Cinema

தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக்

தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது : 90-களின் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வ திரில்லர் !!

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார்.

90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். திரைக்கதையை அவர் அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து எழுதியுள்ளார். இவர்களின் வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது.

அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் , படத்தின் பிரம்மாண்டம், மனநிலை மற்றும் கதை ஆழத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி, விறுவிறுப்பான திரையனுபவத்தை உறுதி செய்கிறது.

கர படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சர முடு, கருணாஸ், பிருத்திவி ராஜன், ஆகியோருடன் பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

1990-களின் காலகட்டத்தை உண்மைத்தன்மையுடன் மீட்டெடுக்க, மிகப்பெரும் உழைப்பில் அந்தக்கால செட்கள் அமைக்கப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, இராமநாதபுரம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் 80 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்திற்குத் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கதைசொல்லலில் புதுமையைப் பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாயபாண்டி மற்றும் காஸ்ட்யூம் தினேஷ் மனோகர் & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் கூறுகையில்,
“கர ஒரு தனித்துவமான திரையனுபவமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பதிப்பைப் பார்த்தபின், படத்தின் உணர்வுப்பூர்வ தாக்கத்திலும், தொழில்நுட்ப சிறப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைத்து நடிகர்களின் நடிப்பும், கதைக்கு ஆழம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாள் நிற்கும் சக்தி இந்தப் படத்திற்கு உள்ளது” என்றார்.

தயாரிப்பு தரப்பில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் 2026-க்கு வலுவான படப்பட்டியலை உருவாக்கி வருகிறது. இதில் மூக்குத்தி அம்மன் 2 (நயன்தாரா நடிப்பில்) தற்போது போஸ்ட் புரடக்சன் கட்டத்தில் உள்ளது. அதேபோல் டயங்கரம் (VJ சித்து நடிப்பில்) மற்றும் UNKILL_123 (அனுராக் காஷ்யப் நடிப்பில்) படங்கள் தயாரிப்பில் உள்ளன.

மேலும், வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் “கர” படத்தின் அனைத்து இசை உரிமைகளையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் படத்தின் வணிக மதிப்பும் விளம்பர அம்சங்களும் மேலும் வலுப்பெற்றுள்ளது.

தற்போது பரபரப்பான இறுதிக் கட்ட பணிகளில் இருக்கும் கர படத்தின், டீசர், டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் . இந்த படம் 2026 கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமைகளை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

🔗 https://youtu.be/WwpPFDphE_M

“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார் ஜெய் அமர் சிங்.

இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா (விஜய் டிவி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது..,
நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட்
படித்து விட்டு சென்னையில் இயக்குநர் I. அகமது அவர்களிடம் “என்றென்றும் புன்னகை” படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்றார்.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்ககிறார். மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்கிறார். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”  

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”   தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!

“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக  “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1”  திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு,  உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.

“காந்தாரா சேப்டர் 1”  தற்போது இந்திய எல்லையைக் கடந்து,  உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’) !!’ ‘டாக்ஸிக்’ (Toxic)

‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’) !!’ ‘டாக்ஸிக்’ (Toxic)பிறந்தநாள் வெளியீட்டில் ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை

யாஷ் தான் ராயா (Raya).ஒரு மிரட்டலான ‘டாக்ஸிக்’ பிறந்தநாள் வெளியீட்டின் மூலம் ‘ ‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’)! ‘ என்ற முழக்கம் எதிரொலிக்கிறது.

‘ ‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!’ யாஷ்ஷின் பிறந்தநாளில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.

யாஷ் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா – ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.

அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.

ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்… அசைக்க முடியாத உறுதியுடனும்… முழுமையான கட்டுப்பாடுடனும்… ஒரு டாமி துப்பாக்கியுடன் ( tommy gun) அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை.. அதை தன்வசப்படுத்துகிறார்.

அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல… அவர் நோக்கம் – தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.

அதன் முதல் காட்சியிலிருந்து’ டாக்ஸிக்’ ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.

இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது… ‘டாக்ஸிக்’ ஒரு வழக்கமான திரைப்படம் அல்ல… அதை இயக்கும் ராயாவும் அப்படியானவர் அல்ல.

பல ஆண்டுகளாக யாஷ் ஒரு பயமற்ற .. ரிஸ்க் எடுப்பவர் என்ற நற்பெயரை உருவாக்கியுள்ளார். அவர் பாதுகாப்பிற்கு பதிலாக இலட்சியத்தையும்… சூத்திரங்களுக்கு பதிலாக தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் துணிச்சலான… அபாயகரமான முயற்சிகளாக கருதப்பட்ட படைப்புகளை.. புதிய அளவுகோல்களை வரையறுத்து, அதன் அளவு மற்றும் கதை சொல்லலில் அவரது உள்ளுணர்வு தாக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் தருகிறது என்பதை நிரூபித்துள்ளன.

‘டாக்ஸிக்’ அந்த பாரம்பரியத்தை தொடரும் ஒரு படைப்பு.

நடிகர் -இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக யாஷ் மீண்டும் ஒருமுறை புதிய களத்தில் அடி எடுத்து வைக்கிறார். சிக்கலான தன்மைகளையும்… இருண்ட பக்கங்களையும் ஒரு சர்வதேச அளவிலான கதை சொல்லும் பாணியையும் ராயா கதாபாத்திரம் மூலம் பின்பற்றுகிறார். அவர் தனது கடந்த காலத்தின் வெற்றிகளை போலவே படைப்பு துணிச்சலையும், நம்பிக்கையையும் நம்பி, முழுமையாக பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பிறந்தநாள் முன்னோட்டத்தின் தொடர்ச்சியாக புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவு படுத்துகிறது. அதன் அதிரடி நிறைந்த கதைக்களம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி இந்த உலகத்தை ஆழமாகவும், இன்னும் முழுமையாகவும் காணும் வாய்ப்பை வழங்குகிறது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) – தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. யாஷ் ஒரு சவாலை முன்னெடுக்கும் போது.. சினிமா அதற்கு பதிலளிக்கிறது. மேலும் ‘டாக்ஸிக்’ படத்துடனான பந்தயம் முன் எப்போதையும் விட அதிகமாகவே உள்ளது.

இப்படம் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” ( ‘Gandhi Talks’ )

Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” ( ‘Gandhi Talks’ ) – விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் A.R. ரஹ்மான் இசையில் 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது !!

Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”, வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது.

சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனது கருத்தை வெளிப்படுத்த சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது.

இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் அனைவரும் உரையாடல்களில்லாமல், முழுமையாக நடிப்பும் வெளிப்பாடும் மட்டுமே சார்ந்த கதையாடலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி போன்ற நடிகர்களுக்கு, ஒரு மௌன திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது, கலைநேர்மையையும் நடிப்பின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. வழக்கத்திற்கு மாறான, சவாலான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதற்காக அறியப்படும் இவர்களின் பங்கேற்பு, இந்த படத்தின் கலைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ், உரையாடல் இல்லாத நிலையிலும், மிக நுணுக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பின் மூலம், கதைக்கு மேலும் ஆழம் சேர்த்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, பின்னணியில் உழைத்திருப்பது A.R. ரஹ்மான் அவர்களின் இசை. காந்தி டாக்ஸ் படத்தில், பேசப்படாத வார்த்தைகளுக்குப் பதிலாக, ரஹ்மான் அவர்களின் இசையே உணர்ச்சிகளின் குரலாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாத இந்த உலகில், அவரது பின்னணி இசைதான் கதையாசிரியராக மாறி, பார்வையாளர்களை உணர்ச்சிப் பயணத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இந்த இசை, மௌனத்தை ஒரு வலுவான, ஆழமான அனுபவமாக மாற்றி, திரைப்படத்தை சர்வதேச தரம் கொண்ட, திரைப்பட விழாக்களுக்கு ஏற்ற படைப்பாக உயர்த்துகிறது.

திரைப்படத்தினைப் பற்றி இயக்குநர் கிஷோர் பெலேகர் கூறியதாவது:
“காந்தி டாக்ஸ்” என்பது மௌனத்தின் மீது வைத்த நம்பிக்கை. இந்திய சினிமா நூற்றாண்டை கடந்த இந்த வேளையில், அதன் அடிப்படை வடிவமான தூய நடிப்பும் உணர்ச்சியும் கொண்ட கதை சொல்லலுக்குத் திரும்ப விரும்பினோம். நடிகர்கள் அந்த வெளிப்படைத்தன்மையை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். A.R. ரஹ்மான் அவர்களின் இசையே இந்த படத்தின் குரலாக மாறியது. Zee Studios மற்றும் மீரா சோப்ராவின் ஆதரவுடன், நாங்கள் ஒரு துணிச்சலான, நேர்மையான சினிமாவை உருவாக்க முடிந்தது.”

“காந்தி டாக்ஸ்” மூலம், சினிமாவின் மரபுகளை சவாலுக்கு உட்படுத்தும், புதிய கதை மொழிகளை உருவாக்கும், மதிப்புமிக்க படைப்புகளை ஆதரிக்கும் தனது உறுதியை Zee Studios மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

30 ஜனவரி 2026 அன்று வெளியாகும் “காந்தி டாக்ஸ்”, ஒரு வார்த்தையும் பேசாமல், உணர்வுகளுடன் பேசும் ஒரு அபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும்.

“மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.

நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது.

அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.

இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் முறையாக தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை உண்மையான இசை கொண்டாட்டமாக மாற்றினார்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்து, வழங்கினார்.

அவரது ஆர்வம், துல்லியம் மற்றும் ஒப்பற்ற ஆற்றல், காலம் அவரது மேஜிக்கை குறைக்கவில்லை என்பதை நிரூபித்ததுடன், ரசிகர்களை மேலும் மேலும் அவரது நடனத்தைக் காணும் ஆவலைத் தூண்டியது.

அவர் தனது இணை நடிகர்களான யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடி, அந்த இரவை மேலும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றினார்.

நடிகர் யோகி பாபு, இந்த திரைப்படத்தில் 16 விதமான வேடங்களில் நடித்திருப்பதாக தெரிவித்து, இது கதையை முன்னெடுத்து செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறினார். இதுவரை வெளியிடப்பட்ட மூன்று தோற்றங்களே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல வேடங்கள் வெளிவரும் என தெரிவித்தார்.

நடிகர்கள் அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன், தங்களின் சரளமான தமிழ் பேச்சுகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து நடித்த இந்த சிறப்பு திரைப்படத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இருப்பது மகிழ்ச்சி எனத் தெரிவித்தனர். அர்ஜுன் அசோகனின் ‘மூன்வாக் நடன’ அசைவிற்கு பார்வையாளர்களிடமிருந்து சிறப்பு கைதட்டல் கிடைத்தது.

நடிகர்கள் சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, தீபா அக்கா, டாக்டர் ஜேக்கப் மற்றும் ராம்குமார் ஆகியோரும், இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டு, திரைப்படத்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சிவமணி, பாபா பாஸ்கர், சான்வீ மேக்னா, உத்தரா உன்னிகிருஷ்ணன், பார்வதி மீனாட்சி, வி அன்பீடபிள்ஸ், KTV சேத்ரி, பாபா ஜாக்சன், KMJ சிம்சன், J.R. பிரபுதேவா சக்ரி, நோபல் மாஸ்டர், ஜானி மாஸ்டர், அசோக் ராஜா மாஸ்டர் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டர் ஆகியோரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவிற்கு பெரும் கலைச்சுவையையும் மகிழ்ச்சியையும் சேர்த்தன.

இறுதியாக, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், மூன்வாக் திரைப்படத்தின் முழு குழுவினரும், 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடும் பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் நேரடியாக அனுபவித்த ரசிகர்கள் பேரானந்தத்தில் திளைத்தனர். அதிகாரப்பூர்வ பாடல்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. விளம்பர பணிகள் முழு வேகத்தில் தொடங்கவுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படம் 2026 மே மாதத்தில் பிரம்மாண்ட திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக்

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக திரையில் தோன்றுகிறார்.

இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது, முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது.

முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), நயன்தாரா (கங்கா), தாரா சுதாரியா (ரெபேக்கா) ( Rebecca) ,ஆகியோரின் கண்கவர் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்போது மெலிசாவாக ருக்மிணி வசந்தின் அறிமுகம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் உலகத்தை மேலும் அழகுபடுத்துகிறது.

1960-களின் இறுதிக் காலத்தை பின்னணியாகக் கொண்ட பார்ட்டி சூழலில், மெலிசா தன்னம்பிக்கையின் உருவமாக இயல்பாக நடிக்கிறார். அவளைச் சுற்றியுள்ள சத்தம், கலகலப்பும், கூட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் மீறி, அவளின் கண்களில் தெரியும் கூர்மையான உறுதி நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கூட்டத்தில் கூட, அவள் முழுமையாக தன் கட்டுப்பாட்டில், சூழலை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ஒரு ஆளுமை அவளின் நடையில், பார்வையில் வெளிப்படுகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது:

“ருக்மிணியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவளின் அறிவாற்றல். அவள் வெறும் நடிப்ப்பை மட்டும் வெளிப்படுத்துவதில்லை, அவள் ஆழமாக சிந்திக்கிறாள். சந்தேகத்தால் அல்ல, ஆர்வத்தால் கேள்விகள் கேட்கிறாள். அது என்னையும் இயக்குநராக மேலும் ஆழமாக யோசிக்க வைக்கிறது. சில நேரங்களில் நான் சிந்தித்த விசயங்களையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. திரையில் உள்ள அறிவாற்றல் பெரும்பாலும் சொல்லப்படாத இடங்களில்தான் இருக்கும் என்பதை அவள் நினைவூட்டுகிறாள். காட்சிகளுக்கு இடையில், அவள் அமைதியாக தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன்—செட்டிலிருந்து கிடைக்கும் சிறு அனுபவங்கள், எண்ணங்களை பதிவு செய்கிறாள். அந்தக் கணங்களே அவளின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவள் எப்போதும் தனக்கான தனி உலகத்தை கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறாள். அவளின் அணுகுமுறை மிகுந்தசிந்தனையுடையது சில நேரங்களில், அந்த அடுக்குகளான நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் மனதைப் புரிந்துகொள்ள, அவள் குறிப்பேட்டின் பக்கங்களைப் படிக்க முடியுமா என எனக்கு ஆசை கூட வருகிறது.”

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19-ம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்” !!

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ்,
டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் சமூகம் அப்பாவை பற்றிப் பேசுவதே இல்லை. அப்பாவின் பாசம், பெருமை, வலிகள், எதுவும் எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. “கப்சா” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் தயாரிப்பாளர் R.சந்துரு இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.

இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் முழு இசை வெளியீடு நடைபெறவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிப்பு:
பிரகாஷ் ராஜ்
டார்லிங் கிருஷ்ணா

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பாளர்கள் – R . சந்துரு , யமுனா சந்திரசேகர்
இயக்கம் – இராஜா மோகன்
நிர்வாக தயாரிப்பாளர் – தயால் பத்மநாபன்
ஒளிப்பதிவு – சுகுணன்
இசை – நகுல் அப்யங்கர்
படத்தொகுப்பு – ரகுநாத் A
கலை இயக்கம் – ஸ்ரீகாந்த்
இசை வெளியீடு – ஆனந்த் ஆடியோ
PRO – சதீஷ் (AIM) – தமிழ்

மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது.

“மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது..,
“‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபுதேவா சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் சார் உடன் இணைந்து நடந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாடல் திரையில் மிக அழகாக உருவாகியுள்ளது. பிரபுதேவா சார் இதில் தன் சிறந்த நடனங்களில் ஒன்றை வழங்கியிருக்கிறார். கொரியோகிராஃபர் சேகர் மாஸ்டருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஏ.ஆர், ரகுமான் சார் இந்த பாடல் முழுவதும் வருகிறார். அவரது இருப்பு, பாடலுக்கு கூடுதல் அழகையும் சுவாரஸ்யத்தையும் தந்துள்ளது. அந்த பாடலுக்கு பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்குமாறு சொன்ன போது , அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இது படத்தை காணும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். அவரை முதல் முதலாக நடிகராக இயக்கிய அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. படம் தொடங்கிய முதல் நாள் முதல் அவர் தந்த ஆதரவும் ஊக்கமும் மிகப்பெரிது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். செட்டில் அவர் நடிகராக ரசித்துக் கலந்து கொண்ட தருணங்கள் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.” திரையில் இதை காணும் ரசிகர்களுக்கும் இது எதிர்பாராத அனுபவமாக இருக்கும்.

அதே போல் பிரபுதேவா கதாப்பாத்திரமும் இப்படத்தில் மிகச்சிறப்பு மிக்கதாக இருக்கும். இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடனக் கலைஞர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படும் பிரபுதேவா, இந்தப் படத்தில் ‘பாபூட்டி’ என்ற இளம் திரைப்பட நடன இயக்குநராக நடித்துள்ளார். நடனம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கே வெளிப்படுத்தும் இந்தக் கதாபாத்திரம், படத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

மேலும், யோகி பாபு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘கவரிமான் நாராயணன்’ மற்றும் ‘ஆட்டுக்கால் அழகு ராசா’ என்ற இரண்டு கதாபாத்திரங்களுடன், மூன்றாவது கதாபாத்திரமாக ‘துபாய் மேத்யூ’ என்ற வேடத்திலும் தோன்றுகிறார். இது படத்தின் விசித்திரமான மற்றும் வித்தியாசமான அம்சமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும். மேலும் “யோகி பாபு சாரின் கதாபாத்திரம் தொடர்பான ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஆடியோ வெளியீட்டில் அறிவிக்கப்படும்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்தார்.

இப்படத்தில் அஜு வர்கீஸ் (‘லார்ட் ஜோகோவிச்’), அர்ஜுன் அசோகன் (‘லூனா’), சாட்ச் (‘ஜாஸ்மின்’), சுஷ்மிதா (‘சில்க்’), நிஷ்மா (‘நக்மா’), ஸ்வாமிநாதன் (‘பெரிய பண்ணை’), ரெடின் கிங்ஸ்லி (‘கண்ணு குட்டி’), ராஜேந்திரன் (‘மல்லிகார்ஜுன்’), தீபா அக்கா (‘கற்பூரழகி’), சந்தோஷ் ஜேக்கப் (‘தவசி’) மற்றும் ராம்குமார் (‘ராஜ் பப்பர்’) ஆகிய வேடங்களில் நடித்துள்ளனர். “இத்தனை திறமையான கலைஞர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது பெரும் ஆசீர்வாதம். ரசிகர்கள் இந்த திரைப்படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் போன்ற மாபெரும் கலைஞர்கள் ஒரே படத்தில் இணைவது மட்டுமல்லாமல், புதுமையான கதை சொல்லலுடன் “மூன்வாக்” ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது. இயக்குநர் மனோஜ் NS இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார் என்ற ஆவலைத்தூண்டியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 4-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம் 2026 மே மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

2005-ஆம் ஆண்டின் காதல் கதை “மாயபிம்பம்” – ஜனவரி 23 அன்று திரைக்கு வருகிறது !!

“மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.

2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும் இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் ஹிட் பாடலான “எனக்குள்ளே” பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் வெளியிட்டனர். இருவரும் பாடலை பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், முன்னணி இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பாடல்களையும் கேட்டுப் பாராட்டியுள்ளார்.

ஒரு அழகான காதல் அனுபவமாக உருவாகியுள்ள “மாயபிம்பம்” – வரும் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.