Breaking
June 8, 2026

Cinema

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ குறித்த தகவல்களை பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசுகையில், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா. அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்து இருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமான இப்படத்தை தொடங்கும் போது நான் சந்தானத்திடம், “முதலாளி கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்த படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆர்யா சாருக்கும் சிலை வைப்பேன்,” என்று கூறினேன்.

அதன் பின்னர் படத்தின் ஷூட்டிங் பெரிய பெரிய லொகேஷன், குரூஸ் என்று நல்லபடியா போனது. பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து படம் முழுமையாக எப்போது தயாராகும் என்ற கேள்வி வந்தபோது சந்தானம் என்னை அழைத்து “நீ எங்களுக்கு சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை, எங்க பிரண்ட்ஷிப்புக்கு உலை வச்சிராத, சீக்கிரம் படத்தை முடித்து கொடுத்துவிடு,” என்று சொன்னார். ஆர்யா சார், படம் இப்போது முழுவதும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

இப்படத்தில் இரண்டு மூத்த இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன் சார் மற்றும் செல்வராகவன் சார் சிறப்பாக நடித்து ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. கஸ்தூரி மேடம், நிழல்கள் ரவி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.

இது ஒரு சராசரி ஹாரர் படம் கிடையாது. இதற்குள் ஒரு பேண்டஸி உலகமே உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. இதற்காக இராப்பகலாக ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. என்னுடைய கடந்த படமான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இப்படத்திற்கும் அதே ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்குமான சம்மர் ட்ரீட் ஆக இருக்கும். இப்படத்தை டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்வதை வட சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்லலாம். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று இப்படத்தை பார்த்து மகிழ வேண்டும். நன்றி, வணக்கம்,” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒரு நல்ல ஸ்டோரி இருக்கும், அதற்கான ரீஸனிங் இருக்கும், ஒரு பிளே இருக்கும், ஒரு கேம் இருக்கும். பிரேம் அதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா எடுத்து காமெடியை ரொம்ப அழகா எக்ஸிக்யூட் பண்ணி இருப்பாரு. அதே மாதிரி பிரேம் என்னிடம் வந்து ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ கான்செப்ட் சொன்ன உடனே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. ஒரு படத்துக்குள்ளயே கேரக்டர்ஸ் டிரான்ஸ்போர்ட் ஆயிடுறாங்க.

பிரேம் இந்த கதையை சொல்லி முடித்தவுடன் “நீ என்னிடம் சொன்ன மாதிரி அப்படியே நல்ல பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் சூப்பராக இருக்கும்” என்று சொன்னேன். படத்தை எப்படி உருவாக்கப் போகிறார் என்று ஆர்வமாக இருந்தேன். படம் முடிந்தவுடன் பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். அனைவரும் இதை 100% எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியும் என்ன நம்புகிறேன்.

இந்த படத்தை சந்தானத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது, அவருக்கு நன்றி. சந்தானமும் பிரேமும் சேர்ந்து ரொம்ப சூப்பரா இந்த படத்தை பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் இந்த படத்துக்காக முழுமையாக வைத்துள்ளார்கள். ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுகள்.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்கும். இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கும் நாங்கள் இணைவோம் என்று நம்புகிறேன். இப்படத்தை வழங்குவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்று கூறினார்.

திரைப்படத்தின் நாயகன் சந்தானம் பேசுகையில், “இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். அவ்வாறு ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு நான் நாயகனாக இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்,” என்றார்.

அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே இதில் நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மே 16 தியேட்டரில் குடும்பத்துடன் போய் பாருங்கள்.

இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் ஆனந்த் பண்ற கதை எல்லாம் ஒரு லைனில் இருக்கவே இருக்காது. பல லேயர்களை கொண்டிருக்கும். கஷ்டமான விஷயங்களை அவ்வளவு எளிதாக, சுவாரஸ்யமாக ஒன்றாக கோர்த்திருப்பார். அது எப்படி என்று நமக்கு புரியவே புரியாது. அதுதான் பிரேம் ஆனந்த்.

இந்த படத்தையும் அவர் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார். அவுட்புட் ரொம்ப நன்றாக இருந்தது, அருமையான காமெடி ட்ரீட்டாக இப்படம் ரசிகர்களுக்கு அமையும். நீங்கள் அனைவரும் முழுவதுமாக என்ஜாய் செய்வீர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தை திரையரங்குகளில் பாருங்கள். நன்றி, வணக்கம்,” என்று கூறினார்.

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி’

வெங்கட் பிரபு – ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட ‘மெட்ராஸ் மேட்னி ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்தின் டைட்டிலுக்கான காணொளி நடிகர் சத்யராஜின் குரலிலும், தோற்றத்திலும் வெளியிடப்பட்டு.. ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் கதாபாத்திரமும், அவர்களது திரைத்தோற்றமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌

பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்குகிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி 33 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர், ஸ்னீக் பிக்..ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் – அனிருத் கூட்டணியில் வெளியான இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல்… மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பினை பெற்றிருப்பதாலும்.. இப்படத்தின் பாடல்களுக்கும்… படத்திற்கும் …ரசிகர்களிடத்திலும், திரையுலகினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்

‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கும், சாம் சி. எஸ். படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஏ.கே. முத்து கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மலேசிய நாட்டில் படமாக்கப்பட்டு, எதிர்வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ ஏஸ் ‘ ( ACE) திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய காதல் காட்சிகள்- அதிரடி ஆக்சன் காட்சிகள்- காமெடி காட்சிகள்- கண்ணுக்கு அழகான காட்சிகள் – என அனைத்து அம்சங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

AR ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் ‘மூன்வாக்’

AR ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகும் ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது.

சென்னை, மே 12, 2025:

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையாக அறிவிக்கிறது — பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து ஒன்றிணைகிறார்கள்.

இப்படத்தை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் NS இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்வாக் – இசை, நடனம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய ரீதியில் வெளியாகும் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.

விஜய் நடித்த G.O.A.T மற்றும் அஜித் குமார் நடித்த Good Bad Ugly போன்ற திரைப்படங்களை வெற்றிகரமாக சமீபத்தில் வெளியிட்டது ரோமியோ பிக்சர்ஸ்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில் – “25 ஆண்டுகளுக்குப் பிறகு AR ரஹ்மானும், பிரபுதேவாவும் ஒன்றாக இணையும் மூன்வாக் போன்ற சிறப்பான திரைப்படத்தை வெளியிடுவதில் பெருமையாக உள்ளது. இயக்குநர் மனோஜ் என்.எஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ்-இன் முதல் திரைப்படமே அதிக பொருட்செலவில், குடும்பம் முழுவதையும் மகிழ்விக்கும், இசை, நடனம் மற்றும் நகைச்சுவையால் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது” என்றார்.

படத்திற்கு ஒளிப்பதிவு: அனூப் V ஷைலஜா, எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, நடனம்: சேகர் VJ, பியூஷ் ஷாஷியா, புரொடக்‌ஷன் டிசைன்: ஷனூ முரளிதரன், ஆடையமைப்பு: திவ்யா ஜார்ஜ் மற்றும் சுவேதா ராஜு சிறப்பாக பங்களித்துள்ளார்கள். திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் இயக்குநர் மனோஜ் NS உடன் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.

மூன்வாக் உலகம் முழுவதும் இசை, நடனம் மற்றும் நகைச்சுவையுடன் திரையரங்குகளில் விழாவாக ரசிகர்களை மெய்மறக்கச் செய்ய தயாராக உள்ளது.

Photo (இடது முதல் வலது): கிருஷ்ண குமார் Y (லைன் புரொட்யூசர், பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்), ரமிஸ் ராஜா (எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், பிஹைண்ட்வுட்ஸ்), மனோஜ் NS (நிறுவனர் மற்றும் சிஇஒ, பிஹைண்ட்வுட்ஸ்), நடிகர் பிரபுதேவா மற்றும் ராகுல் (ரோமியோ பிக்சர்ஸ்).

பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியான ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தன.

இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் யாரும் எதிர்பாராத தோற்றத்தில் நடித்து அசர வைத்தார். இவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது இந்தி படங்களான சன்னி தியோலுடன் ‘ஜாத்’, அக்ஷய் குமார், அனன்யா பாண்டேவுன் ‘ கேசரி 2’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் என பிசியாக நடித்து வருகிறார். இதனால் ரெஜினா கசாண்ட்ரா பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.

“இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வரும் “இம்மார்டல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி திரை நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மிக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், டிராகன் படம் மூலம், இளைஞர்கள் மனதைக் கொள்ளையடித்த கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

இளைஞன் வாழ்வில் தீடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்பதன் பின்னணியில், அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன், கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, கேரளா முதலான பகுதிகளில் நடந்துள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பதால், படத்தில் சிஜி,விஷுவல் எஃபெக்ட்ஸ், காட்சிகள் அதிக அளவில் உள்ளது எனும் நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு
எழுத்து இயக்கம் – மாரியப்பன் சின்னா
ஒளிப்பதிவு – அருண் ராதாகிருஷ்ணன்
இசையமைப்பாளர் – சாம் சிஎஸ்
எடிட்டர் – சான் லோகேஷ்
கலை இயக்குனர் – சிவசங்கர்
ஸ்டண்ட் – சக்தி சரவணன்
விளம்பர வடிவமைப்பாளர் – கோபி பிரசன்னா
நடனம் – சபரீஷ்
ஆடை வடிவமைப்பாளர் – வினோத் சுந்தர், தமிழ்செல்வன் U
டிஐ – கெட் இன் ட்ரீம் ஸ்டூடியோ
கலரிஸ்ட் – ஸ்ரீராம்
Vfx – R.மகி
ஸ்டில்ஸ் – இ.ராஜேந்திரன்
காஸ்ட்யூமர் – ரவி தேவராஜ்
ஒப்பனை – P.மாரியப்பன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
இயக்குநர் குழு – திமிரி C, தியாகராஜன் , K விமல்ராஜ் , யுகாந்த் கலைமோகன் , மணிமுருகன் , பிரேம்
தயாரிப்பு நிர்வாகி – சசிகுமார் N
தயாரிப்பு – அருண்குமார் தனசேகரன் (AK Film Factory)

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.

எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ” மிகவும் சந்தோஷமான மேடை. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, ‘இப்படம் ஹிட்’ என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்தத் திரைப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும் போது இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். இந்த அரங்கத்திற்கு உள்ளே வரும்போது ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரையும் பார்க்கும் போதே வெற்றி கூட்டணி என நம்பிக்கை வந்தது. அதனால் மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

தயாரிப்பாளர் குமார் தொடக்க காலத்தில் நான் இயக்குநர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவரிடம் உதவி மேலாளராக பணியாற்றியவர். அவருடனான பயணம் மறக்க முடியாது. அவர் இன்று ஒரு தயாரிப்பாளராக உயர்ந்திருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வருகை தாருங்கள் என சொன்னேன். இதை சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நான் உங்களை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என் உடன் பயணிக்கிறார்.

‘ விலங்கு ‘என்றொரு வெப் சீரிசை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் திருச்சியில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.‌

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும் போது, ‘ இந்த முன்னோட்டத்தில் பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படத்தில் இருந்து சில காட்சிகள் இருக்கும் ‘ என்று சொன்னார். பரவாயில்லை. இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.

இந்த படத்தை பார்த்த திங்க் மியூசிக் சந்தோஷ் சூரிக்கு பிறகு எனக்கும் போன் செய்து இந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியை விட மிக சிறப்பாக இருக்கிறது . நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். சந்தோஷின் கணிப்பில் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும்.

எனக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். அதைப் பார்த்த நம்பிக்கையில் தான் நானும் சொல்கிறேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

சூரியும், நானும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘படத்தில் தான் அறிமுகமானோம். அந்தப் படத்தின் போட்டோ சூட்டை சூரியையும் விமலையும் சேர்த்து வைத்து நடத்தினேன்.

இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

சிறுத்தை சிவா பேசுகையில், ” சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில் பணியாற்றி இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து விட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை. இந்த ட்ரெய்லரை உருவாக்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியும் , வாழ்த்துக்களையும் சொல்கிறேன்.‌ மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சூரி சார் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். உங்கள் உடன் இருப்பவர்கள் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்” என்றார்.

நடிகை சுவாசிகா பேசுகையில், ” படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறாய் என்ற பாராட்டை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பாசிட்டிவ் வைப்( Vibe) புடன் இருந்தனர்.
இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாச்சார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும் ,கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும்.
படப்பிடிப்பு தளத்தில் மொழி பிரச்சனையை எதிர்கொள்வதற்காக உதவி இயக்குநர்கள் உதவி செய்தார்கள். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ லப்பர் பந்து ‘படத்திற்குப் பிறகு ‘ மாமன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” சில பேர் வெற்றி பெறுவார்கள் . தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். அத்துடன் ஒரு பிம்பத்தையும் கட்டமைப்பார்கள். வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பார்கள். அவர்களை நாம் ஆச்சரியமாக பார்ப்போம் .ரசிப்போம். ஆனால் சூரி சார் உன்னால் முடியும் உன் பக்கத்தில் தான் நான் இருக்கிறேன். உன்னை போல் நானும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு இருக்கிறேன். ரோட்டில் அமர்ந்து போராடி இருக்கிறேன். அதன் பிறகு தான் இந்த வெற்றியை தொட்டிருக்கிறேன் என்ற ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பார். இது நம் பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு உத்வேகத்தை அளிக்கும். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை விதைக்கும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெறுவது தான் முக்கியம் என கருதுகிறேன். இதற்கு நான் சிறு பங்காக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இரண்டு நிமிட ட்ரெய்லரை பார்த்தோம். அதில் இந்த சின்ன பையனுக்கு இவர்தான் மாமன் என்ற நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தினார். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

விலங்கு வெப் சீரிஸை பார்த்துவிட்டு தமிழில் வெளியாகி இருக்கும் சிறப்பான இணைய தொடர் மட்டுமல்ல பெஸ்ட் கன்டென்ட். அந்தத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். மிகவும் குறுகிய காலத்திற்குள் பாடல்களை அவர் உருவாக்கினார். அனைத்தையும் பொறுப்புடன் பணியாற்றினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மிகவும் மதிக்கும் பல திறமைசாலிகள் இங்கு இருக்கிறார்கள். திங்க் மியூசிக் சந்தோஷின் வார்த்தைகள் இந்த படக்குழுவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. ” என்றார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், ” என் இசையில் தமிழில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘மாமன்’. இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் ஜூம் மீட்டிங்கில் தான் சந்தித்து கதையை சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணத்தில் நான் வேறொரு படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு அன்று இரவு கதையை முழுவதுமாக சொன்னார். படத்தின் கதையை இடைவேளை வரை சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்கு நாம் இசையமைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.

பொதுவாக ஒரு கதையை முழுவதுமாக கேட்ட பிறகு அதனை என் மனைவியிடம் சொல்லி, விவாதித்து, அடுத்த நாள் காலையில் தான் இசையமைப்ப ஒப்புக் கொள்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பேன்.

படத்தின் இரண்டாம் பாதியை கேட்டுவிட்டு உடனடியாக இயக்குநரிடம் இப்படத்திற்கு நான் இசை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவரிடம் நான் இதுவரை கேட்ட கதைகளிலே இது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. எனக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்றேன்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது என் மனைவியும் கண்ணீர் வடித்தார். இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், ” மாமன் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவை அளவு கடந்து நேசிக்கும் கலைஞர்களைத்தான் இங்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டதாக பலரும் இங்கு சொன்னார்கள். இதற்கு காரணமாக இருந்த எடிட்டர் கணேஷ் சிவா அவர்களுக்கும், இசையமைப்பாளர் ஹேஷாமிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் ட்ரெய்லர் மே முதல் தேதி அன்று வெளியானது. இந்த திரைப்படம் 16ஆம் தேதி தானே வெளியாகிறது. அதற்குள் படத்தைப் பற்றிய விசயங்கள் தெரிந்து விடுமோ..! என கவலை அடைந்தேன். ஆனால் இதை யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த ரெண்டு நிமிடத்திற்குள் என்ன சொல்ல வேண்டும் அதனை சரியாக சொல்லியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் ராஜ்கிரண் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமிதமாக நினைக்கிறேன். இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சூரியும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவும் ,அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாசிகாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், நான் என பலர் இருக்கிறோம். எல்லோரும் அவங்களுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்குநர் பிரசாந்த் அழகாக கையாண்டார். இந்த விழாவை சிறப்பிக்க வருகை தந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி. ” என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ” என்னுடைய சகோதரர் சூரி அவர்களுக்கு வணக்கம். இந்த திரைப்படத்தில் அவர் அழகாக இருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சூரியின் இந்த உயரம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதன் பின்னால் கடுமையாக உழைத்தார். சீம ராஜா படத்திற்காக சூரியிடம் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றார். ஆறு மாத காலமும் கஷ்டப்பட்டார். ஆனால் அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் ஆறே நிமிடத்தில் படமாக்கினோம். அன்று அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார். அப்போதே இவர் ஹீரோவாக உயர்வதற்கு தகுதியானவர் என நினைத்துக் கொண்டேன். விடுதலை படத்தில் நடித்த போது அவருக்கு உடலெங்கும் தையல் இருந்தது. ஒவ்வொரு தையலிலும் அவருடைய வாழ்க்கை உயர்ந்தது. தற்போது மாமனாக நிற்கிறார் என்றால்.. அதற்குப் பின்னால் அவருடைய கடும் உழைப்பு இருக்கிறது. இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

தாய்மாமன் உறவு என்பது சாதாரணமானதல்ல. அப்பா அம்மாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பதுதான் தாய் மாமன். ஒவ்வொரு தாய் மாமனும் தன்னுடைய அக்கா குழந்தையையும், தங்கை குழந்தையையும் எதன் காரணமாகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

சமீபத்தில் நிறைய படங்களின் டிரைலர்களை பார்த்திருக்கிறோம். அதில் வெட்டு, குத்து அதிகமாக இருக்கும். ஆனால் மாமன் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் அற்புதமான குடும்ப கதையை சொல்லி இருக்கிறார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்தத் திரைப்படத்தில் கலகலப்பு, உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் குறிப்பிட்டது போல் இப்படத்தின் இடைவேளையில் ஏதோ விசயம் இருக்கிறது. அது படத்தை பற்றிய ஆவலை தூண்டுகிறது. அதற்காக காத்திருக்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநருக்கும், நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில், ” இது எங்களுடைய குடும்ப விழா. சூரி எங்கள் குடும்பத்தில் ஒருவர். இந்த விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் வெளியான முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பிறகு விலங்கு என்ற ஒரு வெப்சீரிஸை இயக்கி வெற்றி பெற வைத்து அதன் மூலமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக நான் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த இயக்குநரை வைத்து வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார்.

சூரி இந்த படத்தின் கதையை சொல்லும்போதும், பிரசாந்தின் இயக்கத்தை பற்றி சொல்லும் போதும் சந்தோஷமாக இருந்தது. அதனால் இயக்குநர் பிரசாந்திற்கும், தயாரிப்பாளர் குமாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரியண்ணன் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பத்து வருடமாக அவரை எனக்குத் தெரியும். காமெடியாக நடித்த பிறகு ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இது போல் இந்தியாவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை . இருந்தாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு சூரியின் பயணம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். விடுதலை- கொட்டுக்காளி -கருடன் – என பல பரிமாணங்களை காட்டி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் அவர் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும் ..தெளிவாக யோசிப்பவர் என்பதும் தெரியும். அவரிடம் இருக்கும் கதை அறிவு சிறப்பானது. அவரிடமிருந்து வெளியாகும் முதல் கதை மாமன். இன்னும் அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கிறது. அதை எப்போதாவது ஒன்று இரண்டு என்று வெளியிட்டால் அவர் இன்னும் உயரம் அடையலாம். அதே நேரத்தில் மற்றவர்களின் கதையிலும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ” இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், சூரிக்கும் எமோஷனலான தொடர்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டிலிருந்து வந்திருப்பது போன்ற உணர்வு தான். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்து நிறைய இரவுகள் அவருடன் செலவழித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என் மனதில் இவர் இவ்வளவு இயல்பானவராக இருக்கிறாரே எனத் தோன்றும். நான் சூரிய உடன் பழக தொடங்கிய போது அவருடைய மோசமான காலகட்டம் அது. அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகாமல் போன காலகட்டம் அது.

இந்தப் படத்தில் சூரியின் ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி திரைத்துறையில் அவருடைய இலக்கை சீக்கிரம் எட்டி விடுவார் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் சுவாசிகா பற்றி சூரி என்னிடம், ‘இந்த பொண்ணு தமிழ் சினிமா இருக்கும் வரை நடிக்கும். அவ்வளவு திறமைசாலி. நடிப்பு பிசாசு’ என்றார்.

நிஜ மனிதர்களை நாம் கதாபாத்திரங்களாக மாற்றும் போது அதில் நடிகர்கள் சரியாக உணர்ந்து நடிக்கவில்லை என்றால்.. படப்பிடிப்பு தளத்தில் கடினமாக இருக்கும். நமக்குள் தங்கி வலியை ஏற்படுத்திய உறவுகளை கதாபாத்திரங்கள் ஆக்கி அதனை திரையில் வெளிப்படுத்தும்போது சரியாக இருக்க வேண்டும் என நினைப்போம். என்னைப் போன்ற படைப்பாளிகள் நினைப்பது என்னவென்றால் ..எங்களுடைய மனதில் இருக்கும் கதாபாத்திரங்களை நடிகர்கள் திரையில் துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒரு கதையில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய அனைத்து நட்சத்திரங்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவராக ராஜ்கிரண் இருக்கிறார்.

ராஜ் கிரணின் பாதிப்பு இல்லாமல் கிராமத்து படங்கள் இல்லை. இந்தத் திரைப்படமும் அவருடைய படங்களில் பாதிப்பிலிருந்து தான் உருவாகி இருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல என்னுடைய வாழை திரைப்படமும் உருவாகி இருக்கிறது. நாங்கள் அனைவரும் எப்போதும் ராஜ் கிரணுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹேஷாம் இனிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

சூரி தனக்கான தேரை உருவாக்கி, அதில் அவரே அமர்ந்து, அவரே இழுத்துக்கொண்டு செல்கிறார். அதனால் அவரிடமிருந்து யாரும் தேரை பிடுங்க இயலாது. வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ” இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே வெற்றி பெறும் என சொல்ல முடிகிறது. மக்கள் அண்மை காலமாக லைட் ஹார்ட்டட் ஸ்கிரிப்ட்டுகளுக்கு கொடுக்கும் வரவேற்பு சந்தோசமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த மாமன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறும்.

சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது என சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அதுதான் சிறப்பு.

நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். இதில் பத்து கதைகள் வந்தால் .. அதில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள்.‌ அதை பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.‌

இந்த படத்தில் பணியாற்றிய நடிகர் , நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசுகையில், ” கடவுளுக்கு நன்றி. இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. மாமன் படத்தை தாய் மாமன் என்ற உறவை வைத்து தான் தொடங்கினோம். ஆனால் இந்த படத்தில் அனைத்து உறவுகளும் இணைந்து இருக்கிறது. எல்லா குடும்பங்களிலும் நடைபெறும் விசயத்தை சூரி அண்ணன் கதையாக சொன்னார்.

விலங்கு மாதிரி ஒரு திரில்லரை மீண்டும் இயக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன். அந்த தருணத்தில் இது போன்றதொரு கதையைக் கேட்டதும் ரொம்ப நெருக்கமானதாக இருந்தது. சவால் மிக்கதாகவும் இருந்தது. அதன் பிறகு கதை எழுதத் தொடங்கினோம். இந்தப் படத்தில் உள்ள முக்கியமான விசயங்கள் அனைத்தும் சூரி சொன்னது தான். அதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

ஒரு தோல்வி படம் கொடுத்தவுடன் என்னை ஆழ்கடலில் புதைத்திருந்தார்கள். அதன் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களின் உதவியுடன் விலங்கு என்ற ஒரு வெப்சீரிசை இயக்கினேன். அந்த வெப்சீரிஸை பாராட்டி என்னை உயர்த்தி விட்டவர்கள் ஊடகத்தினர். அதன் பிறகு எனக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கிடைத்தது. இதனால் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து மாமனை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக சொல்கிறார்கள். அது எனக்கு பயத்தை அளிக்கிறது. மே 16ஆம் தேதி அன்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்தப் படத்தை என்னுடைய மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்” ‌என்றார்.

நடிகர் சூரி பேசுகையில், ” இப்படத்தில் பணிகள் நிறைவடைந்த உடன் 20 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு இப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வதற்கான உரிமையை பெற்ற விநியோகஸ்தர் சிதம்பரம் அவர்களை முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்த விழாவிற்கு வருகை தந்த சிறுத்தை சிவா, பாண்டிராஜ், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் என அனைத்து இயக்குநர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்கள் என் மீது செலுத்தும் அன்பின் காரணமாக நிறைய நம்பிக்கை கிடைத்திருக்கிறது. டி சிவா, அருண் விஷ்வா என இங்கு வருகை தந்த தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாண்டிராஜ் படத்தில் இடம்பெறும் வசனத்தை போல் இந்த படத்திலும் இடம்பெற வேண்டும் என இயக்குநர் பிரசாந்திடம் சொல்லி இருக்கிறேன்.

பதினாறு வருடமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் குமார் இன்று தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தயாரித்து சொன்ன நேரத்தில் வெளியிடுவதற்காக கடுமையாக உழைக்கிறார். கருடன் படம் போல் இந்த திரைப்படமும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என் நம்புகிறேன்.

ராஜ் கிரண் அப்பா இந்தப் படத்திற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கெல்லாம் பெருமை. இந்தப் படத்தின் கதையை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னதுடன் நடிக்கவும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கு நன்றி. கலைத்தாய் உங்களை நீடித்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். இதற்கு முன் நீங்கள் இசை அமைத்த ஒன்ஸ்மோர் படத்தின் பாடல்களும் ஹிட் .இந்த படத்தின் பாடல்களும் ஹிட். படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது.. பாடல்களைக் கேட்டு எங்கள் குழுவினர் கொடுத்த நெருக்கடிகளுக்கும் , தொல்லைகளுக்கும் இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரி மீது இருக்கும் அன்பின் காரணமாகவும் , இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டதாலும் இப்படத்திற்கு பாடல்களை எழுதுவதற்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு என்னுடைய நன்றி. அவர் மாமன் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு பெருமை. நாங்கள் நினைத்ததை விட இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அதிலும் மண் சார்ந்த உறவுகளுக்கு உங்களுடைய வரிகள் நெருக்கமாக இருக்கிறது. இதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

‘ சீம ராஜா ‘படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார் .இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது. சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. அன்று அது போன்றதொரு வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கவில்லை என்றால்.. தற்போது என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அதனால் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் ரவிக்குமார் பார்த்து விட்டார். அவர் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது. இதற்கு காரணமான திங்க் மியூசிக் சந்தோஷிற்கு நன்றி. ஒரு படம் பிடித்து விட்டால் அதைப்பற்றி திரையுலகம் முழுவதும் சொல்லி கொண்டாடும் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னை சந்தித்து இரண்டு கதைகளை சொன்னார். இரண்டும் நன்றாக இருந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் குமார், ‘உங்களிடம் இருக்கும் கதையை சொல்லுங்கள். அதை பிரசாந்த் திரைக்கதையாக மாற்றி இயக்குவார் ‘ என சொன்னார். நான் முதலில் தயங்கினேன். பிறகு இந்த படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். குடும்பத்தில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால்.. அது தாய் மாமன் உறவு தான். தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான்.‌ தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம். இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன். அவரும் நன்றாக இருக்கிறது என சொன்னார். இந்த கதையை கேட்டதும் பிரசாந்த் பாண்டிராஜ், ‘அண்ணே இந்த கதை என்னுடைய குடும்பத்திலும் நடந்திருக்கிறது’ என்றார்.‌
இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதாக இருக்கிறது என சொல்லி இப்படத்தை இயக்கத் தொடங்கினார். இந்தப் படத்திற்கு முக்கியமான நடிகரே அந்த சின்னப் பையன் தான். அவர் யார்? என்று இயக்குநரிடம் கேட்டேன். அந்த கதாபாத்திரத்திற்காக தயாரிப்பாளர் மூன்று குழந்தை நட்சத்திரங்கள் நட்சத்திரங்களை பரிந்துரைத்தார். நான் ஒரு பத்து குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தேன். காரில் பயணிக்கும் போது எதிரில் தென்படும் குழந்தைகள் எல்லாம் போனில் போட்டோ எடுக்க தொடங்கினேன். படப்பிடிப்பும் தொடங்கியது. அதன் பிறகு இயக்குநர் மாஸ்டர் பிரகீத் சிவனை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்குநரின் மகன் என்பது அதன் பிறகு தான் தெரியும். அந்த பையனும் மிகச் சிறப்பாக நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவனின் சேட்டைகளை அனைவரும் ரசித்தோம். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் குடும்பத்தை மே 16ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்க போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும். ” என்றார்.

சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்

2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ‘ரெட்ரோ’ படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரங்களை பரிசாக அளித்தார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் குறிப்பிடுகையில், ”ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இத்திரைப்படம், இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்த திரைப்படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு ‘கடைகுட்டி சிங்கம்’ வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் ‘விருமன்’ வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் திரையுலகினர் சூர்யாவுடனும், படக் குழுவினருடனும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” !!

பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது “ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்” நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார்.

ஒரு புதிய சினிமா அனுபவத்தை ‘நாக் நாக்’ திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன் நோக்கமே, திறமையான புதிய இயக்குனர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தரமான கதைகளை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். ‘நாக் நாக்’ பார்த்தபோது, இது மிகவும் தனித்துவமான, தரமான உள்ளடக்கம் என்று எனக்கு தோன்றியது. அதனால் உடனடியாக இந்த படக் குழுவினருடன் இணைய முடிவு செய்தேன். இப்படி ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் ராகவ் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தனது திரைப்பயணம் மற்றும் இந்தப் படம் பற்றி கூறியதாவது. “இது எனக்கு ஒரு முக்கியமான தருணம்… மிகவும் தனிப்பட்ட பயணத்தின் ஒரு பகுதி. இத்தனை காலமாக நீங்கள் என்னை ஒரு நடிகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், இன்று முதல்முறையாக ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று ராகவ் ரங்கநாதன் கூறினார். “இயக்கம் என்பது எனக்குள் எப்போதும் ஒரு அமைதியான கனவாக இருந்தது. சொல்லப்போனால், அது ஒரு தொடர்ச்சியான தட்டல். இப்போது… நாக் நாக் மூலம் அந்தக் கனவு நனவாகியுள்ளது.”

படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது: “ஆம், நான் இந்தப் படத்தை எனக்காக எழுதினேன் – ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வழக்கமான ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. பெரிய பட்ஜெட்டில் ஹீரோ பறக்கும் காட்சிகளோ, மெதுவாக நடக்கும் காட்சிகளோ (அப்படி செய்ய எங்களிடம் பட்ஜெட்டும் இல்லை 😄) இந்தப் படத்தில் இருக்காது. ‘நாக் நாக்’கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது. கதையேதான் ஹீரோ.”

அவர் தொடர்ந்து பேசுகையில், “அந்தக் கதை எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. திரையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொந்தமானது. கே.பாலச்சந்தர் போன்ற ஆரம்பகால இயக்குநர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது, துணைக் கதாபாத்திரங்களின் ஆழம்தான். ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனது படத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் உங்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு படத்தைத் தான் நான் உருவாக்க முயன்றேன்.”

தனது இயக்கம் மற்றும் கதை சொல்லும் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றி ராகவ் விளக்கினார்: “இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? நடன ரியாலிட்டி ஷோக்களில் என் மனைவியையும் என்னையும் சிலர் பார்த்திருக்கலாம். நாங்கள் சில போட்டிகளில் வென்றதும் உண்டு. அப்போது எனக்கு கிடைத்த பாராட்டுகளில் நான் மிகவும் பொக்கிஷமாக கருதியது, ‘நீங்கள் வெறும் நடனமாடவில்லை – ஒரு கதையைச் சொல்கிறீர்கள்’ என்பதுதான். அது எனக்கு பெரிய அர்த்தம் தந்தது. ஏனெனில் அந்த நடனங்களுக்கான பெரும்பாலான கதைகள் – கருத்துக்கள் – என்னிடமிருந்து உருவானவைதான். அந்த நடன ஒத்திகை அறைகளில்தான் எனக்குள் படைப்பாற்றல் இருப்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், மானாட மயிலாட நிகழ்ச்சியில் எங்கள் பெர்ஃபாமென்ஸ்களுக்கு பிறகு, என் தலைக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்று கலா மாஸ்டர் சொல்வார்கள். அப்படித்தான் எனக்குள் இருந்த கதைசொல்லி பிறந்தான்.”

‘நாக் நாக்’ அதனுடைய ஒரு நீட்சிதான் என்று கூறிய அவர், “நான் இதற்கு முன்பு பார்த்திராத, யாரும் ஆராயாத ஒரு கதைக்கருவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இது புதியது, பரபரப்பானது, மேலும்… உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தை நீங்கள் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

தனது முதல் பட இயக்குநராக உணரும் பொறுப்பு குறித்துப் பேசிய ராகவ் ரங்கநாதன், தனது உத்வேகத்தைப் பகிர்ந்து கொண்டார்: “எனக்கு ‘எந்திரன்’ படத்தில் சில காட்சிகளில் நடித்த வாய்ப்பு கிடைத்தது, அதைப் பற்றி இன்றும் பலர் பேசுகிறார்கள். அல்லது ‘நஞ்சுபுரம்’ போன்ற ஒரு படம், அது வெளிவந்த போது பலரை சென்றடையவில்லை என்றாலும், இன்று அதன் இசை, கதை, ஆத்மாவுக்காக பாராட்டப்படுகிறது. இருந்தாலும், இந்தப் படம் எனக்கு வேறுபட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இந்த முறை எல்லாமே என் மீதுதான். முழுப் பொறுப்பும் சுமையும் என் மீதுதான்.”

இது அவரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தைரியத்தை நினைவுபடுத்தியது: “இது என்னை ஒருவரிடம் கொண்டு செல்கிறது. அவருடைய தைரியம் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்பயணத்தில் ஒரு சவாலான காலகட்டத்தில், அவர் ‘நாடோடி மன்னன்’ என்ற படத்துக்காக அனைத்தையும் முதலீடு செய்தார்… பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பிரபலமாக சொன்னதுண்டு: ‘இந்தப் படம் தோற்றால் நான் நாடோடியாகிறேன். வெற்றி பெற்றால் மன்னனாகிறேன்’.” அத்தகைய நம்பிக்கைதான் தனக்கு இப்போது உத்வேகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திருவள்ளுவர் வாக்கையும் அவர் குறிப்பிட்டார்: “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.”

தனது நம்பிக்கையுடன் அவர் நிறைவு செய்தார்: “தமிழ் திரைப்படத் துறையில் வெற்றிக் கதவுகளை நான் நீண்டகாலமாகத் தட்டிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ‘நாக் நாக்’ மூலம்… அந்தக் கதவு இறுதியாகத் திறக்கும் என நம்புகிறேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த உங்களுக்கு நன்றி. இந்தப் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

முக்கிய கதாபாத்திரங்களில்:

இப்படத்தில் திறமையான நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள்:

கார்த்திக் குமார்
சனம் ஷெட்டி
லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி
பப்லு பிரித்விராஜ்
வட்சன் சக்கரவர்த்தி
ஐஸ்வர்யா
கலை

இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் சார்பாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ராஜா பட்டாச்சார்ஜியும், இசையமைப்பை நவீன் சுந்தரும் கவனித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் பிரதிபலிக்கும் வகையில், படத்தின் மர்மம் மற்றும் ஃபேன்டஸிக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் இசை அமைந்துள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.