு வசனமே இந்தக்கதையின் உணர்வையும், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பின்சாரத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த மிகப் பெரிய காரணம், படக்குழுவின் ஒற்றுமையும் நட்பும்தான். ஒரே வகுப்பில் படித்த நான்கு நண்பர்கள்—இயக்குநர், ஒளிப்பதிவாளர், இணை இயக்குநர், இணை எழுத்தாளர்—அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு தளத்திலும், கதை விவாதங்களிலும் ஒரு அற்புதமான பாஸிடிவ் ஆற்றல் இருந்தது.
ஆகாஷுடன் பல விஷயங்களில் வாதிட்டிருக்கிறோம், திறந்த மனதுடன் விவாதித்திருக்கிறோம். ஆனால் அந்த எல்லா விவாதங்களும் இறுதியில் இந்தப் படத்தின் வெற்றிக்கேவழிவகுத்துள்ளன. இன்று இந்த வெற்றியைப் பார்க்கும்போது, உங்களைப் போல நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.”
பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா பேசியதவது.., ‘இதயம் முரளி’ போன்ற அழகான திரைப்படத்திலும், அதில் இடம்பெற்ற அற்புதமான பாடலிலும் எனக்கு வாய்ப்பு வழங்கியஇயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்தப்பயணத்தில் எப்போதும் உறுதுணையாக இருந்த திங் மியூசிக்நிறுவனத்திற்கும், மகேசன் மற்றும் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி.
இசையமைப்பாளர் தமன் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் இனிமையான அனுபவம். அவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, மிகவும் ஜாலியாக அண்ணன் போல பழகுபவர். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக ‘வாமா வாமா’ பாடலுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இதேபோல் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.”
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாபேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். நாங்கள் எல்லோரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை நகைச்சுவையாக ‘ஹெட்மாஸ்டர்’ என்று அழைப்போம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2018-ம்ஆண்டிலிருந்தே இந்தக் கதையை நான் அறிவேன். அன்றிலிருந்து இன்று வரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். ஆகாஷ் மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். அந்த அளவுக்கு வெகுளியானவர் என்றாலும், தனது கனவை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல், இறுதியில் தானே தயாரிப்பாளராக மாறி இந்தப் படத்தை உருவாக்கினார். 2018-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ‘ஒரு நல்ல தயாரிப்பாளர், ஒரு சரியான இசையமைப்பாளர் கிடைத்தால் இந்தப் படத்தை ஆரம்பிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பல ஆண்டுகள் காத்திருந்தோம். இன்று இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், முன்பு தவறவிட்டவர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்ந்தோம். தமன் இந்தத்திரைப்படத்தில் இணைந்த பிறகுதான் அனைத்தும் வேகமாக முன்னேறியது. அவரிடம் இசை பெறுவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கில் அவர் அவ்வளவு பிஸி. ஆனால் அவர் இணைந்தது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக தமன் இசையமைத்த பாடல்கள்திரையரங்குகளில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றுள்ளன.
இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்க வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அமெரிக்காவில் புரொமோஷூட் எடுத்தபோது, பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிந்தஅனுபவத்தில் ஒரு காதல் கதைக்கு அவர்கள் கொடுத்த முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, ‘நீங்களே தயாரிப்பாளராக இருந்தால்தான் நினைத்தபடி படத்தைஉருவாக்க முடியும்’ என்று அவரிடம் கூறினேன். அந்த முடிவுதான்இன்று இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
இன்று திரைப்படத் தயாரிப்பில் பெரும்பாலான பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. ஆனால் ஒரு நல்ல கதைக்கு தேவையான தயாரிப்பு தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவை ஆகாஷ் எடுத்தார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதிய தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகஇருக்கும். இந்தப் படத்திற்காக பல இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகள் சில நிமிடங்களே திரையில் வந்தாலும், அதற்காக எந்த சமரசமும்செய்யாமல் செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதர்வாவுடன் இதற்கு முன்பும் ஒரு இசை ஆல்பத்தில்பணியாற்றியிருக்கிறேன். அப்போதே அவர் போன்ற திறமையான நடிகருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று ‘இதயம் முரளி’ அந்த வெற்றியை அவருக்கு கொடுத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி அவருக்குக் கிடைக்க வேண்டியதுதான்.
படத்தின் நாயகிகள் இருவரும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வேறு படங்களிலும் வளர்ச்சி பெற்றாலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். திரையில்அவர்களுடைய நடிப்பு, தோற்றம், நாயகனுடனான கெமிஸ்ட்ரிஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நண்பர்கள் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருந்தனர். நட்டி சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினர். தொழில்நுட்பக் குழு, தயாரிப்புக் குழு என அனைவருடனும்பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்கும் உணர்வோடு இந்த வெற்றியை கொண்டாடுகிறோம். இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
இசையமைப்பாளர் எஸ். தமன்பேசியதாவது..,
“சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும். ‘இதயம் முரளி’ அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.
மனோஜ் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார் என்று நான் நினைத்ததே இல்லை. ‘ஈரம்’ படத்தில் இருந்து எங்களுடைய பயணம் தொடங்கியது. அந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டைஷங்கர் சாரிடம் காட்டியபோது, ‘தண்ணீரே வில்லன்’ என்ற கதையை பலரும் நம்பவில்லை. ஆனால் அந்த உலகத்தை நம்ப வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியவர் மனோஜ். அந்தப் பயணம்தான் இன்று ‘இதயம் முரளி’ வரை எங்களை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக மனோஜுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் கதை என்னிடம் வந்தது ஒரு சிறிய டிரெய்லர்மூலம்தான். என் நண்பர் தீபன், இயக்குநர் ஆகாஷ் உருவாக்கிய அந்த கான்செப்ட் டிரெய்லரை அனுப்பி வைத்தார். CGI, 2D காட்சிகள் என மிக அழகாக உருவாக்கப்பட்டிருந்த அந்த டிரெய்லரை பார்த்தவுடன், இந்தப் படத்திற்கு நான் கண்டிப்பாகஇசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் வேறு ஒரு இசையமைப்பாளரைப் பற்றி யோசிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கதையின் மீது இருந்த ஈர்ப்பால் நானே ஆகாஷிடம், ‘நான் இசையமைத்தால் இந்தப்படத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னேன். இவ்வளவு அழகான காதல் கதையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த முடிவுக்குப்பிறகு உருவான முதல் பாடல் ‘தங்கமே’. அங்கிருந்துதான் இந்த இசைப் பயணம் தொடங்கியது. அதன் பிறகு முழு ஆல்பமும் மிக அழகாக உருவானது.
உண்மையைச் சொன்னால், நான் நடிகராக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. மனோஜ் வற்புறுத்தவில்லை என்றால் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். நான் எப்போதும் செட்டுக்குஇசையமைப்பாளராகத்தான் வருவேன்; நடிகராக வர வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் ஆகாஷ் என்னை சம்மதிக்க வைத்தார். இந்தப் படத்தில் ப்ரீத்தி, கயாது, நிஹாரிகா, ஏஞ்சல்உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. அவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார்கள்.
நட்டி சாருடன் மீண்டும் இணைந்ததும் மகிழ்ச்சி அளித்தது. அவருடன் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் இருந்ததால், இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில், ரக்ஷன் மற்றும் டிராவிட்(நகைச்சுவையாக) எங்களுக்கு நிறைய ‘டார்ச்சர்’ கொடுத்தார்கள். குறிப்பாக டப்பிங் செய்யும்போது தேவைக்கு அதிகமாகப் பேசி, படத்தின் இறுதிப்பணிகளையேதாமதப்படுத்திவிட்டார்கள். ஆனால் அதுவும் செட்டில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றுதான்.
அதர்வா மிகவும் அருமையான மனிதர். அவருடன் பணியாற்றியதுமிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எப்போதும் நேர்மறை ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் அனைவரையும்உற்சாகப்படுத்தும் மனிதர் அவர்.” இந்தப் படத்தின் முழுக்குழுவுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகஇருந்தது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தை தங்களுடைய படமாக நினைத்து உழைத்தார்கள். அந்த அர்ப்பணிப்புதான்இன்று இந்த வெற்றியாக மாறியுள்ளது.
இந்தப் படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும்ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு இசையமைப்பாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் குழு, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் அன்பாலும், நம்பிக்கையாலும் உருவான திரைப்படம். அந்த அன்பை இதேபோல் தொடர்ந்து கொடுத்து, நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் மதன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தின்தலைப்பே இதில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது. ஏனெனில் முரளி சார் நடித்த ‘இதயம்’ திரைப்படம் இன்றும் அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளாசிக் படம். குறிப்பாக 80-களில்வளர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தமானது. அந்த உணர்வை நினைவூட்டும் தலைப்பைக்கொண்ட இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் ஒளிப்பதிவாளர், அதர்வா சார் மற்றும் படக்குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
நடிகர் நட்டி பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று – நன்றி. முதலில், இந்த வாய்ப்பைவழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்குஎன் மனமார்ந்த நன்றி. அதேபோல் மனோஜ் சார், அதர்வா சார், ப்ரீத்தி முகுந்தன், கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர், டிராவிட்உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டகதாபாத்திரத்தை அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அதனால்தான் படம் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. தயாரிப்புக் குழுவில் கிருஷ்ணா சார், ஜோஜோசார் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், முழுக் குழுவும் ஒரே உற்சாகத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும்பணியாற்றியதுதான். அந்தச் சூழல்தான் படத்திலும்பிரதிபலித்துள்ளது. எனவே, இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளரும்இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரனுடன்எனக்கு இருக்கும் நட்புதான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது. அவரது திருமண விருந்தாக இருந்தாலும், ‘இதயம் முரளி’ படத்தில் இடம்பெற்றதிருமண விருந்தாக இருந்தாலும், இன்றைய நன்றி அறிவிப்பு விழாவின் விருந்தாகஇருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்னை நினைவில் வைத்திருப்பது அந்த நட்பின்வெளிப்பாடுதான். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
‘இதயம் முரளி’ மிகவும் அழகான திரைப்படம். அறிமுக இயக்குநராகவே ஆகாஷ் தனது திறமையை சிறப்பாக நிரூபித்திருக்கிறார். இதுபோன்ற தரமான படங்களை தொடர்ந்து இயக்கி, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படம் எனக்கு பல நல்ல நண்பர்களையும் கொடுத்திருக்கிறது. அதர்வாபிரதருக்கு இன்னும் பல சிறந்த படங்கள் அமைய வேண்டும். அவர் மேலும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நட்டி அண்ணா மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ராகுல், ரக்ஷன், ஏஞ்சலின், சுதாகர் உள்ளிட்ட அனைவருடனும் ஒரு சிறிய பங்காக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
நடிகை எஸ்.எஸ்.வி பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் பேசுவதில்கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த வாய்ப்பைபயன்படுத்தி அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். முதலில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநரும்தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் டான் பிக்சர்ஸ்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் அதர்வா, ப்ரீத்தி, டிராவிட், ரக்ஷன், சுதாகர் உள்ளிட்ட அனைவருடனும்திரையைப் பகிர்ந்து நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும், அதற்கு ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றி.”
நடிகை மோனிஷா பேசியதாவது..,
“அனைவருக்கும் நன்றி. ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியிருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக் குழுவினருக்கும்என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பணியாற்றிய சிறந்த குழுக்களில் இதுவும் ஒன்று.
அதர்வா, ப்ரீத்தி, கயாது, ஏஞ்சலின், டிராவிட், ரக்ஷன், நட்டி சார் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. எனக்கு அவர்களுடன் இணைந்து நடித்த காட்சிகள் இருந்தன. படத்தில் நடித்தஅனைவரும் மிகவும் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்தனர். இதுபோன்ற ஒரு அருமையான குழுவுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கனவே ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஒருமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை திரையரங்கில் சென்று பாருங்கள். இது அனைவரும் ரசிக்கக்கூடிய அழகான திரைப்படம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”
நடிகர், உதவி இயக்குநர் மற்றும் வசனஎழுத்தாளர் டிராவிட் பேசியதாவது..,
“அனைவருக்கும் என் வணக்கம். முதன்முறையாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாக இந்த மேடையில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு காரணமான ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும், இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும்என் மனமார்ந்த நன்றி.
இந்தக் கதையில் நடிக்க வந்தபோது, இந்தக் கதாபாத்திரம்எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. என்னுடைய முதல் வெளியான திரைப்படமான ‘டியூட்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் ‘இதயம் முரளி’ படமும் தொடங்கியது. யூடியூப்பில் மட்டும் இயங்கி வந்த எனக்கு, சினிமாவில் ஒரு இடம் வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தை ‘டியூட்’ மற்றும் ‘இதயம் முரளி’ போன்ற படங்கள்நிறைவேற்றின. இன்று என் வாழ்க்கையை ‘இதயம் முரளிக்கு முன், இதயம் முரளிக்கு பின்’ என்று கூட பிரித்துப் பார்க்கலாம். முன்பு ஒரு யூடியூபராக இருந்த நான், இன்று சினிமாக்காரன் என்று அழைக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தில் நாங்கள் நண்பர்களாக நடித்தோம். ஆனால் உண்மையில் யாரும் நடித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அனைவரும் நிஜ வாழ்க்கை நண்பர்களாகவே வாழ்ந்தோம். அதர்வா முதல் நாளிலிருந்தே எங்களுக்கு அந்த நெருக்கத்தையும்சுதந்திரத்தையும் கொடுத்தார். ப்ரீத்தி, கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர் என அனைவரும் ஒரு குடும்பமாகவே இருந்தோம்.
நட்டி சார் வந்தாலே எங்களை கலாய்ப்பார். மனோஜ் சார்தான்எங்களுக்கு உண்மையான ‘ஹெட்மாஸ்டர்’. அவர் வந்தாலே எல்லாரும் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவோம். அதே நேரத்தில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எங்களை குழந்தைகளைப் போல கவனித்துக்கொண்டதற்கு அவருக்கு என் நன்றி.
சாய் பிரதரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். தமன்அண்ணாவுடன் பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவம். அவர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்திருக்கிறார். இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் பழகும் மனிதர். எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாமல், ‘பண்ணிடலாம்’ என்று நம்பிக்கை கொடுப்பார். அவருடைய அந்த இயல்பே இந்தப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திலும் பிரதிபலித்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் சார் சிறிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தாலும், அது மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல் பகத் சார் சிறிய தோற்றத்தில் கூட எப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் என்னை நடிகராக மட்டுமல்லாமல், உதவி இயக்குநராகவும், வசன எழுத்தாளராகவும் நம்பி பொறுப்பு கொடுத்தார். சில காட்சிகளில் எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கினார். அந்த நம்பிக்கையை எப்போதும் மறக்க மாட்டேன்.
இந்தப் படத்தின் முதன்மை வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன்சார், இணை இயக்குநர் பிரவீன், இணை இயக்குநர் செந்தில் அண்ணா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என்னை இந்தப் படத்தில் உதவி இயக்குநராக இணைத்து, நடிகராக அறிமுகப்படுத்தி, வசன எழுத்திலும் பங்களிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தப் பயணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
நடிகர் ரக்ஷன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் தொகுப்பாளராகமேடையில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால் இப்படி விருந்தினராக வந்து பேசும்போது கொஞ்சம் பதற்றமாகத்தான்இருக்கும்.
‘இதயம் முரளி’ பற்றி சொல்ல வேண்டுமென்றால், நெருங்கிய நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் இந்தப் படம் அதற்கு நேர்மாறானது. இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நாங்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்.
நான் மனிதர்களை மிகவும் மதிப்பவன். அந்த வகையில், இந்தப்படம் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த அழகான நட்புகள்தான். முதலில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய இரவுதான் அவர் என்னை தொடர்புகொண்டு பேசினார். அடுத்த நாள் காலை நேராக படப்பிடிப்பில் இணைந்தேன். ஆரம்பத்தில் குழு எப்படி இருக்கும் என்ற பதற்றம் இருந்தது. ஆனால் முழுக் குழுவும் மிகவும் ஜாலியாகவும், அன்பாகவும் பழகியதால் அந்த பயம் உடனே மறைந்துவிட்டது.
அதர்வா பிரதருடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. ப்ரீத்தி, காயத்ரி உள்ளிட்ட அனைவருடனும்பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில்தொடர்ந்து புதிய நடிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அதுபோல படப்பிடிப்பு தளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தது. நிஹாரிகா, ஜுனைதா மேம், ஏஞ்சல் என அனைவரும் அந்த மகிழ்ச்சியான சூழலின் ஒரு பகுதியாக இருந்தார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் சார் எடுத்த ஃபிரேமில் ஒரு மூலையிலாவது நான் இடம்பெற்றிருப்பதே எனக்கு பெரிய சந்தோஷம். அதற்காக அவருக்கு நன்றி.
இணை இயக்குநர்கள் செந்தில் சார், பிரவீன் சார், கிரிஷ், மேடிமற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் என் நன்றி. தயாரிப்புக் குழுவினருக்கும், பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் அனைத்து துறைகளிலும் வேலை செய்த அனுபவம் எனக்கு கிடைத்தது.
இயக்குநர் ஆகாஷ் மிகவும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும்படப்பிடிப்பை வழிநடத்தினார். ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல எங்களை சுதந்திரமாக நடிக்கவிட்டு, பின்னர் எடிட்டிங்கில்அனைத்தையும் அழகாக ஒருங்கிணைத்திருந்தார். தமன் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடைய இசை படத்திற்கு தனி ஆற்றலைக் கொடுத்திருக்கிறது. நான் திரையில்கொஞ்சம் குறைவாகப் பேசியிருந்தால், அல்லது செட்டில்அதிகமாகப் பேசியிருந்தால், அதற்கும் தமன் சார்தான் காரணம். அவர் எப்போதும் உற்சாகமாக இருந்தார்.
இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறிய விஷயங்களைக்கூட கவனித்து, ஆதரவு அளித்து, என்னை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள் தான். ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும் அதே ஆதரவை வழங்கியதற்கு நன்றி. இந்தப்படக்குழுவினரையும், ‘இதயம் முரளி’ திரைப்படத்தையும் நான் எப்போதும் மனதார நேசிப்பேன். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் அதர்வா முரளி பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியில் நிற்பது போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படக்குழுவுடன் ஒரு அழகான பயணத்தை பகிர்ந்திருக்கிறோம்.
‘இதயம் முரளி’ திரைப்படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை அப்போது முதன்முதலாக ஒரு இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இன்று அந்தக் கனவை நாங்கள் நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
முதலில், இந்தப் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணம்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், விக்ரம் மற்றும் முழு தயாரிப்புக் குழுவிற்கும் என் நன்றி. இன்றைய காலத்தில் இவ்வளவு வண்ணமயமான, மனதை வருடும், இலகுவான காதல் கதையை தயாரிக்க முன்வருவது மிகப்பெரிய விஷயம். அதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கும் என் நன்றி.
இப்படிப்பட்ட காதல் கதைக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆகாஷிடம் ‘இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் யார்?’ என்று கேட்டபோது, ‘மனோஜ் பரமஹம்சா சார் தான்’ என்று சொன்னார். அதை கேட்டவுடனே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு பாடலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் முழு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ‘எல்லோரையும் லட்டு மாதிரி அழகாகக் காட்டுகிறேன்’ என்று அவர் சொன்னது போலவே, திரையில் அனைவரையும் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். அவருக்கும் சாய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. சில படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும் முன்கூட்டியே தயாராகச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. காலியான மனதோடு செட்டுக்கு செல்வோம். அங்கேயே காட்சிகள் பற்றி பேசுவோம். சில சமயங்களில் வசனங்களையே மாற்றி, புதிதாக யோசித்து நடித்திருக்கிறோம். நடிகர்கள் அனைவரும் பல இடங்களில் தன்னிச்சையாகச் செய்த விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த அளவுக்கு அதிகமான காட்சிகளை இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக அழகாக வடிவமைத்தவர் எடிட்டர் பிரதீப். உண்மையாகவே இந்தப் படம் எடிட்டிங் மேசையில்தான் முழுமையான திரைப்படமாக உருவானது என்று நான் நம்புகிறேன். நாங்கள் டப்பிங் செய்த காட்சிகள் மட்டும் நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தன. அதை அழகாகத் தொகுத்ததற்காக பிரதீப்புக்கு என் மனமார்ந்த நன்றி.
வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எழுதிய ஒவ்வொரு வசனமும் மிகச் சிறப்பாக இருந்தது. டிரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த பல வசனங்களும் அவருடைய எழுத்துதான்.
திங்க் மியூசிக் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி. ஒரு நல்ல படத்தை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும் திறமை அவருக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் இசைப் பயணத்திலும் அவர் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் படப்பிடிப்பு முன்னேறியபோது ஆறாவது, ஏழாவது, எட்டாவது பாடல்களும் இணைந்தன. முதலில் ‘இதயா’ பாடலைக் கேட்டபோது, அதுதான் இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நான் நினைத்தேன். ஆனால் பின்னர் ‘இதயமே இதயமே’ பாடல் வந்தபோது அது எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மாறிவிட்டது.
தமன் சார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் அவர் இந்தப் படத்தில் நடித்தும் இருந்தார். இவ்வளவு பிஸியான இசையமைப்பாளராக இருந்தும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பார்.
இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் படப்பிடிப்புக் காலத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு படங்களிலும் நடித்து வந்தோம். ஆனால் எப்போது இந்தப் படம் குறித்து சந்தேகம் வந்தாலும் நான் தமன் சாரிடமே சென்று கேட்பேன். அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்வார் – ‘ப்ளாக்பஸ்டர்… ப்ளாக்பஸ்டர்!’ என்று. ஒரு கட்டத்தில் அவருடைய அந்த நம்பிக்கையைத்தான் நாங்களும் நம்ப ஆரம்பித்தோம். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஆதரவையும் கொடுத்தார். அதற்காக தமன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.”
“இந்தப் படத்தில் பணியாற்றிய முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. கிரிஷ், பிரவீன் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.ஒரு படம் முடிந்த பிறகு, ‘இவ்வளவு சீக்கிரம் இந்தப் பயணம் முடிந்துவிட்டதே’ என்ற ஒரு வெறுமை உணர்வு எல்லோருக்கும் இருக்கும். ‘இதயம் முரளி’ முடிந்தபோது அந்த உணர்வு இந்தப் படக்குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும்.
எங்களுக்காக ‘இதயம் முரளி’ என்று ஒரு வாட்ஸ்அப் குழு இருக்கிறது. அதில் ஆகாஷ் ஒரு நாள், ‘படத்தில் இதயாவும் ஜுஜ்ஜுவும் பேசுவது போல, மாலை ஐந்து மணிக்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை; இதயம் முரளி முடிந்துவிட்டதே’ என்று ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அந்த உணர்வை நாங்கள் அனைவரும் பகிர்ந்துகொண்டோம்.
இன்று இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் கடைசி நாள். அதனால் இந்தக் குழுவை இனிமேல் இப்படி அடிக்கடி சந்திக்க முடியாது என்ற எண்ணமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் ஒன்றாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பர்கள் குழு கிடைத்தது. டிராவிட், சுதாகர், ரக்ஷன், ஏஞ்சலின், கயாது, ப்ரீத்தி, நிஹாரிகா என அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் தனியாக ஒரு ‘பாய்ஸ் குரூப்’ கூட உருவானது. சில நேரங்களில் அவர்களுக்கு படப்பிடிப்பே இருக்காது. இருந்தாலும் செட்டுக்கு வந்துவிடுவார்கள். ரக்ஷனிடம் ஒருநாள், ‘இன்று உங்களுக்கு காட்சி இல்லையே?’ என்று கேட்டபோது, ‘லஞ்ச் சாப்பிடத்தான் வந்தேன்’ என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்தப் படப்பிடிப்பு தளம் அனைவருக்கும் சொந்த வீட்டைப் போல மாறிவிட்டது. பல படங்களில் இப்படிப்பட்ட சூழல் அமைவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தினமும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவோம். ஆரம்பத்தில் அது ஒரு கட்டாயம் போலத் தோன்றினாலும், போகப் போக அது ஒரு குடும்ப உணர்வாக மாறிவிட்டது. திரையில் தெரியும் அந்த நட்புக்கு காரணம், படப்பிடிப்பு தளத்தில் நடந்த அந்தச் சிறிய சிறிய தருணங்கள்தான். இந்தப் படம் எனக்கு பல அழகான நினைவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. முதலில் இந்தத் தலைப்பை கேட்டபோது, ‘இது சரியாக அமையுமா?’ என்று ஆகாஷிடம் நான் பலமுறை கேட்டேன். ஏனெனில் ‘இதயம்’ என்றால் அனைவருக்கும் ஒரு ஆழமான காதல் கதைதான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் ஒரு இலகுவான காதல் கதையைச் சொல்கிறோம். அது பொருந்துமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் ஆகாஷ் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னார். ‘என்னை நம்புங்கள் பிரதர்… இது நல்ல படமாக வரும்’ என்றார். இன்று அவர் சொன்னதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்ததால்தான் எங்களுடைய கனவு நனவாகியுள்ளது. இந்தத் தலைப்பின் மூலம் என் அப்பா முரளிக்கு ஒரு சிறிய மரியாதை செலுத்த வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு நண்பராக ஆகாஷ் அதை மிகவும் அழகாக செய்து காட்டியிருக்கிறார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, இயக்குநராக தனது கனவுக்காக எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளையும், பல சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்று அந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது..,
“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். நல்ல விமர்சனங்களையும் ஆதரவையும் வழங்கினீர்கள். அதற்காக மனதார நன்றி. அதேபோல், ரசிகர்களுக்கும் என் நன்றி. படம் வெளியான பிறகு பலர் எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, ‘இந்தப் படம் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.
அதர்வா சார் முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.
தமன் சார் இந்தப் படத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. எங்கு சென்றாலும் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஹைதராபாத் சென்றாலும், மும்பை சென்றாலும் ‘இதயம் முரளி’ பற்றிய பேச்சுதான். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அவருக்கு என் நன்றி.
சாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பு நிர்வாகி, எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர், உதவி இயக்குநர் என பல பொறுப்புகளை ஏற்றார். சில நேரங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி தருவது வரை எல்லாவற்றையும் கவனித்தார். குறிப்பாக கயாது லோகரின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைக்க அவர் மிகவும் உதவினார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
எடிட்டர் பிரதீப்புடன் ஆரம்பத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் இறுதி மூன்று மாதங்கள் தொடர்ந்து அவருடன் அமர்ந்து பணியாற்றியதால்தான் படம் இவ்வளவு கச்சிதமாக உருவானது. அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் உருவாக்கிய செட்கள் இந்தப் படத்தின் அழகை மேலும் உயர்த்தின. மொட்டைமாடி, டெரஸ் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் அனைத்தும் அவருடைய உழைப்பின் விளைவு.
உடை வடிவமைப்பாளர் பல்லவி மேம், மீனாட்சி மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நன்றி. பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி வந்த நேரத்திலும், எங்கள் படத்திற்காக முழு அக்கறையுடன் உழைத்தார்கள்.
என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பணியாற்றி வரும் போஸ்டர் வடிவமைப்பாளர் கபிலனுக்கும் நன்றி. அதேபோல், இறுதிக் கட்ட ஒலிக்கலவையை சிறப்பாகச் செய்து கொடுத்த சுரேன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எனக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் விரிவாக விவாதிப்போம். அவர் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொடுப்பார். அதை வைத்து நாங்கள் மேலும் மெருகேற்றுவோம். இந்தப் படத்தின் வசனங்களில் அவருடைய பங்கு மிக முக்கியமானது.
இந்தப் படத்தின் மூலம் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கயாது லோகரை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு நடத்தினோம். அப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்று பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நிஹாரிகாவுக்கும் இதுவே முதல் படம். இன்று பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் அப்போது சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத நிலையில் இருந்தார். இன்று அவர் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.
மோனிஷா, ஏஞ்சலின் ஆகியோருக்கும் இந்தப் படம் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். டிராவிட்டை முதலில் நடிகராகத்தான் அழைத்தோம். பின்னர் அவர் உதவி இயக்குநராகவும், வசன எழுத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய திறமை இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.”
இந்தப்படத்தில் உழைத்த என் உதவி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் – சத்யஜோதி பிலிம்ஸின் சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்
மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய அங்கீகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஒரு மகத்தான பாரம்பரியம்!
72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும், இப்படத்தில் தனது ஆழமான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், சிறப்பு பாராட்டு (Special Mention) விருதையும் பெற்றிருப்பது படக்குழுவினருக்கும், சத்யஜோதி பிலிம்ஸுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸுக்கு இந்த தேசிய அங்கீகாரம் வெறும் விருதாக மட்டுமல்ல; ஏழு தசாப்தங்களாக, மூன்று தலைமுறைகள் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகள், கலைநயம் மிக்க படைப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கி வந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான பயணத்தின் தொடக்கம் 1950-களின் இறுதியில் வீனஸ் டி. கோவிந்தராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட ‘கல்யாண பரிசு’ (1959) திரைப்படத்தின் மூலம் அமைந்தது. அத்திரைப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்று, இந்த குடும்பத்தின் தேசிய விருது பயணத்திற்கு அடித்தளமிட்டது. அதைத் தொடர்ந்து ஆர். எம். வீரப்பன் தயாரித்த ‘ரிக்ஷாக்காரன்’ (1972) திரைப்படம் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்று, இந்திய திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத சாதனையை படைத்தார்.
இந்தச் சிறப்புமிக்க பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் டி.ஜி. தியாகராஜன். அவரது தலைமையில் சத்யஜோதி பிலிம்ஸ், தமிழ் சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது. அவர் தயாரித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்று, நடிகர் கமல்ஹாசன் அவர்களின் முதல் தேசிய விருதிற்கும் காரணமாக அமைந்தது. இது தரமான மற்றும் கலைநயம் மிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் சத்யஜோதி பிலிம்ஸின் உறுதியை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.
இன்று, மூன்றாம் தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன், அதே அர்ப்பணிப்புடனும் தொலைநோக்கு பார்வையுடனும் இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் தயாரிப்புகள் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று வருகின்றன. ‘விஸ்வாசம்’ திரைப்படம் சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருதைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு UK National Film Awards-ல் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘கேப்டன் மில்லர்’, தற்போது 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளை வென்று, சத்யஜோதி பிலிம்ஸின் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மாபெரும் மைல்கல்லைச் சேர்த்துள்ளது.
இந்த மகத்தான சாதனையை சாத்தியமாக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் ஒட்டுமொத்த ‘கேப்டன் மில்லர்’ குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தனது சிறப்பான நடிப்பிற்காக Special Mention தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற நடிகர் தனுஷுக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
ஏழு தசாப்தங்களாக, மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைக்கும், சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு கிடைத்த இந்த தேசிய அங்கீகாரம், ஒரு விருதாக மட்டுமல்ல; தரம், நேர்மை மற்றும் தலைமுறைகளைத் தாண்டி மக்களின் மனதில் நிலைத்திருக்கும் கதை சொல்லும் கலையை மையமாகக் கொண்ட சத்யஜோதி பிலிம்ஸின் புகழ்பெற்ற பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும்.
எதிர்காலத்தை நோக்கி மேலும் பல தரமான படைப்புகளை வழங்கும் தனது பயணத்தில், இந்த இரண்டு தேசிய விருதுகளும் சத்யஜோதி பிலிம்ஸின் கடந்த கால சாதனைகளை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் அழகையும் பெருமையையும் மேலும் உயர்த்தும் திரைப்படங்களை உருவாக்கும் புதிய உத்வேகமாகவும் அமைகின்றன.
நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு
பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் உருவாகிறது.
ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய ‘பாகுபலி’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். இந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் விறுவிறுப்பான மற்றும் சிறப்பான கதை கொண்ட இப்படத்தை தயாரிக்க, எஸ். எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்துள்ளனர்.
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, இப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான விழாவில், பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையிலான இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
ஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டுவதுடன் டீசர் தொடங்குகிறது. அவர்களுக்கு இடையேயான மகிழ்ச்சியான தருணங்களும், அன்பான பிணைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சங்களாகும். பின்னர் அந்த சிறுமியை மேஜிக்கால் மறையச் செய்வதன் மூலம் மற்றொரு பெரிய வித்தையை காட்டுவதாக அவர் உறுதி அளிக்கிறார். அப்போதுதான் அவருக்கு உண்மையான சிக்கல் தொடங்குகிறது.
அதன் பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே படத்தின் மையக்கருவாக அமைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் மனதிற்கு நெருக்கமான தருணங்களுடன் கூடிய இந்த டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஃபஹத் பாசிலின் திரை இருப்பும், அவரது கலகலப்பான திரை தோற்றமும் டீசருக்கு மிகுந்த ஆற்றலை சேர்க்கின்றன. அந்த அழகான சிறுமியும் தனது வசீகரமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். காள பைரவாவின் பின்னணி இசை தனித்துவமாக இருக்கிறது. மேலும் ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ ஒரு சிறந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் !
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.
படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். அதேபோல், சக்திவாய்ந்த சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா, தனது முக்கியமான பகுதிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்திருந்தார்.
பூமி ஷெட்டி, மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் ஃபர்ஸ்ட் லுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, PVCU-வில் அவரது கதாபாத்திரம் குறித்து அதிக ஆர்வத்தை உருவாக்கியது.
இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஆன்மீகப் பிரம்மாண்டத்தையும், நவீன திரைப்பட தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட அளவையும் இணைக்கும் வகையில், இந்திய சினிமாவின் மிகவும் லட்சியமான புராண திரைப்படங்களில் ஒன்றாக ‘மஹாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனிக்கிறார்.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்புப் பணிகளை விரைவாக முடித்து, போஸ்ட் புரடக்சன் பணிகளுக்கு (Post Production) செல்ல படக்குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ‘மஹாகாளி’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் உருவாகி வரும் மிகவும் பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்து வருகிறது.
படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் விளம்பரப் பணிகள் தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து : பிரசாந்த் வர்மா இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லுரு தயாரிப்பாளர்: ரிவாஸ் ரமேஷ் துக்கல் வழங்குபவர்: RK துக்கல் பேனர்: RKD Studios இசை: ஸ்மரன் சாய் ஒளிப்பதிவு : சுரேஷ் ரகது கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா ஸ்கிரிப்டிங் பார்ட்னர்: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி விளம்பர வடிவமைப்புகள்: அனந்த் கஞ்சர்லா மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா மக்கள் தொடர்பு : யுவராஜ்
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்.
சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முக்கிய அறிவிப்பாக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனுடன், இணை தயாரிப்பாளராக பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இந்த கூட்டணி இன்று சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
பல சகாப்தங்களாக திரைப்படத் தயாரிப்பில் அனுபவம் கொண்ட பி. எல். தேனப்பன் இந்தப் படத்தில் இணைவது, தயாரிப்புக்கு மேலும் வலுசேர்க்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையிலும் திரைப்பட வர்த்தக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். பி.ஆர்.ஓ. ஆதிரா தில்ஜித், தமிழ் மார்க்கெட்டிங் – சரண், தமிழில் PRO – சதிஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது..,
“இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய படைப்பு மீது எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் கதை சொல்லி போகும் முன்பே நான் நடிப்பதாய் ஒத்துக்கொண்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ‘அருவி’ படத்திலேயே அவருடைய ஒளிப்பதிவை மிகவும் ரசித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும். ‘அன்பே டயானா’ படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி.”
நடிகை ரோஜா பேசியதாவது:- “இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை உணர்ந்தேன். குடும்ப பாசம், உறவுகள், காதல், உணர்வுகள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு நல்ல படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. எனக்கு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து செட்டிலான பெண் வேடம், என் நிஜ வாழ்க்கைப் பாத்திரம் போலவே இருந்தது.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் அனைவரின் மனதையும் தொடும். அது மிகவும் வித்தியாசமாகவும், நிறைவான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும்.
இயக்குநர் பாரி இளவழகன் மிகவும் திறமையானவர். அவருடைய உழைப்பும், படத்தின் மீது இருந்த அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கும், கதாநாயகி ரம்யாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். குறிப்பாக கேமரா வேலை மிகவும் அருமையாக இருந்தது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன.
‘அன்பே டயானா’ முழுக்க முழுக்க குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்தப் படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
Eraa Entertainment சார்பில் தயாரிப்பாளர் சத்யா கரிகாலன் பேசியதாவது:-
“இந்த அழகான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ‘அன்பே டயானா’ ஒரு சாதாரண காதல் படம் மட்டும் அல்ல; குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை என அனைவரையும் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கையுடன் பணியாற்றிய இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் திரையில் நிச்சயம் தெரியும்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இந்தப் படத்துடன் இணைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்து இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளனர்.
‘அன்பே டயானா’ அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும். நன்றி.”
எடிட்டர் பார்த்தா பேசியதாவது:-
“ இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய நன்றி.
நான் பாரி இளவழகனுடன் ‘ஜமா’ படத்திலேயே பணியாற்றியிருக்கிறேன். நாங்கள் நீண்ட நாள் நண்பர்கள். இந்த மேடை, இந்த தருணம் எல்லாமே பல வருட கனவு என்று சொல்லலாம்.
‘ஜமா’ முடித்த பிறகு, ‘அன்பே டயானா’ படத்தின் ஒன்லைனை பாரி என்னிடம் முதன்முதலாக சொன்னபோதே மிகவும் உற்சாகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், நாங்கள் இருவருமே பெரம்பூரைச் சேர்ந்தவர்கள். பெரம்பூரை மையமாக வைத்து ஒரு அழகான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார்.
அதன்பிறகு, இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்று சொன்னபோது இன்னும் அதிக நம்பிக்கை வந்தது. யுவராஜ் பிரதருக்கும், நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றி. இந்தக் கதை சரியான கைகளுக்குத்தான் சென்றிருக்கிறது என்று அப்போதே தோன்றியது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர் தேர்வு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகவும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ரம்யா, பரிதாபங்கள் கோபி, சேத்தன் சார் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத் சங்கர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். அவருடைய இசை படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத அளவுக்கு அழகாக படமாக்கியிருக்கிறார். அது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”
இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசியதாவது:- இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பாரி முதன்முதலில் கதையைச் சொல்ல ஆரம்பித்தபோதே பெரம்பூரைப் பற்றி அவர் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நான் சென்னை பையன். பெரம்பூருக்கு நிறைய முறை சென்றிருக்கிறேன். ICF-ல் பஸ் ஏறியிருக்கிறேன், 29C பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், அவர் பெரம்பூரை விவரித்த விதம், அது தனி உலகம் போல இருந்தது. அந்த இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவருடைய கதை எனக்குள் உருவாக்கியது.
அந்தக் கதையை என் நண்பர்களிடமும் மிகவும் உற்சாகமாகச் சொல்லியிருக்கிறேன். அப்போதுதான், இந்தக் கதையின் மீது எனக்கே தெரியாமல் ஒரு பெரிய ஈர்ப்பு உருவாகியிருப்பதை உணர்ந்தேன். அதனால், பட வேலைகள் தொடங்குவதற்கு முன்பே மூன்று, நான்கு முறை பெரம்பூருக்குச் சென்று, பாரி குறிப்பிட்ட இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தேன். நமக்குத் தெரிந்த சென்னை நகரத்திலேயே, இதுவரை கவனிக்காமல் விட்ட ஒரு புதிய உலகத்தை கண்ட உணர்வு அது.
இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களும், பாரி தனது வாழ்க்கையில் சந்தித்த உண்மை மனிதர்களிடமிருந்து ஈர்க்கப்பட்டவை. அதனால்தான் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இசை, பின்னணி இசை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையான திருப்தியுடன் வேலை செய்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்ல, படம் பார்த்த ஒரு ரசிகனாகவும் இந்தப் படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய யுவராஜ், நரேன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினர், ஷார்ஜன், விவேக் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அதேபோல் பாரி, எடிட்டர் பார்த்தா, ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆகியோருக்கும் சிறப்பு நன்றி. அவர்களுடைய பணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
ரம்யா, சேத்தன் சார், ரோஜா மேம், கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.
இந்தப் படத்தில் பணியாற்றி முடித்தபோது எனக்கு ஒரு நிறைவான, மனநிறைவான உணர்வு ஏற்பட்டது. அதே உணர்வை படம் பார்க்கும் ரசிகர்களும் அனுபவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இப்போது நீங்கள் கேட்டிருக்கும் பாடல்கள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இன்னும் இந்தப் படத்தில் நிறைய சோல்ஃபுல் பாடல்களும், இசை தருணங்களும் உங்களை காத்திருக்கின்றன. அவை வெளியாகும்போது ‘அன்பே டயானா’ இசையின் முழு வலிமையையும் நீங்கள் உணர்வீர்கள். நன்றி.”
சிறப்பு விருந்தினர் இயக்குநர் தினகரன் சிவலிங்கம் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. பாரி இளவழகனின் பயணத்தை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர். சினிமா மீது இருக்கும் காதலும், விடாமுயற்சியும் தான் இன்று அவரை இந்த மேடைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பயணம் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதில் இருக்கும் உணர்வுகளும், கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பாக இருந்தன. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. ‘அருவி’ படத்தில் அவரது பணியை ரசித்தது போலவே, இந்தப் படத்திலும் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் புரமோஷன், பப்ளிசிட்டி டிசைன், டிரெய்லர் என ஒவ்வொரு விஷயத்திலும் படக்குழுவின் அக்கறை தெரிகிறது. அதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
‘அன்பே டயானா’ ரசிகர்களின் மனதை கவரும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
நடிகர் சேத்தன் பேசியதாவது:- “அனைவருக்கும் வணக்கம். பாரி முதலில் இந்தக் கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, ‘நான் என்ன கதாபாத்திரம் பண்ணப் போகிறேன்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நீங்கள்தான் அப்பா கதாபாத்திரம்’ என்றார். அதைக் கேட்டதும், ‘என்னடா, தொடர்ந்து அப்பா கதாபாத்திரம்தானா வருகிறது?’ என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. நான் கிண்டலாக, ‘நண்பன் சமுத்திரகனி இன்னும் இளைஞனாக நடித்துக் கொண்டிருக்கிறார்; நான் மட்டும் அப்பாவாகிவிட்டேனே!’ என்று சொன்னேன். அதற்கு பாரி, ‘நீங்க யங் ஃபாதர்’ என்றார்.
ஆனால், முழுக் கதையையும் கேட்ட பிறகு, ‘இது அப்பா கதாபாத்திரம் மட்டும் இல்லை; தேவைப்பட்டால் தாத்தா கதாபாத்திரம்கூட மகிழ்ச்சியாக செய்வேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அவர் கதையை அழகாக எழுதியிருந்தார். என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முழுமையான பயணமும், அழகான நிறைவும் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
அதேபோல், அந்த எழுத்து திரையிலும் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போதே இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது. இது ஒரு பிரில்லியண்டான திரைப்படம். கண்டிப்பாக பாரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
பாரி மட்டுமல்ல, ரம்யா, கோபி, பரத் ஆகியோருக்கும் இந்தப் படம் மிக முக்கியமான படமாக அமையும். பரத் ஏற்கனவே நல்ல உயரத்தில் இருக்கிறார்; இன்னும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் ஷெல்லி பிரதரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சத்யா மேடம், சரவணன் சார், யுவராஜ் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள சசி சார், சமுத்திரக்கனி சார் மற்றும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.”
சிறப்பு விருந்தினர் நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசியதாவது..,
“சேத்தன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். திரையில் அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதற்கு ஒரு தனித்துவமான உயிரைக் கொடுப்பார். நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. விடாது கருப்பு மூலம் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அவர் இன்னும் பெரிய உயரம் தொடுவார்.
இயக்குநர் பாரியை பார்க்கும்போது, சினிமா மீது இருக்கும் அவரது காதலும், அர்ப்பணிப்பும் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட இளம் இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளையும், புதிய பார்வைகளையும் கொண்டு வருகிறார்கள். அவர் இந்தப் பயணத்தில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரிலும், படக்குழுவின் பேச்சிலும் ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான நேர்மறையான உணர்வு தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படம் ரசிகர்களின் மனதை வென்று மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும். நன்றி.”
இயக்குநர், தயாரிப்பாளர் சரவணன் பேசியதாவது..
“அனைவருக்கும் வணக்கம். நான் எப்படி தயாரிப்பாளர் என பலரும் கேட்டார்கள் அது யுவராஜ் கணேசனால் நடந்தது. நான் பணம் எல்லாம் போடவில்லை, பாரி மீதான அன்பில் இந்த குழு மீதான அன்பில் இணைந்திருக்கிறேன்.
‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு அழகான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து நல்ல கதைகளையும், தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘அன்பே டயானா’வும் நிச்சயமாக ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
இயக்குநர் பாரி இளவழகன் இந்தக் கதையை மிகுந்த அன்புடனும் நேர்மையுடனும் உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் உழைப்பும் டிரெய்லரிலேயே தெரிகிறது. இந்த விழாவிற்கு எனக்காக வந்ததற்கு சமுத்திரகனி மற்றும் சசிகுமார் சாருக்கு நன்றி.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் மேடையில் அதிகமாக பேச மாட்டேன். ஆனால் இந்த மேடையில் எப்படியாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நினைத்துத்தான் வந்திருக்கிறேன்.
ஒரு சிறிய கதையைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு இளைஞன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். வேலை இல்லை, வீடு இல்லை, எதுவுமே இல்லை. தினமும் ரயில் நிலையத்தில் அமர்ந்து, தங்கள் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒருநாள் ஒரு வயதான பாட்டி அவனிடம் வந்து, ‘இந்த டீயை குடி’ என்று கொடுக்கிறார். ‘என்னிடம் பணம் இல்லை’ என்று அவன் சொன்னபோது, ‘நான் உன்னிடம் பணம் கேட்கவில்லை. நீ தனியாக இல்லை என்பதை உணர்த்தத்தான் இந்த டீயை வாங்கிக் கொடுத்தேன்’ என்று அந்தப் பாட்டி சொல்கிறார்.
அவன் அந்த டீயை குடிக்கிறான். அதன் சூடு உடம்பை மட்டும் அல்ல, மனதையும் தொட்டது. மறுநாள் அந்தப் பாட்டியைத் தேடுகிறான். அதற்குப் பிறகும் தேடுகிறான். ஆனால் அவர் வரவில்லை. ஆனாலும், அந்த டீயின் சூடு மட்டும் அவனுடன் இருந்துகொண்டே இருந்தது. ‘நீ தனியாக இல்லை… உனக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்ற நம்பிக்கையை அது அவனுக்குக் கொடுத்தது.
என்னுடைய வாழ்க்கையிலும் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த மேடையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக சரவணன் சாருக்கு மிகவும் நன்றி. பல நேரங்களில் நான் தடுமாறியபோது, எனக்கு துணையாக இருந்தவர் அவர். அவர் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். என்னுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
சரவணன் சார் எங்கள் வாழ்க்கையில் வந்த பிறகு, சுற்றியிருந்த சூழலே பாஸிடிவாக மாறியது என்று நான் நம்புகிறேன். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு நல்ல ஆற்றல் இருக்கும்.
‘அன்பே டயானா’ எங்களுக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தப் படம் ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நன்றி.”
நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது:- “அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிறப்பு விருந்தினர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
முதலில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய திறமையை நம்பி, ‘அன்பே டயானா’ படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், திறமையான இயக்குநர், அற்புதமான நடிகர். ‘ஜமா’ படத்தை பார்த்தபோதே உங்கள் திறமையை மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், யுவராஜ், நரேன், ஷார்ஜன், மணி, நாகராஜ் சார், விவேக் மற்றும் முழு குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்தப் படத்திலும் என்னை ஒரு பகுதியாக இணைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நியோ கேசில் கிரியேஷன்ஸ், Era Entertainment, ஆதிகா ப்ரோ, சரவணன் சார், ரமணன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மனநிறைவான அனுபவமாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி சார் மிகவும் திறமையானவர். அதே நேரத்தில் மிகவும் எளிமையானவர், தொழில்முறை அணுகுமுறை கொண்டவர். பெரம்பூரை அவர் திரையில் பதிவு செய்திருக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது. படத்தின் முதல் காட்சிகள் வெளியானபோதே அந்த விஷுவல்ஸை அனைவரும் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பரத் சங்கர் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச் செல்லும். அவருடைய பணி உண்மையிலேயே மாயாஜாலம் போல இருக்கிறது.
ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
சேத்தன் சார், பரிதாபங்கள் கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக கடினமாக உழைத்து வரும் PRO குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றி. குறிப்பாக வெங்கட் ரமணன் சார் மற்றும் அவருடைய குழுவினர் புதுமையான யோசனைகளுடன் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
‘அன்பே டயானா’ எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த திரைப்படம். டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் சொல்லும்.
‘அன்பே டயானா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் பேசியதாவது:- “அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் யுவராஜ், நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். என்னுடைய உதவி இயக்குநர் காலத்திலிருந்து என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்களும், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது.
படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தில் உருவாகியுள்ளது.
குறிப்பாக என் Associate Directors கார்த்திக் வீரபாகு, தினேஷ், ராஜன் மற்றும் முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் பின்னால் அவர்களுடைய உழைப்பு மிகப்பெரியது.
சினிமா என்பது ஒரு கூட்டுப் பயணம். ஒரே ஒரு மனிதரால் ஒரு படம் உருவாகாது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.
சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடன் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
போஸ்டரில் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட அவர் ஒரு மிக இனிமையான மனிதர்.
என்னுடைய அன்பு சகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவும், ஒத்துழைப்பும் அளவிட முடியாதது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார். அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.
சுதர்சன் காந்தி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உழைத்ததால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தை அடைந்துள்ளது.
இந்த மேடையில் அனைவரும் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பேசிவிட்டார்கள். அதற்கு நான் தகுதியானவனாக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றி.” ‘அன்பே டயானா’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது பெரம்பூர் மக்கள் காலாகாலத்திற்கும் கொண்டாடும் படமாக இருக்கும்.
இயக்குநர் சசிகுமார் பேசியதாவது.., “நான் நன்றி சொல்ல வரவில்லை… வாழ்த்து சொல்லத்தான் வந்திருக்கிறேன். ‘அன்பே டயானா’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் அற்புதமாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லுங்கள். அதுதான் உண்மையான நன்றியாக இருக்கும். அந்த வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
என்னுடைய நண்பர் சரவணன், இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார். இந்தப் படத்தில் அவர் பணம் முதலீடு செய்யவில்லை என்றாலும், தனது உழைப்பை முழுமையாக முதலீடு செய்திருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும். அதற்குரிய பங்கை தயாரிப்பாளர்கள் அவருக்கு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி. ‘ஜமா’ திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தில் அவரது நடிப்பும், படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட யதார்த்தமான படத்தை உருவாக்குவது எளிதான விஷயமல்ல. அந்தப் படத்தின் மூலம் ஒரு உண்மையான படைப்பாளி என்பதை நிரூபித்த அவர், தற்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ‘அன்பே டயானா’வை உருவாக்கியிருக்கிறார். இதிலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன். என்னுடைய நண்பர் யுவராஜ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி கதை கேட்டு முடிவு செய்தவர் அவர் தான், இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் நடித்துள்ள நாயகி ரம்யா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் ‘அன்பே டயானா’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.” முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ‘அன்பே டயானா’, தற்போது டிரெய்லர் வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக்.
தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.
இணைத் தயாரிப்பு: எல் .சுந்தரபாண்டி
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் படக் குழுவினருடன் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,
” எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி. இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும். நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இந்தப் படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு நன்றி.இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அடுத்து மைனா உங்களுக்கு ரொம்ப நன்றி. கதாநாயகி அனாமிகாவுக்கு நன்றி.
நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.
இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் .நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார். நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி. மேலும் இங்கே வந்துள்ள மதன் சார், ரமேஷ் சார், சௌந்தர்யா எல்லாருக்கும் ரொம்ப நன்றி. கேமராமேன் பிரதீப்,உதவி இயக்குநர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.
இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் எனக்கு நீண்ட காலமாக நல்ல பழக்கம்.
ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் எல்லாமே சென்னைதான்.வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது .சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான். சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.
2009 வந்து யோகிதான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டர் இடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன் .இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.
இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும். ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு மாதிரி கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது. உடனே அவனுக்குப் போன் செய்தேன்.என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.இது மாதிரி ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் என்றான் உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன்.அதற்குப் பிறகுதான் சந்தித்தோம்.அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் நல்ல கதையோடு வாருங்கள்.சரியாகச் செய்யுங்கள்.மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”. என்றார்.
பேசி முடித்ததும் அவருடன் செய்தியாளர்கள் கலந்துரையாடிய போது அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கேட்ட போது, “கமல் சாருடன் மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. விரைவில் நடிப்பேன் என்று நம்புகிறேன் “என்றார். மேலும் யோகி பாபு பகிர்ந்து கொண்டவை:
“300 படங்கள் வரை வந்துள்ளதற்குத் தெய்வ பக்தி காரணம்.நான் வழங்கும் முருகன்தான் அதற்குக் காரணம். எனக்கு முருகன் மேல் பெரிய நம்பிக்கை உள்ளது.
நான் எந்த பிரேமில் தலை காட்டினாலும் என்னை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பார்க்கிறார்கள்.நகைச்சுவை வேடங்கள் தான் எனக்குச் சோறு போடுகிறது. அதை முதலில் நான் திருப்தி செய்ய வேண்டும்.அதனால் அதை நிறுத்த மாட்டேன்.சில படங்களில் லீடு என்று முன்னணிப் பாத்திரங்களில் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.மற்றபடி நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் என் காலத்தை ஓட்டுகிறேன்.என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் இன்னும் படங்களின் மூலம் கொடுக்க வேண்டும், நிச்சயம் செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மேலும் விழாவில்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான் ,படத்தின் இயக்குநர் ரா.ராஜ்மோகன், இசையமைப்பாளர் இமான்,ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, கதாநாயகி அனாமிகா,மைனா நந்தினி, அருள்தாஸ், காளி வெங்கட், லெனின் பாரதி,சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவின் நிறைவில் ட்ரெய்லர் பாடல்கள் வெளியிடப்பட்டன. 300 ஆவது படத்தை முன்னிட்டு நாயகன் யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்தார். அத்துடன் விழாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.
யோகி பாபுவின் 300 வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறார். திரில்லர், ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் என எந்த ஜானரிலும் தனக்கென ஒரு தனித்துவமான இசை மொழியை உருவாக்கியுள்ள அவர், #RAPO23-க்கும் அதே தரத்தில் ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பின்னணி இசைக்காக அதிகம் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக சாம் சி எஸ் திகழ்கிறார். கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது திறமை, பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக த்ரில்லர் படங்களில் அவர் உருவாக்கும் சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது.
அதேநேரத்தில், சமீபத்தில் வெளியான “இம்மார்டல்” திரைப்படத்தின் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல், அவரது மெலடி திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒருபுறம் காதல் பாடல்களில் மனதை வருடும் மெலடியையும், மறுபுறம் திரில்லர் படங்களில் பரபரப்பை கூட்டும் பின்னணி இசையையும் சமமாக கையாளும் இசையமைப்பாளராக சாம் சி எஸ் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.
இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கும் ராம் பொதினேனி மற்றும் இசையின் மூலம் கதைக்கு உயிர் கொடுக்கும் சாம் சி எஸ் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, #RAPO23 திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதைக்கு இணையாக இசையும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி, தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பேசப்படும் முக்கியமான காம்பினேஷனாக மாறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.