Breaking
July 18, 2026

deccanwebtv

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் … தொடங்கியது ‘சீயான் 63’

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

“சீயான் 63” அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக உருவாகும் “சீயான் 63”, வலுவான கூட்டணி, தரமான தொழில்நுட்பக் குழு, பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் அனைவரையும் கவரும் ஃபேமிலி திரில்லர் ஆக்சன் கதை ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அறிவிப்பின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய “சீயான் 63”, தற்போது படப்பிடிப்பு தொடக்கத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், விக்ரம் ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS!

ஒரே நாளில் இரண்டு ஜானர்கள்… இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய சாம் CS!

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.

நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்க காரணமாக அவரது இசை அமைகிறது.

அதே நேரத்தில், முற்றிலும் மாறுபட்ட உலகத்தை கொண்ட “டபுள் ஆக்குபன்ஸி”, ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தேவையான நவீன இசை பாணி, துடிப்பான சவுண்ட் மற்றும் புதிய தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் இசை மொழியை சாம் CS திறமையாக உருவாக்கியுள்ளார். படத்தின் கற்பனை உலகத்திற்கு ஏற்ற இசை அனுபவத்தை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களின் ஜானர், உணர்வு, கதை சொல்லும் முறை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த இரண்டு உலகங்களுக்கும் ஏற்ற இசையை உருவாக்கி, ஒரு இசையமைப்பாளராக தனது பல்துறை திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சாம் CS.

சமீப காலங்களில் பின்னணி இசை மட்டுமல்லாமல், பாடல்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதிய இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். கதையின் தேவையை புரிந்து அதற்கேற்ப தனது இசை மொழியை மாற்றிக்கொள்ளும் திறமையே அவரை இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர் காயத்திரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 17-ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘

மலையாளப் படங்களுக்கு இணையாக போட்டி போடும் க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன் ‘

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவை காலம் கடந்தும் மக்களிடம் பரவலாகப் பேசப்படுவதுண்டு.அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.

இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி பேசும் போது,

“தமிழ் ரசிகர்கள் எப்போதும் க்ரைம் த்ரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பார்கள் .அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் எண்ணத்திற்கு ஏற்ப உருவாகி இருக்கிறது இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்.

இந்தப் படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் ?

ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைகளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார், அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதை மையாமாக கொண்டது இந்த தி டார்க் ஹெவன் திரைப்படம். இந்தப் படத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை நேர்த்தியாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகனாக ‘ராஜா ராணி ‘தொடரின் மூலம் புகழ்பெற்ற சித்து சித் நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் அவருக்கு இது மறுபிரவேசமாக இருக்கும்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்
எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .தங்கள் திறமையைக் காட்டி உழைத்துள்ளார்கள்.

இதன் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவால் நிறைந்த மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள், இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் நிறைவடைந்து தணிக்கைக்காகச் சென்றுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமீபமாக கொண்டாடப்படும் மலையாள க்ரைம் திரில்லர் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ” இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.

பிரைம் வீடியோவில், ஜூன் 18 முதல் “திரிஷ்யம் 3”

பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.

ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார்.

இந்தியாவிலும் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, இந்திய சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் திரில்லர்-டிராமா திரைப்படத் தொடர்களில் ஒன்றான த்ரிஷ்யம் திரைப்படத் தொடரின் அடுத்த அத்தியாயமான “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் உலகளாவிய பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது.

தனித்துவமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள இந்தத் திரைப்படத் தொடர், மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இப்படம், Pen Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas மூலம் உருவாகியுள்ளது.

மோகன்லால், மீனா மற்றும் சித்திக் மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட டப்பிங் பதிப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.

திரிஷ்யம் 2 சம்பவங்களுக்குப் பிறகு, ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்திற்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். தனது கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார். ஆனால் கடந்த காலம் புதைக்கப்பட்ட இடத்திலேயே நிலைத்திருக்க மறுக்கிறது.

அந்தத் திரைப்படத்தின் உண்மைக் கதையை ஆராயத் தொடங்கும் இரு பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது மகள் அஞ்சுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண முயற்சி, உயிருக்கு ஆபத்தான சதியாக மாறும்போது, ஜார்ஜ்குட்டி தனது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஆபத்தான போராட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்.

பழைய எதிரிகள் புதிய நோக்கத்துடன் மீண்டும் வர, பயம், குற்றவுணர்வு மற்றும் சந்தேகங்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும் சூழலில், தனது குடும்பத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ரகசியங்களையும் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி மீண்டும் தனது புத்திக்கூர்மையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பிரைம் வீடியோ இந்தியாவின் Content Licensing பிரிவின் இயக்குநரும் தலைவருமான மனீஷ் மெங்கானி கூறுகையில்..,

“இந்திய சினிமாவில் திரிஷ்யம் போன்ற சாதனையை நிகழ்த்திய திரைப்படத் தொடர்கள் மிகக் குறைவு. ஒரு தசாப்தத்திற்கு முன்பு மலையாளத்தில் தொடங்கிய இந்தக் கதை, இன்று மொழிகளையும் நாடுகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது. ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் இணைந்து உருவாக்கிய இந்த மூன்று திரைப்படங்கள், நீடித்த கதை சொல்லலின் சிறந்த உதாரணமாகும். ஜார்ஜ்குட்டி இனி ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல; இந்திய சினிமாவின் கூட்டு நினைவின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். இந்தியாவின் மிக வெற்றிகரமான திரைப்படத் தொடர்களில் ஒன்றான திரிஷ்யம் 3-ஐ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறுகையில்..,

“திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ்குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், பயம், நிச்சயமின்மை மற்றும் கடந்த காலத்தின் சுமையுடன் வாழும் ஒரு தந்தை இருக்கிறார். இந்த அத்தியாயம் அந்த மன அழுத்தங்களின் தாக்கத்தை ஆராய்கிறது. அதனால் இது இந்தத் தொடரில் மிகவும் நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இதை பிரைம் வீடியோவில் காணப்போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

நடிகர் மோகன்லால் கூறுகையில்..,

“ஜார்ஜ்குட்டி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் பயணித்து வருகிறது. அவர்கள் அளித்த அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். திரிஷ்யம் ரசிகர்களுக்கு பிடிக்க காரணம், அதன் மர்மக் கதையைத் தாண்டி குடும்பம், அன்பு மற்றும் உயிர்வாழ்தல் பற்றிய மனிதநேயமான கதையாக இருப்பதுதான். ஜார்ஜ்குட்டிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திரிஷ்யம் 3 இப்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

ஜூன் 18 முதல் “திரிஷ்யம் 3” திரைப்படத்தை ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம், தரமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் வலிமையால், இந்த திரைப்படம் தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பா – மகன் உறவின் உணர்வுபூர்வமான தருணங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“Disclosure Day” movie review

Genre: Thriller
Cast: Emily Blunt, Josh O’Connor, Colin Firth, Eve Hewson
and Colman Domingo
Directed by Steven Spielberg
Screenplay by: David Koepp
Story by: Steven Spielberg
Producers: Kristie Macosko Krieger and Steven Spielberg
Executive Producers: Adam Somner and Chris Brigham

If you found out we weren’t alone, if someone showed you, proved it to you, would that frighten you? This summer, the truth belongs to eight billion people.
We are coming close to … Disclosure Day.

Universal Pictures is proud to release a new original event film created and directed by Steven Spielberg. The film stars SAG winner and Oscar® nominee Emily Blunt (Oppenheimer, A Quiet Place), Emmy and Golden Globe winner Josh O’Connor (Challengers, The Crown), Oscar® winner Colin Firth (The King’s Speech, Kingsman franchise), Eve Hewson (Bad Sisters, The Perfect Couple) and two-time Oscar® nominee Colman Domingo (Sing Sing, Rustin).

Based on a story by Spielberg, the screenplay is by David Koepp, whose previous work with Spielberg includes the scripts for Jurassic Park, The Lost World: Jurassic Park, War of the Worlds and Indiana Jones and the Kingdom of the Crystal Skull. Combined, those films earned more than $3 billion worldwide. Koepp also wrote the script for this 2025’s Jurassic World Rebirth.

Disclosure Day is produced by five-time Academy Award® nominee Kristie Macosko Krieger (The Fabelmans, West Side Story) and by Spielberg for Amblin Entertainment. The executive producers are Adam Somner and Chris Brigham.

Steven Spielberg is one of the industry’s most successful and influential filmmakers. The top-grossing director of all time, Spielberg has helmed such blockbusters as Jaws, E.T. The Extra-Terrestrial, the Indiana Jones franchise and Jurassic Park.

Among his myriad honors, he is a three-time Academy Award® winner, including Oscars® for Best Director and Best Picture for Schindler’s List, which received a total of seven Oscars®, and for Best Director for Saving Private Ryan. His most recent film, The Fabelmans, was released by Universal in 2022 and received seven Academy Award® nominations, including for Directing, Best Original Screenplay, Best Actress and Best Picture.

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’



இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராமை ‘நூறு சாமி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தும் விஜய் ஆண்டனி-சசி கூட்டணி

முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளின் பங்கேற்புடன் அரங்கேறிய விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு

‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ‘நூறு சாமி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ் எஸ் குமரன், சிமோன், சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்துடன் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினர்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி வரவேற்று பேசுகையில், ”ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர், ‘நன்றாக நடித்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். என்னை நன்றாக நடிக்க வைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி. இந்தப் படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில், “இந்த மேடையில் என்னை அறிமுகப்படுத்தி லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி. ஒரு நாள் இயக்குநர் சசி போன் செய்து.. ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார். அதுதான் ‘அம்மா அம்மா.. ‘எனும் பாடல். அந்த பாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்து போனது. உடனடியாக இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் வழிகாட்டுதல் தான் முதன்மையான காரணம்,” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.

எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.

பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,” ‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.

நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். ‘நூறு சாமி’ படத்தை பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும். எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் ‘சீலிங் ஃபேன்’ காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்து பார்க்க முடிந்தது.

சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, ‘இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்’ என்றார். அதேபோல் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், ”இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.

விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.

பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி- அவமானம்- என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , ‘எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்’ என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ… இல்லையோ… நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்… நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ… இல்லையோ… நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.

என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் ‘இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது’ என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். ‘படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் -பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ” நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி  இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே  சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.

சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால்.. ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.

நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.

நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்… அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.

பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ…! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா – ஏ ஆர் ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.

இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.

இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் … இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள்… நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது” என்றார்.

இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், ” இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா.. பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி, மிஷ்கினில் நிறைவடைகிறது.

எல்லோரையும் போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம். அவருடைய எல்லா படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் ‘டிஸ்டர்ப்டு’ ஆக இருந்தேன்.

சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்… ஒரு காலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான். அதன் பிறகு அச்சு ஊடகம் வெளியான போது.. அது கிசுகிசுவாக மாறியது. அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது. சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.

ஒரு கள்ள காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்… பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,’ இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!’ என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை- பாலியல் வன்கொடுமை -ஆகியவை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் ‘நூறு சாமி’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.

இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.

நீண்ட நாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி.. கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும்.

விஜய் ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்.. திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் ‘நூறு சாமி’ படத்தை பார்த்த பிறகு, அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி.

ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி- தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்-  எங்கேயோ நடை பயணத்தின் போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்- தேசியக் கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் – அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை- என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும் தான் முடியும். இந்தப் படம் மிகச் சிறந்த படம். வணிக ரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ” இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். ஏனெனில் ‘பூ’ படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது.  இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர். வேறு ஒரு நடிகர் இருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்தது. அந்தத் தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய் ஆண்டனி சார்.

இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார். அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சாமி விஜய் ஆண்டனி தான்.  இந்தப் படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் விஜய் ஆண்டனி தான்.
இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசியபோது ‘சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றார்.

இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல. பக்கா கமர்ஷியல் திரைப்படம். கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த படம் வெற்றிகரமான திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ” தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் சசி சாருக்கு என் வாழ்த்துக்கள்.

விஜய் ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்-  வித்தியாசமான படங்கள்-  புது இயக்குநர்கள் – என தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் சசி பேசுகையில், ” இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, ‘நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்’ என்றார்.

இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் ‘நூறு சாமி’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.

இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்-  படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.

என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.

ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.

இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்… தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.

தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.

ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.

இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.

இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் ” என்றார்.

தயாரிப்பாளர் – நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ” என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள்.  அதில் ஒன்று ‘டிஷ்யூம்’ படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை ‘லவ்வர் பாய்’ ஆக மாற்றியது.  இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா -அக்கா- தங்கை- என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது” என்றார்.

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, FIFA தொடர்களின் பரவலான அளவுக்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு, ஆழமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதோடு, தனது விளையாட்டு உள்ளடக்கப் பட்டியலை வலுப்படுத்தும் ZEE5-இன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

பார்வை அனுபவத்திற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில், இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா, FIFA World Cup 2026-க்கான ZEE5-இன் நிபுணர் குழுவில் இணைகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாக மதிக்கப்படும் பூட்டியா, தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் இந்திய கால்பந்திற்கான பங்களிப்புகள் மூலம் நாட்டில் இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விளையாட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், மிகுந்த அனுபவமும், தொடரைப் பற்றி ஆழமான பார்வைகளைப் பெற விரும்பும் ரசிகர்களுக்கு அவரை மதிப்புமிக்க குரலாக மாற்றுகின்றன.

நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இணைவது குறித்து பாய்சுங் பூட்டியா கூறியதாவது:

“இந்தியாவில் பல தலைமுறை கால்பந்து ரசிகர்களுக்கு FIFA World Cup என்பது உத்வேகம், உயர்வான கனவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஆதாரமாக இருந்து வருகிறது. இது விளையாட்டைத் தாண்டி மக்களை ஒரே ஆர்வத்தின் மூலம் ஒன்றிணைக்கும் ஒரு தொடர். நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ZEE5 மற்றும் Unite8 Sports உடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகக் கோப்பையை மிகவும் சிறப்பாக்கும் கதைகள், போட்டி உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத தருணங்களுடன் ரசிகர்களை மேலும் நெருக்கமாக இணைக்க பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விளையாட்டிற்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.”

FIFA World Cup 2026 போட்டிகளை ஜூன் 11 முதல் ZEE5-ல் மட்டும் நேரலையில் காணத் தவறாதீர்கள்!

ZEE5 மற்றும் Unite8-ல் FIFA World Cup 2026 பற்றி

FIFA World Cup 2026™️, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகின் மிகப் புகழ்பெற்ற கால்பந்து தொடர்களை கொண்டு வருவதற்காக, 2034 வரை நீளும் Zee Entertainment மற்றும் FIFA இடையிலான முக்கியமான நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைகிறது. தனது இரண்டு தளங்களான ZEE5 மற்றும் Unite8-ஐ பயன்படுத்தி, Zee Entertainment ஒப்பற்ற பார்வை அனுபவத்தை வழங்கவுள்ளது. FIFA World Cup 2026™️ போட்டிகளின் முழுமையான ஒளிபரப்பை ஆங்கிலம், இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்குவதன் மூலம், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் போட்டியின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க முடியும்.

இந்த கூட்டாண்மை, FIFA World Cup 2030™️, FIFA Women’s World Cup 2027™️ உள்ளிட்ட பல முக்கிய FIFA தொடர்களையும், பிற முன்னணி சர்வதேச போட்டிகளையும் உள்ளடக்கிய விரிவான உரிமைப் பட்டியலை கொண்டுள்ளது. உயர்தர ஸ்ட்ரீமிங், வளமான பிராந்திய மொழி சேவைகள் மற்றும் ரசிகர்களை மையமாகக் கொண்ட ஆழமான அனுபவங்கள் மூலம், ZEE5 மற்றும் Unite8 உலக கால்பந்தை கோடிக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதையும், நாட்டில் கால்பந்து ரசிகர் வட்டாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

“சன் ஆஃப் தஞ்சை” இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்

தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்டுடியோவான அயலெட் ஸ்டுடியோஸால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு Xbox Series X|S மற்றும் PS5 தளங்களில் வெளிவரவுள்ளது.

கதை, அரண்மனைச் சுவர்களுக்குள்ளேயே தன் வாழ்நாள் முழுவதையும் உல்லாசத்தில் கழிக்கும் சோழ இளவரசன் விண்ணேந்திரனைப் பின்தொடர்கிறது. தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்க, மன்னன் ஒரு கடினமான முடிவை எடுத்து, தன் மகனைப் சாதாரண மனிதனாக உலகிற்குள் அனுப்புகிறான். தொடர்ந்து நிகழ்வது, உயிர்ப்புடன் துடிக்கும் பண்டைய தமிழ் உலகில் விண்ணேந்திரனின் பயணம்; அங்கு இந்த இளவரசன், உழவர்கள், வணிகர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற பிறகே அவர்களை ஆளும் கனவைக் காண முடியும்.

ஒரு மைல்கல் படைப்பாற்றல்

தஞ்சையின் மைந்தன் விளையாட்டின் கதை, திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதுபவர் தமிழ்த் திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர் மதன் கார்க்கி. எந்திரன், பாகுபலி போன்ற வெற்றிப் படங்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கான பணியுடன், மதன் கார்க்கி இந்தப் படைப்புக்கு அரிய பண்பாட்டு அறிவையும் கதைசொல்லல் திறனையும் கொண்டு வருகிறார். தஞ்சையின் மைந்தன் அவரது கேமிங் உலகிற்கான முதல் முயற்சியைக் குறிக்கிறது.

மரபில் வேரூன்றிய சண்டை

விளையாட்டின் மையத்தில் இருப்பது சுருள் வாள். தென்னிந்தியப் போர்க்கலை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டு, இதுவரை எந்த முக்கிய விளையாட்டிலும் இடம்பெறாத ஒன்று. உலகின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகக் கருதப்படும் களரிப்பயற்றின் அடிப்படையில் சண்டை அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது; இது விளையாட்டுக்கு வரலாற்று அடித்தளமும், இன்றைய கேமிங்கில் இதுவரை காணாத ஒரு போர்முறையையும் வழங்குகிறது.

உலகுக்கான தமிழ்

தஞ்சையின் தனயன் தமிழில், ஆங்கில வசன வரிகளுடன் வெளியிடப்படும். இது ஆட்டத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான தேர்வாகும். முதல் முறையாக, உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசப்படும் ஒரு முக்கிய விளையாட்டை அனுபவிப்பார்கள். பண்டைய தென்னிந்தியாவின் மொழி, பண்பாடு மற்றும் நிலப்பரப்பை உள்ளிருந்தே உணர்வார்கள்.

வாழத் தகுந்த ஓர் உலகம்

சென்னையில் உள்ள அயலெட் ஸ்டுடியோஸின் 30 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, சோழ காலத்தின் நெல் வயல்கள், கடலோரத் துறைமுகங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வறண்ட எல்லைப் பகுதிகளை உயிர்ப்பிக்கிறது. ஊர் மன்றங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கள்ளுக் கடைகள் வதந்திகளால் சலசலக்கின்றன. அன்றாட கைவினைகளும் சடங்குகளும் உலகை உயிர்ப்புடன் நிரப்புகின்றன. இது ஒரு பின்னணி அல்ல. இதுவே விளையாட்டின் இதயம்.
விளையாட்டின் அறிமுக டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது; சர்வதேச கேமிங் சமூகத்திடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ்ஹிப்-ஹாப்பைஉலகஅரங்கிற்குக்கொண்டுசெல்வதுகுறித்துஹிப்-ஹாப்தமிழாஆதி

எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் வேர்களுடன் இணைந்திருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உலகளாவிய அளவில் நீங்கள் உயர்கிறீர்கள்‘: தமிழ் ஹிப்ஹாப்பை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வது குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி

CHENNAI -ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ‘ஹிப்ஹாப் தமிழா’ (HipHop Tamizha) என்பது வெறும் இசைக்குழுவாக மட்டுமல்லாமல், அதையும் தாண்டிய ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. பல இளம் தமிழர்களுக்கு, இது கலாச்சாரப் பெருமிதம், சுய-வெளிப்பாடு மற்றும் ஒருவரின் அடையாளத்தில் உறுதியாக இருப்பது ஒரு தடையாக இல்லாமல் பலமாக அமையக்கூடும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. iQOO நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மார்யாவுடனான ‘தி குவெஸ்ட் டாக்’ (The Quest Talk) உரையாடலில், தனது ஆர்வத்தின் அடிப்படையில் தொடங்கிய ஒரு முயற்சியை, தமிழ்நாட்டின் மிகச் செல்வாக்கு மிக்க கலாச்சார இயக்கங்களில் ஒன்றாக மாற்றிய பயணத்தைப் பற்றி ஆதி (Adhi) பகிர்ந்துகொண்டார்.

தனது ஆரம்பகால நாட்களை நினைவுகூர்ந்த ஆதி, ஆரம்பத்தில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்ததாகக் கூறினார். “கல்லூரியில் இருந்தபோது நான் என் அடையாளத்தை மறைக்கத் தொடங்கினேன். எப்போதும் முகமூடியும் ‘பீனி’ (beanie) தொப்பியும் அணிந்திருப்பேன். எனது ஆரம்பகால இசை வீடியோக்களில் என் கழுத்தைச் சுற்றி ஒரு ஸ்கார்ஃப் (scarf) இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் பெற்றோருக்குக் கூட இது தெரியாது,” என்று அவர் கூறினார். புகழ்பெற்ற தமிழ் கவிஞர் மகாகவி பாரதியிடமிருந்து உத்வேகம் பெற்று உருவானதே ‘ஹிப்ஹாப் தமிழா’வின் அந்தச் சின்னம் (logo); இது தமிழ் கலாச்சாரத்துடனான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தியது, மேலும் இதுவே பிற்காலத்தில் அவரது படைப்புகளின் அடையாளமாகவும் அமைந்தது.

ஆங்கில இசை பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதற்கான வழியாகக் கருதப்பட்ட காலத்தில், ஆதி வேண்டுமென்றே தமிழைத் தேர்ந்தெடுத்தார். “யாரும் என்னுடன் அவ்வளவு எளிதில் ஒன்றிப்போயிருக்க மாட்டார்கள். எனது உணர்வுகளை எனது தாய்மொழியான தமிழில் வார்த்தைகளாக வெளிப்படுத்துவதே சிறந்தது,” என்று அவர் கூறினார். அந்த உறுதியான நம்பிக்கை ஒரு முக்கிய மைல்கல்லை எட்ட வழிவகுத்தது; ஸ்ட்ரீமிங் தளங்கள் இசைத்துறையை மாற்றி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்-ஹாப் ஆல்பத்தை வெளியிட்டு, ஆயிரக்கணக்கான சிடிக்களை (CDs) வெற்றிகரமாக விற்பனை செய்தார்.

ஆதியைப் பொறுத்தவரை, பிராந்திய எல்லைகளைத் தாண்டி தமிழ் இசை பெற்ற வெற்றி, அவர் நீண்ட காலமாக நம்பி வந்த ஒரு கொள்கையை உறுதிப்படுத்துகிறது. “நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் உள்ளூர் அடையாளத்துடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார். பஞ்சாபி இசை மற்றும் தலைப்பாகை, பாங்க்ரா (bhangra) போன்ற கலாச்சார அடையாளங்களின் உலகளாவிய வளர்ச்சியை உதாரணமாகக் காட்டி, தங்கள் அடையாளத்தில் உண்மையாக இருக்கும் கலைஞர்களை நோக்கி உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவதை அவர் வலியுறுத்தினார். “நீங்கள் எதைச் செய்தாலும் அதில் மிகுந்த பெருமிதம் கொள்ளுங்கள்,” என்றும் அவர் கூறினார்.

பொழுதுபோக்கைத் தாண்டி, சமூக மற்றும் கலாச்சார மாற்றத்தை முன்னெடுக்கும் இசையின் ஆற்றலைப் பற்றியும் ஆதி பேசினார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, ​​அவரது ‘டக்கரு டக்கரு’ (Takkaru Takkaru) பாடல், அந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கீதமாக மாறியது. அந்தப் பிரச்சினையை நன்கு புரிந்துகொள்ளும் முயற்சியாகத் தொடங்கிய ஒன்று, பின்னர் ஒரு சக்திவாய்ந்த கலாச்சார வெளிப்பாடாக உருவெடுத்தது. “ஜல்லிக்கட்டு குறித்துப் பல தவறான புரிதல்கள் இருந்தன. இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, மாறாக விவசாயிகள் மற்றும் கலாச்சாரத்தோடு பிணைந்த ஒரு முழுமையான வாழ்வியல் சூழல் என்பதை விளக்கிய மக்களை நாங்கள் சந்தித்தோம். அந்தப் பார்வையை இப்பாடலில் கொண்டுவர முயன்றோம்,” என்று அவர் நினைவுகூர்ந்தார். இப்போராட்டம் வலுப்பெற்ற நிலையில், தமிழ்க் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பது குறித்த பரந்த விவாதத்துடன் இப்பாடல் நெருக்கமாக இணைந்தது.

.

அந்தப் பயணம் இப்போதும் ஒரு கனவு போன்ற உணர்வையே தருவதாக அவர் ஒப்புக்கொள்கிறார். மாணவராக இருந்தபோது நகரப் பேருந்துகளில் பயணித்து YMCA நிறுத்தத்திற்காகக் காத்திருந்த நிலையிலிருந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டிருந்த சூழலில் அதே YMCA-வில் திரளான மக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்தியது வரையிலான அந்த மாற்றம் வியக்கத்தக்கது. “நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார். கடந்த காலத்தை நினைவுகூரும்போது, ​​’ஹிப்ஹாப் தமிழா’வை வெறும் ஒரு வணிக முத்திரையாக (brand) அல்லாமல், ஒரு மக்கள் இயக்கமாகவே ஆதி விவரிக்கிறார். “ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு இயக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார். ஒரு எளிய நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இயக்கம் அது: உங்கள் கலாச்சாரத்தில் நீங்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்கள் குரல் சென்றடையும்.