ஜூனியர் விகடன் மீது வழக்கு:பத்திரிகை சுதந்திரம் காக்க வேண்டும்

ஜூனியர் விகடன் மீது வழக்கு:
முதல்வர் தலையிட்டு பத்திரிகை சுதந்திரம் காக்க வேண்டும்!
ஆம் ஆத்மி வசீகரன் வேண்டுகோள்!
மிகப்பெரும் பிரபலமாகி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ ஜூனியர் விகடனுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்திருக்கிறது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் கூறியிருந்தது.
ஆனால் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தின் புகாரை ஜூனியர் விகடன் முற்றிலுமாக மறுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விகடன் வழக்கறிஞர் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.
இந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்தப் பத்திரிகையாளர்கள் பலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள், “பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான காவல்துறையின் இந்த அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது. பத்திரிகை சுதந்திரத்தின் தர வரிசையில் இந்தியா பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கும், பத்திரிகை சுதந்திரத்துக்கும் எதிரானது என்பதை தெளிவுப்படுத்தினார்கள்.
ஜூனியர் விகடன் மீது வேண்டுமானால் ஜி ஸ்குயர் நிறுவனம் அவதூறு வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் செல்லலாம்.
ஆனால் அதிகாரிகளை பயன்படுத்தி எப்ஐஆர் பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, வழக்கிலிருந்து பத்திரிகையாளர்களையும், ஜூனியர் விகடன் பத்திரிகை நிறுவனத்தையும் விடுவிக்க வேண்டும்” என்று நானும் பத்திரிகையாளர் என்ற முறையிலும் தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பிலும் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.
இங்கனம்
வசீகரன்
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு
25/5/2022