Breaking
June 7, 2026

Cinema

சீயான் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமாவின் தனித்துவமான நட்சத்திர நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சீயான் 62’ எனும் படத்தின் நட்சத்திர பட்டியலில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் படம் தயாராகி வருகிறது- இந்தப் படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு, பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் அண்மைக்காலமாக எந்த வேடம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்தி, ‘நடிப்பு அரக்கன்’ எனும் நற்பெயரை சம்பாதித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா, இந்த படத்தின் நட்சத்திர பட்டியலில் இணைந்திருக்கிறார். அத்துடன் எஸ். ஜே. சூர்யா அவருடைய திரைப்பயணத்தில் இது வரை பார்த்திராத.. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதனை படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது.

சீயான் விக்ரமும், எஸ் ஜே சூர்யாவும் முதன்முறையாகக் கூட்டணி அமைத்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.மேலும் இப்படத்தின் புதிய அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருங்கள்.

ஜீ. வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் (STARDA )

தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ எனும் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராக ஜீ. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது பாடகர் -இசையமைப்பாளர்- நடிகர்- தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுள்ள ஜீ. வி. பிரகாஷ்குமார், பாடகர்- பாடலாசிரியர்- நடிகர்- இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், நடிகரும், தொகுப்பாளருமான அபிஷேக் ராஜா, நடிகர் ஷ்யாம் குமார், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார், தனஞ்ஜெயன், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் ஸ்டார்டா பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடரான ஜீ. வி. பிரகாஷ்குமார் பேசுகையில்,“ நரேஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துகள். நான் சிறிய வயதிலிருந்தே திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். நிறைய புது இளம் திறமையாளர்களுடன் பணிபுரிந்து வந்திருக்கிறேன். வெற்றிமாறன், அட்லீ, ஏ. எல். விஜய், என பல புது இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் இதுவரை இருபத்திமூன்று படங்களில் நடித்திருக்கிறேன். இதில் பதினேழு படங்கள் புது இயக்குநர்கள் தான் இயக்கியிருக்கிறார்கள். நிறைய புதுமுக நடிகைகள், நிறைய புதுமுக பின்னணி பாடகர்கள், பாடகிகளுடன் பணியாற்றியிருக்கிறேன்.

குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள்… போன்றவற்றிற்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒத்துழைப்பதில்லை. ஆனால் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ‘ஸ்டார்டா’பிளாட்ஃபார்மை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதற்கும் மகிழ்கிறேன்.

பொதுவாக சினிமாவில் வாய்ப்பு தேடுவது எப்படி? என தெரியாது. மேனேஜரைப் பார்க்கவேண்டுமா..? இயக்குநர்களை பார்க்கவேண்டுமா..? அல்லது அவர்களது உதவியாளர்களை பார்க்கவேண்டுமா..? அலுவலத்திற்கு நேரடியாக செல்லவேண்டுமா..? அது எங்கேயிருக்கிறது?… இப்படி நிறைய விசயங்கள் இன்றைய தேதி வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. பாடல் எழுதும் பாடலாசிரியராகட்டும். பாடும் பாடகர்களாகட்டும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம்..எங்கு பார்க்கவேண்டும்? யாரை பார்க்கவேண்டும்? என்று கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பதிலாக இந்த பிளாட்ஃபார்ம் இருக்கிறது. இதை பெரிதும் வரவேற்கிறேன். ஏனெனில் இந்த பிளாட்ஃபார்மில் திறமைசாலிகள் கண்டறியப்பட்டு… அவர்களின் வீடியோவும் இடம்பெற்றிருக்கிறது. இது பெரிய பெரிய திரைப்பட நிறுவனங்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் போன்றவர்களுக்கு தங்களுக்கு தேவையான திறமையான கலைஞர்களை தேர்வு செய்ய பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும் பிளாட்ஃபாரமாக இந்த ‘ஸ்டார்டா’ இருக்கும் என எதிர்பாக்கிறேன். நிறைய பேருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த பிளாட்ஃபார்மில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். அதனால் இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிளாட்ஃபார்மின் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்புகிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்த பிளாட்ஃபார்மில் உள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்த பிளாட்ஃபார்ம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என உறுதியாக நம்புகிறேன். இங்கு வருகைத்தந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இதனைத் தொடர்ந்து ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் தயாரிப்பில் அபிஷேக் ராஜா இயக்கத்தில் உருவான விளம்பர படங்கள் திரையிடப்பட்டன. இவையனைத்தும் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருந்தது.

இதன் பிறகு நடிகர் ஷ்யாம் குமார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ் ஆகியோர் கலந்துகொண்ட குழு விவாதமும் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அவர்கள் திரைத்துறையில் நுழைவதற்காக எதிர்கொண்ட சவால்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட போது.. அது திரைத்துறையில் அறிமுகமாகி சாதிக்கவேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி- சந்தோஷ் நாராயணன்.

‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ‘மேக்கிங் மொமெண்ட்ஸ்’ அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால் திறந்தவெளியில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு விருப்பமான இசையை ரசிக்கமுடியும். இசைகலைஞர்கள் இசைக்கும் இசையை நேரடியாக அனுபவிக்கமுடியும். இத்தகைய இசை நிகழ்ச்சி பொதுவாக கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும். அதற்கு நன்றாக உட்கட்டமைப்புடன் கூடிய திறந்த வெளி அரங்கம் தேவை. அத்தகைய அரங்கமாக சென்னையில் அமையப்பெற்றிருப்பது தான் நேரு ஸ்டேடியம்.

இந்த ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள ஐ ஏ ஏஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.

சென்னையில் நடைபெறும் இசைநிகழ்ச்சியின் நோக்கம் லாபம் மட்டுமல்ல. ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது ஒரு கிரீன் கான்செர்ட்.

‘நீயே ஒளி’என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது ஏன்? என்றால், ரசிகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் வைத்திருக்கிறோம். மேலும் புத்தபெருமானின் வாசகத்தில் இந்த சொற்களும் உண்டு- அதனால் இதனை தேர்வு செய்திருக்கிறோம்.

இந்திய திரையுலக இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சி என்றால்… வழக்கமானதொரு உள்ளடக்கம் இருக்கும். அது வெற்றிப்பெற்ற உத்தியும் கூட ஆனால் எங்களின் இசைக்குழு நடத்தும் ‘நீயே ஒளி’ எனும் இசைநிகழ்ச்சி இதிலிருந்து மாறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞகள் என பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான பாடல்களுடன் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, ஏ. ஆர். ரஹ்மான், ஜீ வி பிரகாஷ் குமார், அனிரூத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெறும்.

கான்செர்ட்டின் கிராஃப் கூட எமோஷனலாக இருக்கும்.ஒரு திரைப்படம் போல் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த கான்செர்ட் நடக்கும். இது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளிலும் வெவ்வேறு எதிர்பாராத அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தினை முன்மாதிரியாக வைத்து தான் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ‘நீயே ஒளி’ என இசை நிகழ்ச்சிக்கு பெயரிட்டு, பிப்ரவரி 10 ஆம் தேதி மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறோம்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிடவேண்டாம். ஏனெனில் அதில் இந்தியாவின் எதிர்கால சாதனையாளர்களான பதினைந்து இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தவிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

கான்செர்ட் எனும் இந்த வடிவத்திலான பொழுதுபோக்கிற்கு மக்களின் ஆதரவு இருப்பதால் இதற்கு பெரும் சந்தை இருக்கிறது. அதற்கான தொடக்கமாக இதனை நாங்கள் கருதுகிறோம். இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு இசைத்துறையில் கற்பனையுடன் கூடிய ‘நீயே ஒளி’ போன்ற கான்செர்ட் பிரபலமாகும். அப்போது இதற்கு ஏராளமான விளம்பரதாரர்கள் கிடைக்கலாம். இதனால் இசை ரசிகர்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் குறைந்த கட்டணத்தில், இதை விட சிறப்பான இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம்.

சென்னையைப் பொருத்த வரை மக்கள் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகம். தற்போது ஒரு கோடி பேருக்கு மேல் சென்னையில் இருக்கிறார்கள். இதில் முப்பதாயிரம் பேர் வரை இது போன்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவைத் தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியுடன் ஓரிடத்தில் திரண்டு, இசையால் ஒன்றிணையவே விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இசையார்வம் கொண்ட புதிய தலைமுறை ரசிகர்களை ஒன்றிணைக்கும் புதிய பொழுதுபோக்கு தளமாகவும் இந்நிகழ்ச்சி அமையும் என நம்புகிறேன்.

இந்நிகழ்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள்.. மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். இந்த டிக்கெட்டை காண்பித்தால் அதிலுள்ள க்யூ ஆர் கோடு மூலம் ரசிகர்கள் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த சலுகையை ஊக்கப்படுத்தும் வகையில் நான் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இசைகலைஞர்கள் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயிலில் பயணித்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகைத்தந்து, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தரவிருக்கிறோம். அதேபோல் இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மெட்ரோ ரயிலில் பயணித்து வீடு திரும்ப போகிறேன். அந்நாளில் மெட்ரோ ரயில் இரவு பன்னிரண்டு மணி வரை இயங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் முழுக்க வெளிப்படையான அணுகுமுறையைத் தான் பின்பற்றவிருக்கிறோம். அதனால் அனைத்த தரப்பு ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரை நட்சத்திரங்கள், திரைப்பட இயக்குநர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ” என்றார்.

M.சசிகுமார் & லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், “ஃபிரீடம் ஆகஸ்ட் 14”

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், M.சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகி வரும் புதிய திரில்லர் டிராமா திரைப்படம் “ஃபிரீடம் ஆகஸ்ட் 14”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கன்னட நடிகர் கிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து, சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டனர்.

மிக வித்தியாசமான களத்தில் நடைபெறும் ஒரு கதையின் பிரதிபலிப்பை, ரசிகனுக்கு தரும் வகையில், அசத்தலான முறையில் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது. கடலுக்கு நடுவே படகில் மக்கள் நிற்க, வெடித்து சிதறும் நெருப்புக்கிடையில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இருக்கும் சசிகுமாரின் லுக்  படத்தின் மீதான  ஆவலைத் தூண்டுகிறது.

இன்னொரு போஸ்டரில் உணர்வுகளை ஆழமாக பிரதீக்கும் சசிகுமார், லிஜோமோல் தோற்றமும், படத்தின் பெயரும், பெரும் சுவாரஸ்யத்தை தருவதாக உள்ளது.  இந்த இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா, 90 களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.

90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தை திரையில் கச்சிதமாகக் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90 களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளை  படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நடிகர் சசிகுமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல்  ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராமன், முதல் முறையாக விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – விஜய கணபதி பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – பாண்டியன் பரசுராமன்
இயக்கம் – சத்ய சிவா
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – NS உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் NB
கலை இயக்கம் – C உதயகுமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

ஜெயம் ரவியின் “சைரன்”

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது…

இதுவரை நாங்கள் தயாரித்துள்ள படங்களுக்கு உங்கள் ஆதரவைத் தந்துள்ளீர்கள் அதேபோல் இந்த சைரனுக்கும் ஆதரவு தாருங்கள். ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் இந்த சைரன் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் எங்கள் அன்பு ஜெயம் ரவி இந்தப்படத்திலும் அசத்தியுள்ளார். என் மருமகன் என்பதால் கூறவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். இந்தப் படம் அவர் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். ஜெயம் ரவிக்கு இணையாக எதிர்த்து நிற்க, அவரால் முடியுமா என முதலில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது, ஆனால் இந்தப்படத்திற்காக 5 கிலோ எடைகூட்டி அந்த போலீஸ் உடையில் கச்சிதமாக இருந்தார். அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி எல்லா பாத்திரங்களிலும் எல்லா மொழிகளிலும் அசத்துகிறார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார். அவர் நடிப்பு பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். அழகம் பெருமாள், அஜய், துளசி மேடம், சாந்தினி இன்னும் பலர் நடித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரன் ப்யூட்டிஃபுல்லான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த விழா நாயகன் ஜீவி அருமையான நான்கு பாடல்கள் தந்துள்ளார், அவருக்கு நன்றி. கேமராமேன் செல்வகுமார் அவ்வளவு அற்புதமான விஷுவல்கள் தந்துள்ளார். திலீப் மாஸ்டர் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுத்துள்ளார். படத்தில் எல்லோரும் தங்கள் உயிரை தந்து உழைத்துள்ளனர். ரூபன் எங்கள் ஃபேமிலி மாதிரி. எல்லா படத்திலும் இருப்பார். அந்தோணி பாக்யராஜை ரூபன் தான் அறிமுகப்படுத்தினார். நிறைய வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார். எனக்கு முதலில் சொன்னது காமெடி கதை. ரவியிடம் தான் இந்தக் கதையைச் சொன்னார். சொன்ன மாதிரி நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசியதாவது…

மாநகரம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையில் வேலை செய்கிறேன். டைரக்டர் அந்தோணி கதை சொல்லும் போதே சுவாரஸ்யமாக இருந்தது. அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங் செம ஜாலியாக இருந்தது. ஆனால் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லாமே இருக்கும். ஜெயம் ரவி ரொம்ப எளிமையாகப் பழகினார். எனக்குப் பிடித்த படி எடுத்திருக்கிறேன். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். சுஜாதா மேடம் எனக்கு நிறைய ஆதரவு தந்தார்கள். இந்த வருடத்தில் தமிழில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும்.

எடிட்டர் ரூபன் பேசியதாவது…

ஒரு படத்திற்கு இயக்குநரின் பார்வைதான் முக்கியம், ஆனால் அவர்களின் பார்வை இங்கு எளிதாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. கதையை நம்பி பல நல்ல இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கு நன்றி. என்னை நம்பி கதை கேட்டு, அதை ஒப்புக் கொண்டார். எனக்கு உரிமையான ஃபேமிலியாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை நினைக்கிறேன். அதனால் தான் வாய்ப்பு கேட்க முடிந்தது. என்னை அவ்வளவு நம்புவார்கள். அந்தோணி என் காலேஜ் ஜூனியர் தான். நிறைய பெரிய படங்களில் ரைட்டராக வேலை பார்த்திருக்கிறார். இயக்குநராகும் அவரது கனவு இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. மிக நன்றாக படத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்தக் குழு எனக்கு ஃபேமிலி மாதிரி தான். இப்படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் நடித்த அனைவருமே நன்றாக பணியாற்றியுள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் அழகம் பெருமாள் பேசியதாவது…

ஜெயம் ரவி உடன் மிக அருமையான பயணம். கீர்த்தி, அனுபமா எல்லோருடனும் மிக இனிமையான அனுபவமாக இருந்தது. அந்தோணி ரைட்டராக இருந்த காலத்திலிருந்தே தெரியும். அவரது முதல் படம் வெற்றிப்படமாக வாழ்த்துக்கள். ஜீவிக்கு இந்தப் படம் மிக நல்ல படமாக அமையும். ஜெயம் ரவிக்கு மிகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும். உங்கள் அன்பையும் ஆதரவையும் இப்படத்திற்கு தாருங்கள் நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

இந்த நிறுவனத்தில் 18 வருடங்களுக்கு முன் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன். தயாரிப்பாளர் சுஜாதா அவர்கள் நான் சின்னத்திரையில் இருக்கும் போதே என்னை வாழ்த்தி கொண்டே இருப்பார் . நான் பெரிய ஆளாக வருவேன் எனச் சொல்வார். சினிமாவில் எல்லாமே தெரிந்த ஒரு தம்பி ஜெயம் ரவி. அவரது திறமைக்கு இன்னும் பெரிய இடம் காத்திருக்கிறது. அவரோடு இன்னும் 100 படங்கள் நடிக்கலாம். அவருடன் நிமிர்ந்து நில் படம் பணியாற்றினேன். அந்தப்படத்தில் அவர் போட்ட உழைப்பு மிகப்பெரியது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அவர்களுக்குத் தேவையானதைச் சிரித்துக்கொண்டே வாங்கி விடுவார்கள். எடிட்டர் ரூபன் இந்த வருடம் இயக்குநராகிவிடுவார். அழகம் பெருமாள் அண்ணனுடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். 108 அலுவலகம் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அதை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது அத்தனை பெரிய அமைப்பு. அந்த உழைப்பாளர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் இருக்கும் நன்றி.

ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

அந்தோணி டார்லிங் படத்திலேயே துணை இயக்குனராக வேலை பார்த்தவர். பல படங்களில் வேலை பார்த்துள்ளார். இந்தப் படம் இயக்குநராக முதல் படம் அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கிஃப்டட் ரைட்டர். கண்டிப்பாக அவருக்கு இது வெற்றி படமாக இருக்கும். ஜெயம் ரவி மிக மெச்சூர்டா நடித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு நல்ல வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஒரு சிலர் மட்டும் தான் என்னிடம் மெலடி கேட்பார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி நல்ல பாடல்கள் வந்துள்ளது. கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசியதாவது…

இந்தப் படம் எனக்கு கனவு மாதிரி. முதலில் ரூபன் என் காலேஜ் சீனியர். அவர் சொல்லி அனுப்பி தான் இரும்புத்திரை படத்தில் ரைட்டராக மாறினேன். பின்னர் இயக்குநராக வேண்டி அலைந்து கொண்டிருந்தேன். ரூபன் அண்ணா ஒரு நாள் ரவி சார் எப்படி இருப்பார் என்றார். உடனே அவரிடம் அனுப்பி வைத்தார், எல்லாமே நடந்தது. அவர் தான் சுஜாதா மேடத்திடமும் என்னை அறிமுகப்படுத்தினார். ரவி சாருக்கு கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து உடனே ஆரம்பிக்கலாம் என்றார். ரவி சார் என்னை முழுமையாக நம்பினார். நடிக்கும் போது என்ன எடுத்தீர்கள் என்று கூட அவர் கேட்டதில்லை. அவர் வைத்த நம்பிக்கையை உடைத்துவிடக்கூடாது என்பது தான் எனக்கு முக்கியமாக இருந்தது. புது இயக்குநர்கள் பெரிய ஹீரோக்கு செய்யும் படம் ஜெயிக்க வேண்டும். அப்போது தான் இனி புது இயக்குநர்கள் பலர் வர முடியும். அழகம் பெருமாள் சாரை ஷீட்டிங்கு முதல் நாளில் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். கனி அண்ணனிடம் கதை சொன்ன போதே, இந்தக்கதை ஹிட்டுடா என்றார். இந்தக்கதையைத் தாங்கும் ஜெயம் ரவி இருக்கிறார், படம் ஜெயிக்கும் என்றார் நன்றி அண்ணா. ஜீவி அண்ணாவின் மெலடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் தான் எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப்படத்திற்காக 20 ட்யூன் தந்துள்ளார். அவருக்கு நன்றி. செல்வா, வேறு வேறு களங்களில் படம் செய்தவர். இந்தப்படத்தை அவ்வளவு லைவ்வாக எடுத்துத் தந்தார். திலீப் மாஸ்டர் கதைக்குள்ளேயே யோசிப்பார், எனக்காக நிறையச் செய்தார். சுஜாதா மேடம் இந்தக்கதையை முழுசாக கேட்கவில்லை. ரவி சாருக்காக செய்தார். நானே காம்ப்ரமைஸ் செய்தாலும் அவர் செய்யவிட மாட்டார். ரொம்ப ரொம்ப நன்றி மேடம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே தங்கள் படம் போல வேலை செய்தார்கள். கீர்த்தி அற்புதமாக நடித்துள்ளார். அனுபமாவிற்கு முக்கியமான ரோல். தமிழில் இது அவங்களுக்கு முக்கியமான படமாக இருக்கும். மக்களிடம் கொண்டு போய் இப்படத்தைச் சேர்க்க உங்கள் உதவி முக்கியம். நன்றி.

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீஸுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றியடையும். எப்போதும் எனக்கு அவர் ஃபேமிலி மாதிரி தான். இந்தப்படம் வேறு புரடியூசர் போகலாம் என்ற போது, சுஜாதா அம்மா விடவே இல்லை. கண்டிப்பாக நம்ம தான் பண்ணனும் என்று பிடிவாதமாக இருந்தார். ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும் , அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜீவி தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி. இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். என்னப்போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே என்பார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார் அருமையாகச் செய்துள்ளார் நன்றி. அழகம் பெருமாள் சார் அடங்கமறு படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்தேன். அவருடனான ஜர்னி இன்னும் தொடர வேண்டும். இயக்குநரும் செல்வாவும் டிவின்ஸ் மாதிரி அத்தனை ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்கள் உழைப்பை மக்கள் பாராட்டுவார்கள். இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் அவரை நீங்கள் பார்ப்பீர்கள். நான் புது இயக்குநர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம், இந்தப்படம் ரெண்டு ரோல் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். யோகிபாபு நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரசியுங்கள்.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – அந்தோணி பாக்யராஜ்
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பிண்ணனி இசை – சாம் CS
ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர்
கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ் M ச
சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
பாடல் நடன அமைப்பாளர்: பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன்
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் G அழகியகூத்தன் S
ஒப்பனை: மாரியப்பன்
ஆடைகள்: பெருமாள் செல்வம்
VFX : டிடிஎம் லவன் குசன்
வண்ணம்: பிரசாத் சோமசேகர்
DI: நாக் ஸ்டுடியோஸ்
ஸ்டில்ஸ் : கோமளம் ரஞ்சித்
நிர்வாக தயாரிப்பாளர்: ஓமர்
தயாரிப்பு நிர்வாகி: சக்கரத்தாழ்வார் G
தயாரிப்பு மேலாளர்: அஸ்கர் அலி
புரமோசன் ஹெட் – ஷ்யாம்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
மோஷன் போஸ்டர்: வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்..

பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். “அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இயக்குநர் ஆதிராஜன் பேசும்போது, “இந்த படத்தில் முதன்முறையாக இளையராஜா சாருடன் பணியாற்றியுள்ளேன். இசைஞானியை அணுகுவதே கடினம் என்றும் அவருடன் எளிதாக பணியாற்ற முடியாது என்றும் சொல்வார்கள். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது மிகவும் சவுகரியமாக உணரும்படி எனக்கு இசையமைத்துக் கொடுத்தார் இளையராஜா. ஐந்து பாடல்களும் அற்புதமான பாடல்கள். யுவன் சங்கர் ராஜாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். மதுரையில் என்னுடைய நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த காதல் கதையை உருவாக்கி உள்ளேன். இதில் 70 சதவீதம் உண்மை மற்றும் 30 சதவீதம் கற்பனை கலந்து கொடுத்திருக்கிறேன். எல்லோரும் பள்ளி பருவத்தைத் தாண்டி தான் வந்திருப்பார்கள். மண்ணுக்குள் போகும் வரை யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம் முதல் காதல். அதை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்” என்று கூறினார்.

இளம் நாயகி யுவலட்சுமி பேசும்போது, “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இசைஞானியின் இசையில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அதை பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன். பள்ளிக் காதல் என்பது மறக்க முடியாத ஒரு விஷயம் தான். எல்லாருமே அதைக் கடந்து வந்திருப்போம். இதை மையப்படுத்தி ஆதிராஜன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். அதில் நானும் ஒரு பாகமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

நடிகை மதுமிதா பேசும்போது, “’நினைவெல்லாம் நீயடா’ படம் வாழ்நாள் நாள் முழுவதும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. என்னுடைய பிரசவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை கூட இதன் படப்பிடிப்பில் நடித்து வந்தேன். இயக்குநர் ஆக்சன் என்று மைக்கில் சொல்லும்போது அந்த அதிர்வை கேட்டு என் வயிற்றில் உள்ள குழந்தை என்னை எட்டி உதைப்பான். அதை மறக்கவே முடியாது. பத்திரிகையாளரும் நடிகருமான தேவராஜ் என்னோடு நடிக்கும்போது, எத்தனையோ டெடிக்கேசனான நடிகைகளைப் பார்த்திருக்கேன். ஆனா மூணு நாள்ல டெலிவரியை வச்சிக்கிட்டு நடிக்கிற ஒரு நடிகையை இப்போதான் பார்க்கிறேன் எனப் பாராட்டினார். எனக்குக் கிடைத்த முக்கியமான வாழ்த்தாக அதைப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு படம் உருவாகி வெளியாகும் வரை ஒரு பேறுகாலம் போலத்தான். பெண்களுக்கு உள்ள அத்தனை அவஸ்தைகளும் அவர்களுக்கும் உண்டு. அந்த வகையில் இயக்குநர் ஆதிராஜனுக்கு நல்ல வெற்றியைத் தரக்கூடிய ஒரு குழந்தையாக இப்படம் இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

இரண்டாவது நாயகன் ரோஹித் பேசும்போது, “2013ல் இருந்து சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். 2021ல் இயக்குநர் ஆதிராஜன் என்னை அழைத்து இதில் கதாநாயகனாக நடிக்கிறாயா என்று கேட்டார். அந்த விதமாக இப்போதுதான் ஒரு மெயின் கேரக்டரில் நடித்துள்ளேன்” என்று கூறினார்.

இரண்டாம் நாயகி சினாமிகா பேசும்போது, “இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கும். என்னுடைய ஆசையும் இந்த படத்தில் தான் நிறைவேறி இருக்கிறது. அவருடைய இசைமேல் எனக்கு அவ்வளவு காதல் இருக்கிறது. அவரது பாடல்களைக் கேட்டுத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். என்னுடைய முதல் படமே இசைஞானி இசையில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஆதிராஜனுக்கு நன்றி” என்று கூறினார்.

நடிகை கோமல் ஷர்மா பேசும்போது, “உலகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் எதையும் தொட முடியாது, கண்ணால் பார்க்க முடியாது என அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலன் கெல்லர் என்பவர் கூறியுள்ளார். இசையும் காதலும் அதுபோலத்தான். இசைஞானியின் இசையும் காதலும் என இரண்டு அற்புதமான விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. இப்போது காதல் படங்கள் அதிகம் வருவதில்லை. அந்தக் குறையை இப்படம் போக்கும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, “ஆதிராஜன் நீண்ட நெடுங்காலமாகவே என்னுடைய தம்பியாக உடன் வருபவர். அவர் பத்திரிகையாளராக இருக்கும்போது சில புரட்சிகள் செய்தவர். நான் சில முறை ஜெயிலுக்கு போவதற்கும் அவர்தான் காரணம். ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் ஒரு படத்தின் தோல்விக்கான அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து ‘சிலந்தி’ படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.

‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. மரியாதை குறைவான டைட்டிலாக இருந்தாலும் காதலின் நெருக்கத்தை சொல்வதற்கு பொருத்தமான டைட்டில் தான். இப்படத்தில் இளம் ஜோடிகளைப் பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக், ராதாவை பார்ப்பது போல இருக்கிறது.

இப்போது வரை சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதமாவது செய்ய வேண்டும். மக்களிடம் இறங்கி வர வேண்டும். மேடையில் இருந்து கொண்டு புஷ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 200 கோடி சம்பளத்தையும் வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்” என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது எல்லா உணர்வுகளுக்கும் இசை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இந்த காதல் உணர்வு எல்லாம் அவருக்கு சாதாரண விஷயம். படத்தின் நாயகி யுவலட்சுமிக்கு இந்த பாடல் மூலமாகவே மிகப்பெரிய ரீச் கிடைக்கும். முன்பெல்லாம் நாங்கள் தயாரிப்பாளர்களின் இயக்குநர்களாக இருந்தோம். இப்போதைய காலம் நடிகர்களின் தயாரிப்பாளர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள். முதன்முறையாக இளையராஜா தனது ஆடியோ உரிமையை எடுத்துக் கொள்ளாமல் இவர்களிடமே கொடுத்துவிட்டார். அதுதான் இளையராஜா. விஜய் சாரைத் தொடர்ந்து எல்லா நடிகர்களும் ஒரு கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் நமக்கெல்லாம் நிறைய வேலை கிடைக்கும்” என்று கூறினார்.

பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “ஆதிராஜன் நான் பாடல் எழுத துவங்கிய காலகட்டத்தில் இருந்து எனக்கு நெருங்கிய நண்பர். அவரது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் இந்த “நினைவெல்லாம் நீயடா” படம் வந்திருக்கிறது. இதில் மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறேன். இதுவரை நான் 3000 பாடல்கள் எழுதி இருந்தாலும் அதில் 30 பாடல்கள் தான் கமர்சியல் பாடல்கள். 500 பாடல்களாவது மிகச்சிறந்த பாடல்கள் ஆக இருக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் பாடல்களைத் தூக்கி விமர்சனம் செய்ய விரும்பாத இந்த சமூகம் என்னுடைய கமர்சியல் பாடல்களை எடுத்து விமர்சனம் செய்து கொண்டு, ‘இதுதான் சினேகன்’ என்று சொல்லும்போது எனக்கு வலிக்கிறது. நானும் கதைக்கு பாடல் எழுத வேண்டும் என்று தான் ஓடி வந்தேன். இந்த சினிமா என்னை சதைக்கு பாடல் எழுத வைத்து விட்டது. என்னுடைய முகவரி அது அல்ல. என்னுடைய முதல் படத்திலேயே விருது வாங்கியவன் நான். இந்த சமூகம் ஏன் நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டாட மாட்டேன் என்கிறது? காதல் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்த்தால் அது காதலும் இல்லை. இங்கே தோற்பது காதலர்கள் தானே தவிர காதல் ஒருபோதும் தோற்காது: என்று கூறினார்.

இயக்குநர் கே.ஆர் பேசும்போது, “இந்த விழாவில் கலந்து கொண்ட எல்லோரும் ஏதோ பேச வேண்டும் என்று நினைத்து தங்களை அறியாமல் உண்மையை பேசி உள்ளார்கள். ஒரு பட்டிமன்றம் ஆகவே இந்த விழா மாறிவிட்டது. ஆதிராஜனை எனக்கு ஆதி காலத்திலிருந்தே தெரியும். பத்திரிகை துறையில் இருந்து அவர் இயக்குநராக வந்திருந்தாலும் பல போராட்டங்களைத் தாண்டித்தான் இந்த இடத்தில் நிற்கிறார். இளையராஜாவால் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல.. தமிழ் நாட்டுக்கே பெருமை. அப்படி ஒரு இசை மேதை இல்லை என்றால் இன்று நம் சினிமா எப்போதோ செத்துப் போய் இருக்கும்” என்று கூறினார்.

நாயகன் பிரஜின் பேசும்போது, “முதல் காதல், முதல் முத்தம் என எல்லாமே ஞாபகம் இருக்கும். வரும் பிப்ரவரி 14 வந்தால் எங்களது காதலுக்கு பதினாறு வருடம். எனக்கு இரண்டு குழந்தைகள் (ட்வின்ஸ்) உள்ளனர். என் அம்மா அப்பாவைத் தாண்டி இந்த இடத்திற்கு நான் வர மிகவும் ஆதரவாக இருந்தவர் என் மனைவி சாண்ட்ரா. இந்தப் படத்தில் இயக்குநர் ஆதிராஜன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகப் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார். முதல்முறையாக இந்த படத்தின் பூஜையின் போது தான் நான் இளையராஜா சாரை பார்த்தேன். அவரைப் பார்த்த போது பேச்சே வரவில்லை. எப்போதும் காதல் தோல்வி அடைந்தது இல்லை.. அதே போல காதல் படமும் தோல்வி அடையாது” என்று கூறினார்.

தயாரிப்பாளர் ராயல் பாபு பேசும்போது, “ஆதிராஜன் என்னிடம் இப்படத்தின் கதையை சொல்லும்போதே முதல் காதலை கொண்ட ஒரு திரைப்படம் என்று சொன்னார். எனக்கு ரொம்பவே கதை பிடித்து இருந்தது. படத்திற்கு பூஜை போடுவதற்காக எங்கெங்கோ இடம் தேடி அலைந்தபோது இசைஞானி இளையராஜா எங்களை அழைத்து எங்கேயும் போக வேண்டாம் என்னுடைய இடத்திலேயே பூஜையை நடத்துங்கள் என்று கூறி இடம் கொடுத்தார்.

ஒரு புது தயாரிப்பாளராக எனக்கு அவர் கொடுத்த மரியாதை மிகப் பெரிய சந்தோஷம்” என்று கூறினார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நான்கு புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!

4 புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும்.

இந்த நான்கு படங்களின் தொகுப்பு, டிசம்பர் 30 அன்று பார்க்கிங் திரைப்படம் மற்றும் ஜனவரி 15 இல் ஜோ திரைப்படத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 முதல் ஃபைட் கிளப் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

இந்த புதிய திட்டத்தின் இறுதிப் படமாக – சபா நாயகன் படத்தினை பிப்ரவரி 14 அன்று ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் ‘பார்க்கிங்’, இது டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது, இப்படத்தில் முன்னணி நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர், இப்படம் ஈகோ அதிகமிருக்கும் இரண்டு மனிதர்களைச் சுற்றி, ஒரு கார் பார்க்கிங் இடத்திற்காக நிகழும் பிரச்சனையை யதார்த்தமான சம்பவங்களுடன் பரபரப்பாகச் சொல்கிறது.

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் நடிப்பில், இயக்குநர் S ஹரிஹரன் ராமின் இயக்கத்தில் காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘ஜோ’, இப்படம் ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.

ஜோ (ரியோ) எனும் இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.

நடிகர்கள் விஜய் குமார் மற்றும் மோனிஷா மோகன் மேனன் நடிப்பில் இயக்குநர் அப்பாஸ் A ரஹ்மத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படம் ஃபைட் கிளப். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் இளைஞர்களின் நட்பு, நம்பிக்கை, துரோகம் மற்றும் அவர்கள் நிலத்தின் பிரச்சனைகள் மீது வெளிச்சம் பாய்ச்சும் தீவிரமான கதையை இப்படம் பேசுகிறது.

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் C S கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் “சபா நாயகன்”. ரசிகர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடிப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் !!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை தந்த, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க, புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி இணையும் அறிவுப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், சமீபத்தில் லேபிள் சீரிஸ் மூலம் சொல்லப்படாத களத்தில் அருமையான கருப்பொருளை பேசி பெரும் பாராட்டுக்களைக் குவித்தார். இந்நிலையில் அவர் அடுத்ததாக விஷ்ணு விஷால் உடன் இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறியுள்ளது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகள் தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் விஷ்ணு விஷால். சூப்பரஸ்டார் ரஜினியுடன் இணைந்து அவர் நடித்துள்ள லால் சலாம் வெளிவரவுள்ள நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான அவரது கூட்டணி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘‘எனக்கொரு WIFE வேணுமடா’’

பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குனர் சீனு ராமசாமி

பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளது. ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜியா அறிமுகம் ஆகிறார்.

இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் இன்று வெளியிட்டார்.

‘நித்தம் ஒரு வானம்’, சமீபத்தில் வெளியான ‘செவப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் செபாஸ்டின் அந்தோணி இதில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் – ஜியா. ஒளிப்பதிவு – அபிஷேக். படத்தொகுப்பு – பிரசாத் ஏ.கே.
தயாரிப்பு – அமோகன். இசை வடிவமைப்பு – மிதுன். ஒலிப்பதிவு – கோகுல் ராஜசேகர். மேக்அப் – பவித்ரா. பிஆர்ஓ – டீம் ஏய்ம் சதீஷ்.

விஸ்வம்பரா படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிகை த்ரிஷா

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் “ஸ்டாலின்” படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும் “விஸ்வம்பரா” படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத்
பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா
எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ