‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது
பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகிவிட்டது.
செபாஸ்டின் அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழுநீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை ஜியா இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது குறும்படமாகும். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத், எடிட்டிங். மேக்அப், பவித்ரா.
பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ வெளியாகிவிட்டது. 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
ஓஎம்ஆரில் திறக்கப்பட்டிருக்கும் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ
ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். அதிலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் தாங்கள் பணியாற்றும் அல்லது தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களை உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் சர்வதேச தரத்துடன் கூடிய ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் ஜிம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதன் திறப்பு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் (பொருளாதார குற்றப்பிரிவு) திரு கே. ஜோஸ் தங்கய்யா, தாம்பரம் மாநகர காவல் துறையின் உதவி ஆணையர் திரு ஆர். ரியாசுதீன், நீலாங்கரை சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. பரத், சென்னை தெற்கு குற்றவியல் குழு காவல் ஆய்வாளர் திரு எஸ். மீனாட்சி சுந்தரம்,உதவி காவல் ஆய்வாளர் திரு. ரஞ்சித் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரைத்துறையைச் சார்ந்த நட்சத்திர நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும், சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ், ‘சீயான்’ விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உடற்பற்சிகூடத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் ஐஸ்பாத், ஸ்டீம்பத் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த ஜிம்ல் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் உட்கட்டமைப்பை துபாயில் பல ஆண்டுகளாக இன்டீரியர் டிசைனிங் நிபுணராக பணியாற்றி மற்றும் சென்னையில் உள்ள நியாம் ஸ்டுடியோவின் உரிமையாளருமான நிவேதிதா மோகனின் வழிகாட்டலுடன் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வதேச தரத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இங்கு பயிற்சிக்காக பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து உபகரணங்களும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெல்கேர் நிறுவ.னத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் ஆகும்
இந்த ஜிம்மில் பிரத்யேக உடற்பயிற்சியுடன், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. உங்களது விருப்பத்திற்குரிய பொலிவான தோற்றத்தை பெறுவதற்கான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
உடற்பயிற்சியுடன் உங்களது உடல்வாகுக்கு ஏற்ற அளவிலான உணவு பட்டியல், ஊட்டச்சத்து பட்டியல் ஆகியவற்றுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இதனுடன் ஆணழகனுக்கான பயிற்சி, ,பெண்களுக்கான பியூட்டி பேஜென்ட், திருமணமாக இருப்பவர்களுக்கான மேக்ஓவர் பயிற்சி, ஆண்களுக்கான உடல் உறுதி பயிற்சி, தசை வலிமைக்கான பயிற்சி என பிரத்யேக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில்
G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
‘இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்.
அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு – ஓம் நாராயண் எடிட்டிங் – எம். தியாகராஜன் கலை – எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.
பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யன் இயக்கத்தில் இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் ‘சத்தியமங்கலா’
உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகளை வென்றவருமான ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் அயிரா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் ஷசிரேகா நாயுடு தயாரிக்கின்றனர்.
‘கோலி சோடா’ புகழ் முனிகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் ‘சத்தியமங்கலா’ படத்தில் கதாநாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். தி கிரேட் காளி (WWE உலக சாம்பியன்), பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத் மற்றும் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் ஆர்யன் பேசுகையில், “காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக ‘சத்தியமங்கலா’ உருவாகி வருகிறது. இப்படத்தில் தான் ஏற்றிருக்கும் மிகவும் சவாலான பாத்திரத்திற்காக முனிகிருஷ்ணாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அசாத்தியமானது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இலங்கை, பாங்காக், நேபாளம், தமிழ்நாடு, கர்நாடக வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது கட்டம் படமாக்கப்படுகிறது. மிகவும் சிறப்பாக இப்படம் உருவாகி வருகிறது,” என்றார்.
ஆர்யன் மேலும் கூறியதாவது: “இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களான ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா நிறுவனங்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பரபரப்பான திரில் அனுபவமாக இருக்கும்.”
‘சத்தியமங்கலா’ படத்திற்கு ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்ய, வீர் சமர்த் இசையமைக்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கையாள்கிறார். ஸ்டீபன் எம் ஜோசப் வசனங்களை எழுத, சின்னி பிரகாஷ் நடன வடிவமைப்பை கவனிக்க, பீட்டர் ஹியன் சண்டைப் பயிற்சியை வழங்குகிறார்.
ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் அயிரா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் சசிரேகா நாயுடு தயாரிக்க, முனிகிருஷ்ணா, கனக் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கம் ஆர்யன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்தியமங்கலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து, 3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று தர்மா புரடக்சனில் ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்தையும் அறிவித்துள்ளார். வளரும் இளம் நட்சத்திரமாக, இளைஞர்களைக் கொள்ளைக்கொண்டு வரும் நாயகி ஜான்வி கபூர், தற்போது தென்னிந்தியாவிலும் கால் பதித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி கூறியதாவது..,
ஒரு மிகப்பெரிய படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இப்போது தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஜான்வி கபூரின் தாயார், பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி, ஜூனியர் என்டிஆரின் தாத்தா – என்.டி ராமாராவ் உடன் தனது தென்னிந்திய அறிமுகத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீதேவி போல ஜான்வியும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருப்பதன் மூலம், வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும் ஒரு சிறப்பாக நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடிகை ஜான்வி கபூர், நடிகர் ஜூனியர் என்டிஆருடன் அறிமுகமாகிறார்!
மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி, தேவாரா, உலஜ் போன்ற பிரமாண்டமான வெளியீடுகளுடன், சன்னி சங்கிகாரி கி துளசி குமாரி என ஜான்வி கபூரின் திரைப்பட வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.
”தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும்” – இணை தயாரிப்பாளர் சந்துரு
”ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை.” – அறிமுக இயக்குநர் மீரா மஹதி
”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்
“சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – மிஷ்கின்
ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு பேசியதாவது…
ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் நான் அதற்கு முன்னர் ஒரு டீசர் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். ஏனென்றால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எந்த கோணத்தில் படத்தை அணுகுகிறீர்களோ, ஆடியன்ஸும் அதே மனநிலையில் தான் அப்படத்தை அணுகுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. மேலும் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதுகின்ற எழுத்து தான் அப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என்றும் நம்புகிறேன். ஒரு மூன்று வருடத்திற்கு முன்பு அவ்வளவு தான் இனி வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்று எண்ணிக் கொண்டு, என் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருந்த போது ஒரு கை வந்து என்னைத் தூக்கியது. அது தீரஜ்ஜின் கை. அவர் தான் என்னை முதன்முதலில் திரைக்கதைக்குள் வாருங்கள் என்று அழைத்துப் போனார். அப்படி என்னைக் கைப்பற்றி அழைத்து இன்று இங்கே கூட்டி வந்து விட்டுவிட்டார். மூன்று வருடங்களாக திரைக்கதையில் உழைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
அந்த வீடியோவில் பார்த்திருப்பீர்கள்; பி.எம்.டபிள்யூ, கார் வாங்கலாம். ஆடி கார் வாங்கலாம். ஆனால் அதற்கான எரிபொருள் என்பது எப்போதும் பிரஸ் அண்ட் மீடியாவாகிய நீங்கள் தான். ஏனென்றால் உங்கள் எழுத்திற்குத் தான் ஆடியன்ஸை தியேட்டருக்குள் அழைத்து வரும் வல்லமை இருக்கிறது. அதனால் இப்படத்தினை சப்போர்ட் செய்யுங்கள். .
நம் வீடுகளில் ஒரு வழக்கம் இருக்கும். குழந்தைகள் டிவியில் ஆங்கில கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் தமிழ் கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்தால் உடனே மாற்றிவிடுவோம். ‘டபுள் டக்கர்’ படம் வெளியானதும், இந்த நிலை மாறும். தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும் என்று நம்புகிறேன். இது போன்ற கார்ட்டூன் படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். அப்பொழுது தான் புது முயற்சிகளை துணிந்து நாங்கள் செயல்படுத்துவோம்.
படத்தொகுப்பாளர் வெற்றிவேல் பேசும் போது…
இது நான் எடிட்டராக பணியாற்றும் முதல் படம். அஸிஸ்டெண்ட் ஆக பணியாற்றும் போது அங்கு கூட்டத்தில் நின்று மேடையைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்று இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. ‘டபுள் டக்கர்’ ஒரு அனிமேஷன் திரைப்படம். எனக்கு காட்சிகள் Empty Plates ஆகத் தான் வரும். அதைக் கொண்டு காட்சிகளை எடிட் செய்வது சவால் நிறைந்தது. இந்த வார்த்தை எல்லோரும் சொல்லக் கூடியது தான். ஆனால் படம் பார்க்கும் போது அந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். இப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு என் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
நாயகி ஸ்முரிதி வெங்கட் பேசும் போது…
இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு சார் அவர்களுக்கு நன்றி. அவர் மிகவும் அமைதியானவர்., ஆனால் எங்கள் ஹீரோ தீரஜ் அப்படியே நேர் எதிரானவர். அவர் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். எங்கள் இயக்குநர் மீரா மஹதி எவ்வளவு கூலான இயக்குநர் என்பதை அந்த வீடியோவில் நீங்களே பார்த்திருப்பீர்கள். முழு படப்பிடிப்பையும் எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் கலகலப்பாக கொண்டு போனார். எங்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் என்னை மிக அழகாக காட்டியதோடு மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நான் சிறப்பாக நடிப்பதற்கும் உதவியாக இருந்தார். கோவை சரளா மேடம் போன்ற சீனியர் நடிகைகளுடன் நடித்த அனுபவம் அலாதியானது. நிறைய கற்றுக் கொண்டேன். சிறுவயதில் இருந்தே நான் வித்யாசாகர் இசைக்கு மிகப்பெரிய விசிறி. என் படத்திற்கு அவர் இசையமைப்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன்., எனக்குக் கொடுத்த இந்த வாய்ப்பிற்கு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த நிகில் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிகை நண்பர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. எங்கள் படத்திற்கு மிகச்சிறந்த ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
படத்தின் இயக்குநர் மீரா மஹதி பேசும் போது…
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 12 வருட உழைப்புக்குப் பின்னர் எனக்கு இந்த மேடை கிடைத்திருக்கிறது. நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. இது வரை பத்து பனிரெண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். முகநூல் வட்டத்தில் இருக்கும் என் நண்பர்கள் குறும்படத்தைப் பார்த்துவிட்டு நீ சினிமாவே இயக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நான் கதை சொல்வதற்காக அஜீத், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களிடம் செல்லவில்லை. அவர்களை நெருங்கக்கூட முடியாது என்று தெரியும். மூன்று அல்லது நான்கு கோடி பட்ஜெட்டிற்குள் வரும் வளர்ந்து வரும் நாயகர்கள் சிலரிடம் தான் கதை சொல்ல முயன்று வந்தேன்.
ஆனால் அவர்கள் யாரும் ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் தான். அதை எனக்கு யாருமே கொடுக்கவில்லை.
மைம் கோபி அவர்கள் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு மைம் கோபி சாரிடம் கதை சொல்லப் போயிருந்தேன். மைம் கோபி சார் தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார். நான் அந்த ஐந்து நிமிடத்தைத் தான் யாரும் எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் சார் என்று சொன்னேன். அவர் கொடுத்தார். நான் கதை சொல்லத் துவங்கினேன். கதை சொல்லி முடிக்கும் போது 1 மணி நேரம் ஆகியிருந்தது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தீரஜ் சார் என்னிடம் கதை கேட்டார்.
ஆரம்பிக்கும் போது இப்படம் சிறிய படமாகத் தான் இருந்தது. படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை நான் ஏற்கனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், நாம் இதை கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். பின்னர் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்தப் பின்னர் படத்தின் பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
எனது முதல் மேடையிலேயே மிஷ்கின் சார் அமர்ந்திருப்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும், இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடு இணையின்றி உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். என்னைப் போல் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு பத்திரிகை நண்பர்கள் ஆதரவு கொடுங்கள். நீங்கள் சொல்வதையும் எழுதுவதையும் தான் மக்கள் நம்பி திரையரங்கிற்கு வருவார்கள். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். நீங்கள் சொல்வதைத் தான் நம்புவார்கள். ‘டபுள் டக்கர்’ படத்தைப் பற்றி எழுதி எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது…
காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட். என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன். ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.
ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அது போல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் இரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான்.
என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். அவனுடன் இருந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய விசிறி, உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன்.
அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.
இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. வெட்கமில்லாமல் ஆண்கள் அழுவது என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன்.. ஒரு 50 எம் எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம் எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம், ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்து கொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை.
தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான். நீங்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் போதும் கவனமாக எழுதுங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது…
என்ன பேசுவது, எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. மிஷ்கின் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய பேச்சு இன்று அட்டகாசமாக இருந்தது. Heartல் துவங்கி Art வரைக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டீர்கள். இன்று நீங்கள் இந்த மேடையிலிருப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது. சந்துரு என் முதல் படத்தின் இயக்குநர். திரைப்படத்திற்கு சென்சிட்டிவ் ஆன விசயங்கள் மட்டும் போதாது, கமர்ஷியல் சக்சஸ் அடைய வேறு ஏதோவொன்று தேவை என்பதைப் புரிந்து கொண்டு, பேப்பர் ராக்கெட் நிறுவனத்தில் போய் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றிவிட்டு வந்தார். ‘பிள்ளையார் சுழி’ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது தான் இயக்குநர் மீரா என்னிடம் கதை சொல்ல வந்தார். ஐந்து நிமிடத்துக்குள் என்னை இம்ப்ரஸ் செய் என்று சொன்னேன். அவர் நான் ஸ்டாப்பாக என்னை சிரிக்க வைக்கத் துவங்கினார். உடனே சரி கண்டிப்பாக நாம் இதை பண்ணுகிறோம் என்று சொன்னேன்.
என்னுடன் நடித்த ஸ்மிருதி வெங்கட் அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்கு நன்றி. இன்னொரு விழாவை அவருக்காகவே முன்னெடுக்க இருக்கிறோம். எடிட்டர் வெற்றிக்கு நன்றி. அட்லி அங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். மீரான் இங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். இப்படத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய கடமை. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நாங்கள் கேட்காமலே நீங்கள் செய்வீர்கள் என்று அறிவோம். இருப்பினும் இப்படத்திற்கு உங்களின் ஆதரவைத் தந்து உதவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மங்கை’ படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி
வெறும் வசூலுக்காகவே திரைப்படம் என இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும் – கார்த்திக் நேத்தா
‘மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த்
எல்லா காலத்திலும், எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். – இயக்குநர் லெனின்
என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விஷயம் “Don’t do injustice to woman” – நடிகர் ஜெயப்பிரகாஷ்
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். மிகவும் மகிழ்வான தருணம். இந்த மேடையில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கார்த்திக் அவர்களுக்கு. அவர் மூலமாகத் தான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன். அன்பின் சங்கிலியால் அன்பின் பிணைப்பால் எவ்வளவு கட்டி இழுத்தாலும் வலிக்காது. கார்த்திக் அண்ணாவின் அன்பு அப்படிப்பட்டது. மேலும் சிலருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். அதில் முதலானவர் குபேரன் அண்ணா அவர்கள். ‘மங்கை’ போன்ற பொறுப்பான படங்களை அவர் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ‘மங்கை’ ஒரு நல்ல கலைப் படமாகவும், வணிக ரீதியாக வெற்றியடையும் படமாகவும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். நல்ல ஒரு ஆக்கபூர்வமான விரிந்த பொருள் கொண்ட கதைகள் வணிகரீதியாகவும் வெற்றி பெறும் போது, பெரிய பெரிய கலைப் படைப்புகள் நிறைய வரும் என்று நினைக்கிறேன். வெறும் வசூலுக்காகவே திரைப்படம் இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும். அதற்கு நாம் ஒரு புறம் பார்வையாளர்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கிறது. ஒரு புறம் இலக்கியத்தின் வாயிலாகவும், மறுபுறம் சிறந்த உலகத் திரைப்படங்களை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதின் மூலமாகவும், சிறுகதை, நாவல் மற்றும் கவிதை போன்ற வாசிப்பு பயிற்சியினை பள்ளி வகுப்புகளில் இருந்து துவங்குவதன் மூலமாகவும் இந்த மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே.ஸ்டார் அவர்கள் பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும். அது போல் எனக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். ‘மங்கை’ திரைப்படம் எனக்கும் ஒரு சிறப்பான படம் என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி, வணக்கம்.
ஸ்டண்ட் இயக்குநர் ராம்குமார் அவர்கள் பேசும் போது…
எல்லோருக்கும் வணக்கம். இப்படத்தில் நான் பணியாற்ற காரணமாக இருந்த கார்த்திக் அவர்களுக்கு நன்றி. இப்படத்தின் பாதி வெற்றியை இசையமைப்பாளர் தன் பாடல்களில் நிரூபித்துவிட்டார். சில பாடல்கள் கேட்க கேட்க தான் பிடிக்கும். இப்படத்தின் இரண்டு பாடல்களும் கேட்டவுடனே பிடித்துவிடும். இயக்குநரின் படம் எப்போதும் தோற்காது. ஒரு படத்தின் ஹீரோ என்பவர் இயக்குநர் தான். இப்படத்திற்கு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் ஆதரவு தர வேண்டும். எல்லோருக்கும் நன்றி.
படத்தொகுப்பாளர் பார்த்திபன் பேசும் போது,
இது தான் எனக்கு முதல் படம், முதல் மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் சிலருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இல்லை. என் மனைவிக்கு நன்றி. அவரின் தீவிரமான பிரார்த்தனை தான் நான் இன்று இங்கு நிற்பதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். என் முதல் தயாரிப்பாளர் ஜாஸ்வா அவர்களுக்கும், இயக்குநர் அருள் சக்தி முருகன் அவர்களுக்கும் நன்றி. என் குரு எடிட்டர் ஆண்டனி சாருக்கும் நன்றி. இப்படத்தின் இயக்குநருக்கு நன்றி. படத்தில் பணியாற்றத் துவங்கும் முன்னர் நான் இரண்டு முறை மட்டுமே இயக்குநரைச் சந்தித்தேன். என் வேலைகளைப் பார்த்துவிட்டு, உடனடியாக என் கையில் அட்வான்ஸ் கொடுத்து, நீங்கள் தான் இப்படத்தின் எடிட்டர் என்று கூறிவிட்டார். எனக்கு இப்படத்தில் எடிட்டிங் பணிகளில் முழு சுதந்திரம் கொடுத்தார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி. படத்தின் நாயகி ஆனந்தி அவர்கள் ஒவ்வொரு ஷாட்டிலும் அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். அது கோபமோ சிரிப்போ ஒவ்வொரு ப்ரேமிலும் அவ்வளவு அழகாக இருந்தார். கார் சீக்குவன்ஸ் காட்சிகளில் துஷி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.ஏனென்றால் ஒரே நேரத்தில் கார் ஓட்ட வேண்டும், டயலாக் பேச வேண்டும், பெர்ஃபாமன்ஸ் செய்ய வேண்டும். மலைப்பகுதியில் கார் ஓட்டுவது எளிதல்ல… அதை திறம்பட செய்த நாயகனுக்கு வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி.
நடன இயக்குநர் ராதிகா பேசும் போது…
மேடையில் இருக்கும் அனைத்து ஜாம்பவான்களுக்கும் வணக்கம். இதை ஒரு படம் என்று சொல்வதை விட படைப்பு என்று சொல்லலாம். இப்படி ஒரு அற்புதமான படைப்பில் நானும் ஒரு சிறிய பங்காற்றியுள்ளேன் என்பது மிகப்பெரிய விஷயம். நடனம் அமைத்திருக்கிறேன் என்பதை விட இப்படத்தில் இயக்குநர் மிகப்பெரிய பொறுப்பைத் தூக்கிக் கொடுத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அந்தப் பொறுப்பை நான் சரியாக செய்து முடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். ஏனென்றால் இது ரொம்பவே சவாலான பாடல். ஒரு காருக்குள்ளாகவே அழகான மூவ்மெண்டுகள் உடன் என்டர்டெயின்மென்ட் ஆகவும் இருக்க வேண்டும், கருத்தாழம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதால் இயக்குநர் அதை எனக்கு எளிமையான முறையில் விளக்கினார். நான் அதை அப்படியே எடுத்துக் கொண்டு செய்து கொடுத்திருக்கிறேன். இயக்குநர், கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. ஆனந்தியை பொருத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கும். ‘மங்கை’யும் அப்படிப்பட்ட ஒரு பொறுப்பான சமூகத்திற்கான படமாக ஆனந்தியால் கருதப்பட்டு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கண்டிப்பாக இது பெரிய அளவில் வெற்றி பெறும்.
பாடகி சாக்ஷி பேசும் போது…
இந்த நிகழ்விற்கு வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றி. நான் வேண்டுமானால் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் எல்லோரும் இங்கேயே இருந்து கடின உழைப்பைக் கொட்டி இப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்த அளவிற்கு இப்படத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், ஒரு பெண்ணைப் பற்றி பேசுகிறோம் என்றால், நாம் அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் பேசும் போது…
இந்த மேடையினை எனக்குக் கொடுத்த குபேந்திரன் சார் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. ஏனென்றால் இது போன்ற கண்டெண்ட் தொடர்புடைய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இப்பொழுது மிகவும் குறைவு. இப்படத்தில் பணியாற்றிய கார்த்திக் அண்ணா அவர்களுக்கு நன்றி. அவர் ஆலமரம் போன்றவர். எத்தனையோ பேருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர் அவர். இசையமைப்பாளர் தீசன் அவர்களுக்கு என் படம் தான் முதல்படம். அவரை அறிமுகப்படுத்தியதை எண்ணி பெருமைப்படுகிறேன். தீசன் இன்னும் சில ஆண்டுகளில் மிக முக்கியமான இசையமைப்பாளராக இருப்பார். படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டேன், சிறப்பாக வந்திருக்கிறது.
நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ஷிவின் பேசும் போது…
இப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் குபேந்திரன் அவர்களின் பார்வையும் சிந்தனையும் தான் என்று நினைக்கிறேன். இசை என்று பார்த்தால், இன்றைய பரபரப்பான சூழலில் தீசன் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார் என்று தோன்றுகிறது. இப்படத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது. ஒரு படத்தின் இசை அதைத்தான் செய்ய வேண்டும். அதை திறம்பட செய்திருக்கிறார் தீசன். ஆனந்தியை நான் பல நேரங்களில் ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன். துஷியும் அப்படித்தான். இவர்களுடன் நடிப்பது சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட இயக்குநர் ரோஹந்த் பேசும் போது…
எப்படி குபேந்திரன் குடும்பத்திற்கு இது மகிழ்ச்சியான தருணமோ அதே போல் தான் எனக்கும் இது மகிழ்ச்சியான தருணம். எல்லா உதவி இயக்குநர்கள் எழுதும் கதையும் ஏதாவது ஒரு டீக்கடையில் இருந்து தான் துவங்கியிருக்கும். இப்படத்தின் கதையும் அப்படித்தான் துவங்கியது. இக்கதையினை மிகவும் எளிமையாக என்னிடம் சொல்லி, இதை ஒரு ஐபோனில் ஷூட் செய்ய வேண்டும், ஒரு டிராவலிங் ஸ்கிரிப்ட் 40 நிமிடங்களுக்குள் வரும் என்று தான் பேசத் துவங்கினோம்.. ஐபோனில் எடுக்க வேண்டும் என்று நினைத்த படம் ஜாஃபர் சாரை சந்தித்தப் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் பிரம்மாண்ட படமாக வளர்ந்திருக்கிறது,. ஆனந்தி அவர்களின் நடிப்பைப் பற்றி கேட்கவே வேண்டாம். துஷியின் கைகளில் காரைக் கொடுத்தப் பின்னர் அவரின் முழுமையான நடிப்புத் திறமை வெளிவந்தது. இசையமைப்பாளர் தீசன் எனக்கு அறிமுகம் கிடையாது. அவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும். அந்த வகையில் இப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும்.
நடிகர் ஆதித்யா கதிர் பேசும் போது…
‘மங்கை’ ஒரு முக்கியமான திரைப்படம். மார்ச் 1ம் தேதிக்குப் பிறகு அதை நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்களுக்கும் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி அவர்களுக்கும் நன்றி. துஷி விரைவில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அவரின் அப்பா ஜெயப்பிரகாஷ் இன்று உண்மையாகவே மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. வணக்கம்.
‘மேற்குதொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பேசும் போது…
கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கின்ற அடிப்படையில் ‘மங்கை’ படம் உருவாகி உள்ளது என்று தெரியும். இப்படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளைப் பார்த்தப் பின்னர் தான் டைட்டில் டிசைனை கவனித்தேன். ஆண் கதாநாயகர்களை மையப்படுத்திய டைட்டிலைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும். ஆனால் இங்கு மங்கை கீறப்பட்டு இருக்கிறது, காயப்பட்டிருக்கிறது, உடைந்திருக்கிறது. சிதைந்திருக்கிறது, தாக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழ் டிராவல் ஆஃப் வுமன் என்கின்ற கேப்ஷன் இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய அரசியல். எல்லா காலத்திலும் எல்லா சாதியிலும் எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ‘மங்கை’ என்கின்ற இந்த டைட்டில் மற்றும் திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள். விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், பாடலாசிரியர்கள் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாயகன் துஷிக்கும் வாழ்த்துகள். தோழர் ஆனந்தி எப்போதும் ஆழ அகலக் கதைகளையே தேர்ந்தெடுப்பார். அவர் தேர்வு செய்யும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். கடைசி வரைக்கும் இப்படியே இருங்கள் தோழர் ஆனந்தி. பெண்களை உடலாகப் போதிக்காமல் ஒரு உயிராக பாவிக்கும் எண்ணத்தை இப்படம் முன்னெடுக்கும் என்று கூறி வாழ்த்து கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.
நடிகர் துஷ்யந்த் பேசும் போது…
தீசன் பிரதரின் பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இப்படி அருமையான பாடல்களைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி. மலைப் பாதையில் இரண்டு கேமராக்களைக் கட்டிய காரை கவனமாக ஓட்டியபடி, பெரிய பெரிய வசனங்களைப் பேசி, ஆனந்தி மேடத்திற்க்கு ஈடு கொடுத்து நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் தீசன் பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். என் தாய் தந்தையர், அண்ணன், என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. தங்கத் தளபதி கார்த்தி அண்ணன் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் குபேந்திரன் காமாட்சி எனக்கு என்ன தேவையோ அதைவிட சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி. பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் நன்றி. ஜாஃபர் சாருக்கு மிகப்பெரிய நன்றி. பத்திரிகையாளர்கள் தான் என் முந்தைய படமான ‘கிடா’வை மக்களிடம் சென்று சேர்த்தீர்கள். அது போல் இப்படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில்…
‘மங்கை’ திரைப்படத்தினை சிறப்பாக வெளியீட்டிற்கு முன்னெடுத்துச் செல்லும் தயாரிப்பாளர் ஜாஃபருக்கு வாழ்த்துகளும் நன்றியும். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் இன்னும் பத்து இயக்குநர்கள் வருவார்கள். இங்கு சேரன் சார், சசிக்குமார் சார் மற்றும் சமுத்திரக்கனி சார் மூவரும் வர வேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களால் வர முடியவில்லை. ‘பசங்க’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் எனக்குத் துணைக்கு நான் என் பையன் துஷியை அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். அப்படித் தான் துஷியின் திரை பயணம் துவங்கியது. அவர் நடிக்க வருவார் என்று நினைத்ததே இல்லை. ஏனென்றால் நான் நடிக்க வருவேன் என்பதே என்னால் நம்ப முடியாத விஷயம். ஆனந்தி மிகப்பெரிய கலைஞர். அவருடன் நடித்ததெல்லாம் துஷிக்கு நல்ல அனுபவம். அவன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.
என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விசயம் “Don’t do injustice to woman”. நல்ல படங்களை எப்போதும் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இப்படத்தையும் கொண்டு போய் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இயக்குநர் ஹலிதா சமீம் பேசுகையில்…
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன. எல்லோருக்கும் உதவுவதற்காகவே ஒருவர் இருக்கிறார் என்றால் அது கார்த்திக் துரை தான். தீயாக இருக்கும் தீசனின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. சென்ற ஆண்டின் முழுமையான திரைப்படமாக நான் ‘கிடா’ திரைப்படத்தை தான் பார்க்கிறேன். துஷி ‘ஈசன்’ திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அவருக்கு வாழ்த்துகள். இப்படம் பேச இருக்கும் கருத்திற்காக நான் இப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
தயாரிப்பாளர் ஜாஃபர் பேசும் போது…
எல்லோருக்கும் வணக்கம். திரைப்பட இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு திரைப்படத்தை எடுப்பது மட்டுமே முக்கியமான வேலை இல்லை. அதை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் முக்கியமான வேலை என்று நான் நம்பி உழைத்துக் கொண்டிருக்கிறேன். ‘மங்கை’ மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. துஷி, கயல் ஆனந்தி மற்றும் சிறப்பான பாடல்கள் என ஒவ்வொன்றாக படத்தில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். இசையமைப்பாளராக கிடைத்த வாய்ப்பை தீசன் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்பதில் இருந்து தான் இப்பயணம் துவங்கியது. பத்திரிகை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நடிகை ஆனந்தி பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. :கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மங்கை’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். படம் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அவ்வளவு உழைத்திருக்கிறார். எக்ஸீகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் சார் எல்லா வேலைகளையும் எடுத்து செய்வார். எல்லாவித உதவிகளையும் எல்லோருக்கும் செய்பவர். அவருக்கு நன்றி. இன்றைய விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி. ஷிவின் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருக்கிறார். அது போல் துஷி எனக்கு நல்ல நண்பர். ஜே.பி சாரின் பையன் என்பதை எல்லாம் காட்டிக்கொண்டதே இல்லை. நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பீர்கள். இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.” நன்றி.
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் துரை பேசும் போது…
எல்லோருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஜாஃபர் சார், பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். என் அம்மா, அப்பா, மனைவி மற்றும் கடவுளுக்கு நன்றி. என் மனைவிக்கு ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் வீட்டில் இருக்கும் மங்கை நன்றாக இருந்தால் தான் வெளியில் ஜெயிக்க முடியும். இந்த ‘மங்கை’ வெற்றிபெற வாழ்த்துகள். வாய்ப்பு கொடுத்த ஜாஃபர் சாருக்கு நன்றி. இயக்குநர் குபேந்திரன் சார் சொன்னார் நாங்க ஒரு சின்ன படம் பண்றோம், சப்போர்ட் செய்யணும் என்று. படம் சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று சொன்னேன். இப்படத்தின் க்ளைமாக்ஸ் மங்கைகளுக்கும் மட்டுமின்றி ஆடவர்களுக்கும் மிக முக்கிய பாடமாக அமையும் என்று கூறி விடை பெறுகிறேன்.
இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை, ஊடக மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கு வணக்கம். தீசன் எப்போதுமே பாஸிட்டிவ் எனெர்ஜியுடன் இருப்பார். அவருக்கு மிக்க நன்றி. படப்பிடிப்புக்கு போகும் போது ஒரு பாடல் மட்டும்தான் இருந்தது. பின்னர் அது ஐந்து பாடல்களாக ஆனது. அதற்கு தீசனின் இசை ஒரு காரணம். பாடலாசிரியர்கள் கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா அனைவருக்கும் நன்றி.
படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜாஃபர் சார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டார் சார் அனைவருக்கும் நன்றி, படத்திற்கு பத்திரிகையாள்ர்களான் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
கன்னட திரையுலகில் தடம் பதித்து – ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது.
தனித்துவமான கதைசொல்லும் உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளான ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை KRG ஸ்டுடியோஸ் உடன் இனைகிறார், திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் படைப்பை தமிழில் எடுப்பதில் உவகை கொள்கிறது,
கன்னட திரைத்துறையிலும் அதற்கு அப்பாலும் கதை சொல்லுதலில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க கவனம் செலுத்தும் இவ்வேளையில், KRG நிறுவனம், இயக்குனர் அஞ்சலி மேனனின் நேர்த்தியான கதை சொல்லுதலின் மூலம் கதை சொல்லும் மரபை சீரமைக்க உள்ளது.
2017ல் KRG தனது திரைப்பட விநியோக வணிகத்தை தொடங்கி இதுவரை 100ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. மேலும் KRG நிறுவனம் தன்னை ஒரு திரைப்படத்தின் கருவாக்கம் முதல் உருவாக்கம் வரை 2020 முழு நேர தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துக்கொள்கிறது. KRG தனது ஆரம்ப கால வெற்றியை ரோஹித் படக்கி இயக்கத்தில் தனஞ்ஜெய் நடித்து Amazon Primeல் வெளியான “ரத்னன் பிரபன்ஜா” திரைப்படத்தின் மூலம் சூடிக்கொண்டது குறிப்பிடத்தக்கது… அந்த ஆரவாரமான வெற்றிக்கு பிறகு KRG தனது பயணத்தை 2023 மார்ச் மாதத்தில் வெளியான “குருதேவ் ஹொய்சாலா” மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG, தனது நெறியை அனைத்து வகை படங்களின் கதைகளிலும் ஆழ்ந்த உள்ளடக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதை பிரதானமாக கருதுகிறது. தனது பார்வையை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் விரிவாக்கம் செய்ய எத்தனிக்கும் KRG, வளர்ந்து வரும் திறமைசாலிகளை ஊக்குவிப்பதுடன், திரையுலகில் தடம் பதித்த கதை சொல்லிகளின் ஒத்துழைப்புடன் தயாரிப்பில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளது. KRG தனது ஒரே இலக்காக கதை சொல்லும் கலையில் கவனம் செலுத்துகிறது.
KRG உடன் இனைவது பற்றி அஞ்சலி மேனன் கூறுகையில் “KRG ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்க கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டி செல்ல ஆர்வமாக உள்ளோம்” என்றார்
KRG-ன் தயாரிப்பாளரும் இணை நிறுவனருமான கார்த்திக் கவுடா கூறுகையில், “அஞ்சலி மேனனுடனான எங்கள் ஒத்துழைப்பு KRG க்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. கதை சொல்லும் நேர்த்தியே பிரதானம் என்றாலும், நாங்கள் சினிமா தன்னுள் வைத்திருக்கும் மாயையை நம்புகிறோம். இந்தக் கூட்டாண்மையானது பலதரப்பட்ட பகுதிகளில் சிதறி கிடக்கும் பார்வையாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள கதைகளை எதிரொலித்து, ஒரு சேர வடிவமைப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் என நம்புவதாகவும், இந்த பயணம், நானும் எனது அன்பு நண்பரும், அனுபவமிக்க பொழுதுபோக்கு நிர்வாகியுமான விஜய் சுப்ரமணியமும் விவாதிக்கையில் கதை/கருத்து அடிப்படையிலான கதைகள் ஒரு நல்ல திரைப்படமாக உருவெடுத்தால் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளவில்லாதது என உணர்கையில் தொடங்கியது. அவரும் எங்கள் திறனைக் கண்டு எங்களுடன் ஒரு வழிகாட்டியாகவும், இணை தயாரிப்பாளராகவும் ஒத்துழைக்க முடிவு செய்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களின் ஒத்தாசையுடன் துல்சியாவை சேர்ந்த சைதன்ய ஹெக்டே போன்றோருடன் கூட்டாண்மைகளை உருவாக்கி, பார்வையாளர்களுக்கு எங்களின் சேவையை சிறப்பானதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இந்த ஒத்துழைப்பு சினிமா நிலப்பரப்புகளை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல் உள்ளூர் மற்றும் தேசியத் துறைகளில் கதைசொல்லும் உத்தியின் பரிணாம வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று KRG எதிர்பார்க்கிறது. தென்னிந்திய சினிமாவின் எதிர்காலத்தை KRG தொடர்ந்து வடிவமைக்கும் நிலையில், அஞ்சலி மேனனுடனான கூட்டாண்மை தரமான கதையம்சம் மற்றும் புதுமையான காட்சியமைப்பு என அவர்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.
துல்சியா ஒரு முன்னணி ஊடக மேலாண்மை நிறுவனமாகும், இது இந்தியா மற்றும் சர்வதேச அளவில் முன்னணி எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், .தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அசத்தலான காமெடிக் கொண்டாட்டம் , நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!
மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது
~இந்தத் திரைப்படத்தை M. பத்மகுமார் இயக்கியுள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.~
நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் V.K.பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளம், அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை ரசிகர்களுக்காகத் தந்து வருகிறது. அந்த வகையில் இந்த காதலர் தினக் கொண்டாட்டமாகக் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குயின் எலிசபெத் திரைப்படத்தை, ஸ்ட் ரீம் செய்து வருகிறது.
மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு கலக்கலான பொழுதுபோக்கு காமெடிப் படமாக, இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் M பத்மகுமார் இயக்கத்தில், நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் நடிகர் நரேன் கூட்டணி 15 வருட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்துள்ளது.
ப்ளூ மவுண்ட் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ரஞ்சித் மணம்பரக்கட், எம். பத்மகுமார் மற்றும் ஸ்ரீராம் மணம்பரக்கட் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
திருமணமாகாத மிடில் ஏஜ் யுவதியான மீரா ஜாஸ்மின், தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை வெறுக்கும்படியான மனிதராக, யாருடைய துணையும் தேவையில்லை என வாழ்கிறார். நரேன் அவரது அன்பைப் பெறப் பல முயற்சிகள் செய்கிறார். பிஸினஸ் விசயமாக கோயம்புத்தூர் செல்லும் மீரா ஜாஸ்மினை அந்தப்பயணம் முழுதாக மாற்றுகிறது.
திருமணமாகாத ஒரு நடுத்தர வயத்துப்பெண்ணின் வாழ்க்கையை, காதலைக் கண்டடையும் அவளின் பயணத்தை இந்தப்படம் அருமையான காமெடி கலந்து சொல்கிறது.
இயக்குநரும் தயாரிப்பாளருமான M.பத்மகுமார் கூறியதாவது… குயின் எலிசபெத் படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு உண்மையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் தந்த அன்பு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படைப்பு தற்போது ZEE5 வழியே உலகளாவிய பார்வையாளர்களிடம் சேரவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு காதலர் தினத்தை விடச் சிறந்த தருணம் கிடைக்காது. உங்கள் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் இந்தப்படத்தினை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்படம் உங்கள் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறேன்.
நடிகை மீரா ஜாஸ்மின் கூறியதாவது… குயின் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எலிசபெத், கண்டிப்பான நடத்தை கொண்ட, வலுவான, சுதந்திரமான பெண். எலிசபெத் கதாபாத்திரம் என் மனதிற்கு மிக நெருக்கமான பாத்திரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரைக்கு வருகிறேன் எனவே பார்வையாளர்கள் இந்த கதாபாத்திரத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஆர்வம் இருந்தது, திரையரங்கு வெளியீட்டின் போது ரசிகர்கள் தந்த அன்பும் ஆதரவும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ரசிகர்களின் அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இப்படம் ZEE5 இல் டிஜிட்டல் ப்ரீமியராக உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களுக்குச் சென்றடைவது மகிழ்ச்சி. பார்வையாளர்களின் கருத்துக்களை அறிய மிக ஆவலாக உள்ளேன்.
நடிகர் நரேன் கூறியதாவது.., இது ஒரு நம்பமுடியாத பயணம். குயின் எலிசபெத் படத்தில் அலெக்ஸ் பாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவம். தேசம் முழுக்க படத்தைக் கொண்டாடியதுடன் என் கதாபாத்திரத்தைத் தனித்து பாராட்டியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நடிகை மீரா ஜாஸ்மினுடன் இணைந்து நடித்தது, மறக்க முடியாத அனுபவம். ஷீட்டிங்கில் நாங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டோம். இயக்குநர் M.பத்மகுமாரின் பார்வையும் வழிகாட்டுதலும் மிகவும் உதவிகரமாக இருந்தது. ZEE5 இன் இந்த டிஜிட்டல் வெளியீட்டில் உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
அசத்தலான ரோம் காம் திரைப்படமான “குயின் எலிசபெத்” படத்தினை ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.